Showing posts with label பரம(ன்) ரகசியம். Show all posts
Showing posts with label பரம(ன்) ரகசியம். Show all posts

Sunday, June 15, 2014

பரம(ன்) ரகசியம் – 85

ணபதியைக் கொன்று விட்டால் எதிர்ப்பு சக்தியை அழித்து விடலாம் என்று கேள்விப்பட்டவுடன் மறுபடி வீடியோ கான்ஃப்ரன்சிங்கில் ஆலோசனை செய்தார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டபடி பாபுஜி ஜான்சனை அழைத்துப் பேசினார்.

“ஏன் ஜான்சன் அந்தப் பையன் கணபதி விசேஷ மானஸ லிங்கத்துக்கு அவசியம் தானா?

ஜான்சன் சொன்னார். “தெரியலை. தென்னரசும், குருஜியும் தான் அந்த சிவலிங்கத்திற்கு நித்ய பூஜை தடைபட்டு விடக் கூடாதுன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. அப்படி பூஜை அவசியம்னா கணபதியை விட்டால் நமக்கு வேற வழி கிடையாது

அந்த விசேஷ மானஸ லிங்கத்துக்கு பூஜை செய்யாட்டி என்ன ஆகும்?ஜெர்மானியப் பெண்மணி கேட்டாள்.

“தெரியலை. குருஜியைத் தான் கேட்கணும்”  ஜான்சன் சொன்னார்.

உடனடியாக குருஜியிடம் ஜான்சனும், பாபுஜியும் போனார்கள். கணபதியைக் கொன்றால் என்ன என்கிற ரீதியில் பாபுஜி கேட்ட்தும் குருஜிக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. ஆனால் கண்ணைக் கூட இமைக்காமல், பாதிப்பையே காட்டாமல் குருஜி பாபுஜியைப் பார்த்தார். இவனிடம் நல்லது கெட்டது பேசிப் புண்ணியம் இல்லை. வியாபாரியிடம் லாப நஷ்டக் கணக்கு தான் பேச வேண்டும். விசேஷ மானஸ லிங்கம் சக்தி வாய்ந்ததாய் இருக்கணும்னா அதுக்கு தொடர்ந்து நித்ய பூஜை நடந்து தானாகணும்.  இவனுக்கு முன்னாடி ரெண்டு நாள் அதுக்குப் பூஜை செய்தவன் பயந்து ஓடினதுக்கப்புறம் இவனைக் கூட்டிகிட்டு வர ஒரு நாளுக்கு மேல ஆச்சு. அந்த நாள்ல வேதபாடசாலையில் சித்தரே ரகசியமாய் வந்து பூஜை செய்துட்டுப் போயிருக்கார். அப்படின்னா நித்ய பூஜை எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கணும். அவனைக் கொன்னுட்டா அந்த சிவலிங்கத்தோட மதிப்பு வெறும் ரெண்டாயிரம் ரூபாய் ஆயிடும். உனக்கு கேட்டதெல்லாம் கொடுக்கிற கல்பவிருக்‌ஷம்  வேணுமா இல்லை ரெண்டாயிரம் ரூபாய் அவசரமாய் தேவைப்படுதா?

பாபுஜிக்கு அந்த நாளில் அந்த சிவலிஙகத்தின் மீது  திபெத் பகுதியில் பூக்கும் காட்டுப் பூக்கள் இருந்ததாய் கேள்விப்பட்டதும் ஞாபகம் வந்தது.  மன உளைச்சலுடன் பாபுஜி அழாத குறையாகக் கேட்டார். அப்படின்னா என்ன தான் செய்யறது குருஜி

“எல்லாருமா சேர்ந்து வேறெதாவது வழியை யோசிங்க பாபுஜி. எனக்கு உடம்பு சரியாயிருந்தா நானே ஏதாவது வழி கண்டுபிடிச்சுச் சொல்லி இருப்பேன்...என்று சொல்லி குருஜி கண்களை மூடிக் கொள்ள வேறு வழியில்லாமல் இருவரும் வெளியே வந்தார்கள்.

ஜான்சனையும் கூட்டிக் கொண்டு தனதறைக்குப் போன பாபுஜி மறுபடியும் அந்த அறுவருடனும் ஆலோசனை நடத்தினார். ஆறு பேரும் பரபரப்புடனும், டென்ஷனுடனும் பைத்தியம் பிடித்தது போல இருப்பதாக ஜான்சனுக்குத் தோன்றியது. அவருக்கு அதைத் தப்பு சொல்லத் தோன்றவில்லை. இப்படியொரு மகாசக்தி நிரூபணமாகி அவர்கள் வசம் இருக்கையில் அதை உபயோகிக்க வழியில்லாமல் போனால் பின் எப்படித் தான் இருக்கும்? அவருக்கே இப்போது பணம் நிறைய வேண்டி இருக்கிறது. விவாகரத்து செய்த மனைவிக்குத் தரவேண்டிய பணம் அற்ப சொற்பம் அல்ல. இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று விட்டால் அவரும் பின் எப்போதும் பணத்திற்குக் கவலைப்பட வேண்டியதில்லை... விசேஷ மானஸ லிங்கம் தயவு செய்யுமா?

குருஜி அவன் அறைக்குள் வந்த போது கணபதிக்கு பரபரப்பு தாங்கவில்லை. “கூப்பிட்டிருந்தால் நானே வந்திருப்பேனே குருஜி என்று ஆதங்கப்பட்டுக் கொண்டே வரவேற்றான்.

குருஜி அவனைக் கனிவுடன் பார்த்துச் சொன்னார். “நான் கிளம்பறேன் கணபதி உன் கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்

அவருக்கு வேறுபல வேலைகள் இருப்பதால் அதையெல்லாம் கவனிக்கப் போகிறார் என்று நினைத்த கணபதி தலையாட்டினான். குருஜி அவனிடம் ஒரு உறையை நீட்டினார். “இது உனக்கு நான் தர வேண்டிய பணம். இன்னும் ரெண்டு அல்லது மூணு நாளைக்கு மேல் நீ இங்கே இருக்க வேண்டி வராதுன்னு நினைக்கிறேன். அதனால அது வரைக்கும் கணக்கு போட்டு தந்திருக்கேன்

அந்தப் பணத்தை வாங்க அவனுக்கு கூச்சமாய் இருந்தது. பணத்திற்காகத் தானே எனக்கு பூஜை செய்தாய் என்று சிவன் கேட்பது போல இருந்தது. ஆனால் அம்மாவிடம் அவன் நல்ல தொகை கிடைக்கும் என்று சொல்லி விட்டுத் தான் கிளம்பி வந்திருக்கிறான். சுப்புணிக்கும் அவன் பிள்ளையாருக்குப் பூஜை செய்ததுக்குப் பணம் தர வேண்டும். என்ன தான் செய்வது என்ற தர்மசங்கடம் அவன் முகத்தில் தெரிந்தது.

குருஜிக்கு அவன் தர்மசங்கடம் புரிந்தது. புன்னகையோடு சொன்னார். “நான் கிளம்பறேன்னு நினைச்சவுடனே என் கனவுல உன்னோட சிவன் கணபதி கணக்கை செட்டில் பண்ணாம போயிடாதேன்னு உத்தரவு போட்டுட்டார். அதனால தான் உடனே கொண்டு வந்துட்டேன்...

கணபதிக்கு கண்கள் நிறைந்தன. ‘இந்த சிவனுக்குத் தான் எத்தனை பாசம் என் மேல. என் நிலைமையைப் புரிஞ்சு வச்சுட்டு குருஜி கிட்ட இப்படி சொல்லி இருக்காரே”. சிவனே சொன்ன பிறகு பணம் வாங்க அவனுக்குத் தயக்கம் இருக்கவில்லை. சந்தோஷமாக வாங்கிக் கொண்டான்.

அவனையே பார்த்துக் கொண்டிருக்கையில் குருஜி மனம் லேசாகியது. கிளம்பினார். கணபதி அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தான். குருஜிக்கு கால்களும் மனதும் கூசின. உன்னை ஆசிர்வதிக்கிற அளவுக்கு எனக்கு வயசு ஒன்னைத் தவிர வேற எந்த தகுதியும் இல்லையே கணபதி!என்று மனதில் அழுதார்.

வாசல் வரை போனவர் திரும்பி அவனைப் பார்த்துக் கேட்டார். “எனக்கு ஒரு உபகாரம் செய்வியா கணபதி?

“என்ன இப்படிக் கேட்கறீங்க குருஜி. உத்தரவு போடுங்க. நான் செய்யறேன்

“நீ உன் சிவனையும் பிள்ளையாரையும் கும்பிடறப்ப எனக்காகவும் வேண்டிப்பியா? சொல்லும் போதே அவர் குரல் உடைந்தது.

அவர் தமாஷ் செய்கிறாரோ என்ற சந்தேகம் கணபதிக்கு வந்தது. ஆனால் அவர் உணமையாகவே கேட்கிறார் என்பது புரிந்த போது அவன் நெகிழ்ந்து போனான். என்னையும் ஒரு பொருட்டாய் மதித்து இப்படிக் கேட்கிறாரே இத்தனை பெரிய மனிதர்என்று நினைத்தவனாய் கைகூப்பியபடி சொன்னான். “கண்டிப்பா வேண்டிக்கறேன் குருஜி”.
கடைசியாக ஒரு முறை கண்கள் நிறைய அவனைப் பார்த்து விட்டு குருஜி அங்கிருந்து கிளம்பினார்.

