Wednesday, July 16, 2014

அமானுஷ்யன் - 15



அவனுடன் பேசிக் கொண்டே வந்த வருண் ஒரு கட்டத்தில் அப்படியே அவன் மடியில் தலை வைத்துப் படுத்து விட்டான். அதைப் பார்த்த சஹானா "சாரி. அவனை எடுத்து முன் சீட்டில் வைத்துக் கொள்கிறேன்" என்றாள்.

"பரவாயில்லை" என்று சொல்லிப் புன்னகைத்தவன் தூங்கும் வருணையே சினேகத்துடன் பார்த்து விட்டுச் சொன்னான். "உங்கள் மகன் புத்திசாலி. ஒரு நாள் பெரிய ஆளாக வருவான் பாருங்கள்".

சஹானா புன்னகைத்தாள். தன் குழந்தை புகழப்படுவதைக் கேட்பதை விடத் தாயிற்கு இனிமையானது ஏதாவது இருக்க முடியுமா? ஆரம்பத்தில் மிக வேகமாகக் காரை ஓட்டிய சஹானா பிறகு யாரும் வராததைப் பார்த்து சாதாரண வேகத்திற்கு மாறியிருந்தாள். அவள் மனமும் ஒரு தெளிவை அடைந்திருந்தது. அவன் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். டெல்லி இன்னும் 37 கிமீ என்று மைல் கல் தெரிவித்தது.

"என்னை டெல்லிக்கு நுழைவதற்கு முன்னாலேயே ஆள் நடமாட்டமில்லாத ஓரிடத்தில் இறக்கி விடுங்கள்" என்றான் அவன்.

"நீங்கள் முக்காடு போட்டுக் கொண்டிருந்தது யாரும் அடையாளம் தெரிந்து கொள்ளக் கூடாது, உங்களை யாரும் முழுவதுமாகப் பார்த்து நினைவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தானே"

அவள் அதை ஏன் கேட்கிறாள் என்று தெரியாத அவன் ஆமாம் என்று தலையாட்டினான்.

"ஆனால் என் மகனைக் காப்பாற்றினால் எல்லார் கவனமும் உங்கள் பக்கம் திரும்பும், பலர் உங்களைப் பார்ப்பார்கள், ஞாபகம் வைத்துக் கொள்வார்கள் என்று தெரிந்தும் நீங்கள் ஏன் அவனைக் காப்பாற்றினீர்கள்?"

"அந்த நேரம் யோசிக்கிற நேரமில்லை. ஒரு குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை வரும் போது அதைக் காப்பாற்றுவதைத் தவிர வேறொரு வழி இருக்கிற மாதிரி எனக்குத் தோன்றவில்லை"

அவள் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. பின் கேட்டாள், "இது போன்ற உயர்ந்த மனம் உங்களுக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இருக்கக் கூடாது என்று நீங்கள் நினைப்பது நியாயமா?"

"எனக்குப் புரியவில்லை"

"தங்க இடமில்லாமல், நீங்கள் யாரென்று உங்களுக்கே தெரியாமல் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களைக் கொல்ல யாரோ முயற்சி செய்கிறார்கள். அப்படி இருக்கையில் உங்களை நான் மட்டும் அனாதரவாய் எங்கேயோ இறக்கி விட்டு எப்படிப் போக முடியும்?"

"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?"

"எங்களுடன் எங்கள் வீட்டுக்கு நீங்களும் வந்து சில நாளாவது தங்குங்கள். ஏதாவது நல்ல மறைவிடம் கிடைத்த பின் நீங்கள் போங்கள்....."

"மேடம், நீங்கள் உங்கள் கணவரைக் கேட்காமலேயே வேகமாய் முடிவு செய்கிறீர்கள்"

"வருணின் அப்பா போன வருடம் ஒரு விபத்தில் இறந்து விட்டார்"

"ஓ சாரி" என்று உண்மையாகவே வருத்தப்பட்டவன் பின் அமைதியாகச் சொன்னான், "மேடம், உங்கள் நல்ல மனதுக்கு நன்றி. ஆனால் ஆண் துணையில்லாத வீட்டில் நான் வந்து சில நாட்கள் இருப்பது சரியல்ல. நீங்களே யோசித்துப் பாருங்கள்"

"நான் யோசிப்பதெல்லாம் நீங்கள் என் மகனைக் காப்பாற்றிய போது எதையும் யோசிக்கவில்லை என்பதுதான்..."

