Wednesday, July 16, 2014

அமானுஷ்யன் - 15



அவனுடன் பேசிக் கொண்டே வந்த வருண் ஒரு கட்டத்தில் அப்படியே அவன் மடியில் தலை வைத்துப் படுத்து விட்டான். அதைப் பார்த்த சஹானா "சாரி. அவனை எடுத்து முன் சீட்டில் வைத்துக் கொள்கிறேன்" என்றாள்.

"பரவாயில்லை" என்று சொல்லிப் புன்னகைத்தவன் தூங்கும் வருணையே சினேகத்துடன் பார்த்து விட்டுச் சொன்னான். "உங்கள் மகன் புத்திசாலி. ஒரு நாள் பெரிய ஆளாக வருவான் பாருங்கள்".

சஹானா புன்னகைத்தாள். தன் குழந்தை புகழப்படுவதைக் கேட்பதை விடத் தாயிற்கு இனிமையானது ஏதாவது இருக்க முடியுமா? ஆரம்பத்தில் மிக வேகமாகக் காரை ஓட்டிய சஹானா பிறகு யாரும் வராததைப் பார்த்து சாதாரண வேகத்திற்கு மாறியிருந்தாள். அவள் மனமும் ஒரு தெளிவை அடைந்திருந்தது. அவன் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். டெல்லி இன்னும் 37 கிமீ என்று மைல் கல் தெரிவித்தது.

"என்னை டெல்லிக்கு நுழைவதற்கு முன்னாலேயே ஆள் நடமாட்டமில்லாத ஓரிடத்தில் இறக்கி விடுங்கள்" என்றான் அவன்.

"நீங்கள் முக்காடு போட்டுக் கொண்டிருந்தது யாரும் அடையாளம் தெரிந்து கொள்ளக் கூடாது, உங்களை யாரும் முழுவதுமாகப் பார்த்து நினைவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தானே"

அவள் அதை ஏன் கேட்கிறாள் என்று தெரியாத அவன் ஆமாம் என்று தலையாட்டினான்.

"ஆனால் என் மகனைக் காப்பாற்றினால் எல்லார் கவனமும் உங்கள் பக்கம் திரும்பும், பலர் உங்களைப் பார்ப்பார்கள், ஞாபகம் வைத்துக் கொள்வார்கள் என்று தெரிந்தும் நீங்கள் ஏன் அவனைக் காப்பாற்றினீர்கள்?"

"அந்த நேரம் யோசிக்கிற நேரமில்லை. ஒரு குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை வரும் போது அதைக் காப்பாற்றுவதைத் தவிர வேறொரு வழி இருக்கிற மாதிரி எனக்குத் தோன்றவில்லை"

அவள் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. பின் கேட்டாள், "இது போன்ற உயர்ந்த மனம் உங்களுக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இருக்கக் கூடாது என்று நீங்கள் நினைப்பது நியாயமா?"

"எனக்குப் புரியவில்லை"

"தங்க இடமில்லாமல், நீங்கள் யாரென்று உங்களுக்கே தெரியாமல் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களைக் கொல்ல யாரோ முயற்சி செய்கிறார்கள். அப்படி இருக்கையில் உங்களை நான் மட்டும் அனாதரவாய் எங்கேயோ இறக்கி விட்டு எப்படிப் போக முடியும்?"

"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?"

"எங்களுடன் எங்கள் வீட்டுக்கு நீங்களும் வந்து சில நாளாவது தங்குங்கள். ஏதாவது நல்ல மறைவிடம் கிடைத்த பின் நீங்கள் போங்கள்....."

"மேடம், நீங்கள் உங்கள் கணவரைக் கேட்காமலேயே வேகமாய் முடிவு செய்கிறீர்கள்"

"வருணின் அப்பா போன வருடம் ஒரு விபத்தில் இறந்து விட்டார்"

"ஓ சாரி" என்று உண்மையாகவே வருத்தப்பட்டவன் பின் அமைதியாகச் சொன்னான், "மேடம், உங்கள் நல்ல மனதுக்கு நன்றி. ஆனால் ஆண் துணையில்லாத வீட்டில் நான் வந்து சில நாட்கள் இருப்பது சரியல்ல. நீங்களே யோசித்துப் பாருங்கள்"

"நான் யோசிப்பதெல்லாம் நீங்கள் என் மகனைக் காப்பாற்றிய போது எதையும் யோசிக்கவில்லை என்பதுதான்..."

பக்கத்தில் இருந்த வயதான பெண்மணி சஹானாவின் தாயாரா, மாமியாரா என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லலை. வருண் அவளைப் பாட்டி என்று உரிமையுடன் சிறிது நேரத்திற்கு முன் கூப்பிட்டது மட்டும் தெரியும். அவளாவது சஹானாவின் யோசனையை ஆட்சேபிப்பாள் என்று ஆவலுடன் அவளைப் பார்த்தான். அவள் சம்பந்தமே இல்லாதது போல உணர்ச்சியில்லாமல் இருந்தாளே ஒழிய ஒன்றும் சொல்லவில்லை.

"மேடம், அவர்கள் சொன்னது போல நான் நிஜமாகவே தீவிரவாதியாகக் கூட இருக்கலாம்...."

"தீவிரவாதியாக இருப்பவன் அடுத்தவர் உயிர்களைப் பற்றிக் கவலைப்படாதவன். தன் உயிரைப் பணயம் வைத்து அடுத்தவர் உயிரைக் காப்பாற்ற மாட்டான்"

இவளிடம் பேசி ஜெயிப்பது கஷ்டம் என்று தோன்ற பெருமூச்சு விட்டான்.

அவள் சொன்னாள், "அந்த புத்த விஹாரத்தில் நீங்கள் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கையில் அந்த புத்த பிக்குகள் உங்களைக் காப்பாற்றுவதைத் தவிர வேறெதையும் நினைத்துப் பார்க்கவில்லை. என் மகன் உயிருக்கு ஆபத்து என்று வந்த போது நீங்களும் லாப நஷ்டங்களைக் கணக்குப் போடவில்லை. உலகம் இப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது இது போன்ற நல்லெண்ணங்களினால்தான் என்று நான் திடமாக நம்புகிறேன்..."

"மேடம், நான் முன்பே சொன்னது போல் என்னை ஆபத்து சூழ்ந்து இருக்கிறது. அது எனக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்குக் கூட வந்து விடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்...."

"என்னைப் பார்த்தால் உங்கள் டீச்சராகவோ, உங்கள் முதலாளியாகவோ தெரிகிறதா?"

அவன் குழப்பத்துடன் சொன்னான். "இல்லை"

"அப்படியென்றால் என்னை மேடம் என்று கூப்பிடாதீர்கள். என் பெயர் சஹானா"

அவன் வாய் விட்டுச் சிரித்தான்.
******

விதி அந்த அமானுஷ்யனுக்கு சாதகமாக இருப்பதாகவே சிபிஐ மனிதனுக்குப் பட்டது. இல்லாவிட்டால் அவனைப் பார்த்த தகவல் தர கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகியிருக்குமா? அவன் உயிருடன் இருப்பான் என்று முழு நம்பிக்கை இப்போதும் அவனிடம் இல்லையென்றாலும் அந்த சிறுவனைக் காப்பாற்றிய ஒருவன் அவனைப் போன்ற ஒரு பராக்கிரமசாலியே என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை. ஒருவேளை அவன் அமானுஷ்யனே ஆனால் அந்த செய்தி மோசமானதுதான்.

அவனுடைய இடத்தில் தன்னை இருத்தி நிறைய யோசித்த சிபிஐ மனிதன் தனக்கு மிகவும் பழக்கமுள்ள வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து அப்புறப்படுத்தும் ஒரு உயர் அதிகாரிக்குப் ஃபோன் செய்து சிறிது நேரம் குசலம் விசாரித்து விட்டு "இப்போது வெடிகுண்டுகளின் பின்னால் ஓடும் வேலையெல்லாம் குறைந்திருக்கிறதா? இல்லை இப்போதும் வேலைகள் நிறைய வருகின்றனவா?"

"பெரிதாக ஒன்றும் இல்லை. பின் இந்தத் துறையில் ஃபோன் கால்கள் வருவது சகஜம்தான். சிறிது நேரத்திற்கு முன்னால் கூட டெல்லியின் முக்கியமான இடங்களை வெடிகுண்டு வைத்து அழிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று மொட்டையாக ஃபோனில் யாரோ தெரிவித்தார்கள். தேதியோ மற்ற தகவல்களோ இல்லாமல் வரும் ஃபோன்கால்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இப்போதெல்லாம் சிலர் போரடிக்கும் போது கூட இப்படி ஃபோன் செய்து எங்களைக் கோமாளிகளைப் போல் ஓட விடுகிறார்கள்...."

ஃபோனை வைத்தவன் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான். "அந்தப் ஃபோன் அவன் செய்ததல்ல. அவனாக இருந்தால் இப்படிப் பொத்தாம் பொதுவாக சொல்லியிருக்க மாட்டான்...."

அந்தக் கார்க்காரியைக் கண்டுபிடிப்பதும் சுலபமாக இருக்கவில்லை. மலை மேல் ஏறும் போது பாதை ஒன்றுதான் ஆனாலும் மலை இறங்கி விட்டால் பல பாதைகள் இருக்கின்றன. அவள் கார் எந்தப் பக்கம் போனதோ அவனை அவள் எங்கு இறக்கி விட்டாளோ தெரியவில்லை. மலையின் மீது சுங்கச் சாவடி ஒன்று இருந்தது. அங்கும் விசாரித்துப் பார்த்தாகி விட்டது. டிக்கெட் கிழித்துக் கொடுத்து காசு வாங்குவதோடு சரி வாகனங்களின் எண்ணை எல்லாம் எழுதி வைக்கும் வழக்கம் இல்லையாம். இரண்டு மூன்று குழுக்களை அந்த மலைப்பாதைக்கு அனுப்பிப் பார்த்தாகி விட்டது. அவர்களுக்கும் அந்தக் கார் கிடைக்கவில்லை. நிறைய கால தாமதமாகப் போனதன் விளைவு. ஒரே ஒரு குழு மட்டும் சொன்னது, "அந்த மாதிரியான காரை ஒருத்தி மிக வேகமாக ஓட்டிச் சென்றதை சிலர் பார்த்திருக்கிறார்கள். ஏதோ ரேஸில் போவது போலப் போனாளாம்...ஆனால் அவள் அருகில் யாரும் இருக்கவில்லையாம். பின் சீட்டில் இருந்தால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை....."

ஆனால் அவள் டெல்லிக்காரியாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அவளது உடை, வேகமாகக் காரை ஓட்டிய முறை எல்லாம் பெருநகரத்துப் பெண்மணியாகவே அவளைக் காட்டியது. ஆனால் அவளைக் கண்டு பிடித்தாலும் எங்கே இறக்கி விட்டாய் என்று கேட்கலாமே ஒழிய அவன் வேறு தகவல்களைத் தந்திருக்க வாய்ப்பில்லை. அவன் டெல்லிக்கே அவளுடன் வந்து விட்டால் அது நல்ல அறிகுறியல்ல.... அவன் என்ன செய்வான் என்று ஊகிக்க முடியவில்லை.... அவனுடைய மும்பை பங்களாவின் முன் கண்காணித்துக் கொண்டிருந்த ஆட்கள் "வயதான வேலைக்காரன்தான் கடைக்குப் போய் வருகிறான். வேறு யாரும் அந்த வீட்டுக்கு வரவில்லை" என்றார்கள்.

சிபிஐ மனிதன் ஒரு எண்ணிற்கு ஃபோன் செய்து கேட்டான். "அந்த வீட்டுக்கு ஃபோன் ஏதாவது இந்த இரண்டு மூன்று நாட்களில் வந்ததா?"

"இரண்டு ஃபோன் கால்கள் வந்திருந்தன. ஒன்று உள்ளூர் கால். அந்த எண்ணை விசாரித்து விட்டோம். அது அந்த வேலைக்காரனின் மகள் செய்தது...."

"இன்னொன்று?"