பாபுஜி மறுபடியும் மற்றவர்களைக் கலந்தாலோசித்தார். எகிப்தியர் திட்டவட்டமாகச் சொன்னார். “பாபுஜி. நீங்கள் இனி எதற்கும் குருஜியை நம்பிப் பயனில்லை.... நமக்கு உதவ வேறு யாரையாவது கண்டுபிடிப்பது நல்லது

தென்னாப்பிரிக்கர் சொன்னார். “யாரோ தடுப்பு மந்திரமோ, சூனியமோ செய்திருக்கிறார்கள். அதை உடைக்க ஒரு திறமையான ஆளைப் பிடிப்பது நல்லது பாபுஜி. எங்கள் நாட்டில் இருந்து கூட என்னால் ஆளை அனுப்ப முடியும். ஆனால் உடனடியாக  அனுப்புவதில் விசா, போலீஸ் கண்காணிப்பு என்று நிறைய சிக்கல் இருக்கிறது. உங்கள் நாட்டிலேயே ஒரு ஆளைப் பிடித்து உடனடியாக அந்த தடுப்பு சக்தியை உடைக்கப் பாருங்கள்... உதயன் சுவாமியை வரவழைக்க முடியுமா என்று இன்னொரு தடவை குருஜியிடம் கேட்டுப் பாருங்களேன்.

இதற்கு முன்னால் அதைக் கேட்டதற்கு என்னை ஏதோ அபசாரம் செய்தது மாதிரி குருஜி பார்த்தார். பணத்தினால் வாங்க முடியாத விஷயங்கள் உலகத்துல இருக்குன்னு கடுமையாய் சொன்னார். அதனால இன்னொரு தடவை கேட்கறதில் அர்த்தமே இல்லை

அப்படியானால் வேறு யாராவது ஆளைச் சீக்கிரமாய் பார்த்துச் செய்ய வேண்டியதை உடனடியாகச் செய்யுங்கள்என்றார் எகிப்தியர்.


பரபரப்புடன் யோசித்து விட்டு பாபுஜி உடனடியாகத் தன் நெருங்கிய நண்பர்களுக்குப் போன் செய்தார். விசேஷ மானஸ லிங்கத்தைப் பற்றிச் சொல்லாமல் மந்திரம் சூனியம் ஆகியவற்றை உடைக்க முடிந்த நம்பகமான ஆள்கள் இருக்கிறார்களா என்று விசாரித்தார். இரண்டு நண்பர்கள் கேரளாவில் இருக்கும் நம்பீசன் என்ற ஒரு மந்திரவாதியைச் சொன்னார்கள். செய்யும் வேலைக்கு அவர் வாங்கும் கூலி அதிகம் என்றாலும் அவர் சக்தி வாய்ந்தவர், ரகசியம் காக்கும் நம்பிக்கையான மனிதர், அவரை சில வேலைகளுக்குப் பயன்படுத்தி இருக்கிறோம், அவர் சக்தியை நேரடியாக உணர்ந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு மேல் யோசிக்காமல் உடனடியாக பாபுஜி அந்த மந்திரவாதியைத் தொடர்பு கொண்டார். என்ன பணம் வேண்டுமானாலும் தருகிறேன். உடனே விமானத்தில் கிளம்பி வாருங்கள்”.  ஒப்புக் கொண்டு நாளை அதிகாலை வந்து சேர்வதாக அந்த மந்திரவாதி உறுதியளித்தார்.

பாபுஜி தயக்கத்துடன் தான் நாளை காலை ஒரு மந்திரவாதி வரப் போவதாக குருஜியிடம் தெரிவித்தார். தன்னைக் கேட்காமல் அந்த ஏற்பாட்டைச் செய்ததற்காக அவர் கோபிப்பாரோ என்று நினைத்தார். ஆனால் குருஜி “நல்லதுஎன்று சொன்னார். எப்போதோ மனதளவில் விலகி விட்ட பிறகு யார் வந்தால் எனக்கென்ன என்ற எண்ணம் தான் குருஜியிடம் மேலோங்கி இருந்தது.  

குருஜியும் பாபுஜியிடம் இன்னொரு தகவலைத் தெரிவித்தார். “எனக்கு உடம்பு எதனாலேயோ சுகமில்லை. குணமாகிற மாதிரியும் தெரியலை. அதனால நான் இப்பவே கிளம்பிப் போயிடலாம்னு நினைக்கிறேன் பாபுஜி

உபகாரமில்லாத ஆள் இருந்தென்ன போயென்ன என்ற எண்ணத்தில் இருந்த பாபுஜி முகத்தில் மட்டும் கவலையையும், அக்கறையையும் காட்டி கடைசியில் சம்மதித்தார். ”..... என்னால ஏதாவது ஆக வேண்டி இருந்தால் சொல்லுங்கள் குருஜி

குருஜி தலையசைத்தார். குருஜி கிளம்பிப் போகிறார் என்பதை பாபுஜி மூலம் அறிந்து ஜான்சனும், மகேஷும் உடனடியாக வந்தார்கள். இருவர் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது. எல்லாவற்றையும் ஆரம்பித்து வைத்தவரே இப்படி பாதியில் விலகிப் போகிறாரே  என்று ஜான்சன் உண்மையிலேயே வருத்தப்பட்டார். குருஜி இருக்கும் போது அவருக்கு தைரியமாய் இருந்தது. அவர் விஞ்ஞானமும், குருஜியின் அனுபவ ஞானமும் நல்ல கூட்டு சக்தியாக இருந்தது. குருஜி அளவுக்கு வரப் போகிற மந்திரவாதிக்கு இந்த விஷயத்தில் ஆழமான ஞானம் இருக்க வாய்ப்பில்லை என்று அவர் நிச்சயமாக நம்பினார். “ஆராய்ச்சியில் பங்கெடுக்கா விட்டாலும் பரவாயில்லை குருஜி  ஆலோசனை தரவாவது நீங்கள் இருந்தால் நல்லாயிருக்கும்என்று சொல்லிப் பார்த்தார். உடல்நலத்தைக் காரணம் காட்டி குருஜி மறுத்து விட்டார்.

மகேஷிற்கும் குருஜி போவது வருத்தமாய் இருந்தது.  முதலில் தென்னரசு... இப்போது குருஜி... குருஜி சொல்லிக் கொண்டாவது போகிறார். தென்னரசு அதைக் கூடச் செய்யவில்லை. திடீர் என்று மாயமானவர் பின் அவனைத் தொடர்பு கொள்ளவே இல்லை. அவர் செல் போனிற்கு போன் செய்த போதெல்லாம் “ஸ்விட்ச்டு ஆஃப்என்ற தகவலே வந்து கொண்டிருந்தது. குருஜியிடம் மகேஷ் கேட்டான். “தென்னரசு அங்கிள் உங்க கிட்டயாவது  போறதுக்கு முன்னாடி சொல்லிட்டு போனாரா குருஜி?

“இல்லை...குருஜிக்கு தென்னரசு நினைவும் மனதை அழுத்தியது. எல்லாம் ஏதோ ஒரு உத்தேசத்தில் ஆரம்பித்து எப்படி எல்லாமோ முடிந்து விட்டதே!

மகேஷிற்கு சந்தேகம் வலுத்தது. அவனிடம் சொல்லா விட்டாலும் கூட தென்னரசு குருஜியிடம் சொல்லாமல் போகிறவர் அல்ல.....

குருஜி கிளம்பி விட்டார். அவரை வழியனுப்ப பாபுஜி, ஜான்சன், மகேஷ் மூவருமே வந்தார்கள். குருஜி யாரிடமும் எதுவும் பேசவில்லை. தியான மண்டபத்தைத் தாண்டித் தான் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்குப் போக வேண்டி இருந்தது. அவருக்கு கடைசியாக ஒரு முறை விசேஷ மானஸ லிங்கத்தைப் பார்க்கத் தோன்றியது. வாசலில் இருந்தே எட்டிப் பார்த்தார். விசேஷ மானஸ லிங்கம் ஒருவித வித்தியாச ஜொலிப்பில் இருப்பது போல் அவருக்குத் தோன்றியது. ஹரிராம் அவரது வழக்கமான இடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.  அவரிடமும் அந்த ஜொலிப்பு பிரதிபலிப்பது போலத் தோன்றவே குருஜிக்கு உள்ளே ஒரு பொறி தட்டியது. ஹரிராம் தான் அந்த மூன்றாவது ஆள்...!

பாபுஜி ஜான்சனைக் கேட்டார். “இவர் மட்டும் ஏன் இன்னும் தனியா உட்கார்ந்து தியானம் செய்யறார்

ஜான்சன் சொன்னார். தினமும் மணிக்கணக்கில் தியானம் செய்கிறவர் அவர். இந்த ஆராய்ச்சியில் சிவலிங்க சக்தியில லயிக்க முடியாட்டியும் தன்னோட வழக்கமான தனிப்பட்ட தியானத்தையாவது செய்யலாம்னு உட்கார்ந்த இடத்திலேயே அதைச் செய்ய ஆரம்பிச்சிருப்பார்....