பக்கத்தில் இருந்த வயதான பெண்மணி சஹானாவின் தாயாரா, மாமியாரா என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லலை. வருண் அவளைப் பாட்டி என்று உரிமையுடன் சிறிது நேரத்திற்கு முன் கூப்பிட்டது மட்டும் தெரியும். அவளாவது சஹானாவின் யோசனையை ஆட்சேபிப்பாள் என்று ஆவலுடன் அவளைப் பார்த்தான். அவள் சம்பந்தமே இல்லாதது போல உணர்ச்சியில்லாமல் இருந்தாளே ஒழிய ஒன்றும் சொல்லவில்லை.

"மேடம், அவர்கள் சொன்னது போல நான் நிஜமாகவே தீவிரவாதியாகக் கூட இருக்கலாம்...."

"தீவிரவாதியாக இருப்பவன் அடுத்தவர் உயிர்களைப் பற்றிக் கவலைப்படாதவன். தன் உயிரைப் பணயம் வைத்து அடுத்தவர் உயிரைக் காப்பாற்ற மாட்டான்"

இவளிடம் பேசி ஜெயிப்பது கஷ்டம் என்று தோன்ற பெருமூச்சு விட்டான்.

அவள் சொன்னாள், "அந்த புத்த விஹாரத்தில் நீங்கள் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கையில் அந்த புத்த பிக்குகள் உங்களைக் காப்பாற்றுவதைத் தவிர வேறெதையும் நினைத்துப் பார்க்கவில்லை. என் மகன் உயிருக்கு ஆபத்து என்று வந்த போது நீங்களும் லாப நஷ்டங்களைக் கணக்குப் போடவில்லை. உலகம் இப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது இது போன்ற நல்லெண்ணங்களினால்தான் என்று நான் திடமாக நம்புகிறேன்..."

"மேடம், நான் முன்பே சொன்னது போல் என்னை ஆபத்து சூழ்ந்து இருக்கிறது. அது எனக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்குக் கூட வந்து விடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்...."

"என்னைப் பார்த்தால் உங்கள் டீச்சராகவோ, உங்கள் முதலாளியாகவோ தெரிகிறதா?"

அவன் குழப்பத்துடன் சொன்னான். "இல்லை"

"அப்படியென்றால் என்னை மேடம் என்று கூப்பிடாதீர்கள். என் பெயர் சஹானா"

அவன் வாய் விட்டுச் சிரித்தான்.
******

விதி அந்த அமானுஷ்யனுக்கு சாதகமாக இருப்பதாகவே சிபிஐ மனிதனுக்குப் பட்டது. இல்லாவிட்டால் அவனைப் பார்த்த தகவல் தர கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகியிருக்குமா? அவன் உயிருடன் இருப்பான் என்று முழு நம்பிக்கை இப்போதும் அவனிடம் இல்லையென்றாலும் அந்த சிறுவனைக் காப்பாற்றிய ஒருவன் அவனைப் போன்ற ஒரு பராக்கிரமசாலியே என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை. ஒருவேளை அவன் அமானுஷ்யனே ஆனால் அந்த செய்தி மோசமானதுதான்.

அவனுடைய இடத்தில் தன்னை இருத்தி நிறைய யோசித்த சிபிஐ மனிதன் தனக்கு மிகவும் பழக்கமுள்ள வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து அப்புறப்படுத்தும் ஒரு உயர் அதிகாரிக்குப் ஃபோன் செய்து சிறிது நேரம் குசலம் விசாரித்து விட்டு "இப்போது வெடிகுண்டுகளின் பின்னால் ஓடும் வேலையெல்லாம் குறைந்திருக்கிறதா? இல்லை இப்போதும் வேலைகள் நிறைய வருகின்றனவா?"