"சீனாவிலிருந்து ஃபோன் வந்திருக்கிறது. அந்த எண்ணையும் விசாரித்து விட்டோம். அது அங்கே உள்ள ஒரு புத்த மடாலயத்திலிருந்து... அந்தக் கால் ஒரு நிமிடம்தான் பேசப்பட்டிருக்கிறது"

அவனைக் கேட்டு ஃபோன் வந்திருக்கலாம். அந்த வேலைக்காரன் சொன்ன பதிலோடு அந்த பேச்சு முடிந்திருக்கிறது. தன் முன் உள்ள தகவல்களை ஆராய்ந்த சிபிஐ மனிதன் பெருமூச்சு விட்டான். அந்த வீட்டையும் ஃபோனையும் கண்காணிப்பதிலும் பெரிய பயன் இல்லை என்று தோன்றியது. கடந்த ஒரு வருட காலத்தில் அவன் அந்த வீட்டில் ஓரிரண்டு நாட்கள் மட்டுமே தங்கியிருக்கிறான். தலைமறைவாக இருப்பது அவனுக்கு ஒன்றும் புதிதல்ல.....

(தொடரும்)

அமானுஷ்யன் - 14



அவனும் வருணும் குறுகிய நேரத்திலேயே நண்பர்களாகி விட்டதை சஹானா கவனித்தாள். வருண் அவனிடம் தன் நண்பர்களைப் பற்றியும், பள்ளிக்கூடத்தைப் பற்றியும் மிக உற்சாகமாக சொல்லிக் கொண்டிருந்தான். ஆரம்பத்தில் ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்த வருண் ஒரு கட்டத்தில் அவனுக்குத் தமிழும் தெரியும் என்று அறிந்த பின் தமிழுக்கு மாறினான். வருணின் பேச்சை மிகப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்ப்பதைக் கவனித்தாள்.

"நீங்கள் அவர்கள் பின் தொடரலாம் என்று எதிர்பார்ப்பது போல் தெரிகிறது. நீங்கள் இங்கே இருப்பது அவர்களுக்கு எப்படித் தெரியும் என்று நினைக்கிறீர்கள்?"

"நான் அந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாகப் போன பஸ்ஸில் இருந்த ஒருவன் என்னை அடையாளம் கண்டு கொண்ட மாதிரி தெரிகிறது. அவன் முகம் போன போக்கைப் பார்த்தால் அவர்கள் கூட்டத்தாளாகத்தான் இருப்பான் என்று தோன்றுகிறது. அவன் போய் சொல்லி யாராவது வரலாம் என்று நினைக்கிறேன். ஒரு வேளை அப்படி வருவது போல் இருந்தால் உங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் காரில் இருந்து இறங்கி விடலாம் என்றுதான் பார்க்கிறேன்...."

அவளுக்கு என்னவோ போல் இருந்தது. தன் காரின் வேகத்தைக் கூட்டினாள். மறுபடி வருண் அவன் நண்பன் ஒருவனின் விரதீரப் பராக்கிரமங்களைச் சொல்ல இடையிடையே ஆர்வத்துடன் "அப்புறம்" என்று அவன் கேட்டுக் கொண்டிருந்தான். மகன் உயிரைக் காப்பாற்றிய ஒருவனைத் தன் உயிருக்குப் பாதுகாப்பில்லாமல் டெல்லி வீதிகளில் உலாவ விட்டு விடுவது சரியா என்று மனசாட்சி உறுத்தியது. அதுவும் வாய் வார்த்தைக்கு அவனைக் கூப்பிட்டு அவன் மறுத்த பின் நிம்மதியடைந்த விதம் அவளுக்கே ஜீரணிக்க முடியாத செயலாகப் பட்டது. வாழ்வில் என்றுமே அவள் நியாயமானவளாகத்தான் வாழ்ந்திருக்கிறாள். ஆனால் இவன் விஷயத்தில் அவள் செய்வது தர்மமல்ல என்று தோன்றியது. மகனை அவன் காப்பாற்றிய போது பெருகி நின்ற நன்றியுணர்வு அந்தக் காலத்து மணல் கடிகாரத்தின் துகள்களாய் வடிந்து குறைந்து கொண்டே போவது போல் தோன்றியது.

ஆனால் வீட்டில் வேறு ஆண் துணையில்லாமல் மகன், மாமியாருடன் வாழும் அவள் அவனுக்கு எப்படி அடைக்கலம் தர முடியும் என்பதும் சஹானாவுக்கு விளங்கவில்லை. அவள் நிலைமை அந்த புத்த பிக்குகளைப் போல் எளிதானதல்ல. தன் மாமியார் மரகதம் என்ன நினைக்கிறாள் என்று அறிந்து கொள்ள சாய்ந்து கண்ணாடி வழியாகப் பார்த்தாள். மரகதம் அவனையே உணர்ச்சியில்லாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் முகபாவனையிலிருந்து அவள் என்ன நினைக்கிறாள் என்பதை எந்நாளும் சஹானாவால் ஊகிக்க முடிந்ததில்லை.

சஹானாவின் மனம் அவன் சொன்னதையும், நடந்து கொண்டதையும் எல்லாம் மீண்டும் எண்ணிப் பார்த்தது. அவள் மகனை அவன் காப்பாற்றாமல் இருந்திருந்தால் அவன் யார் கவனத்தையும் ஈர்க்காமல் அந்த லாரி ஏறித் தன் வழியே போயிருப்பான்.... திடீரென்று அவன் பின்னால் திரும்பிப் பார்த்ததன் பொருள் விளங்கியது. காப்பாற்றியதால் பலரும் அவனைப் பார்த்து இருப்பார்கள். அவனைத் தேடி வருபவர்கள் விசாரித்தால் அங்கிருக்கும் மனிதர்கள் அவன் இப்படி ஒரு காரில் போனான் என்று சொல்லக் கூடும்... அவள் காரின் வேகம் மேலும் கூடியது
*******

"ஹலோ" CBI மனிதன் தூக்கக் கலக்கத்துடன் செல்லை எடுத்துப் பேசினான்.

"அவன் உயிரோடிருக்கிறான்"

CBI மனிதனின் தூக்கம் முழுவதுமாகக் கலைந்தது. கேட்ட தகவல் கனவில்லையே என்று உறுதிப்படுத்திக் கொள்ள அவனுக்கு சில வினாடிகள் தேவைப்பட்டன. ஆனாலும் அதிர்ச்சி மாறாமல் கேட்டான். "என்ன?"

"அவன் உயிரோடிருக்கிறான். அவனை நம் ஆள் ஒருவன் பார்த்திருக்கிறான்."

"விவரமாய் சொல்லுங்கள்"

மறுபக்கம் எல்லா நிகழ்ச்சிகளையும் விரிவாகச் சொன்னது.

"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அவன் அங்கே முக்காடு போட்டுக் கொண்டு டீ குடித்துக் கொண்டு நின்றான் என்றால் நம்ப முடியவில்லை"

"எனக்கும் நம்பப் பிடிக்கவில்லைதான். ஆனால் அது உண்மை மாதிரிதான் தெரிகிறது"

"சார் முதலில் நன்றாக யோசியுங்கள். அவன் பார்த்த நேரம் அதிகாலை. நல்ல வெளிச்சமில்லாத நேரம். முக்காடு போட்ட மனிதனை அடையாளம் காண்பதும் அவ்வளவு சுலபமில்லை. அவன் டீக்குடித்து நின்றதாய் சொல்லும் இடம் நாம் அவன் இருக்கலாம் என்று தேடிய இடத்திலிருந்து மிக தூரத்தில் இருக்கிறது...."

"உயிரோடு இருக்கிற மனிதனுக்கு வாகனமும் கிடைத்தால் அவன் அந்த தூரத்திற்குப் போவது ஒன்றும் பெரிய விஷயமில்லை"

"அது உண்மைதான்...." என்று ஒப்புக் கொண்ட CBI மனிதன் கேட்டான். "அது சரி அந்த இடத்திற்கு ஆட்களை அனுப்பினீர்களா?"

"உம்... போனார்கள். இவர்கள் போன போது அந்த இடத்தில் டீக்கடைக் காரர்கள் இரண்டு பேர் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. அந்த இரண்டு பேரும் இவர்கள் காண்பித்த போட்டோவைப் பார்த்து கிட்டத்தட்ட அதே மாதிரி ஆள் அன்று காலை அங்கு வந்து டீக் குடித்ததாகச் சொன்னார்கள்..."

"கிட்டத்தட்ட என்பதற்கும் அதே ஆள் என்பதற்கும் இடையே நிறையவே வித்தியாசம் இருக்கிறது"

"ஆனால் அவர்கள் பார்த்த ஆள் செய்ததாகச் சொன்ன விஷயம் மட்டும் அந்த 'கிட்டத்தட்ட' என்ற வார்த்தையை விலக்கி விட்டது....."

ஒரு சிறுவன் லாரியில் அடிபட்டு சாகாமல் காப்பாற்றப்பட்ட கதையை மறுபக்கம் அப்படியே ஒப்பித்தது. "அவர்கள் அவனுடைய தீவிர ரசிகர்களாய் மாறி இருந்தார்கள்... அவர்கள் சொன்ன விதத்தைப் பார்த்தால் அவனைத் தவிர வேறு ஒருவனால் அப்படி அந்தப் பையனைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அந்த விஷயம் தெரிகிற வரை எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் அதைக் கேட்ட பிறகு போய் விட்டது."

CBI மனிதனின் முகத்தில் கவலையின் ரேகைகள் படர்ந்தன.

மறுபக்கம் தொடர்ந்து சொன்னது, "அவன் அந்தப் பையன் வந்த காரிலேயே போனான் என்று சொல்கிறார்கள். அந்தக் காரில் பெண்ணும் பையனும்தான் இருந்தார்கள் என்று டீக்கடைக்காரன் ஒருவன் சொல்கிறான். இன்னொருத்தன் இன்னொரு ஆளும் அந்தக் காரில் உட்கார்ந்திருந்த மாதிரி இருந்தது என்று சொல்கிறான். நம் ஆட்கள் அந்தக் காரின் அடையாளங்களை வாங்கிக் கொண்டு அந்த வழியாகப் போயிருக்கிறார்கள்...."

CBI குழப்பத்தில் ஆழ்ந்தான். "சார் அப்படி அங்கு வந்து டீ சாப்பிடும் அளவுக்கும், அந்தப் பையனை அனாயாசமாய் காப்பாற்றும் அளவுக்கும் அவன் ஆரோக்கியமாய் இருந்தால் அவன் செய்திருக்கக்கூடிய முதல் வேலையே போலீசுக்கோ, பத்திரிகைகளுக்கோ தனக்குத் தெரிந்ததை ஃபோன் செய்து சொல்லியிருப்பதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது"

"அவன் சொன்னால் யார் நம்புவார்கள்?"

"சார், உங்கள் எதிரிகள் கண்டிப்பாக நம்புவார்கள். உண்மையா பொய்யா என்பதைப் பற்றி எதிரிகள் எப்போதும் கவலைப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை எதிரியைப் பற்றிக் கேள்விப்படும் மோசமான விஷயங்கள் எல்லாம் உண்மையே."

"அரசியலில் இத்தனை வருஷங்கள் இருந்தாலும் எனக்குப் பெரிய எதிரிகள் இல்லையே"

அது உண்மை. வயதில் எவ்வளவு சிறியவரானாலும் மிகுந்த மரியாதையுடன் பன்மையிலேயே பேசும் அவர், அதிகமாக எப்போதும் நிதானமிழக்காத அவர் அதிக எதிரிகளை சம்பாதித்துக் கொண்டதில்லை.

"ஆனாலும் நீங்களிருக்கும் பதவியில் தான் வந்து உட்கார எதிர்பார்த்திருப்பவனுக்கு நீங்கள் எதிரிதானே"

மறுபக்கம் மௌனம் சாதித்தது. அரசியலில் அவன் சொன்னது மிகப்பெரிய சத்தியம்தானே. "ஆனாலும் அவன் கையில் ஆதாரம் இருந்தால்தானே அவன் சொல்வது எடுபடும். ஆதாரம் எதுவும் இல்லாததால் அவன் சும்மா இருந்திருக்கலாம்..."