‘இந்த மாதிரி ஆளெல்லாம் நம் பக்கம் இருந்து கூட எல்லாம் இப்படி திடீர் என்று தடைப்பட்டு நிற்கிறதேஎன்று பாபுஜி ஆதங்கப்பட்டார்.

இப்படி அவர்களால் பேசப்பட்டும் எண்ணப்பட்டும் இருந்த ஹரிராம் EEG மெஷினை மட்டும் போட்டுக் கொண்டிருந்தால் அவர் ஐந்து சிபிஎஸ் தீட்டா அலைகளில் மிக ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் காட்டி அவர்கள் கவனத்தை மேலும் கவர்ந்திருக்கும்.

இது வரை அவர் விசேஷ மானஸ லிங்கத்தின் முன் அமர்ந்து செய்த தியானங்களில் மிகவும் கவனமாக ஒரு எல்லைக்குள் இருந்திருந்தார். விசேஷ மானஸ லிங்கம் இழுப்பது போல் தோன்ற ஆரம்பித்த முதல் கணத்திலேயே பின்வாங்கி வந்திருந்தார். அன்று காலை ஆராய்ச்சியின் போது மந்திரக் காப்புச் சுவரை விசேஷ மானஸ லிங்கத்தின் முன்பு எழுப்பும் போது கூட, முன்பு கற்றிருந்த வித்தை தான் வேலை செய்ததே ஒழிய விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகளோடு அவருக்கு முழுமையாக ஐக்கியமாக முயல முடியவில்லை.

ஆராய்ச்சிகள் தடைப்பட்டு மற்றவர்கள் எல்லோரும் போன பிறகு அவருக்கு தியானத்தில் அமரத் தோன்றியது. யார் தொந்திரவும் இல்லாமல் அமர்ந்த அவர் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் வைத்துக் கொள்ளாமல் தியானத்தை ஆரம்பித்து பின் விசேஷ மானஸ லிங்கத்தில் கவனத்தைக் குவித்து அதன் அலைகளுடன் ஐக்கியமாக ஆரம்பித்தார். வழக்கம் போலவே பிரம்மாண்ட உணர்வுகளுடன் கூடிய மிக அழகான அனுபவம்... விசேஷ மானஸ லிங்கம் ஜெகஜோதியாய் மின்ன ஆரம்பித்தது.... பின் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.....  தீஜ்வாலையாய், அக்னிமலையாய் கண்ணுக்கும் கருத்துக்கும் அடங்காத விஸ்வரூபம் அது..  அதற்கடுத்ததாய் அது தன்னிடம் அவரை இழுப்பது போலத் தோன்றியது. முன்பு போல அதற்குச் சிக்காமல் மீண்டு வரும் முயற்சி எதிலும் அவர் ஈடுபடவில்லை. அந்த விசேஷ மானஸ லிங்கம் அவரை ஆட்கொள்ள விட்டார்.

ஒரு கணம் ஒரு பெருஞ்சுழியில் அவர் சிக்கிக் கொண்டது போல இருந்தது. மறு கணம் அவர் தலைக்குள் அக்னிப்பந்து ஒன்று புகுந்து கொண்டது போல் இருந்தது. எதுவும் அவர் கட்டுப்பாட்டில் இல்லை. அவர் எதையும் கட்டுப்படுத்தவும் விரும்பவில்லை. அந்த மகாசக்தியின் பிரவாகத்தில் பல நிலைகளுக்கு அடித்துச் செல்லப்படும் சிறு துரும்பாக அவர் உணர்ந்தார். என்னென்னவோ ஆகியது... வார்த்தைகளுக்கு சிக்காத எத்தனையோ நிலைகள்.... எத்தனையோ பயணம்... ‘ஹரிராம்என்ற அடையாளத்துடன் கூடிய நான் ஒரு கட்டத்தில் மறைந்தே போனது. சர்வமும் அமைதியாகியது. ஒரு மகத்தான மௌனம் மட்டுமே நிலவியது.....

எத்தனை காலம் அந்த மோன நிலையில் இருந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. சிறிது சிறிதாக அவர் நினைவு திரும்பிய போது அவர் புடம் போட்ட தங்கம் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்.

இத்தனை கால அவர் வாழ்க்கையில் எத்தனையோ கோடிட்ட இடங்கள் இருந்தன. அர்த்தம் புரியாத, அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாத இடங்கள் இருந்தன. இப்போதோ அவர் வாழ்க்கையின் அத்தனை கோடிட்ட இடங்களும் அர்த்தத்தோடு நிரம்பி இருந்தன. மிகப் பெரிய புரிதல் நிகழ்ந்திருந்தது. யாருமே கற்றுத் தர முடியாத, கடைசியில் மட்டுமே அந்தராத்மாவில் உணரக் கூடிய ஞானம் கிடைத்திருந்தது. அது கேள்விகள் இல்லாத, பதில்கள் தேவைப்படாத ஒரு பரிபூரணமான நிலை. ஜன்ம ஜன்மாந்திரங்களாய் தேடியும், காத்தும் இருந்த உன்னதமான நிலை....!

குருஜியும் போன பிறகு மகேஷிற்கு அங்கிருக்கவே மனமில்லை. தனிமைப்படுத்தவன் போல அவன் உணர்ந்தான். போரடித்தது. அப்பாவிற்குப் போன் செய்தான். “அங்கே எல்லாம் எப்படிப்பா இருக்கு?

விஸ்வநாதன் சொன்ன தகவல்கள் இடியாய் அவன் தலையில் விழுந்தது. விஷாலி இப்போது அவன் வீட்டில் இருக்கிறாள். ஈஸ்வரும் அவளும் சீக்கிரமே திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். ஈஸ்வரின் அம்மா அமெரிக்காவில் இருந்து வந்து விட்டாயிற்று....

மகேஷ் உள்ளே அணு அணுவாய் நொறுங்க ஆரம்பித்தான். இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று தோன்றியது.

(தொடரும்)

பரம(ன்) ரகசியம் – 82

றக்கம் தழுவ ஆரம்பித்த வேளையில் தான் பார்த்தசாரதியின் செல்போன் இசைத்தது. பேசியவர் தன்னை  யாரென்று கூட அறிமுகப்படுத்தாமல் சொன்ன செய்தி அவரை அதிரச் செய்தது. “ஈஸ்வரைக் கொலை செய்யப் போறாங்க. அவனைக் காப்பாத்துங்க. ப்ளீஸ்

குரல் தென்னரசு குரல் போலத் தெரிந்தது பிரமையா, உண்மையா என்று அவருக்குத் தெரியவில்லை. பார்த்தசாரதி மின்னல் வேகத்தில் இயங்கினார். உடனடியாகச் சிலருக்குப் போன் செய்து பேசிய அவர் தானும் வேகமாகத் தோட்ட வீட்டுக்குக் கிளம்பினார். 

பாபுஜி சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு குருஜி ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டார். பாபுஜி சொன்னார். “எனக்குப் புரியுது குருஜி. அந்த ஆளை நீங்கள் மட்டுமல்ல எல்லாருமே நம்பினோம். திடீர்னு இப்படி பல்டி அடிப்பான்னு யாருமே எதிர்பார்க்கலை......

சிறிது நேரம் மௌனம் சாதித்த குருஜி பின் வரண்ட குரலில் கேட்டார். “தென்னரசு பார்த்தசாரதியிடம் பேசினது இது தான் முதல் தடவையா? இல்லை, இதற்கு முன்னாடியும் செல்போன்ல பேசி இருக்கானா?

இது தான் முதல் தடவை மாதிரி தெரியுது குருஜி

குருஜி கண்களைத் திறந்தார். அவர் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை என்பது பாபுஜிக்குப் புரிந்தது. மெல்ல ஒரு புகைப்படத்தையும் ஒரு காகிதத்தையும் அவர் குருஜியிடம் நீட்டினார். எகிப்தின் மிலிட்டரி இந்த ஆளைத் தேர்தலில் நிறுத்தலாமான்னு நினைக்குது. இந்த ஆள் நம் ஆளுக்கும் நெருங்கிய நண்பராம். விசேஷ மானஸ லிங்கத்தோட சக்தி காத்து, புயல், வெள்ளம்னு இயற்கை சக்திகளை மட்டும் தான் கட்டுப்படுத்துமா இல்லை மக்களோட மனசையும் கட்டுப்படுத்துமான்னு இன்னும் அவங்களுக்கு சந்தேகம் இருக்கு. சொல்லப்போனா எனக்குக் கூட அந்த சந்தேகம் இருக்கு. அதைத் தெரிஞ்சுக்க நமக்கு இது நல்ல சந்தர்ப்பம் இல்லையா?

அந்தப் புகைப்படத்தையும், குறிப்புகள் எழுதிய தாளையும் குருஜி வாங்கிக் கொண்டார். ஆனால் அவர் மனம் மட்டும் இன்னும் தென்னரசு சமாச்சாரத்திலேயே இருந்தது. “மகேஷுக்கு...?

“மகேஷ் தூங்கப் போயிட்டான். நாங்களா எதுவும் சொல்லப் போகலை

“சொல்ல வேண்டாம்...