"பெரிதாக ஒன்றும் இல்லை. பின் இந்தத் துறையில் ஃபோன் கால்கள் வருவது சகஜம்தான். சிறிது நேரத்திற்கு முன்னால் கூட டெல்லியின் முக்கியமான இடங்களை வெடிகுண்டு வைத்து அழிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று மொட்டையாக ஃபோனில் யாரோ தெரிவித்தார்கள். தேதியோ மற்ற தகவல்களோ இல்லாமல் வரும் ஃபோன்கால்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இப்போதெல்லாம் சிலர் போரடிக்கும் போது கூட இப்படி ஃபோன் செய்து எங்களைக் கோமாளிகளைப் போல் ஓட விடுகிறார்கள்...."

ஃபோனை வைத்தவன் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான். "அந்தப் ஃபோன் அவன் செய்ததல்ல. அவனாக இருந்தால் இப்படிப் பொத்தாம் பொதுவாக சொல்லியிருக்க மாட்டான்...."

அந்தக் கார்க்காரியைக் கண்டுபிடிப்பதும் சுலபமாக இருக்கவில்லை. மலை மேல் ஏறும் போது பாதை ஒன்றுதான் ஆனாலும் மலை இறங்கி விட்டால் பல பாதைகள் இருக்கின்றன. அவள் கார் எந்தப் பக்கம் போனதோ அவனை அவள் எங்கு இறக்கி விட்டாளோ தெரியவில்லை. மலையின் மீது சுங்கச் சாவடி ஒன்று இருந்தது. அங்கும் விசாரித்துப் பார்த்தாகி விட்டது. டிக்கெட் கிழித்துக் கொடுத்து காசு வாங்குவதோடு சரி வாகனங்களின் எண்ணை எல்லாம் எழுதி வைக்கும் வழக்கம் இல்லையாம். இரண்டு மூன்று குழுக்களை அந்த மலைப்பாதைக்கு அனுப்பிப் பார்த்தாகி விட்டது. அவர்களுக்கும் அந்தக் கார் கிடைக்கவில்லை. நிறைய கால தாமதமாகப் போனதன் விளைவு. ஒரே ஒரு குழு மட்டும் சொன்னது, "அந்த மாதிரியான காரை ஒருத்தி மிக வேகமாக ஓட்டிச் சென்றதை சிலர் பார்த்திருக்கிறார்கள். ஏதோ ரேஸில் போவது போலப் போனாளாம்...ஆனால் அவள் அருகில் யாரும் இருக்கவில்லையாம். பின் சீட்டில் இருந்தால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை....."

ஆனால் அவள் டெல்லிக்காரியாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அவளது உடை, வேகமாகக் காரை ஓட்டிய முறை எல்லாம் பெருநகரத்துப் பெண்மணியாகவே அவளைக் காட்டியது. ஆனால் அவளைக் கண்டு பிடித்தாலும் எங்கே இறக்கி விட்டாய் என்று கேட்கலாமே ஒழிய அவன் வேறு தகவல்களைத் தந்திருக்க வாய்ப்பில்லை. அவன் டெல்லிக்கே அவளுடன் வந்து விட்டால் அது நல்ல அறிகுறியல்ல.... அவன் என்ன செய்வான் என்று ஊகிக்க முடியவில்லை.... அவனுடைய மும்பை பங்களாவின் முன் கண்காணித்துக் கொண்டிருந்த ஆட்கள் "வயதான வேலைக்காரன்தான் கடைக்குப் போய் வருகிறான். வேறு யாரும் அந்த வீட்டுக்கு வரவில்லை" என்றார்கள்.

சிபிஐ மனிதன் ஒரு எண்ணிற்கு ஃபோன் செய்து கேட்டான். "அந்த வீட்டுக்கு ஃபோன் ஏதாவது இந்த இரண்டு மூன்று நாட்களில் வந்ததா?"

"இரண்டு ஃபோன் கால்கள் வந்திருந்தன. ஒன்று உள்ளூர் கால். அந்த எண்ணை விசாரித்து விட்டோம். அது அந்த வேலைக்காரனின் மகள் செய்தது...."

"இன்னொன்று?"