CBI மனிதனுக்கு எங்கோ இடித்தது. அந்த ·பைலில் படித்த மனிதன் நடந்து கொள்ளும் விதம் இப்படி இருக்காது என்று உள்ளுணர்வு சொன்னது. இந்தக் காலத்தில் பள்ளிக் கூடத்திற்கு வரப் பிடிக்காத மாணவன் 'பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது' என்று மர்மமாகப் ஃபோன் செய்து சொன்னால் கூட பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விட்டு பட்டாளமாகப் போய் அங்கு வெடிகுண்டைத் தேடும் காலக் கட்டத்தில் இவர் சொல்வது போல் இருக்காது என்றே தோன்றியது. சிறிது நேர சிந்தனைக்குப் பின் சொன்னான். "இன்னொரு காரணம் கூட இருக்கலாம்"

"என்னது?"

"தனிப்பட்ட முறையில் வந்து பழி வாங்கும் நோக்கமாகக் கூட இருக்கலாம்"

மறுபக்கம் பீதியுடன் வேகமாகச் சொன்னது. "அவனை உடனடியாக தீர்த்துக் கட்டுவது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. அவன் உயிரோடு இருந்தால் எங்கே போவான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"

"கண்டிப்பாய் அவன் வீட்டுக்கோ, அவனுக்கு நெருங்கியவர்கள் வீட்டுக்கோ போக மாட்டான். அங்கு போனால் நாம் அங்கே காத்துக் கொண்டிருப்போம் என்று அவனுக்குத் தெரியும். எதற்கும் அவன் வீட்டு ஃபோனை டேப் செய்வது நல்லது என்று தோன்றுகிறது"

"அதை உடனடியாகச் செய்கிறேன். நீங்கள் அவன் வீட்டைக் கண்காணிக்க இன்னும் ஆட்களை அதிகப்படுத்துங்கள்...."

"ஓகே. அந்த மாதிரியான காரைப் பார்த்தால் நிறுத்தி அவன் இருந்தால் அவனைப் பிடிக்கவும், அவன் இல்லா விட்டால் அவனை எங்கே அந்தப் பெண் இறக்கி விட்டிருக்கிறாள் என்று கேட்டுக் கண்டு பிடிக்கவும் போலீஸ் மூலம் ஏற்பாடு செய்கிறேன்... உங்கள் ஆட்களை மட்டுமே இதில் நம்புவது போதாது என்று நினைக்கிறேன். நமக்கு விஷயம் தெரிந்ததே தாமதமானதால் அந்தக் கார் அவர்களுக்குக் கிடைப்பது கஷ்டம் என்று தோன்றுகிறது"

மறுபக்கம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. "நல்லது. அப்படியே செய்யுங்கள்... அந்த ஆச்சார்யா கேஸை முடித்த மாதிரி இவனுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்தால் நிம்மதியாயிருக்கும்"

"ஆச்சார்யாவின் கொலையாளியை ஆனந்தும் ஜெயினும் முழுவதும் நம்பின மாதிரி தெரியவில்லை.... தனிப்பட்ட முறையில் அவர்கள் துப்புத் துலக்கப் போகலாம் போல் தெரிகிறது"

மறுபக்கம் வாய் விட்டுச் சிரித்தது. "போகட்டும். அவர்கள் எதையும் கண்டுபிடிக்கப் போவதில்லை. கொலையாளி என்று ஒருவனைப் பிடித்து விட்டதால் இதில் போலீஸ் உதவி இனி கிடைக்கப் போவதில்லை. டிபார்ட்மெண்ட் மூலமாகவும் அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது....."

மறுபக்கம் ஃபோன் வைக்கப்பட்டது. அவர் அளவுக்கு சுலபமாக CBI மனிதனால் ஆனந்தையும் ஜெயினையும் ஒதுக்கி விட முடியவில்லை. சில வினாடிகள் யோசித்து விட்டு அந்தக் காரைக் கண்டு பிடிக்கும் ஏற்பாடுகளை ஆரம்பித்தான்.

(தொடரும்)

அமானுஷ்யன் - 13



சஹானா நிதானமாய் முதலுதவிப் பெட்டியைத் திறந்து டெட்டால், பஞ்சு எல்லாம் எடுக்க அவன் உள்ளுக்குள் பொறுமையிழந்து போனாலும் வெளிப்பார்வைக்கு அமைதியாக பதட்டமில்லாமல் பார்த்திருந்தான். அவனுக்குள் ஒரு குரல் கேட்டது.

"அவசரப்படாதே. அவசரப்படும் போது காலத்தை இழக்கிறாய்....". யாரோ எப்போதோ சொன்னதாய்த் தோன்றிய அந்த வார்த்தைகள் அவனுடைய கடந்த காலத்தின் முதல் நினைவாய்த் தோன்றியது. யார் இதைச் சொன்னார்கள்? எப்போது சொன்னார்கள்?....அவனுக்கு நினைவில்லை.

அவள் தந்த முதலுதவிப் பொருள்களால் வெளிப்பார்வைக்குத் தெரிந்த சிராய்ப்புக் காயங்களை சுத்தம் செய்து மருந்து தடவிக் கொண்டு அவளுக்குப் புன்னகையுடன் நன்றி தெரிவித்தான். அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் ஒருவித நிதானமான கச்சிதத்தை சஹானா கவனித்தாள். அவன் புன்னகை அவனை மிக அழகாகப் பிரகாசிக்க வைத்ததாக அவளுக்குத் தோன்றியது.

நல்ல வேளையாக அவள் காரை மீண்டும் கிளப்பும் வரை பின்னால் யாரும் தொடர்ந்து வரவில்லை. ஆனால் அவன் அருகில் அமர்ந்திருந்த அந்த வயதான பெண்மணி அவனையே உன்னிப்பாகப் பார்த்த விதம் அவனுக்கு என்னவோ மாதிரியாக இருந்தது. அவன் அவளைப் பார்த்தும் புன்னகைத்தான். ஆனால் அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

"அங்கிள், உங்கள் பெயர் என்ன?" வருண் கேட்டான்.

"அங்கிள்" என்று அவன் புன்னகைக்க வருண் கலகலவென சிரித்தான். அந்த சிறுவன் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டதால் சிறிது நேரத்திற்குத் தப்பித்தோம் என்று அவன் நினைத்தான்.

சஹானா கேட்டாள். "உங்களுக்கு எங்கே போக வேண்டும்?"

"டெல்லி.." அவனுக்கு அவள் டெல்லி போகிறவள் என்பதால் அதே பெயரைச் சொல்லத் தோன்றியது.

"டெல்லியில் எங்கே?" என்று கேட்க வாய் திறந்த சஹானா அதைக் கேட்காமல் விட்டாள். அவளுக்கு அவன் ஒரு புதிராகத் தோன்றினான். அவனிடம் சூட்கேஸோ, பையோ இல்லாதது அவளுக்கு விசித்திரமாகத் தோன்றியது. ஏதோ அதிகாலை நடை நடக்கக் கிளம்பியவன் போல கையில் ஏதும் இல்லாமல் இந்த மலைச்சாரலில் அவன் வந்த விதம் இயற்கையாக இல்லை. மகனைக் காப்பாற்றியவனிடம் அதைத் துருவித் துருவிக் கேட்பது நாகரிகமில்லை என்று அவளுக்குத் தோன்றியது.

ஆனால் வருண் அவனை விடுவதாய் இல்லை.

"அங்கிள், சொல்லுங்கள்... உங்கள் பெயர் என்ன?"

அப்போது சஹானாவும் கண்ணாடி வழியாக பின்னால் இருந்த அவனைப் பார்க்க மூவரும் அவன் பதிலை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது அவர்கள் பார்வையிலேயே அவனுக்குப் புரிந்தது. ஒரு கணம் வாயிற்கு வந்த பெயரைச் சொல்லித் தொலைக்கலாமா என்று தோன்றியது. ஆனால் அவர்கள் நல்ல மனிதர்களாக அவனுக்குத் தோன்றினார்கள். அவர்களிடம் பொய் சொல்ல அவன் துணியவில்லை. அவன் சொல்வதைக் கேட்டு விட்டு அவர்கள் இதே சினேகத்தில் அவனுடன் பேசுவார்களா என்று தெரியவில்லை. ஆனாலும் அவன் உண்மையைச் சொல்லத் தீர்மானித்தான்.

"உண்மையைச் சொன்னால் எனக்கு என் பெயரே தெரியாது....."

அவர்கள் மூவரும் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

ஒரு புத்த விஹார வாசலில் மரணத்துடன் போராடிக் கொண்டு அவன் விழுந்திருந்ததைக் கண்ட புத்த பிக்குகள் அவனைக் காப்பாற்றிய அந்த நள்ளிரவிலிருந்து ஆரம்பித்தான். அவனுக்குத் தெரிந்த அவன் வாழ்க்கையின் ஆரம்பம் அதுவே. அவன் அவர்களிடம் எதையும் மறைக்கவில்லை. அவனைத் தேடி வந்தவர்கள் அவனைத் தீவிரவாதிகள் என்று சொன்னதைக் கூட அப்படியே அவர்களிடம் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல அவர்கள் ஏதோ மர்மக் கதை கேட்பதைப் போல் கேட்டார்கள். வருணும் அந்த பெண்மணியும் அவன் மேல் வைத்த கண்ணை எடுக்காமல் கேட்டார்கள் என்றால் சஹானா சாலையையும், கண்ணாடி வழியாக அவனையும் மாறி மாறி பார்த்தபடியே காரை ஓட்டினாள்.

அந்த புத்த பிக்குகளின் அன்பைச் சொன்ன இடங்களில், முக்கியமாக அவன் கிளம்பும் போது அவர்கள் செய்த பிரார்த்தனை, கொடுத்த பணம், சால்வை பற்றிச் சொல்லும் போது அவனுக்கு நா தழுதழுத்தது. கடைசியில் அங்கிருந்து கிளம்பி லாரி ஒன்றில் பதுங்கி வந்ததையும், தேனீர் குடிக்க இறங்கியதையும் சொல்லி நிறுத்திய போது அங்கு ஒரு கனத்த மௌனம் நிலவியது. அவர்கள் திகைப்பின் எல்லைக்கே போய் விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சிறிது நேரம் கழித்து சஹானா கேட்டாள், "இனி நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?"

"எனக்கு நான் யார், என்னை ஏன் சிலர் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். அதைத் தெரிந்து கொள்கிற வரை உயிரோடு இருக்க வேண்டும்"

"சரி. டெல்லியில் எங்கே தங்குவீர்கள்?"

"இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் நான் ஒருவன் தங்குவதற்கு இடமில்லையா என்ன? என்னை டெல்லியில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு பொது இடத்தில் இறக்கி விடுங்கள். நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன்"

அவன் வாய் வார்த்தைக்காகச் சொல்லவில்லை என்பதும் எங்கே எப்படித் தங்குவோம் என்ற கவலை சிறிதும் அவனிடம் இல்லை என்பதும் அவன் முகத்தைப் பார்க்கும் போதே அவளுக்குப் புரிந்தது. அவன் சொல்வதைப் போன்றதொரு சூழ்நிலையில் அவனைப் போல் அமைதியாக வேறு ஒருவன் இருக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஆனால் அவன் நிலைமையைத் தெரிந்து கொண்ட பிறகு அவனை அப்படியே விட்டுப் போவது தர்மமல்ல என்று சஹானா நினைத்தாள். அவன் அவள் மகனின் உயிரைக் காப்பாற்றியவன்.. அவனுக்கு அவள் நிறையவே கடன்பட்டிருக்கிறாள்....

"நீங்கள் சில நாட்கள் எங்கள் வீட்டில் தங்குங்களேன்"

அவன் ஒரு கணம் திகைத்தான். பின் நெகிழ்ச்சியுடன் சொன்னான், "நீங்கள் சொன்னதற்கு மிகவும் நன்றி. ஆனால் என்னை டெல்லியில் இறக்கி விடுங்கள். அதுவே பெரிய உதவி"

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"என்னைக் கொல்ல ஒரு கூட்டமே அலைகிறது போலத் தோன்றுகிறது. ஒருவேளை நான் அவர்கள் சொல்வது போல தீவிரவாதியாகக் கூட இருக்கலாம். அதனால் எனக்கு அடைக்கலம் கொடுக்கிறவர்களுக்குக் கூட ஆபத்து வரலாம். ஒரு குடும்பத்திற்கு என்னால் ஆபத்து வருவதை என்னால் சகிக்க முடியாது. உங்கள் நல்ல மனதிற்கு நன்றி...." அவன் உறுதியாகச் சொன்னான்.