ஸ்வர் இரவு பதினோரு மணி வரை சின்னத் தூக்கம் போட்டு விட்டு பின்பு தான் குளித்து விட்டுப் பூஜை அறைக்குப் போனான். விசேஷ மானஸ லிங்கத்தின் புகைப்படத்தை வணங்கி விட்டு மூச்சில் ஆரம்பித்து அந்தப் புகைப்படத்தில் கவனத்தைக் குவிக்க ஆரம்பித்த போது தான் தன் அருகில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்தான். கூடவே திருநீறின் மணம் அந்த பூஜை அறையை நிறைத்தது. கண்களைத் திறந்து அவன் பார்த்தால் பசுபதி தான் நின்றிருந்தார்.  பெரிய தாத்தா இது வரை அவனுக்குத் தரிசனம் தந்தது இல்லை.... அவரை அவன் திகைப்புடனும் பிரமிப்புடனும் பார்த்தான். அவர் கருணை நிறைந்த விழிகளால் அவரைப் பார்த்தார்.   

மெய்சிலிர்த்தவனாய் அவன் அவரைக் குனிந்து வணங்கினான். ஒரு துப்பாக்கிக் குண்டு அவன் தலை இருந்த இடத்தைத் தாண்டிச் சென்று சுவரில் பதிந்தது.  அதிர்ச்சியுடன் நிமிர்ந்த ஈஸ்வருக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. அப்போது தான் வீட்டு வாசலில் முகமூடி அணிந்திருந்த ஒருவன் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நிற்பதை அவன் கவனித்தான். அருகே இருந்த பசுபதியைக் காணவில்லை.

அந்த முகமூடிக்காரனும் அவன் குனிவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மறுபடி சுட அவன் யத்தனித்த போது ஈஸ்வர் சிவனை மனதில் தியானித்து  விட்டு அந்த அறையில் இருந்த தேவாரப் புத்தகத்தை அவன் மீது விட்டெறிந்தான். தேவாரப்புத்தகம் அந்த முகமூடி மனிதன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிக் கொண்டு போய் விழுந்தது. அவன் மின்னலாய்ப் பாய்ந்து அந்தத் துப்பாக்கியை எடுத்த போது விசில் சத்தம் கேட்டது. அவனுடன் வந்த சகா வெளியில் இருந்து சிக்னல் தருகிறான். யாரோ வருகிறார்கள். திரும்பிப் பார்த்தான். ஈஸ்வர் காணவில்லை. ஒரு கணம் யோசித்தவன் பின் தலை தெறிக்க வெளியே ஓடினான். ஒரு போலீஸ்காரர் உள்ளே வந்து கொண்டிருந்தார். அவர் அவனைப் பிடிக்க யத்தனிப்பதற்குள் அவன் அவரைத் தாண்டி ஓடினான். அவனைப் பின் தொடர்வதா, இல்லை ஈஸ்வரைப் போய் பார்ப்பதா என்று குழம்பிய போலீஸ்காரர் ஈஸ்வருக்கு ஆபத்து உள்ளதா என்று பார்ப்பதே முக்கியம் என்று நினைத்தவராக வீட்டுக்குள் ஓடி வந்து பூஜையறையை எட்டிப் பார்த்த போது சுவரோடு ஓட்டி ஈஸ்வர் நின்றிருந்தான்.

அடுத்த கால் மணி நேரத்தில் வேறு இரண்டு போலீஸ்காரர்களும் பார்த்தசாரதியும் வந்து சேர்ந்தார்கள்.

ஸ்வரைக் கொல்ல முடியவில்லை என்ற செய்தி பாபுஜியை எரிச்சலூட்டியது. இத்தனைக்கும் அவர் அனுப்பிய ஆள் குறி தவறாமல் சுடுவதில் பேர் போனவன். “என்ன ஆச்சு?

“அவன் திடீர்னு குனிஞ்சு தரையக் கும்பிட்டான் சார். அப்ப மிஸ் ஆயிடுச்சு...என்று ஆரம்பித்து அந்த ஆள் நடந்ததை எல்லாம் சொன்னான்.

பாபுஜி குருஜியிடம் வந்து ஈஸ்வர் உயிர் தப்பியதைச் சொன்னான். “... அவன் திடீர்னு தரையைத் தொட்டுக் கும்பிட்டானாம். ஏன்னு தெரியலை

வேதபாடசாலையின் மண்ணை ஈஸ்வர் கும்பிட்டது நினைவுக்கு வர குருஜி சொன்னார். “அவனுக்கு அடிக்கடி தரையைத் தொட்டுக் கும்பிடற பழக்கம் உண்டு

பாபுஜி குழப்பத்துடனும், கோபத்துடனும் கேட்டார். “அவன் என்ன லூஸா குருஜி?

பார்த்தசாரதிக்கு ஈஸ்வர் நலமாய் இருப்பதைப் பார்த்த பிறகு தான் நிம்மதி ஏற்பட்டது. ஈஸ்வர் சொன்னதை எல்லாம் கேட்ட போது பசுபதி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளா விட்டாலும் கூடத் தன் குடும்பத்தாரைக் காப்பாற்றுவதில் இறந்த பின்னும் அக்கறை கொண்டவராகவே இருக்கிறார் என்று தோன்றியது. ஈஸ்வர் அந்த தேவாரப் புத்தகத்தை எறியாமல் இருந்திருந்தாலும் காப்பாற்றப்பட்டிருப்பானா என்று கேட்டுக் கொண்டார். விடை தெரியவில்லை.

ஈஸ்வர் மற்ற போலீஸ்காரர்களும், பார்த்தசாரதியும் அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தது எப்படி என்று கேட்டான். யாரோ ஒரு மர்மநபர் போன் செய்தார் என்று மட்டும் பார்த்தசாரதி தெரிவித்தார். கேட்ட குரல் தென்னரசுவின் குரல் போல் இருந்தது என்று அவனிடம் அவர் சொல்லவில்லை. தென்னரசு பற்றிய சந்தேகத்தை அவர் அவனிடம் சொல்லி இருக்காதது போலவே, குழம்ப வைத்த இந்தப் போன் கால் விஷயத்தையும் அவர் சொல்லவில்லை. தென்னரசு ஒரு புதிராகவே அவருக்கு இருந்தார்....

பரமேஸ்வரனின் பேரனுக்குப் பாதுகாப்பு அளிக்க மேலிடத்தில் சொல்வதில் அவருக்குப் பிரச்சினை இருக்கவில்லை.   ஒரு முறை கொலை முயற்சி நடந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் எத்தனை ஆட்கள் ஈஸ்வரின் பாதுகாப்புக்குத் தேவை என்று கேட்டு அனுமதி அளித்து விட்டார்கள். பார்த்தசாரதியும் ஈஸ்வர் அங்கிருக்கும் வரை தானும் அங்கிருப்பது என்ற முடிவுக்கு வந்தார்.  

ஈஸ்வர் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் முதல் வேலையாக கணபதியைத் தொடர்பு கொள்ள நினைத்தான். கொலை முயற்சி, பசுபதி தரிசனம் போன்ற எத்தனையோ விஷயங்களைப் பற்றி யோசிக்க மனம் முனைந்தாலும் அவன் அந்த விபரீத ஆராய்ச்சிகள் தொடர்ந்து விசேஷ மானஸ லிங்கம் தவறானவர்கள் வசம் போய் விடக் கூடாது என்பதற்கே முன்னுரிமை தந்தான். காலம் அவன் வசம் இல்லை.... அவன் நிதானித்தால் அவர்கள் முந்தி விடுவார்கள். பின் அவர்களை நிறுத்துவது கஷ்டம் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.

அதை பார்த்தசாரதியிடம் தெரிவித்து விட்டு பூஜையறைக்குப் போனவனுக்கு விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகளுடன் லயிக்க முன்பை விட அதிக நேரம் தேவைப்பட்டது. அது சாத்தியமான போது விசேஷ மானஸ லிங்கத்தின் தரிசனம் கிடைத்தது. ஓங்கார நாதம் கேட்டுக் கொண்டிருக்க விசேஷ மானஸ லிங்கம் தனியாக விளக்கொளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் யாரும் அருகில் தெரியவில்லை. ஈஸ்வர் மானசீகமாக கணபதியைத் தேடினான். மனக்கண்ணில் கணபதியைப் பார்த்து தன் கவனத்தைக் குவித்தான். சிறிது நேரத்தில் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த கணபதி அவன் மனக்கண்ணில் தெரிந்தான். ஈஸ்வர் அவனை அழைத்தான். கணபதி, கணபதி

கணபதியை எழுப்புவது சுலபமாக இருக்கவில்லை. ஈஸ்வர் பல முறை முயற்சி செய்ய வேண்டி வந்தது. கணபதிக்கு கனவில் ஈஸ்வர் தெரிந்தான். ஈஸ்வரைக் கனவில் பார்த்த சந்தோஷம் கணபதி முகத்தில் தெரிந்தது. ‘அண்ணன்என்று மனதில் சொல்லிக் கொண்டு கணபதி புரண்டு படுத்தான்.

“கணபதி... கணபதி... எழுந்திரு கணபதி.. உன் கிட்ட பேசணும்

இயல்பாகவே தூக்கம் அதிகமாக இருந்த கணபதி என்ன இந்த அண்ணன் என்னைத் தூங்கவே விட மாட்டேன்கிறார்என்று சொல்லிக் கொண்டே  மீண்டும் உறங்கப் பார்த்தான். ஆனால் ஈஸ்வர் கூப்பிட்டுக் கொண்டே இருப்பது போல் தோன்றவே கஷ்டப்பட்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். “என்ன இன்னைக்கு அண்ணன் கனவாவே வருது....