"சீனாவிலிருந்து ஃபோன் வந்திருக்கிறது. அந்த எண்ணையும் விசாரித்து விட்டோம். அது அங்கே உள்ள ஒரு புத்த மடாலயத்திலிருந்து... அந்தக் கால் ஒரு நிமிடம்தான் பேசப்பட்டிருக்கிறது"

அவனைக் கேட்டு ஃபோன் வந்திருக்கலாம். அந்த வேலைக்காரன் சொன்ன பதிலோடு அந்த பேச்சு முடிந்திருக்கிறது. தன் முன் உள்ள தகவல்களை ஆராய்ந்த சிபிஐ மனிதன் பெருமூச்சு விட்டான். அந்த வீட்டையும் ஃபோனையும் கண்காணிப்பதிலும் பெரிய பயன் இல்லை என்று தோன்றியது. கடந்த ஒரு வருட காலத்தில் அவன் அந்த வீட்டில் ஓரிரண்டு நாட்கள் மட்டுமே தங்கியிருக்கிறான். தலைமறைவாக இருப்பது அவனுக்கு ஒன்றும் புதிதல்ல.....

(தொடரும்)

அமானுஷ்யன் - 14



அவனும் வருணும் குறுகிய நேரத்திலேயே நண்பர்களாகி விட்டதை சஹானா கவனித்தாள். வருண் அவனிடம் தன் நண்பர்களைப் பற்றியும், பள்ளிக்கூடத்தைப் பற்றியும் மிக உற்சாகமாக சொல்லிக் கொண்டிருந்தான். ஆரம்பத்தில் ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்த வருண் ஒரு கட்டத்தில் அவனுக்குத் தமிழும் தெரியும் என்று அறிந்த பின் தமிழுக்கு மாறினான். வருணின் பேச்சை மிகப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்ப்பதைக் கவனித்தாள்.

"நீங்கள் அவர்கள் பின் தொடரலாம் என்று எதிர்பார்ப்பது போல் தெரிகிறது. நீங்கள் இங்கே இருப்பது அவர்களுக்கு எப்படித் தெரியும் என்று நினைக்கிறீர்கள்?"

"நான் அந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாகப் போன பஸ்ஸில் இருந்த ஒருவன் என்னை அடையாளம் கண்டு கொண்ட மாதிரி தெரிகிறது. அவன் முகம் போன போக்கைப் பார்த்தால் அவர்கள் கூட்டத்தாளாகத்தான் இருப்பான் என்று தோன்றுகிறது. அவன் போய் சொல்லி யாராவது வரலாம் என்று நினைக்கிறேன். ஒரு வேளை அப்படி வருவது போல் இருந்தால் உங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் காரில் இருந்து இறங்கி விடலாம் என்றுதான் பார்க்கிறேன்...."

அவளுக்கு என்னவோ போல் இருந்தது. தன் காரின் வேகத்தைக் கூட்டினாள். மறுபடி வருண் அவன் நண்பன் ஒருவனின் விரதீரப் பராக்கிரமங்களைச் சொல்ல இடையிடையே ஆர்வத்துடன் "அப்புறம்" என்று அவன் கேட்டுக் கொண்டிருந்தான். மகன் உயிரைக் காப்பாற்றிய ஒருவனைத் தன் உயிருக்குப் பாதுகாப்பில்லாமல் டெல்லி வீதிகளில் உலாவ விட்டு விடுவது சரியா என்று மனசாட்சி உறுத்தியது. அதுவும் வாய் வார்த்தைக்கு அவனைக் கூப்பிட்டு அவன் மறுத்த பின் நிம்மதியடைந்த விதம் அவளுக்கே ஜீரணிக்க முடியாத செயலாகப் பட்டது. வாழ்வில் என்றுமே அவள் நியாயமானவளாகத்தான் வாழ்ந்திருக்கிறாள். ஆனால் இவன் விஷயத்தில் அவள் செய்வது தர்மமல்ல என்று தோன்றியது. மகனை அவன் காப்பாற்றிய போது பெருகி நின்ற நன்றியுணர்வு அந்தக் காலத்து மணல் கடிகாரத்தின் துகள்களாய் வடிந்து குறைந்து கொண்டே போவது போல் தோன்றியது.