அவன் மறுத்தது அவள் மனதில் இருந்த தர்மசங்கடத்தைப் போக்கியது. ஒருவேளை அவன் சம்மதித்து வந்திருந்தால் அது பல பிரச்சினைகளை உண்டாக்கி இருக்கும் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை....

*********

CBI அலுவலகத்தில் டிவி உள்ள ஹாலில் முன்பே ராஜாராம் ரெட்டி, மகேந்திரன் உட்பட பலரும் மிக ஆர்வமாக டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு உயர் அதிகாரி நிருபர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார், ".... உண்மையில் ஆச்சார்யாவைக் கொலை செய்தவனை இவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை ஆரம்பத்தில் எங்களுக்கு இருக்கவில்லை. கைரேகையோ, வேறு தடயங்களோ கொலையாளி விட்டுப் போகவில்லை என்பதுதான் அதற்கு முக்கிய காரணம். அவருக்குத் தனிப்பட்ட பகைவர்கள் கிடையாது என்பது இன்னொரு காரணம். அதனால் கொலையாளி அவருடைய பழைய வழக்குகள் சம்பந்தப்பட்டவராய் இருக்கலாம் என்ற கோணத்தில் பார்க்க ஆரம்பித்தோம். எத்தனையோ வழக்குகளில் எத்தனையோ குற்றவாளிகளுக்கு அவர் தண்டனை வாங்கித் தந்தவர் என்பதால் அந்தக் குற்றவாளிகள், அல்லது அவர்களுக்கு வேண்டியவர்கள் பழி வாங்கும் நோக்கில் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டோம். சென்ற வருடம் போதை மருந்து கடத்தல் வழக்கில் அவர் பிடித்துக் கொடுத்தவர்கள் நிறைய நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருந்ததால் அவர்கள் அவரைப் பழி வாங்க துடித்துக் கொண்டிருந்தார்கள் என்ற தகவலும் எங்களுக்குக் கிடைத்தது. எனவே எங்கள் விசாரணை அந்தக் கும்பலைக் குறி வைத்தது. கடைசியில் நான்கு பேர்களை சந்தேகத்தின் பேரில் கண்காணிக்க ஆரம்பித்தோம்."

"அவர்களில் ஒருவன் மீது எங்கள் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. அவன் அந்த போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனின் தம்பி. நேற்று அவன் வீட்டை சோதனை போட்ட போது அவன் ஆச்சார்யாவைக் கொலை செய்ய உபயோகப்படுத்திய துப்பாக்கியைக் கைப்பற்றினோம். பிறகு அவனைக் கைது செய்தோம். ஆரம்பத்தில் அவன் மறுத்தாலும் கடைசியில் ஒப்புக் கொண்டான்...."

அவர் மனப்பாடம் செய்து சொன்னது போல் சொல்லி முடித்த பிறகு கொலையாளியின் புகைப்படத்தைக் காண்பித்தார்கள். அவன் சுமார் 35 வயதானவனாகத் தெரிந்தான்.....

ஆனந்த் ஜெயினைப் பார்க்க ஜெயினும் ஆனந்தைப் பார்த்தார். இருவரும் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனந்த் அங்கு இருந்தவர்களைப் பார்த்தான். மகேந்திரன் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததை ஆனந்த் அப்போதுதான் கவனித்தான். ஆனந்த் என்ன நினைக்கிறான் என்றறியும் ஆர்வத்திலேயே அவன் கவனித்ததாகத் தோன்றியது.

அங்கு இருந்தவர்கள் சிலர் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். மகேந்திரன் அந்தக் கைதட்டலில் கலந்து கொள்ளவில்லை. கைதட்டலில் கலந்து கொள்ளாத இன்னொரு நபர் ராஜாராம் ரெட்டி. அவர் முகத்தில் களைப்பு தெரிந்தது.

கடைசியில் ஜெயினும் கைதட்ட ஆரம்பித்தார். ஆனந்தும் கைதட்ட ஆரம்பித்தான். மகேந்திரனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். ராஜாராம் ரெட்டி அப்போதும் அந்தக் கைதட்டல் மகிழ்ச்சியில் இணைந்து கொள்ளவில்லை. மகேந்திரனின் பார்வை ஆனந்த் மேலிருந்து விலகி ரெட்டி மீது பதிந்தது. அவரையே கூர்மையாக ஊடுருவிப் பார்த்த மகேந்திரன் முகத்தில் மிக மெல்லிய புன்னகை வந்து போனதாக ஆனந்திற்குத் தோன்றியது.....

(தொடரும்)

அமானுஷ்யன் - 12.



குறுந்தாடி அவருக்காகப் பொறுமையிழந்து காத்துக் கொண்டிருந்தான். அவன் சீக்கியரைப் போலத் தலைப்பாகை இட்டு மாறுவேடத்தில் இருந்தான். அவரை எப்போதும் அவன் அலுவலகத்தில் வந்து சந்தித்ததில்லை. ஆனால் இப்போதைய செய்தி மிக முக்கியமென்பதால் இரவு வரை காத்திருக்க அவனுக்கு நேரமில்லை. ஒரு பொதுத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒரே ஒரு வார்த்தைதான் அவரிடம் சொல்லியிருந்தான். "அவசரம்"

அவன் குரலைக் கேட்ட அவர் அலுவலகத்துக்கு பதினோரு மணிக்கு வரச் சொன்னார்.

அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்றரை. அரசியல்வாதிகளுக்கும் நேரம் தவறாமை என்ற நல்ல பழக்கத்திற்கும் ஏனோ சம்பந்தமே இருப்பதில்லை. கிட்டத்தட்ட பன்னிரண்டு பேர் கைகளில் மனுக்களுடன் காத்திருந்தார்கள். அடியாட்கள், அன்னக்கைகள் என்று நாலைந்து பேரும் அங்கிருந்தனர்.

அவர் வந்த போது மணி பதினொன்று ஐம்பத்தைந்து. செயலர், இரண்டு அரசு அதிகாரிகளுடன் உள்ளே நுழைந்தவர் அவனைக் கண்டது போலவே காட்டிக் கொள்ளவில்லை. மற்றவர்கள் சல்யூட் அடிக்க அவர் கைகள் கூப்பி அவர்களுக்கு பணிவாக வணக்கம் தெரிவித்து விட்டு தனதறைக்குள் நுழைந்தார். ஆனால் முதலில் கூப்பிட்டனுப்பியது அவனைத்தான்.

அவன் உள்ளே நுழைந்த போது தன் செயலருக்கு ஏதோ சில ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருந்த அவர் அவனை உட்கார சைகை காட்டி விட்டு செயலரிடம் போகும் போது கதவை சாத்திக் கொண்டு போகச் சொன்னார்.

கதவை சாத்திக் கொண்டு செயலர் போன பிறகு கேட்டார், "அப்படி என்ன தலை போகிற அவசரம்?"

"அவன் உயிரோடு இருக்கிறான்"

அவர் முகத்தில் இருந்து இரத்தம் வடிந்தது. "என்னது?"

"அவன் உயிரோடு இருக்கிறான்" என்று மீண்டும் சொன்ன அவன் தொடர்ந்தான். "என் ஆள் ஒருவன் அவனை நேரில் பார்த்திருக்கிறான்."

அவருக்கு அதை நம்ப முடியவில்லை. அவன் அன்று காலை தனக்கு வந்த ஃபோன்காலை விவரித்தான். பேச்சில்லாமல் திகைத்துப் போய் அமர்ந்திருந்த அவர் பேச முடிந்த போது வார்த்தைகள் பலவீனமாய் வந்தன. "அவன் எப்படி பிழைத்திருக்க முடியும்?"

"தெரியவில்லை."

"அது சரி, பார்த்த இடத்திலேயே அவனை சுட்டுத் தள்ளாமல் இருந்தது எதனாலாம்...?" அவர் குரல் பலம் பெற ஆரம்பித்தது. கோபத்தில் பொரிந்து தள்ளினார். "ஃபோனில் தகவல் தெரிவிக்க டவர் கிடைக்கவில்லை, சரி. பஸ்ஸை அங்கேயே நிறுத்தி இறங்கி அவனை சுட்டுத் தள்ளியிருக்கலாமே அந்த ஆள்? நீங்கள் கேட்கவில்லையா? அவனைப் பார்த்தவுடனே பயந்து போய் விட்டானா? இந்த மாதிரி பேடிகளை எல்லாம் ஏன் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை"

"சார், அவன் பேடி அல்ல. பல பேரைக் கொன்றவன் அவன். போலீசில் ஒரு தடவை மாட்டி சித்திரவதை அனுபவித்த போது கூட வாய் திறந்து யாரையும் காட்டிக் கொடுக்காதவன். அவன் அந்த அமானுஷ்யன் விஷயத்தில்தான் பயப்படுகிறான். அந்த பயத்திற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அந்த மலையுச்சியில் ஆறு பேர் துப்பாக்கியால் சுட்டு கிட்டத்தட்ட 15 குண்டுகளில் ஒரே ஒரு குண்டுதான் அவன் மேல் பாய்ந்திருக்கிறது. இத்தனைக்கும் அவனுக்கு அந்த மலையுச்சியில் நகர முடிந்த இடம் குறைவு. அப்படிப்பட்டவனைத் தனியாக தாக்கப் போவது புத்திசாலித்தனம் இல்லை என்று கூட சொல்லலாம்.... "

அவர் அங்கலாய்த்தார். "இப்படிப்பட்டவன் நம் பக்கம் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!"

அதை அவன் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. அவன் கவலை வேறாக இருந்தது. "அவன் உயிரோடு இருந்தால் நமக்கும் நம் திட்டத்திற்கும் ஆபத்து. நான் எங்கள் ஆட்கள் ஏழெட்டு பேரை உடனடியாக அவனைப் பார்த்த இடத்திற்கு போகச் சொல்லியிருக்கிறேன்... அவன் அங்கே இருந்தால் அவனை உயிரோடு அவர்கள் விட மாட்டார்கள்"

"நான் இப்போதுதான் அந்த ஆச்சார்யா கொலைக் கேஸிற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு வந்தேன். அதற்குள் இந்தப் பிரச்சினை வந்து விட்டது.... இத்தனை பேர் அவனுக்காக வலை வீசி தேடிக் கொண்டிருக்கும் போது அவன் ஏதோ ஒரு டீக்கடையில் சாவகாசமாய் டீ குடித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அவன் மனிதனே இல்லை. அவன் உங்கள் ஆட்கள் போகிற வரை அங்கேயே இருப்பானா?" அவர் குரலில் அவன் இன்னமும் அங்கேயே இருப்பான் என்ற நம்பிக்கை இருக்கவில்லை.

*************

அந்தப் பெண் தன்னுடைய விசிட்டிங் கார்டை அவனுக்குத் தந்தாள். "எப்பவாவது டெல்லி பக்கம் வந்தால் கண்டிப்பாக என்னை வந்து பாருங்கள்."

அவன் அந்த விசிட்டிங் கார்டைப் பார்த்தான். சஹானா என்பது அவள் பெயர் என்றும் அவள் பிரபல டிவி ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கிறாள் என்பதும் தெரிந்தது. புன்னகையுடன் தலையசைத்தான். அந்த பஸ்ஸ¤ம், வேனும், லாரியும் கிளம்பிச் செல்ல ஆரம்பித்தன. அப்போதுதான் அவள் அங்கு வேறு எதுவும் வண்டிகள் இல்லாததைக் கவனித்தாள். "நீங்கள் அந்த பஸ்ஸில் வந்திருப்பவர் என்று நினைத்தேன். நீங்கள் இங்கேயே இருப்பவர்தானா?"

"இல்லை....." அதற்கு மேல் அவன் விவரிக்க முனையவில்லை.