எழுந்து உட்கார்ந்த கணபதியிடம் என்ன சொல்வது, எப்படி சொல்வது என்பது ஈஸ்வருக்குத் தெளிவில்லாமல் இருந்தது. நேரில் சொல்வதே கஷ்டம் தான். அப்படி இருக்கையில் இப்படி டெலிபதியாக அனுப்பும் செய்திகள் அவனுக்கு எந்த அளவு புரியும் என்பதும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இவனோடு சேர்ந்து ஞானம் படைத்தவனைத் தேடுவது என்பது இமாலய சாதனையாகவே இருக்கும் போலத் தெரிந்தது.

ஈஸ்வர் சொன்னான். “கணபதி நீ தப்பான இடத்தில் இருக்கே. நீ நினைக்கிற மாதிரி அந்த குருஜி நல்லவர் இல்லை.... அந்த சிவலிங்கத்தை அவர்கள் கண்டிப்பாகத் தப்பான வழியில் தான் பயன்படுத்தப் போகிறாங்க

கணபதிக்கு ஆச்சரியமாய் இருந்தது. “என்ன இது கண்ணு முழிச்சா கனவு போயிடும்பாங்க. எனக்கு இன்னும் கனவு அப்படியே இருக்கு. அண்ணன் வேற ஏதோ சொல்றாரு

செய்தி அவனைப் போய் சேரவில்லை என்பது புரியவே ஈஸ்வர் சொன்னதில் சில வார்த்தைகளை மட்டும் அழுத்தமாய் சொன்னான். தப்பான இடம்... தப்பான இடம்.... குருஜி... குருஜி... நல்லவரில்லை..... தப்பு நடக்குது.... தப்பு நடக்குது...

கணபதிக்குத் தப்பு என்கிற சொல் மட்டும் தெளிவாக மனதில் பதிந்தது. அவனுக்குத் தெரிந்து அவன் சமீபத்தில் செய்த தப்பு சிவன் முன்னாலேயே உட்கார்ந்து கொண்டு சீடை சாப்பிட்டது தான். “ஆமா நான் சீடை சாப்பிட்டது தப்பு தான்.. அதை இவர் வேற சொல்லணுமா?... இது அண்ணனுக்கு எப்படித் தெரிஞ்சுது.... சிவன் வேலையா இது? ஏன் சிவனே, நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேனே, பின்ன ஏன் ஊர் பூரா அதைச் சொல்லி இருக்கே?

ஈஸ்வருக்கு அவன் ஏதோ சாப்பிடுவது பற்றி சொல்கிற மாதிரி இருந்தது. திடீர் என்று விசேஷ மானஸ லிங்கம் கணபதி அருகே தெரிந்தது. கணபதி அந்த சிவலிங்கத்தை நினைத்திருக்கிறான் போல இருக்கிறது! அவன் சொல்லி முடித்த வார்த்தைகளில் மறுபடி கவனம் வைப்பது சுலபமாக இருந்தது. கவனத்தைக் கூராக்கிய போது கணபதி சொன்னதைத் திரும்பக் கேட்க முடிந்தது.  ஈஸ்வருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

ஈஸ்வர் கணபதி அருகே தெரிந்த விசேஷ மானஸ லிங்கத்தை மானசீகமாக வணங்கினான். “கடவுளே, இப்படி ஒரு வெகுளியைப் படைச்சுட்டு அவனை இப்போது அவர்கள் பக்கம் நிறுத்தி இருக்கிறியே. இது நியாயமா? இவனுக்கு நான் என்ன சொல்லி எப்படி புரிய வைப்பேன்?

கணபதிக்கு ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்தை வணங்குவது தெரிந்தது. சந்தோஷமாய் சொன்னான். “அண்ணா. இது தான் நான் சொன்ன சிவன்... இவருக்கு ரொம்பவே சக்தி இருக்கு. என்ன நினைச்சாலும் செய்து கொடுப்பார்.... ரொம்பவே நல்லவரு

ஈஸ்வர் பாதி சிரிப்புடனும் பாதி மனத்தாங்கலுடன் பரமனிடம் கேட்டான். “இவன் கிட்ட நல்லவருன்னு சர்டிபிகேட் வாங்கிற அளவு நீ நிஜமாகவே நல்லவன் தானா. அப்படியானால் அவனை ஏன் மோசமான ஆட்கள் பயன்படுத்த நீ அனுமதிக்கிறாய்?

விசேஷ மானஸ லிங்கம் மௌனம் சாதித்தது. பக்தர்களின் தர்மசங்கடமான கேள்விகளுக்கு இறைவன் பதில் அளிப்பதில்லை போலும்! ஈஸ்வர் மறுபடியும் கணபதிக்குப் புரிய வைக்க முயற்சித்தான். “கணபதி குருஜி கெட்டவர்நம்பாதே. சிவலிஙகத்தை வச்சு தப்பு பண்ணப் போறாங்க.என்று திரும்பத் திரும்ப அழுத்திச் சொன்னான்.
 
கணபதிக்கு அவன் சொல்வது புரிகிற மாதிரி இருந்தது. ஆனால் அதன் கூடவே ‘என்ன அண்ணன் குருஜியைப் போய் கெட்டவர்ன்னு சொல்றார்?என்று மனம் பதறியது. “அண்ணா உங்களுக்குக் குருஜியைத் தெரியாது. அதனால தான் அப்படிச் சொல்றீங்க. அவர் ரொம்ப நல்லவருஎன்றான்.

ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்திடம் சொன்னான். “இவன் உன்னையும் நல்லவர்னு சொல்றான். குருஜியையும் நல்லவர்னு சொல்றான். இவன் அகராதியில கெட்டவங்கன்னு யாராவது இருக்காங்களா?

கணபதிக்கு ஈஸ்வர் சிவலிங்கத்தைப் பார்த்து ஏதோ கேட்பது போலத் தெரிந்தது. ‘ஓ குருஜி நல்லவரான்னு அண்ணன் சிவன் கிட்ட கேட்கறார் போலத் தெரியுது. சிவனே... நீயே அண்ணன் கிட்ட சொல்லு. குருஜி நல்லவர்ன்னு... அண்ணன் அமெரிக்காவுலயே இருந்தவருங்கறதால அண்ணனுக்கு குருஜி பத்தி தெரியாதுல்ல....

ஈஸ்வர் பேச்சும் செயலும் இழந்து போய் கணபதியைப் பார்த்தான். இவன் மனதில் இந்த அளவு உயர்ந்த இடம் பிடித்துள்ள குருஜியை அவன் எப்படி இறக்குவான்?

ஈஸ்வர் ஒன்றுமே சொல்லாமல் தன்னையே பார்ப்பது கணபதிக்கு மனதில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அண்ணனும் நல்லவர் தான். அவர் ஏன் குருஜியை தப்பாய் சொல்றார்

அவனையும் கூட கணபதி நல்லவர் என்று சொன்னதற்கு விசேஷ மானஸ லிங்கம் சிரிப்பது போல் ஈஸ்வருக்கு பிரமை ஏற்பட்டது.  ஈஸ்வர் குருஜியைப் பற்றி இனி இவனிடம் எதுவும் சொல்லிப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டான். அடுத்ததாகச் சொன்னான். “கணபதி அங்கே தப்பு நடக்குது... தப்பு நடக்குது

ஈஸ்வர் சீடை விவகாரம் இல்லாத தப்பு ஒன்றைச் சொல்கிறான் என்று கணபதிக்குப் புரிந்தது. அநியாயமாய் சிவன் சீடை சமாச்சாரத்தை அண்ணனிடம் சொல்லிட்டார்னு நினைச்சுட்டமே. என்னை மன்னிச்சுடு சிவனே. எனக்கு அறிவு அவ்வளவு தான்.... கனவுல வந்து அண்ணன் நிஜமாவே பேசற மாதிரி இருக்கே. என்ன இது? அண்ணன் எதைத் தப்புன்னு சொல்றார்?”.  கணபதி எழுந்து விட்டான்.

ஈஸ்வர் திகைத்தான். ‘இவன் எங்கே கிளம்பிட்டான்?

கணபதி அறையை விட்டு வெளியே வந்தான். ஹரிராம் அறைக் கதவு திறந்திருந்தது. எட்டிப் பார்த்தான். ஹரிராம் பகவத் கீதை படித்துக் கொண்டிருந்தார். நீங்க இன்னும். தூங்கலையா. எனக்கு ஒரு உபகாரம் செய்யறீங்களா? என் கனவுல எங்க அண்ணன் வந்து தப்பு நடக்குது’ ’தப்பு நடக்குதுன்னு சொல்ற மாதிரி இருக்கு. இது தூக்கத்துல வர்ற கனவு இல்லை. முழிச்சுகிட்டே இருக்கறப்ப வர்ற கனவு. என்ன செய்யலாம். நீங்களே சொல்லுங்களேன்

ஹரிராமிற்கு கணபதி சொன்னது புரிய சிறிது நேரம் ஆனது. பகவத் கீதையை மூடி வைத்து விட்டு அவனைப் பார்த்துப் புன்னகை செய்தார். இவனுக்கு முழிச்சுகிட்டே இருக்கறப்ப வர்ற கனவுஎன்ன என்று பார்த்தார். அவன் மூலமாக அவருக்கு ஈஸ்வர் தெரிந்தான்.