ஆனால் வீட்டில் வேறு ஆண் துணையில்லாமல் மகன், மாமியாருடன் வாழும் அவள் அவனுக்கு எப்படி அடைக்கலம் தர முடியும் என்பதும் சஹானாவுக்கு விளங்கவில்லை. அவள் நிலைமை அந்த புத்த பிக்குகளைப் போல் எளிதானதல்ல. தன் மாமியார் மரகதம் என்ன நினைக்கிறாள் என்று அறிந்து கொள்ள சாய்ந்து கண்ணாடி வழியாகப் பார்த்தாள். மரகதம் அவனையே உணர்ச்சியில்லாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் முகபாவனையிலிருந்து அவள் என்ன நினைக்கிறாள் என்பதை எந்நாளும் சஹானாவால் ஊகிக்க முடிந்ததில்லை.

சஹானாவின் மனம் அவன் சொன்னதையும், நடந்து கொண்டதையும் எல்லாம் மீண்டும் எண்ணிப் பார்த்தது. அவள் மகனை அவன் காப்பாற்றாமல் இருந்திருந்தால் அவன் யார் கவனத்தையும் ஈர்க்காமல் அந்த லாரி ஏறித் தன் வழியே போயிருப்பான்.... திடீரென்று அவன் பின்னால் திரும்பிப் பார்த்ததன் பொருள் விளங்கியது. காப்பாற்றியதால் பலரும் அவனைப் பார்த்து இருப்பார்கள். அவனைத் தேடி வருபவர்கள் விசாரித்தால் அங்கிருக்கும் மனிதர்கள் அவன் இப்படி ஒரு காரில் போனான் என்று சொல்லக் கூடும்... அவள் காரின் வேகம் மேலும் கூடியது
*******

"ஹலோ" CBI மனிதன் தூக்கக் கலக்கத்துடன் செல்லை எடுத்துப் பேசினான்.

"அவன் உயிரோடிருக்கிறான்"

CBI மனிதனின் தூக்கம் முழுவதுமாகக் கலைந்தது. கேட்ட தகவல் கனவில்லையே என்று உறுதிப்படுத்திக் கொள்ள அவனுக்கு சில வினாடிகள் தேவைப்பட்டன. ஆனாலும் அதிர்ச்சி மாறாமல் கேட்டான். "என்ன?"

"அவன் உயிரோடிருக்கிறான். அவனை நம் ஆள் ஒருவன் பார்த்திருக்கிறான்."

"விவரமாய் சொல்லுங்கள்"

மறுபக்கம் எல்லா நிகழ்ச்சிகளையும் விரிவாகச் சொன்னது.

"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அவன் அங்கே முக்காடு போட்டுக் கொண்டு டீ குடித்துக் கொண்டு நின்றான் என்றால் நம்ப முடியவில்லை"

"எனக்கும் நம்பப் பிடிக்கவில்லைதான். ஆனால் அது உண்மை மாதிரிதான் தெரிகிறது"

"சார் முதலில் நன்றாக யோசியுங்கள். அவன் பார்த்த நேரம் அதிகாலை. நல்ல வெளிச்சமில்லாத நேரம். முக்காடு போட்ட மனிதனை அடையாளம் காண்பதும் அவ்வளவு சுலபமில்லை. அவன் டீக்குடித்து நின்றதாய் சொல்லும் இடம் நாம் அவன் இருக்கலாம் என்று தேடிய இடத்திலிருந்து மிக தூரத்தில் இருக்கிறது...."

"உயிரோடு இருக்கிற மனிதனுக்கு வாகனமும் கிடைத்தால் அவன் அந்த தூரத்திற்குப் போவது ஒன்றும் பெரிய விஷயமில்லை"

"அது உண்மைதான்...." என்று ஒப்புக் கொண்ட CBI மனிதன் கேட்டான். "அது சரி அந்த இடத்திற்கு ஆட்களை அனுப்பினீர்களா?"

"உம்... போனார்கள். இவர்கள் போன போது அந்த இடத்தில் டீக்கடைக் காரர்கள் இரண்டு பேர் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. அந்த இரண்டு பேரும் இவர்கள் காண்பித்த போட்டோவைப் பார்த்து கிட்டத்தட்ட அதே மாதிரி ஆள் அன்று காலை அங்கு வந்து டீக் குடித்ததாகச் சொன்னார்கள்..."