அவள் குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். அவன் ஒன்றும் சொல்லாததைப் பார்த்து தானாகச் சொன்னாள். "நீங்கள் டெல்லி பக்கம் போகிறவராக இருந்தால் காரில் ஏறிக் கொள்ளுங்கள். நான் உங்களை டிராப் செய்கிறேன்..."

அங்கு இனியும் தங்குவது ஆபத்து என்பதை நன்குணர்ந்த அவன் "உங்களுக்கு ஒன்றும் சிரமமில்லையே" என்றான்.

"இதில் என்ன சிரமம் இருக்கிறது...உங்கள் லக்கேஜ் எங்கேயிருக்கிறது?"

"லக்கேஜ் எதுவும் இல்லை"

"அப்படியானால் ஏறிக் கொள்ளுங்கள்" என்று அவள் காரின் பின் பக்கக் கதவைத் திறக்க அவன் தயக்கத்துடன் ஏறிக் கொண்டான். கார் கிளம்பியது.

அவன் அருகில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி உணர்ச்சியே இல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிறுவனும் முன் சீட்டில் மண்டியிட்டபடி பின்னால் திரும்பி அவனையே பார்த்தான். அவன் பார்வையில் சினேகம் இருந்தது. அவன் தாய் சொன்னாள். "வருண், சரியாய் சீட்டில் உட்கார்"

"நான் பின்னால் அங்கிள் உடன் உட்காரப் போகிறேன்" என்றான் அந்த சிறுவன்.

"பாட்டியும் அங்கிளும் சௌகரியமாய் உட்காரட்டும்..."

"பரவாயில்லை. வருவதானால் வரட்டும்" என்று அவன் சொல்ல வருண் தாயைப் பார்த்தான். அவள் தலையசைக்க வருண் கைகளை நீட்ட அவன் சிறுவனைத் தூக்கி தன்னருகில் அமர வைத்துக் கொண்டான். வருண் அவனை ஓட்டினாற்போல் உட்கார்ந்து அவனைப் பார்த்து புன்னகைக்க அவனும் புன்னகைத்தான். அவனுக்கு அந்த சிறுவனை மிகவும் பிடித்து விட்டது.

அவன் பின்னால் திரும்பிப் பார்த்தான். எந்த வாகனமும் அவர்களைப் பின் தொடர்வதாகத் தெரியவில்லை.

வருண் அவன் கைகளில் இருந்த சிராய்ப்புகளைப் பார்த்து சொன்னான். "அங்கிள் உங்கள் கையில் ரத்தம்.."

அப்போதுதான் சஹானா பின்னால் திரும்பி அவனுடைய சிராய்ப்புக் காயங்களைக் கவனித்தாள். மகன் காப்பாற்றப்பட்டவுடன் அவனுக்கு ஏதாவது காயம் பட்டிருக்கிறதா என்று அவன் தலையில் இருந்து கால் வரை ஆராய்ந்து பார்த்தவளுக்கு அவனைக் காப்பாற்றிய மனிதனுக்கு ஏதாவது ஆகியிருக்கலாம் என்ற எண்ணம் கூடத் தோன்றாதது ஒரு மாதிரியாக இருந்தது. "சாரி, நான் கவனிக்கவில்லை. இங்கேயே முதலுதவிப் பெட்டி இருக்கிறது...." என்றவள் காரை ஓரமாக நிறுத்தினாள்.

அவனுக்கு அந்த இடத்திலிருந்து எவ்வளவு வேகமாகப் போக முடியுமோ அவ்வளவு வேகமாகப் போய் விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. "இதெல்லாம் பெரிய காயமில்லை. நீங்கள் காரை நிறுத்த வேண்டாம்" என்று சொல்லிப் பார்த்தான். அவள் கேட்பதாக இல்லை. அவள் நிதானமாக முதலுதவிப் பெட்டியின் சாவியைத் தேட ஆரம்பித்தாள்.

அவன் என்னேரமும் எதிரிகளை எதிர்பார்த்திருப்பதை அவளிடம் சொல்ல முடியாமல் தவித்தான். அவன் பார்வை பின் பக்கமாகவே இருந்தது......

********
மஹாவீர் ஜெயினும் ஆனந்தும் பேசிக் கொண்டிருந்த போது ஜெயினின் ஃபோன் அடித்தது. அழைத்தவர் சிட்டி போலீஸ் கமிஷனர். "சார், உங்கள் அடிஷனல் டைரக்டர் ஆச்சார்யாவைக் கொன்றவனைக் கைது செய்து விட்டோம்...."

அதிர்ந்து போன ஜெயின் கேட்டார். "யார் கொலையாளி? நீங்கள் அவனை எப்படிப் பிடித்தீர்கள்?"

"அந்தக் கொலையாளியைக் கைது செய்த விஷயம் பிரஸ்ஸ¤க்கும், டிவிக்கும் யாரோ தெரியப்படுத்தி விட்டதால் இதே கேள்வியை போலீஸ் அதிகாரிகளிடம் கேட்க நிருபர்கள் கூட்டம் அங்கே மொய்த்துக் கொண்டிருக்கிறது....நீங்கள் டிவியை ஆன் செய்தால் முழு விவரமும் தெரியும். ·ப்ளாஷ் நியூசாக காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்....."

நன்றி தெரிவித்து விட்டு ஃபோனை வைத்த ஜெயின் ஆனந்தை அழைத்துக் கொண்டு அலுவலகத்தில் டிவி வைத்திருக்கும் ஹாலுக்கு விரைந்தார்.

(தொடரும்)

அமானுஷ்யன் - 11



ஹலோ"

"ஊம்... சொல்லுங்கள்... அவன் பிணம் கிடைத்ததா?"

"இல்லை, சார். அவன் பிழைத்திருந்தால் அந்த புத்த விஹாரத்தில்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்து அங்கே பத்து பேரை அனுப்பினேன். அங்கே இரண்டாவது தடவை போனதால் அவங்களுக்கே பயம் வந்து அவர்களின் பாதாள அறையைக் கூடத் திறந்து காட்டியிருக்கிறார்கள்...அங்கேயும் உள்ளே போய் ஆட்கள் பார்த்திருக்கிறார்கள். அவன் இல்லை.... ஏதாவது விலங்கு அவன் உடம்பை எடுத்துக் கொண்டு போய் இருக்கும் என்று என் ஆட்கள் சந்தேகப்படுகிறார்கள்...."

மறுபுறத்தில் இருந்து ஏளனமாக குரல் வந்தது. "உங்கள் ஃபோன் கால் என்று தெரிந்தவுடன் நல்ல சேதிதான் வந்திருக்கும் என்று நினைத்தேன்....."

CBI மனிதன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னான். "நல்ல செய்தியை நிதானமாகச் சொன்னாலும் பரவாயில்லை. கெட்ட செய்தியைத்தான் உடனடியாகத் தெரிந்து கொள்வது புத்திசாலித்தனம். ஆச்சார்யா வீட்டில் ஆனந்துக்கு ஏதோ ஒரு தடயம் கிடைத்தது போல் இருக்கிறது.."

"அப்படி இருக்க வாய்ப்பில்லையே... என்ன என்று தெரிந்ததா?"

"ஜெயினும் அவனும் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்கள். ஆனால் ஏதோ கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாய்த் தெரிகிறது. நாம் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும்... இல்லை என்றால் சிக்கலாக வாய்ப்பிருக்கிறது"

இந்த விஷயம் மறுபக்கத்தை யோசிக்க வைத்தது போல் தெரிந்தது. சில வினாடிகள் கழித்து "அதற்கு சீக்கிரம் ஒரு ஏற்பாடு செய்கிறேன்...."

"ஆனந்த் நாளைக்கு பெங்களூர் போகிறான்"

"ஏன்?"

"ஆச்சார்யா மனைவியைப் பார்த்துப் பேசப் போகிறான்"

"ஆச்சார்யா மனைவியிடம் எதாவது சொல்லி இருக்க வாய்ப்பிருக்கிறதா?"

"அவர் ஆஃபிஸ் விஷயத்தை மனைவியிடம் சொல்வதில்லை.... ஆனால் அந்த ஆனந்த் கையில் என்ன தடயம் கிடைத்திருக்கிறது என்றும் அது பற்றி ஆச்சார்யாவின் மனைவிக்கு என்ன தகவல் தெரியும் என்றும் தெரியவில்லை"

"ஆச்சார்யா கேஸை நான் சீக்கிரமே முடித்து வைக்கிறேன். நீங்கள் அந்த ஆள் பிணத்தை சீக்கிரம் கண்டுபிடியுங்கள். ஏதோ விலங்கு சாப்பிட்டிருக்கலாம் என்கிற அனுமானம் எல்லாம் வேண்டாம். விலங்கு கூட மனிதனை முழுவதும் சாப்பிடாது. மிச்சம் ஏதாவது வைக்கும். அந்த மிச்சத்தைக் கண்டுபிடியுங்கள்....."

********

அவன் மனதில் அந்த பஸ் பயணியின் முகத்தில் தெரிந்த உணர்ச்சியும் பீதியும் சிறிது நேரம் அப்படியே நின்றன. யாரவன்? அவனைத் தேடும் கூட்டத்தில் ஒரு நபரா? இல்லை வேறேதாவது விதத்தில் நன்றாகப் பரிச்சயமானவனா? நன்றாகப் பரிச்சயமானவனாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் முக்காட்டில் முகம் மட்டும் தெரியும்படியாக இருக்கும் மனிதனை அடையாளம் கண்டு கொள்வது மிக நன்றாகத் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் முடியும்... ஏனப்படி அவன் பயப்பட்டான்? உயிருடன் இருக்கிறானே என்ற அதிர்ச்சியை விட பயம் அதிகமாக இருப்பதாக அல்லவா தோன்றுகிறது? ஏதோ பேயைப் பார்த்தது போல் அவன் முகம் மாறியதே....

அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கார் வந்து நின்றது. டிரைவர் சீட்டில் ஒரு அழகான இளம் பெண் இருந்தாள். அவளும் ஒரு ஆறு வயதுச் சிறுவனும் இறங்கினார்கள். பையன் துறுதுறுவென்று இருந்தான். அப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்திருக்கிறான் என்பது பார்க்கையிலேயே தெரிந்தது. ஆனால் கையில் ஒரு பந்துடன் இறங்கியவன் தாயுடன் வீர நடை போட்டு டீக்கடைக்கு வந்தான். பையனுடன் டீக்கடைக்கு வந்த அந்த இளம் பெண் மிகவும் களைத்துப் போனது போல் தெரிந்தாள். காரின் பின் சீட்டில் இருந்து ஒரு வயதான பெண்மணி எட்டிப் பார்த்தாள்.

"உனக்கு டீ வேணுமாடா?" அந்தப் பெண் அவனிடம் தமிழில் கேட்டாள். அவனுக்கு நினைவு வந்த பின் கேட்கும் முதல் தமிழ் பேச்சு அதுதான். அப்போதுதான் அவனுக்கு இன்னொரு உண்மை உறைத்தது. அவன் சிந்திப்பதும் தமிழில்தான். அவன் தமிழ்நாட்டவனோ?

டீக்கு பதிலாக சாக்லேட் கேட்ட மகனை அவள் முறைத்து விட்டு இரண்டு டீ ஆர்டர் செய்தாள். அந்தச் சிறுவன் அந்தக் கடையில் தான் கேட்ட சாக்லேட் இருக்கிறதா என்று எட்டி எட்டி பார்த்து சலித்துப் போனான். அவள் இரண்டு டீ வாங்கிக் கொண்டு ஒன்றை அந்தக் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த வயதான பெண்மணிக்குக் கொடுக்கப் போக அதே வீர நடையுடன் தாயுடன் அந்தச் சிறுவன் விரைந்தான்.

அந்த நேரத்தில் அந்தச் சிறுவனின் கையிலிருந்த பந்து தவறி விழுந்து தெருவுக்குச் செல்ல, அவன் பந்தை எடுக்க ஓடினான். மேலிருந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு லாரியின் டிரைவர் திடீரென்று பையனை சாலை நடுவில் எதிர்பார்க்காததால் தடுமாறுவது தெரிந்தது. அந்த ஒரு கணத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த அவனுக்கு அந்த டிரைவர் அவசரமாக ப்ரேக் போட்டாலும் வண்டி சிறுவனின் மீது ஏறிப் போய்த்தான் நிற்கும் என்பது புலனாக டீ டம்ளரை வீசி விட்டு வேகமாக இயங்கினான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் குறுக்கே பாய்ந்து அந்தச் சிறுவனுடன் எதிர்பக்கம் உருள அந்த லாரி சிறிது தூரம் போய் பெருத்த சத்தத்துடன் நின்றது.