ஈஸ்வருக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடைசியில் குருஜியின் கூட்டத்து ஆள் ஒருவரிடம் போய் இதைச் சொல்கிறானே இவன்?

ஹரிராம் கேட்டார். “இது தான் உங்கண்ணனா?

கணபதிக்கு ஆச்சரியமாய் இருந்தது. “ஓ... கனவுல வர்ற ஆளைக் கூட உங்களால பார்க்க முடியுமா? ஆமா அது தான் எங்கண்ணன். அண்ணன்னா சொந்த அண்ணன் இல்லை. அப்படி இருந்திருந்தா அவர் அழகுல பாதியாவது எனக்கு வந்திருக்காதா? அவர் எனக்கு அண்ணன் மாதிரி... இப்ப சிவலிங்கத்துக்கு ஒரு பட்டு வேஷ்டி கட்டியிருக்கேனே, அது அவர் வாங்கித் தந்தது தான்.....

கணபதி நிறுத்தாமல் அன்று நடந்ததை எல்லாம் சொன்னான்.  ஹரிராமிற்கு அவன் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை, அவனைப் பார்க்கையிலேயே அவன் வாழ்க்கையில் இருந்து எந்த விஷயத்தையும் அவரால் தெரிந்து கொள்ள முடியும் என்றாலும் கூட அவன் சொன்னதை சுவாரசியத்துடன் கேட்டார்.

“...இன்னொரு வேஷ்டி என் பிள்ளையாருக்கு வாங்கித் தந்திருக்கார். அதையும் உங்களுக்குக் காட்டவா?...கேட்டு விட்டு பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் கணபதி உற்சாகமாகத் தனதறைக்கு ஓடினான்.

ஈஸ்வருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கணபதி அந்தப் பட்டுத் துணியுடன் வந்து ஆவலுடன் ஹரிராமைக் கேட்டான். “நல்லா இருக்கில்ல?

ஹரிராம் தலையசைத்தார். “இன்னும் இதை என் பிள்ளையார் பார்க்கல.என்று அவன் சொல்ல ஹரிராம் புன்னகைத்தார். அவ ர் இது வரை இப்படி ஒரு அன்பான நல்ல மனதைப் பார்க்கவில்லை. சொல்லப் போனால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத ஒரு நல்ல உள்ளத்தை முதல் முறையாகத் தன் வாழ்க்கையில் அவர் பார்க்கிறார்.

அவனிடம் கேட்டார். “சரி உங்க அண்ணன் தப்பு நடக்குதுன்னு எதைச் சொல்றார்?

அது தான் புரியலைஎன்று சொன்ன கணபதி விரித்த பட்டு வேஷ்டியைக் கவனமாக மடிக்க ஆரம்பித்தான். ஹரிராம் பார்வை அவனை ஊடுருவி ஈஸ்வரைப் பார்த்தது. ஈஸ்வருக்கு அவரை நம்பலாமா கூடாதா என்று தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு அவரை விட்டால் அவனுக்கு வேறு வழியில்லை. அவர் கணபதியைப் பார்த்த பார்வையில் இருந்த கனிவு அவரை நம்பச் சொன்னது.

“தயவு செய்து அவனுக்குப் புரிய வையுங்கள்...என்று ஆரம்பித்த ஈஸ்வர் கணபதிக்குத் தெரிவிக்க நினைத்த விஷயத்தைச் சொன்னான். ஈஸ்வர் மன அலைகளில் அனுப்பியதை ஹரிராம் அப்படியே அவனுக்கு பேச்சு வடிவில் தெரிவித்தார்.

கணபதி தலையைப் பலமாக ஆட்டிச் சொன்னான். “அண்ணன் தப்பா புரிஞ்சுகிட்டிருக்கார். குருஜி தப்பு செய்ய மாட்டார்..... அவரை எனக்கு எத்தனையோ வருஷமாத் தெரியும்.... இந்த ஆராய்ச்சி தப்பானதுன்னா அவர் அதுக்கு அனுமதிக்கவே மாட்டார்

ஈஸ்வருக்கு இனி எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. பரிதாபமாக அவனைப் பார்க்க கணபதிக்கு அதைப் பார்க்கவும் கஷ்டமாய் இருந்தது. இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்த கணபதி ஒரு முடிவுக்கு வந்தான். “குருஜியை நேராவே கேட்டுடறேன்.

அவன் உறுதியாகத் தீர்மானித்து விட்டு குருஜியின் அறையை நோக்கி நடந்தான். வேண்டாம்.. வேண்டாம்என்று ஈஸ்வர் பதற்றத்துடன் அனுப்பிய செய்தியை கணபதி பொருட்படுத்தவில்லை.

(தொடரும்)

பரம(ன்) ரகசியம் – 81

ஜான்சனுக்கு ஈஸ்வர் இந்த அளவு முன்னேறி இருப்பதை நம்பக் கஷ்டமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் ஒரு பதிலை வைத்திருந்த குருஜியின் அறிவுக்கு இது எட்டிய விஷயமாக இருந்தாலும் ஓரிரு நாட்களில் ஈஸ்வர் அவர்களை வேவு பார்க்கும் அளவுக்கு அசுர வேகத்தில் நெருங்கியிருப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.  இதில் அக்னி நேத்ர சித்தர் வேறு அவனை சந்தித்திருக்கக் கூடும் என்று குருஜி நினைக்கிறார்....!

ஜான்சன் மனத்தாங்கலுடன் சொன்னார். “உங்க நண்பர் உதயன் சுவாமி அக்னிநேத்ர சித்தர் இந்த இடத்தில் நடக்கும் ஆராய்ச்சிகளைக் கெடுக்க முடியாதபடி மந்திரக்காப்பு செய்தது மாதிரி ஈஸ்வரும் எதுவும் செய்ய முடியாதபடி செய்திருக்க நீங்கள் சொல்லி இருக்கலாம்....

குருஜி சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் யோசித்தார். ஈஸ்வரை அவர் குறைத்து எடை போட்டு விட்டாரோ?

ஜான்சன் பயத்தோடு கேட்டார். “அவன் இன்னேரம் இந்த இடம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்திருப்பானா குருஜி

“அதை அவன் கண்டு பிடிப்பது கஷ்டம் தான்... அந்த சித்தர் அவனுக்கும் கணபதிக்கும் சரியான ஒரு முகூர்த்த நேரத்தில், எனர்ஜி லெவல்னு நீங்கள் சொல்வீங்களே அதில், ஒரு நுட்பமான இணைப்பை ஏற்படுத்திட்டார். அதனால சரியா முயற்சி செய்தால் கணபதியும்,  விசேஷ மானஸ லிங்கமும் இருக்கிற இடத்தை அவனால் பார்க்க முடியுமே ஒழிய அந்த இடம் எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்கற அளவுக்கு உதயனோட மந்திரக் காப்பு அனுமதிச்சுடாதுன்னு நினைக்கிறேன்

அவன் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளும் நபர் அல்லவே என்று நினைத்த ஜான்சன் கணபதி குருஜியை நோக்கி வருவதைப் பார்த்து அங்கிருந்து நகர்ந்தார்.

கணபதியைப் பார்த்து குருஜி புன்னகையுடன் கேட்டார், “என்ன கணபதி, சிவலிங்கத்துகிட்ட அடுத்தது உனக்காக ஏதாவது கேட்கலாமா?

உலகில் தன்னைக் காட்டிலும் எத்தனையோ பேர் பெரும் கஷ்டத்தில் இருக்கும் போது தனக்காக மட்டும் வேண்டிக் கொள்வது நியாயமல்ல என்று கணபதி நினைத்தான். கேட்காமலேயே இறைவன் இப்போது அவனுக்கு நன்றாகவே படியளந்து வருகிறார்.... “வேண்டாம் குருஜி…”

அப்படின்னா அடுத்தது என்ன கேட்கலாம் சொல்லுகுருஜி விளையாட்டாய் கேட்டார்.

“எல்லாரும் நல்லா சந்தோஷமாயிருக்கணும்னு கேட்டா என்ன குருஜி?கேட்டு விட்டு கணபதி குருஜியை குழந்தைத்தனமாய் பார்த்தான். தனித்தனியாய் ஒவ்வொருவரும் கேட்பதை விட இப்படி எல்லாரும் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று கேட்பது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.

குருஜி மெல்லச் சொன்னார். “அந்த அளவு சக்தி இந்த சிவலிங்கத்துக்கே இருக்கிறது சந்தேகம் தான் கணபதி

கணபதி போன பிறகும் அவன் வார்த்தைகளும், மனதார அவன் சொன்ன விதமும் அவர் மனதில் நிறைய நேரம் நின்றது. பின் ஒரு பெருமூச்சு விட்டவராக பாபுஜியை அழைத்து குருஜி சொன்னார். “பாபுஜி. இந்த விசேஷ மானஸ லிங்கத்தோட சக்தி பத்தி இனி ஆராய்ச்சி செய்ய எதுவுமில்லை. ஈஸ்வர் குறுக்கில் வராமல் இருந்தால் நம்ம கற்பனையோட எல்லை தான் நம்ம சாதனையோட எல்லையாய் இருக்கும்...