"கிட்டத்தட்ட என்பதற்கும் அதே ஆள் என்பதற்கும் இடையே நிறையவே வித்தியாசம் இருக்கிறது"

"ஆனால் அவர்கள் பார்த்த ஆள் செய்ததாகச் சொன்ன விஷயம் மட்டும் அந்த 'கிட்டத்தட்ட' என்ற வார்த்தையை விலக்கி விட்டது....."

ஒரு சிறுவன் லாரியில் அடிபட்டு சாகாமல் காப்பாற்றப்பட்ட கதையை மறுபக்கம் அப்படியே ஒப்பித்தது. "அவர்கள் அவனுடைய தீவிர ரசிகர்களாய் மாறி இருந்தார்கள்... அவர்கள் சொன்ன விதத்தைப் பார்த்தால் அவனைத் தவிர வேறு ஒருவனால் அப்படி அந்தப் பையனைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அந்த விஷயம் தெரிகிற வரை எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் அதைக் கேட்ட பிறகு போய் விட்டது."

CBI மனிதனின் முகத்தில் கவலையின் ரேகைகள் படர்ந்தன.

மறுபக்கம் தொடர்ந்து சொன்னது, "அவன் அந்தப் பையன் வந்த காரிலேயே போனான் என்று சொல்கிறார்கள். அந்தக் காரில் பெண்ணும் பையனும்தான் இருந்தார்கள் என்று டீக்கடைக்காரன் ஒருவன் சொல்கிறான். இன்னொருத்தன் இன்னொரு ஆளும் அந்தக் காரில் உட்கார்ந்திருந்த மாதிரி இருந்தது என்று சொல்கிறான். நம் ஆட்கள் அந்தக் காரின் அடையாளங்களை வாங்கிக் கொண்டு அந்த வழியாகப் போயிருக்கிறார்கள்...."

CBI குழப்பத்தில் ஆழ்ந்தான். "சார் அப்படி அங்கு வந்து டீ சாப்பிடும் அளவுக்கும், அந்தப் பையனை அனாயாசமாய் காப்பாற்றும் அளவுக்கும் அவன் ஆரோக்கியமாய் இருந்தால் அவன் செய்திருக்கக்கூடிய முதல் வேலையே போலீசுக்கோ, பத்திரிகைகளுக்கோ தனக்குத் தெரிந்ததை ஃபோன் செய்து சொல்லியிருப்பதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது"

"அவன் சொன்னால் யார் நம்புவார்கள்?"

"சார், உங்கள் எதிரிகள் கண்டிப்பாக நம்புவார்கள். உண்மையா பொய்யா என்பதைப் பற்றி எதிரிகள் எப்போதும் கவலைப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை எதிரியைப் பற்றிக் கேள்விப்படும் மோசமான விஷயங்கள் எல்லாம் உண்மையே."

"அரசியலில் இத்தனை வருஷங்கள் இருந்தாலும் எனக்குப் பெரிய எதிரிகள் இல்லையே"

அது உண்மை. வயதில் எவ்வளவு சிறியவரானாலும் மிகுந்த மரியாதையுடன் பன்மையிலேயே பேசும் அவர், அதிகமாக எப்போதும் நிதானமிழக்காத அவர் அதிக எதிரிகளை சம்பாதித்துக் கொண்டதில்லை.

"ஆனாலும் நீங்களிருக்கும் பதவியில் தான் வந்து உட்கார எதிர்பார்த்திருப்பவனுக்கு நீங்கள் எதிரிதானே"

மறுபக்கம் மௌனம் சாதித்தது. அரசியலில் அவன் சொன்னது மிகப்பெரிய சத்தியம்தானே. "ஆனாலும் அவன் கையில் ஆதாரம் இருந்தால்தானே அவன் சொல்வது எடுபடும். ஆதாரம் எதுவும் இல்லாததால் அவன் சும்மா இருந்திருக்கலாம்..."