நடந்தது என்ன என்று அங்குள்ளவர்களுக்குப் புலனாக சிறிது நேரம் தேவைப்பட்டது. அந்தப் பையனின் தாயும், பின் சீட்டு மூதாட்டியும் அதிர்ச்சியில் உறைந்து போய் பார்த்துக் கொண்டிருக்க, அந்தச் சிறுவன் என்ன நடந்தது என்று உடனடியாக அறிய முடியாமல் திருதிருவென விழித்தான். சிறுவனைத் தூக்கிக் கொண்டு எழுந்த போது அவனுக்கு லேசாக சிராய்ப்புகள் இருந்தன. சிறுவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. அதிகாலை அரைத் தூக்கத்தில் இருந்தவர்கள் அனவரும் முழுவதுமாக விழித்துக் கொண்டு அது பற்றிப் பரபரப்புடன் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அங்கிருந்தவர்களுக்கு அவன் உடனே ஹீரோ ஆகி விட்டான். பலரும் அந்தச் சிறுவனைக் காப்பாற்றிய அவனுக்குக் கை கொடுத்துப் பாராட்டினார்கள். ஒரு சர்தார்ஜி ஓடி வந்து அவனைத் தழுவிக் கொண்டார். "என்ன டைமிங்...என்ன ஸ்பீட்....அசாத்தியம்". சிறுவன் அவனைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தான்.

அந்தச் சிறுவனின் தாயிற்கு அதிர்ச்சி விலக சில வினாடிகள் தேவைப்பட்டன. கண்ணீர் வழிய ஓடிச் சென்று மகனைக் கட்டிக் கொண்டாள். மகனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்பு அவன் பக்கம் திரும்பிய அந்தப் பெண் கண்களில் இன்னும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. தன் கைகள் இரண்டையும் கூப்பி வணங்கினாள். "நீங்கள் கடவுள் மாதிரி...." என்று ஹிந்தியில் குரல் தழுதழுக்கச் சொன்னாள். அவளுக்கு அவன் தமிழன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தக் கைகூப்பலும், வார்த்தைகளும், மற்றவர்களின் பாராட்டுகளும் அவனை தர்மசங்கடப்படுத்தின. அவனுக்கு உண்மையில் தான் பெரிதாக சாதித்தது போல் தெரியவில்லை. மேலும் அவன் பலர் கவனத்தையும் ஈர்த்து விட்டதும் ஒரு அபாய நிலையை அங்கு உருவாக்கியதாக அவனுக்குத் தோன்றியது. பஸ்ஸில் அவனைப் பார்த்த பயணி யாரிடம் கூப்பிட்டு சொல்வான், இனி யார் எப்போது அவனைத் தேடி வரப் போகிறார்கள் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை.

அவன் வந்த லாரியின் டிரைவரும் க்ளீனரும் கிளம்பினார்கள். அங்கிருந்த அத்தனை பேர் கவனமும் அவன் மீது இருந்ததால் மறைவாகச் சென்று அந்த லாரியில் ஏறிக் கொள்வது சாத்தியமில்லை. டூரிஸ்ட் பஸ்ஸ¤ம், வேனும் கூடக் கிளம்பத் தயாராயின. அந்தப் பெண்ணும் அவனிடம் நூறாவது தடவையாக நன்றி சொல்லி விட்டுக் கிளம்பத் தயாரானாள். அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மறைவாக இருக்கவும், மறைவாகப் பயணம் செய்யவும் இரவு நேரம் உகந்தது. ஆனால் நன்றாக விடிந்து விட்ட இந்த நாள் இனி என்ன செய்யப் போகிறான்?

********

குறுந்தாடி மனிதன் அன்று காலை சற்று தாமதமாகத்தான் எழுந்தான். முந்தைய தினம் இரவு ரகசிய சந்திப்பு ஒன்றில் அவன் உட்பட ஏழு பேர் கலந்து பேசி முடிய நள்ளிரவைத் தாண்டி இருந்தது. அவர்கள் திட்டம் எல்லாம் கச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அந்த அமானுஷ்யன் பிணமும் பார்க்கக் கிடைத்து விட்டால் கவலையில்லாமல் முன்னேறலாம். அவன் தன் காலைக் கடன்களை எல்லாம் முடித்து விட்டுத்தான் காலை எட்டரைக்கு செல் ஃபோனைப் பார்த்தான். யாரோ 17 முறைகள் அழைத்திருந்தார்கள். ஸ்விட்ச் ஆ·ப் செய்து விட்டு உறங்கி இருந்தான். யாரெல்லாம் அழைத்திருக்கிறார்கள் என்று பார்த்தான். எல்லாம் ஒரே எண். அவர்கள் இயக்கத்தின் ஒரு உறுப்பினர்தான் அத்தனை முறை அழைத்திருந்தான். காலை ஆறு பத்திலிருந்து விடாமல் தொடர்ந்து அழைத்திருக்கிறான்.

குறுந்தாடி மனிதன் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டான்.

"அந்த சைத்தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான்." எந்த முன்னுரையும் இல்லாமல் படபடப்பாக தகவல் வந்தது.

தலையில் இடி விழுந்தது போல குறுந்தாடி உணர்ந்தான். "உனக்கு ஆள் மாறாட்டம் ஆகவில்லையே"

"அவன் போல இன்னொரு சைத்தான் இருக்க முடியுமா? காலையில் ஐந்தரை மணிக்கு அவனைப் பார்த்தேன். பார்த்தவுடனே ஃபோன் செய்யலாம் என்றால் டவர் கிடைக்கவில்லை. டவர் கிடைத்த போது நீங்கள் எடுக்கவில்லை. ....."

எதிர்முனையில் தெரிந்த படபடப்பு அவனை நம்பச் சொன்னது. அவன் சொன்னது போல் அவன் போல் இன்னொரு சைத்தான் கண்டிப்பாக இருக்க முடியாது. "எங்கே அவனைப் பார்த்தாய்? எப்போது பார்த்தாய்? ஒரு சின்ன தகவல் கூட விடாமல் எனக்கு விவரமாய் சொல்"

(தொடரும்)

Wednesday, July 2, 2014

அமானுஷ்யன் - 10



"எதாவது தடயம் அல்லது தகவல் கிடைத்ததா?" மஹாவீர் ஜெயின் கேட்டார்.

ஆனந்த் ஒன்றும் சொல்லாமல் அந்தக் காகிதத்தை அவரிடம் நீட்டினான்.

அவர் அதனை ஆராய நிறைய நேரம் எடுத்துக் கொண்டார். அதில் இருந்தது தில்லியின் வரைபடம். அதில் ஏழு இடங்கள் சிவப்பு மையால் குறியிடப்பட்டிருந்தன. சாந்த்னி சௌக், இந்தியா கேட், ரயில்வே ஸ்டேஷன், கனாட் ப்ளேஸ், சன்சாத் மார்க், லோட்டஸ் டெம்பிள், பாரக்கம்பா ரோடு என்று குறிகளுக்கு அருகே எழுதப்பட்டிருந்தது. அந்தக் கையெழுத்து ஆச்சார்யாவினுடையது என்பதில் ஜெயினுக்கு சந்தேகம் இல்லை.

பின் நிமிர்ந்தவர் ஆனந்தைக் கேட்டார், "இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதையேதான் நினைக்கிறேன் சார்"

அவன் பதில் ஜெயின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. நாட்டின் தற்போதைய நிலவரத்தில் நல்லதை நினைக்க முடிவதில்லை....

"இந்த மேப் பழையதாகக் கூட இருக்கலாம். எத்தனையோ வருடங்களுக்கு முன் கூட அவர் இந்தக் குறிகளை செய்திருக்க வாய்ப்பிருக்கல்லவா?"

"இல்லை சார். சாவதற்கு ஐந்து நாட்கள் முன்னால் அவர் வாங்கிய புத்தகத்திற்குள்தான் இந்த மேப் இருந்தது. அவர் கடைசி நாட்களில் படித்துக் கொண்டிருந்த புத்தகம் அது. ஜென் புத்தமதத்தின் முதல் குரு போதிதர்மா பற்றிய அந்தப் புத்தகத்தில் 32 பக்கங்கள் தான் படித்திருக்கிறார்....... புதிதாக வாங்கிப் படித்துக் கொண்டிருந்த புத்தகத்திற்குள் இருக்க வேண்டுமென்றால் இந்த மேப் கடைசி நாட்களில் குறியிட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..."

மஹாவீர் ஜெயின் யோசித்தபடி சொன்னார். "..... நமக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன என்றாலும்
இந்த மேப் எதையும் தீர்மானமாய் சொல்லவில்லை...."

ஆனந்த் ஒன்றும் சொல்லவில்லை. அவரை யோசிக்க விட்டான்.

"....இந்தக் குறியீடுகளை வேறு காரணங்களுக்காகக் கூடச் செய்திருக்கலாம்...."

ஆனந்த் அமைதியாகப் பார்த்தான்.

மஹாவீர் ஜெயின் கேட்டார். "நீங்கள் ஏன் ஒன்றும் சொல்ல மாட்டேன்கிறீர்கள்?"

"எனக்கென்னவோ இது சீரியஸான விஷயமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆச்சார்யா கொலையானதற்கும் இதற்கும் கண்டிப்பாக சம்பந்தமிருக்கும் என்று நினைக்கிறேன். அதைய தான் நீங்களும் நினைக்கிறீர்கள் என்பதும் புரிகிறது... அப்படி இல்லாமல் இருக்கலாம் என்று நம்ப நீங்கள் இப்போது ஏதாவது ஆறுதலான காரணங்களைத் தேடுகிறீர்கள்.... அப்படி ஏதாவது இருந்து விட்டால் சந்தோஷம்தான்"

ஜெயின் பெருமூச்சு விட்டார். "இதெல்லாம் முக்கியமான இடங்கள் ஆனந்த்.... நாம் சந்தேகப்படுவது போல் இந்த இடங்களில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்றால் அது எப்போது, யாரால் என்ற கேள்வி வருகிறது...."

"அதுதான் தெரியவில்லை சார். ஆச்சார்யா வீட்டில் ஆன அளவு தேடிப் பார்த்து விட்டேன். கிடைக்கவில்லை. ஆச்சார்யாவுக்குத்தான் அந்தத் தகவல்கள் தெரிந்திருக்கலாம். எங்கெல்லாம் அந்தத் தகவல்கள் இருக்கும் என்று சந்தேகம் இருந்திருக்கிறதோ அதை எல்லாம் அவரைக் கொன்றவர்கள் அழித்து விட்டார்கள். இந்த மேப் கூட அவருடைய ஜென் புத்தகத்தில் வைத்திருந்ததால்தான் தப்பித்து நம் கையில் கிடைத்திருக்கிறது..."

"அப்படியானால் அந்த விடை அவரைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்தால் ஒழியக் கிடைக்காது. இல்லையா?"

"இல்லை. ஆச்சார்யாவிற்கு அந்தத் தகவலைக் கொடுத்த நபர், அல்லது நபர்களைக் கண்டுபிடித்தால் கூட அந்தத் தகவல் நமக்கு கிடைக்கலாம் சார்..."

"ஒருவேளை அந்த நபர் அல்லது நபர்களையும் அவர்கள் கண்டுபிடித்துக் கொன்றிருந்தால்....?"

"அப்படிக் கொன்றிருந்தால் நீங்கள் சொன்னபடி கொலையாளிகளைக் கண்டுபிடித்தால்தான் பதில் கிடைக்கும். ஆனால் அந்தத் தகவல் தரும் நபர் அல்லது நபர்கள் இறந்து விட்டார்கள் என்பது உறுதியாகும் வரை நாம் அவர்களையும் கண்டுபிடிக்க முயல்வோம். ஆனால் அது வரை நம் இருவரைத் தவிர வேறு யாருக்கும் இந்த மேப் விஷயம் தெரியாமல் இருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன், சார்..."