“ஈஸ்வர் குறுக்கே வராமல் இருக்க என்ன செய்யறது குருஜி?

“எல்லாத்துக்குமே ஒரு வழி இருக்கு. நான் யோசிச்சு சொல்றேன்... நீ அதைப்பத்தி கவலைப்படாதே..  நம்ம லட்சியத்தை அடைய நாம் முதல்ல என்ன செய்யலாம்னு நீங்க எல்லாரும் சேர்ந்து யோசிக்க ஆரம்பியுங்க. நானும் சிலதெல்லாம் யோசிச்சு வச்சிருக்கேன். பிறகு சேர்ந்து பேசி முடிவு செய்யலாம். இதை முதல்லயே செய்திருக்கலாம். ஆனால் அப்ப விசேஷ மானஸ லிங்கத்தை நான் நம்பின அளவு நீங்க யாரும் நம்பினதா தெரியலை. அதனால் தான் உங்களுக்கெல்லாம் அந்த நம்பிக்கை வந்த பிறகு பேசலாம்னு விட்டுட்டேன்.....”.

பாபுஜி போன பிறகு குருஜி ஈஸ்வரை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

ஸ்வர் இனி என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய பார்த்தசாரதி ஆவலாய் இருந்தார். சீக்கிரமாக அவன் எதாவது செய்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் ஈஸ்வரோ அவசரப்பட்டு எதையும் செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.

விசேஷ மானஸ லிங்கத்தின் அருளாளோ, அக்னிநேத்ர சித்தர் மற்றும் பசுபதி ஆகியோரின் ஆசியாலோ இன்றைய தினத்தில் அவன் சாதித்தது அவன் எதிர்பார்த்திராத அளவு பெரிய வெற்றி தான். ஒரு இடத்தில் நடப்பதை ஓரளவாவது நேரில் பார்ப்பது போல் பார்க்க முடிந்தது சாதாரண விஷயம் அல்ல.  ஆழ்மனசக்திகளில் ஒன்றான Remote Viewing என்ற தொலைதூரத்தில் நடப்பதைக் காண முடிந்த சக்தி அவனுக்கு இன்று அருளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த வெற்றியில் பெருமிதம் அடையும் நிலையில் அவன் இல்லை. காரணம் அவன் ஒருவனிடம் அந்த சக்தி உள்ளது என்றால் எதிரணியில் உள்ளவர்களில் எத்தனை பேரிடம் அந்த சக்தி உள்ளது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்குக் குருஜியைப் பார்க்க முடிந்தது போல குருஜிக்கும் அவனைப் பார்க்க முடிந்திருக்கிறது. அவருக்கு சற்று தொலைவில் வேறு மூன்று பேர் தியான நிலையில் அமர்ந்து கொண்டு இருந்தார்களே அவர்களுக்கும் அந்த சக்தி இருக்கலாம் என்று அவன் உள்மனம் சொன்னது. அது உண்மையானால் இங்கு இவன் ஒருவன் என்றால் அங்கு அவர்கள் நான்கு பேர் இருக்கிறார்கள். அது போதாதென்று அங்கு விசேஷ மானஸ லிங்கம் இருக்கிறது, ஜான்சன் இருக்கிறார், இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்களோ? இப்படி எண்ண ஓட்டம் போன போது அவன் சொல்லிக் கொண்டான். ‘ஆனால் அவர்களிடம் சத்தியம் இல்லை.... நியாயம் இல்லை. அதுவே ஒரு பெரிய பலவீனம் அல்லவா? என் பக்கம் அது இருப்பது மிகப்பெரிய பலம் அல்லவா?

மேலும் யோசித்த போது அவனை அந்த சித்தரின் வார்த்தைகளும் ஆசுவாசப்படுத்தின. “எனக்குத் தெரிஞ்சு சுமக்க முடியாத பாரத்தை இறைவன் தர்றதில்லை”.

சித்தர் சொன்னது போல் தைரியமும் தன்னம்பிக்கையும் இல்லாத நல்லவனாக இருக்க அவன் விரும்பவில்லை. முயலாமலேயே தோல்வியை ஒப்புக் கொள்ளும் முட்டாளாக இருக்கவும் அவன் விரும்பவில்லை. ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று உறுதியாக நினைத்தான். மனதில் உறுதி வந்தவுடனேயே கூடவே யானை பலம் அவனுக்கு வந்து சேர்ந்தது போல இருந்தது.

எதைச் செய்வதாக இருந்தாலும் கணபதியைத் தன் பக்கம் இழுத்துக் கொள்வது தான் அதற்கான முதல் படி என்று ஈஸ்வர் கணக்கிட்டான். முன்பு போலவே மறுபடி முயற்சிக்கலாம் என்றால் அது கண்டிப்பாக குருஜிக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை. மனிதர் கண்கொத்திப் பாம்பாக அங்கே காவல் காத்துக் கொண்டு இருக்கலாம்.

“துஞ்சாமல்என்ற வார்த்தைக்கு தூங்காமல் என்று பார்த்தசாரதி அர்த்தம் எழுதினாலும் அதற்கு சோர்வில்லாமல், கால தாமதம் செய்யாமல் என்று அர்த்தம் என பார்த்தசாரதி சொன்னது சரியாக இருக்க வேண்டும் என்றே பட்டாலும் இன்றைய சூழ்நிலைக்கு ‘தூங்காமல்என்ற அர்த்தமே பொருந்தும் என்பது போலத் தோன்றியது. இரவு நேரத்தில் குருஜி தூங்கிய பிறகு ஏதாவது முயற்சி செய்யலாம். அப்படிச் செய்தால் அவர் அவன் செய்கைகளை அறிய வாய்ப்பில்லை....  முடிவெடுத்து விட்டு அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

அவன் நிமிர்ந்து உட்கார்ந்த விதத்தையும், அவன் முகத்தில் தெரிந்த உறுதியையும் பார்த்த பார்த்தசாரதிக்கு அவன் ஏதாவது செய்வான் என்ற நம்பிக்கை பிறந்தது.

அவன் தன் எண்ண ஓட்டத்தை அவரிடம் வெளிப்படையாகச் சொன்னான். அதிகாலை இங்கு வந்த அவரை இரவாவது வீட்டுக்கு அனுப்புவது தான் முறை என்று தோன்றியதால் ஈஸ்வர் அவரை வீட்டுக்குப் போய் மறு நாள் காலை வரச்சொன்னான். முனுசாமியும் மதியமே போய் விட்டிருந்ததால் அவனைத் தனியாக விட்டுப் போக அவருக்குத் தயக்கமாய் இருந்தது. அவன் பூஜை அறையில் அமர்ந்து கொண்டு இருக்கையில் அவருக்கு வேலை எதுவும் இல்லை என்பதால் அவர் இரவில் தங்கியும் எந்தப் பயனும் இல்லை என்று சொல்லி ஈஸ்வர் வற்புறுத்தி அனுப்பி வைத்தான். ஆனாலும் இரவு ஒன்பது மணி வரை இருந்து அவனிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் தான் பார்த்தசாரதி போனார்.

மிழகத்தில் உட்கார்ந்து கொண்டு செங்கடலில் சோமாலியக் கடற்கொள்ளையர்களை அழிக்க முடிந்த சக்தி தங்கள் வசம் இருக்கிறது என்ற எண்ணமே தென்னரசுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்து கொண்டிருந்தது. அந்த சந்தோஷமான நேரத்தில் மகளிடம் பேச வேண்டும் போல இருந்தது.  மகளுக்குப் போன் செய்து பேசினார்.

விஷாலியின் குரலில் எல்லை இல்லாத சந்தோஷம் தெரிந்தது. மெல்ல ஈஸ்வரும், தானும் காதலிப்பதாக அவரிடம் சொன்னாள். ஈஸ்வர் அமெரிக்காவுக்குத் திரும்பிப் போவதற்கு முன்பே கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று பரமேஸ்வரன் முடிவு செய்திருப்பதாயும், அவர் தென்னரசுவிடம் போனில் பேச இரண்டு நாளாக முறை முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னாள். கனகதுர்கா வந்திருப்பதாகவும் சொன்னாள்.

விஷாலி தடை இல்லாமல் பேசும் பெண் அல்ல. மிகுந்த சந்தோஷம் மட்டுமே அவளை அப்படிப் பேச வைப்பதுண்டு. இன்று அவள் குரலில் கொப்பளித்த சந்தோஷமும், எல்லாவற்றையும் அப்பாவிடம் சொல்லி விடத் துடித்த துடிப்பும் தென்னரசுவை நிலை குலைய வைத்தது. கொந்தளித்த உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு கேட்டார். “ஈஸ்வர் எங்கேம்மா

“அவர் அந்த தோட்ட வீட்டுக்குப் போயிருக்கார்ப்பா. ஏதோ ஆராய்ச்சி செய்யணுமாம். முடிச்சுட்டு தான் வருவேன்னு சொல்லிட்டு போயிருக்கார்.

தென்னரசு பேச்சிழந்து போனார். தந்தையின் மனநிலையைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் விஷாலி இருக்கவில்லை. ஆனந்தவல்லி தன் நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து ‘உனக்கு எதெல்லாம் பிடிச்சுதோ அதெல்லாம் எடுத்துக்கோம்மாஎன்று சொன்னதையும், கனகதுர்கா மிக நல்ல மாதிரி என்பதையும் சொன்னாள். “எனக்கு அவங்க கிட்ட பேசறப்ப அம்மா கிட்ட பேசற மாதிரி இருக்குப்பா....