CBI மனிதனுக்கு எங்கோ இடித்தது. அந்த ·பைலில் படித்த மனிதன் நடந்து கொள்ளும் விதம் இப்படி இருக்காது என்று உள்ளுணர்வு சொன்னது. இந்தக் காலத்தில் பள்ளிக் கூடத்திற்கு வரப் பிடிக்காத மாணவன் 'பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது' என்று மர்மமாகப் ஃபோன் செய்து சொன்னால் கூட பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விட்டு பட்டாளமாகப் போய் அங்கு வெடிகுண்டைத் தேடும் காலக் கட்டத்தில் இவர் சொல்வது போல் இருக்காது என்றே தோன்றியது. சிறிது நேர சிந்தனைக்குப் பின் சொன்னான். "இன்னொரு காரணம் கூட இருக்கலாம்"

"என்னது?"

"தனிப்பட்ட முறையில் வந்து பழி வாங்கும் நோக்கமாகக் கூட இருக்கலாம்"

மறுபக்கம் பீதியுடன் வேகமாகச் சொன்னது. "அவனை உடனடியாக தீர்த்துக் கட்டுவது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. அவன் உயிரோடு இருந்தால் எங்கே போவான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"

"கண்டிப்பாய் அவன் வீட்டுக்கோ, அவனுக்கு நெருங்கியவர்கள் வீட்டுக்கோ போக மாட்டான். அங்கு போனால் நாம் அங்கே காத்துக் கொண்டிருப்போம் என்று அவனுக்குத் தெரியும். எதற்கும் அவன் வீட்டு ஃபோனை டேப் செய்வது நல்லது என்று தோன்றுகிறது"

"அதை உடனடியாகச் செய்கிறேன். நீங்கள் அவன் வீட்டைக் கண்காணிக்க இன்னும் ஆட்களை அதிகப்படுத்துங்கள்...."

"ஓகே. அந்த மாதிரியான காரைப் பார்த்தால் நிறுத்தி அவன் இருந்தால் அவனைப் பிடிக்கவும், அவன் இல்லா விட்டால் அவனை எங்கே அந்தப் பெண் இறக்கி விட்டிருக்கிறாள் என்று கேட்டுக் கண்டு பிடிக்கவும் போலீஸ் மூலம் ஏற்பாடு செய்கிறேன்... உங்கள் ஆட்களை மட்டுமே இதில் நம்புவது போதாது என்று நினைக்கிறேன். நமக்கு விஷயம் தெரிந்ததே தாமதமானதால் அந்தக் கார் அவர்களுக்குக் கிடைப்பது கஷ்டம் என்று தோன்றுகிறது"

மறுபக்கம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. "நல்லது. அப்படியே செய்யுங்கள்... அந்த ஆச்சார்யா கேஸை முடித்த மாதிரி இவனுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்தால் நிம்மதியாயிருக்கும்"

"ஆச்சார்யாவின் கொலையாளியை ஆனந்தும் ஜெயினும் முழுவதும் நம்பின மாதிரி தெரியவில்லை.... தனிப்பட்ட முறையில் அவர்கள் துப்புத் துலக்கப் போகலாம் போல் தெரிகிறது"

மறுபக்கம் வாய் விட்டுச் சிரித்தது. "போகட்டும். அவர்கள் எதையும் கண்டுபிடிக்கப் போவதில்லை. கொலையாளி என்று ஒருவனைப் பிடித்து விட்டதால் இதில் போலீஸ் உதவி இனி கிடைக்கப் போவதில்லை. டிபார்ட்மெண்ட் மூலமாகவும் அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது....."

மறுபக்கம் ஃபோன் வைக்கப்பட்டது. அவர் அளவுக்கு சுலபமாக CBI மனிதனால் ஆனந்தையும் ஜெயினையும் ஒதுக்கி விட முடியவில்லை. சில வினாடிகள் யோசித்து விட்டு அந்தக் காரைக் கண்டு பிடிக்கும் ஏற்பாடுகளை ஆரம்பித்தான்.

(தொடரும்)

அமானுஷ்யன் - 13



சஹானா நிதானமாய் முதலுதவிப் பெட்டியைத் திறந்து டெட்டால், பஞ்சு எல்லாம் எடுக்க அவன் உள்ளுக்குள் பொறுமையிழந்து போனாலும் வெளிப்பார்வைக்கு அமைதியாக பதட்டமில்லாமல் பார்த்திருந்தான். அவனுக்குள் ஒரு குரல் கேட்டது.