"ஆனால் வெளியே சொல்லாமல் இருந்து, நாம் கண்டுபிடிப்பதற்கு முன்பே ஏதாவது அசம்பாவிதம் இந்த இடங்களில் நடந்து விட்டால் தவறாகிப் போய் விடுமே, ஆனந்த்"

"ஆச்சார்யா வீட்டில் இருந்து கிடைத்தது என்று தெரிந்தால் கொலையாளிகள் உஷாராகி விடுவார்களே, சார்..."

இந்த இக்கட்டான நிலையில் என்ன செய்வது என்று ஜெயின் யோசித்த போது ஆனந்த் சொன்னான். "வேண்டுமானால் புதுதில்லியில் முக்கியமான இடங்களுக்கு ஆபத்து என்பது போல் மொட்டையாக ஃபோன் காலோ, கடிதமோ அனுப்பி வைக்கலாம். பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்ப்படுத்தப்பட அது உதவும்... நாம் உடனடியாக நம் துப்பு துலக்கும் வேலையை முடுக்கி விடலாம்..."

சிந்தித்த போது அவன் சொல்வதே சரியென்று அவருக்குத் தோன்றியது. கூடுதல் தகவல்கள் இல்லாத இந்த வெறும் வரைபடம் வெளியிடப்படுவதில் பெரிய நன்மை விளைந்து விடும் என்று தோன்றவில்லை. ஆனந்த் சொல்வது போல் கொலையாளிகளை உஷார்ப்படுத்தத்தான் உதவும் என்று தோன்றியது. "உங்களுக்கு உதவிக்கு யாராவது வேண்டுமா?..."

"வேண்டாம், சார். எனக்குத் தேவைப்படும் விவரங்களை நம்பிக்கையான ஆட்களிடமிருந்து நானே பெற்றுக் கொள்கிறேன்....சார். ஒரு கேள்வி. உங்கள் ஆபிசில் இருக்கும் மகேந்திரன் எப்படி?"

"கம்ப்யூட்டரில் புலி. புத்திசாலி. ஏன் கேட்கிறீர்கள்?"

"ஆச்சார்யா அவனிடம் நிறையப் பேசுவார். கம்ப்யூட்டரில் சந்தேகம் கேட்பார் என்றெல்லாம் சொன்னார்கள். அவனுக்கு மற்றவர்கள் கம்ப்யூட்டர்களில் புகுந்து வேவு பார்க்கும் பழக்கமும் இருக்கிறது என்றார்கள். அதனால்தான் கேட்டேன்...."

ஜெயின் சற்று யோசித்து விட்டுச் சொன்னார், "உண்மைதான். அவனுக்கு அரசியல் செல்வாக்கும் இருக்கிறது. அவனை வேலைக்குச் சேர்த்ததே அந்த செல்வாக்குதான். ஆனாலும் வேலையில் அவனிடம் குறை சொல்வதற்கில்லை....."

ஆனந்த் மேற்கொண்டு அவரிடம் மகேந்திரனைப் பற்றி எதுவும் கேட்கப் போகவில்லை. சற்று நேரத்திற்கு முன் ஜெயினின் அறைக்குள் நுழையும் போது கூட அவன் கழுகுப் பார்வை பார்த்தது மனதில் நெருடியது....

*************

வெளியே பனிக்காற்றின் தீவிரம் அதிகமாயிருந்தது. அவன் புத்த விஹாரத்தை விட்டு வந்து இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. அவன் உறைபனி லேசாகப் போர்த்தியிருந்த பாறைகளில் ஏறிப் பயணம் செய்தான். முடிந்த வரை மனிதர்கள் செல்லக் கூடிய பாதைகளை அவன் தவிர்த்தான். இந்த நள்ளிரவில் வெளியே யாரும் அந்தப் பகுதியில் பயணிப்பது அபூர்வம் என்றாலும் அவன் அனாவசியமாக ஆபத்துகளை எதிர்கொள்வதைத் தவிர்க்க எண்ணினான். ஆங்காங்கே பனிக்கரடிகளைக் கண்டான். அவை அவனை வெறித்துப் பார்க்க அவன் புன்னகையுடன் அவற்றைப் பார்த்து கையசைத்து விட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஒரு பனிக்கரடி அவனை சிறிது தூரம் பின் தொடர்ந்து வந்தது. ஆனால் அவனுக்கு சிறிதும் பயம் இருக்கவில்லை. மனிதர்களை விட இந்த விலங்குகள் எத்தனையோ மேல். அவசியமில்லாமல் அடுத்தவர்களை இம்சிப்பதில்லை.

நீண்ட பயணத்திற்குப் பின் ஒரு நெடுஞ்சாலையை அடைந்தான். மறைவாக நின்று ஒரு மணி நேரம் அமைதியாக அந்த நெடுஞ்சாலையைக் கவனித்தான். ஆள் நடமாட்டம் இல்லையென்றாலும் அந்த ஒரு மணி நேரத்தில் ஒரு லாரியும், ஒரு மிலிட்டரி ட்ரக்கும் அந்த சாலையில் சென்றன. பனியினூடே அந்த வண்டிகளின் விளக்குகள் மங்கலாகத் தெரிந்து மறைந்தன. அங்கு நின்ற அந்த வேளையில் அவன் மனம் அந்த புத்த பிக்குகளை நன்றியுடன் எண்ணிப் பார்த்தது. பேண்ட் பையில் இருந்த பணமும் அவன் உடலை சுற்றியிருந்த சால்வையும் அவர்களுடைய அன்பின் அடையாளமாய் அவனை நெருங்கி இருப்பதை உணர்ந்தான். 'எப்படி இவர்களுக்கு கைம்மாறு செய்யப் போகிறேன்?' என்று கேட்டுக் கொண்டான். அப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்கும் வரையாவது உயிருடன் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

நெடுஞ்சாலை ஓரமாக இருந்த பனி படர்ந்த மரங்களை ஆராய்ந்து ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்தான். பதுங்கியபடியே சென்று அந்த மரத்தில் ஏறிக் கொண்டு அமைதியாகக் காத்திருந்தான். அந்தக் காத்திருத்தலில் பதட்டம் இருக்கவில்லை. அவசரமோ, அலுப்போ இருக்கவில்லை. சுமார் அரை மணி நேரம் கழித்து ஒரு சரக்கு லாரி வருவது பனியை லேசாக ஊடுருவி வந்த விளக்குகள் மூலம் தெரிந்தது. அந்த லாரி அந்த மரத்தைக் கடந்த போது சத்தமில்லாமல் அந்த லாரியில் குதித்தான். அந்த லாரி தார்ப்பாயில் இருந்த பனியை கைகளால் அப்புறப்படுத்தி மல்லாந்து படுத்துக் கொண்டான்.

பனிக்கால இரவின் ஆகாயம் மங்கலாகத் தெரியும் நட்சத்திரங்களுடன் பேரழகாய்த் தெரிந்தது. சிறிது நேரம் ரசித்தவன் களைப்பில் அப்படியே உறங்கிப் போனான். அந்த உறக்கத்தில் கூட அவன் உடல் அந்த லாரியின் வேகத்தை மிகச்சரியாக உணர்ந்திருந்தது. வேகம் குறைய ஆரம்பித்த போது தானாக விழித்துக் கொண்டான். தலையை லேசாக உயர்த்திப் பார்த்தான். அதிகாலை ஆகியிருந்தது. தூரத்தில் ஒரு டீக்கடை தெரிந்தது.

அந்த டீக்கடை முன் ஒரு டூரிஸ்ட் பஸ்ஸூம், ஒரு வேனும் நின்றிருந்தன. லாரியை அங்கு நிறுத்தி டீ குடிக்க டிரைவரும் க்ளீனரும் போக சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து மறைவாய் லாரியில் இருந்து இறங்கிய அவன் அந்த டூரிஸ்ட் பஸ்ஸை சுற்றிக் கடந்து சென்று டீக்கடையை அணுகினான். லாரி டிரைவரும், க்ளீனரும் அவன் அந்தப் பஸ் பயணி என்று நினைத்தார்கள். அங்கு டீ வாங்கிக் குடித்தபடியே அங்குள்ளவர்களை ஆராய்ந்தான். அங்கிருந்தவர்களில் யாரும் முக்காடு போட்டிருந்த அவன் மீது ஆர்வம் காட்டவில்லை. அவனும் ஆர்வத்தைத் தூண்டும்படியாக வித்தியாசமாக நடந்து கொள்ளவில்லை.

அப்போது இன்னொரு பஸ் எதிர்ப்புறத்தில் இருந்து வந்தது. அந்த நெடுஞ்சாலையில் ஒரு மைல் தூரத்தில் இருந்த வேறொரு டீக்கடையில் முன்பே பயணிகளுக்காக நிறுத்தி இருந்ததால் அந்த பஸ் அந்த டீக்கடை முன் நிற்காமல் விரைந்தது. அந்தப் பஸ்ஸில் இருந்த ஒரு பயணி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து வந்தவன் டீக்கடையில் இருந்த முக்காட்டு மனிதனை உற்றுப் பார்த்தான். அவனும் தன்னை உற்றுப் பார்க்கும் மனிதனைக் கூர்ந்து பார்க்க அந்த மனிதன் அவனை அடையாளம் கண்டு கொண்டது போல் தெரிந்தது. பார்த்தது சில வினாடிகள் என்றாலும் அந்தப் பயணியின் முகத்தில் தெரிந்த பீதி அவனுக்கு அபாயச் சங்கு ஊதியது.

(தொடரும்)

அமானுஷ்யன் - 9



ஆச்சார்யா பணிபுரிந்த CBI தலைமை அலுவலகத்தில் எல்லோரிடமும் ஆச்சார்யா பற்றி விசாரித்தான் ஆனந்த். மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை பேசிப் பார்த்தான். எல்லோரும் அவரைப் பற்றி உயர்வாகவே சொன்னார்கள். அவருடைய சகாக்களும் அவர் டிபார்ட்மென்டில் அவருக்குக் கீழே வேலை செய்தவர்களும் அவர் நாணயத்தைப் பற்றி உயர்வாகப் பேசினார்கள். அதோடு அவர் ரகசியமானவர், நினைப்பதை வெளியில் சொல்லாதவர் என்பதையும் சொன்னார்கள். அவர் கொலை அவர்களைப் பாதித்துள்ளது பேசும் போது தெரிந்தது. அவர்களில் பெரும்பாலானோர் கொலைக்குப் பழைய பகை காரணமாயிருக்கலாம் என்றுதான் நினைத்தார்கள்.

ராஜாராம் ரெட்டியிடம் பேசும் போது அவனிடம் ஒரு விஷயத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கியது போல் தெரிய ஆனந்த் அவர் நினைப்பதை வெளிப்படையாகச் சொல்லச் சொன்னான்.

ராஜாராம் ரெட்டி தயக்கத்துடன் சொன்னார், "இங்கே சைபர் க்ரைம்ஸைக் கண்டுபிடிக்கும் டிபார்ட்மென்டில் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் மகேந்திரன். கம்ப்யூட்டரில் அவனுக்குத் தெரியாததே எதுவும் கிடையாது என்று சொல்லலாம். ஆனால் கேரக்டர் அவ்வளவாக சரியில்லை. மூளை அதிகம், அதனால் தலைக்கனமும் அதிகம். அடுத்தவர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் ரகசியமாய் வைத்திருக்கிற டேட்டாவை ஆராய்வது அவனுடைய ஹாபி. எல்லாருமே கம்ப்யூட்டரில் ஏதாவது ப்ரச்னை என்றால் அவனைத்தான் கூப்பிடுவோம். அதை அவன் சீக்கிரம் சரி செய்தும் விடுவான். ஆச்சார்யா அடிக்கடி அவனைக் கூப்பிட்டு சந்தேகம் கேட்பார். அவனும் மணிக்கணக்கில் அவர் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து அவருக்குச் சொல்லிக் கொடுப்பான். அவன் திறமைசாலி என்பதால் ஆச்சார்யாவிற்கு அவனைப் பிடித்திருந்தது. அவனிடம் நிறைய பேசுவார். அவர் அப்படிப் பேசும் போது ஏதாவது வாய் விட்டுச் சொல்லி இருக்கலாம்...."