விஷாலி பேசிக் கொண்டே போனாள். மகள் இது நாள் வரை அவ்வளவு சந்தோஷமாக எப்போதுமே இருந்ததில்லை என்று தென்னரசுக்குத் தோன்றியது. கடைசியில் விஷாலி கேட்டாள். “ஈஸ்வரோட தாத்தா கிட்ட பேசறீங்களாப்பா?

“சிக்னல் அபப்ப்ப கிடைக்கறதில்லைம்மா. நான் அப்பறமா பேசறேன்ம்மா

மகளிடம் பேசி முடித்த பிறகு தென்னரசு நிறைய நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார். விதி அவர் வாழ்க்கையில் ஒரு குரூர விளையாட்டு விளையாடி இருப்பதாக அவருக்குத் தோன்றியது. இப்படி ஒரு வாழ்க்கை மகளுக்கு அமையும் என்பது முதலிலேயே தெரிந்திருந்தால் தடம் மாறி வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...

மகேஷ் வந்தான். “என்ன யோசிச்சுகிட்டிருக்கீங்க அங்கிள்

“இனி அடுத்ததா என்ன செய்யப் போறோம்னு யோசிக்கிறேன் மகேஷ்

“அதைப்பத்தி தான் ஜான்சனும், பாபுஜியும் அந்த வெளிநாட்டுக்காரங்க கிட்ட வீடியோ கான்ஃப்ரன்ஸிங்ல பேசிகிட்டிருக்காங்க. எகிப்து அரசியலைப் பத்தி பேச ஆரம்பிச்சாங்க. போரடிச்சுது. வந்துட்டேன்.

தென்னரசுக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இந்த விசேஷ மானஸ லிங்கம் விவகாரத்தில் அவனுக்கு இயல்பாய் பெரிய ஆர்வம் எப்போதுமே இருந்ததில்லை. அவருக்காகத் தான் அவன் எல்லாமே செய்திருக்கிறான். தனிப்பட்ட  அவருக்காகக் கூட இல்லை. அவர் விஷாலியின் அப்பா என்பதற்காக. அவனிடம் உலகப் பணக்காரர்களில் ஒருவனாகக் கூட நீ ஆகலாம், உன் தாத்தாவைப் போல இருக்கும் சக்தி வாய்ந்த பல பேரை உன் அப்பாயின்மெண்டிற்காக நீ காக்க வைக்கலாம், நீ ஆசைப்படுவதை எல்லாம் நடத்திக் காட்டலாம்...’  என்றெல்லாம் அவர் எத்தனையோ ஆசை காட்டி அவனைத் தன்னுடன் வைத்திருந்தாலும் எல்லாவற்றிற்கும் மேலாக அவனை அவர் சொன்னபடி எல்லாம் ஆடவைத்தது அவனுக்கு விஷாலியின் மீதிருந்த காதல் தான். அவர் அவளை அவனுக்கே திருமணம் செய்து தருவார் என்ற எதிர்பார்ப்பில் தான்....

இப்போது வீட்டில் நடந்திருக்கும் நிகழ்வுகள் அவனுக்கு இன்னும் தெரியவில்லை. தெரிந்தால் அவன் அதை எப்படி எடுத்துக் கொள்வான்? தென்னரசுக்கு யோசிக்கவே கஷ்டமாக இருந்தது. அவர் ஏதோ யோசனையில் இருக்கிறார், பேசும் மனநிலையில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட மகேஷ் உறங்கப் போனான். தென்னரசு அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள பாபுஜியின் அறைக்குப் போனார்.

அவர் நுழைந்த போது மகேஷ் சொன்னது போல வீடியோ கான்ஃப்ரன்ஸிங்கில் எகிப்து அரசியல் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். சோமாலியக் கொள்ளைக்காரர்கள் விஷயத்தில் நினைத்ததை சாதிக்க முடிந்த சிவலிங்கத்தின் சக்தி இயற்கை சக்திகளோடு நின்று விடுமா இல்லை அரசியல் வரைக்கும் வருமா என்ற கேள்வி அவர்களிடம் எழுந்திருந்தது. அந்தக் கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ள தற்போது நடக்க இருக்கும் எகிப்திய தேர்தலை உபயோகப்படுத்திக் கொள்ள அவர்கள் நினைத்தார்கள்.

பிப்ரவரி 2011ல் எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து இறங்கிய பிறகு அந்த நாட்டில் அரசியல் நிலவரம் ஸ்திரமாக இருக்கவில்லை. பின் நடந்த தேர்தலில் முகமது மோர்சி என்பவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் அவருக்கும் ராணுவத்தின் எதிர்ப்பு இருந்து வந்தது. 2013 ஜூனில் அவருக்கு எதிராக பெரிதாக கலவரம் ஒன்று வெடிக்க ராணுவம் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவரைப் பதவியில் இருந்து இறக்கியது. விரைவிலேயே தேர்தல் ஒன்றை நடத்துவோம் என்று உறுதிமொழி அளித்திருந்த ராணுவம் தங்களுக்குச் சாதகமான ஒரு நபரை தேர்தல் களத்தில் நிற்க வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. அந்த நபர் இந்த அறுவரில் ஒருவரான எகிப்தியரின் நெருங்கிய நண்பர். மக்களிடம் அந்த நபருக்கு செல்வாக்கை அதிகப்படுத்த விசேஷ மானஸ லிங்கத்தால் முடியுமா என்பது பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாபுஜி ஜான்சனிடம் கேட்டார். “நீங்க என்னை நினைக்கிறீங்க. அரசியல் மாற்றத்தையும் அந்த சிவலிங்கத்தால் ஏற்படுத்த முடியுமா?”.  இந்த ஆராய்ச்சிகள் ஆரம்பித்த்தில் இருந்து இருவரும் நெருக்கமாகி விட்டிருந்தார்கள். ஜான்சனிடம் முகம் காண்பிக்கவே தயங்கிய அறுவரும் கூட இந்த ஆராய்ச்சிகளின் ஆரம்பத்தில் இருந்தே அந்தத் தயக்கத்தை விட்டொழித்திருந்தார்கள். அந்த அளவு ஜான்சன் மீது அவர்களுக்கும் நம்பிக்கை உருவாகி இருந்தது.

ஜான்சன் சொன்னார். “கண்டிப்பாய் முடியும்னு தான் நினைக்கிறேன்

“அப்படின்னா முயற்சி செய்து பார்க்கலாம் பாபுஜி சொன்னார்.

ஜான்சன் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கி விட்டுச் சொன்னார். “ஆனால் முதல்ல ஈஸ்வரைக் கட்டுப்படுத்தி வைக்கணும். என்ன தான் குருஜி சொன்னாலும் அவர் அவனை கட்டுப்படுத்த முடியும்னு தோணலை

உடனடியாக இஸ்ரேல்காரர் சொன்னார். “பிரச்சினைக்குரிய ஆள்களைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறதை விட ஒரேயடியாய் அப்புறப்படுத்தறதே நல்லது.

பாபுஜிக்கும் அது சரியென்று பட்டது. எவனால் ஆபத்து என்று புரிந்து விட்டதோ அவனை உயிரோடு விட்டு வைப்பதே ஆபத்தை தக்க வைத்துக் கொள்வது போலத் தான். உடனே பாபுஜி ஈஸ்வரை உடனடியாகக் கொன்று விடும்படி செல்போனில் ஒருவரிடம் கட்டளை பிறப்பித்தார்.

தென்னரசு இதை எதிர்பார்த்திருக்கவில்லை. சில மணி நேரங்கள் முன்பு வரை அவன் விதி அவ்வளவு தான் என்று நினைத்து இரக்கப்பட்டு விட்டிருப்பார். இப்போதோ அவர் இதயத்தை இமயம் அழுத்தியது. அவன் விதியோடு அவர் மகள் விதியும் அல்லவா இணைந்திருக்கிறது. சற்று முன் மகளின் பேச்சில் இருந்த அளவுகடந்த ஆனந்தம் நினைவுக்கு வர அவருக்குத் தன் உயிரே போவது போல இருந்தது.  நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

ஜான்சன் தென்னரசைக் கேட்டார். “என்ன ஆச்சு தென்னரசு

“வாயுத் தொந்தரவு தான். வேறொன்னுமில்லை”.  தென்னரசு சமாளித்தார். “ஒரு மாத்திரை சாப்பிட்டால் சரியாயிடும்என்றவர் கஷ்டப்பட்டு முறுவலித்து விட்டுத் தன் அறைக்குப் போனார்.

போனவர் அதிகம் யோசிக்கவில்லை. உடனடியாக அவர் பார்த்தசாரதிக்குப் போன் செய்தார். பார்த்தசாரதியின் ‘ஹலோகேட்டவுடன் அவசரமாக சொன்னார். “ஈஸ்வரைக் கொலை செய்யப் போறாங்க. அவனைக் காப்பாத்துங்க. ப்ளீஸ்

அதற்கு மேல் பேசாமல் இணைப்பைத் துண்டித்து விட்டு அவர் திரும்பிய போது பாபுஜி வாசலில் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

(தொடரும்)