அவர் நிறுத்தினார். ஆனந்த் மேலே சொல்லுங்கள் என்பது போல் அவரைப் பார்த்தான்.

"ஆச்சார்யாவின் ரகசியங்கள் ஏதாவது அந்தக் கம்ப்யூட்டரில் இருந்திருந்தால் அவர் அவனிடம் சொல்லா விட்டாலும் கூட அவன் அதைக் கண்டுபிடிக்க வாய்ப்பு இருந்திருக்கிறது...." அதற்கு மேல் சொல்வது சரியல்ல என்று அவர் நிறுத்தியது ஆனந்திற்குப் புரிந்தது.

"கேரக்டர் சரியில்லை என்றால் எந்த விதத்தில்?"

".....பல பெண்கள் கிட்ட சகவாசம் இருக்கிறது. இந்தக் காலத்துல அது பெரிய விஷயம் இல்லைதான். நான் அந்தக் கால மனுஷன். அதனாலேயே அதை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது"

"வேலையில் எப்படி?"

"குறை சொல்ல முடியாது...."

மகேந்திரன் ஆனந்தை விட இளமையானவனாக இருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். ஆனந்தை அவன் தூரத்திலிருந்தே எடை போடுவது ஆனந்திற்குத் தெரிந்தது. ஆனந்த் அவனிடம் பேசிய போது அவனும் மற்றவர்கள் சொன்னதையே சொன்னான். நல்லவர், நேர்மையானவர், ரகசியமானவர்....

"எத்தனை ரகசியமானவராய் ஒருவர் இருந்தால் கூட அவர் ஒரு சிலரிடமாவது மனம் விட்டுப் பேசுபவராக இருப்பார்..." ஆனந்த் சொல்லி நிறுத்தினான். மகேந்திரன் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தான்.

ஆனந்த் சொன்னான், "அவர் உங்களிடம் அதிகம் பேசுவார் என்று சொன்னார்கள்?"

"யார் சொன்னார்கள்?" அவன் உடனடியாகக் கேட்டான்.

ஆனந்த் யோசனை செய்து விட்டுச் சொன்னான். "யாரோ சொன்னார்கள். நினைவில்லை"

அவன் நினைவில்லை என்றதை மகேந்திரன் நம்பியது போல் தெரியவில்லை. ஆனால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் ஆச்சார்யா பற்றி சொன்னான். "புதிதாக எதையும் தெரிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகம். கம்ப்யூட்டர் சம்பந்தமாக அடிக்கடி கேட்பார். அதைப் பற்றித்தான் பேசுவோம்"

"அவர் இங்கு கம்ப்யூட்டரில் ஏதாவது ரகசிய டேட்டா வைத்திருந்தாரா?"

"அவர் ஜாக்கிரதையானவர். ஆஃபிஸ் கம்ப்யூட்டரில் எதையும் வைத்துக் கொண்டது போல் தெரியவில்லை."

"உங்களிடம் கம்ப்யூட்டர் தவிர வேறெதைப் பற்றியும் அவர் பேசியதில்லையா?"

அவன் ஒரு கணம் மௌனம் சாதித்து விட்டு கவனமாகச் சொன்னான், "சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவும் பேசியதில்லை."

"அவரை யார் கொலை செய்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"

"யாராயிருந்தாலும் அரசியல் பக்கபலம் இருக்கிற ஆள்தான் கொலை செய்திருக்கணும் என்பதில் சந்தேகம் இல்லை. இல்லை என்றால் CBI அடிஷனல் டைரக்டரையே கொலை செய்யத் துணிச்சல் வந்திருக்காது. எதற்கும் நீங்கள் ஜாக்கிரதையாய் இருப்பது நல்லதென்று நான் நினைக்கிறேன்....."

அவன் எச்சரிக்கை எந்த எண்ணத்தில் சொல்லப்பட்டது என்பதை ஆனந்தால் தீர்மானிக்க முடியவில்லை. அவனிடம் மேலும் பேசிக் கொண்டிருந்த போது உபயோகமான தகவல் எதுவும் கிடைக்கா விட்டாலும் அவன் வெளியே சொல்லாத எதையோ அறிந்திருக்கிறான் என்பதை மட்டும் ஆனந்த் ஊகித்தான்.

அடுத்ததாக ஆச்சார்யா கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் உயர் அதிகாரிகளை ஆனந்த் சந்தித்தான். அவர்களுடைய உபசாரம் பலமாக இருந்தது. என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்றெல்லாம் சொல்லி அன்பு மழையில் நனைய வைத்தார்கள். ஆனந்த் உடனடியாக விஷயத்திற்கு வந்து வழக்கைப் பற்றி விசாரிக்க, அவர்கள் ஆச்சார்யா கண்டுபிடித்த பழைய கேஸ்களில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து வருவதாகவும் கூடிய சீக்கிரம் கொலையாளியைப் பிடித்து விடுவோம் என்றும் தெரிவித்தார்கள். தங்கள் ·பைலை அவனிடம் காட்டினார்கள்.

அவர்கள் வைத்திருந்த ·பைலில் பழைய கேஸ் விவரங்கள் நிறைய இருந்தன. அதை மேலோட்டமாகக் கூடப் பார்க்காமல் ஆனந்த் அவர்களிடமிருந்த ஆச்சார்யா கொலை செய்யப்பட்ட இடத்தின் புகைப்படங்களை ஆராய்ந்தான். பெரும்பாலான புகைப்படங்கள் மஹாவீர் ஜெயின் வைத்திருந்த ·பைலில் இருந்தவைதான் என்றாலும் அவன் பார்க்காதஒருசிலவும் இருந்தன. அதில் அவன் கவனத்தை ஈர்த்தது எரிந்த நிலையில் இருந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் புகைப்படம்.

அவன் அதை அதிகமாக ஆராய்வதைப் பார்த்த ஒரு அதிகாரி சொன்னார். "கொலையாளி தனியாக வந்தது போலத் தெரியவில்லை. ஒரு சில பேரோட வந்திருக்கலாம். அவர்களுக்கு ஆச்சார்யா மேல் இருந்த பகை அங்கே இருக்கிறதை எல்லாம் துவம்சம் செய்ய வைத்திருக்கிறது. கம்ப்யூட்டரையும் சில புத்தகங்களையும் எரித்திருக்கிறார்கள். மற்ற புத்தகங்களை எல்லாம் விசிறி எறிந்திருக்கிறார்கள். அவர் வீட்டு விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் உடைத்திருக்கிறார்கள். எதிலுமே கைரேகைகள் கிடைக்கவில்லை...."

"ஹார்ட் டிஸ்கை எரித்ததற்குக் காரணம் அதில் தங்கள் பற்றிய தகவல் ஏதாவது இருக்கலாம் என்பதாகக் கூட இருக்கலாம் இல்லையா?"

அந்தக் கேள்வி அவர்களை தர்மசங்கடப் படுத்தியது ஆனந்திற்கு நன்றாகவே தெரிந்தது.

"அந்தக் கோணமும் நாங்கள் யோசிக்காமல் இல்லை. புதுக் கேஸ் ஏதாவது சம்பந்தப்பட்டிருந்தால்தான் அந்தக் கோணம் அர்த்தமுள்ளதாகிறது. ஆனால் உங்கள் அலுவலகத்தை நாங்கள் விசாரித்த வரையில் அவர் எந்தப் புது கேஸையும் துப்பறிந்து கொண்டிருக்கவில்லை என்றார்கள்".

ஆனந்த் அதற்கு மேல் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. "நான் கொலை நடந்த இடத்தைப் பார்க்க வேண்டும்"

"ஜெயின் சார் பிரத்தியேகமாகச் சொன்னதால் அந்த இடத்தை நாங்கள் சுத்தம் செய்யப் போகாமல் அப்படியே வைத்திருக்கிறோம். எங்கள் ஆட்கள் யாராவது உதவிக்கு உடன் வர வேண்டுமா?"

"வேண்டாம். நன்றி"

ஆச்சார்யாவின் வீடு ஒரு நடுத்தர வர்க்கத்தினரின் இரண்டு பெட் ரூம் வீடாக இருந்தது. வீட்டினுள் எல்லாமே சின்னாபின்னமாகக் கிடந்தன. கொலைகாரர்கள் எந்தப் பொருளையும் விட்டு வைக்கவில்லை. ஆச்சார்யாவின் குடும்பப் புகைப்படங்கள் கண்ணாடி விரிசல்களுடன் ஆங்காங்கே விழுந்திருந்தன. ஆச்சார்யா, மனைவி, மகளுடன் சந்தோஷமாகச் சிரித்தபடி இருந்த புகைப்படத்தை ஆனந்த் எடுத்துப் பார்த்தான். எல்லோர் முகத்திலும் உண்மையான சந்தோஷம் தெரிந்தது. இன்னொரு உடைந்த புகைப்படத்தில் ஆச்சார்யாவின் மகளும், மருமகனும் இருந்தார்கள்.

ஆனந்த் கருகியிருந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கைப் பார்த்தான். அதனுடன் சில புத்தகங்களும் கருகி இருந்தன. முக்கால் வாசி கருகியிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்த்தான். அது புத்தகமல்ல, ஆச்சார்யாவின் இந்த வருடத்தைய டைரி. பாதி எரிந்திருந்த இன்னொரு புத்தகத்தை எடுத்துப் பார்த்தான். ஏதோ ஆங்கில நாவல். கொலயாளிகளின் முக்கிய குறி கம்ப்யூட்டரும் டைரிகளும்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது தெரிந்து விடாதிருக்க வேறுசில புத்தகங்களையும் சேர்த்து எரித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

நிதானமாக அந்த இடத்தை ஆனந்த் ஆராய்ந்தான். எல்லாம் உடைந்தும், நொறுங்கியும், கலைந்தும் எரிந்தும் இருந்தன. அத்தனை அலங்கோலங்களுக்கு மத்தியில் ஒரு அழகான புத்தர் சிலை கீழே தரையில் அமர்ந்த நிலையிலேயே இருந்தது. இந்த அலங்கோலங்களால் பாதிக்கப்படாமல் புத்தர் சாந்த மயமாக தியானத்திலிருந்தார். அந்தப் புத்தர் சிலையைப் பார்த்தவுடன் அம்மா நினைவும், காணாமல் போன தம்பி நினைவும் வந்தன....

மனதை மீண்டும் அந்த இடத்தை ஆராயத் திருப்பினான். எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இது எதிர்பார்த்தது தான். கொன்றவர்கள் கச்சிதமாகத்தான் இயங்கியிருக்கிறார்கள்.

கிளம்பத் தயாரான போது ஒரு ரசீது மூலையில் கிடந்ததைப் பார்த்து அதை எடுத்தான். ஆச்சார்யா கொலை செய்யப்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்பு புத்தகம் வாங்கியதன் ரசீது. "Bodhidharma-Osho" என்று ரசீதில் எழுதியிருந்தது. அதுதான் ஆச்சார்யா கடைசியாக வாங்கிய புத்தகமாக இருக்கலாம் என்று தோன்ற ஆனந்தின் உள்ளுணர்வு அந்தப் புத்தகத்தை அந்த அலங்கோலங்களுக்கு மத்தியில் தேடச் சொன்னது.

ஆச்சார்யா பல புத்தகங்கள் வைத்திருந்ததால் அந்தப் புத்தகத்தை அங்கு கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. சுமார் இருபது நிமிடம் தேடி அந்தப் புத்தகத்தை ஆனந்த் கண்டுபிடித்தான். "Bodhidharma-The Greatest Zen Master" என்ற அந்தப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தான். அதில் ஆச்சார்யா 32 பக்கங்கள் படித்திருந்தார் என்பதற்கு அடையாளமாக அங்கு முனையை மடித்திருந்தார். ஆனந்த் அந்தப் புத்தகத்தை வெறுமனே புரட்ட உள்ளே இருந்து ஒரு தாள் கீழே விழுந்தது.

எடுத்துப் பார்த்த ஆனந்த் மெல்ல விசிலடித்தான்.....

(தொடரும்)