"அவசரப்படாதே. அவசரப்படும் போது காலத்தை இழக்கிறாய்....". யாரோ எப்போதோ சொன்னதாய்த் தோன்றிய அந்த வார்த்தைகள் அவனுடைய கடந்த காலத்தின் முதல் நினைவாய்த் தோன்றியது. யார் இதைச் சொன்னார்கள்? எப்போது சொன்னார்கள்?....அவனுக்கு நினைவில்லை.

அவள் தந்த முதலுதவிப் பொருள்களால் வெளிப்பார்வைக்குத் தெரிந்த சிராய்ப்புக் காயங்களை சுத்தம் செய்து மருந்து தடவிக் கொண்டு அவளுக்குப் புன்னகையுடன் நன்றி தெரிவித்தான். அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் ஒருவித நிதானமான கச்சிதத்தை சஹானா கவனித்தாள். அவன் புன்னகை அவனை மிக அழகாகப் பிரகாசிக்க வைத்ததாக அவளுக்குத் தோன்றியது.

நல்ல வேளையாக அவள் காரை மீண்டும் கிளப்பும் வரை பின்னால் யாரும் தொடர்ந்து வரவில்லை. ஆனால் அவன் அருகில் அமர்ந்திருந்த அந்த வயதான பெண்மணி அவனையே உன்னிப்பாகப் பார்த்த விதம் அவனுக்கு என்னவோ மாதிரியாக இருந்தது. அவன் அவளைப் பார்த்தும் புன்னகைத்தான். ஆனால் அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

"அங்கிள், உங்கள் பெயர் என்ன?" வருண் கேட்டான்.

"அங்கிள்" என்று அவன் புன்னகைக்க வருண் கலகலவென சிரித்தான். அந்த சிறுவன் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டதால் சிறிது நேரத்திற்குத் தப்பித்தோம் என்று அவன் நினைத்தான்.

சஹானா கேட்டாள். "உங்களுக்கு எங்கே போக வேண்டும்?"

"டெல்லி.." அவனுக்கு அவள் டெல்லி போகிறவள் என்பதால் அதே பெயரைச் சொல்லத் தோன்றியது.

"டெல்லியில் எங்கே?" என்று கேட்க வாய் திறந்த சஹானா அதைக் கேட்காமல் விட்டாள். அவளுக்கு அவன் ஒரு புதிராகத் தோன்றினான். அவனிடம் சூட்கேஸோ, பையோ இல்லாதது அவளுக்கு விசித்திரமாகத் தோன்றியது. ஏதோ அதிகாலை நடை நடக்கக் கிளம்பியவன் போல கையில் ஏதும் இல்லாமல் இந்த மலைச்சாரலில் அவன் வந்த விதம் இயற்கையாக இல்லை. மகனைக் காப்பாற்றியவனிடம் அதைத் துருவித் துருவிக் கேட்பது நாகரிகமில்லை என்று அவளுக்குத் தோன்றியது.

ஆனால் வருண் அவனை விடுவதாய் இல்லை.

"அங்கிள், சொல்லுங்கள்... உங்கள் பெயர் என்ன?"

அப்போது சஹானாவும் கண்ணாடி வழியாக பின்னால் இருந்த அவனைப் பார்க்க மூவரும் அவன் பதிலை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது அவர்கள் பார்வையிலேயே அவனுக்குப் புரிந்தது. ஒரு கணம் வாயிற்கு வந்த பெயரைச் சொல்லித் தொலைக்கலாமா என்று தோன்றியது. ஆனால் அவர்கள் நல்ல மனிதர்களாக அவனுக்குத் தோன்றினார்கள். அவர்களிடம் பொய் சொல்ல அவன் துணியவில்லை. அவன் சொல்வதைக் கேட்டு விட்டு அவர்கள் இதே சினேகத்தில் அவனுடன் பேசுவார்களா என்று தெரியவில்லை. ஆனாலும் அவன் உண்மையைச் சொல்லத் தீர்மானித்தான்.

"உண்மையைச் சொன்னால் எனக்கு என் பெயரே தெரியாது....."

அவர்கள் மூவரும் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

ஒரு புத்த விஹார வாசலில் மரணத்துடன் போராடிக் கொண்டு அவன் விழுந்திருந்ததைக் கண்ட புத்த பிக்குகள் அவனைக் காப்பாற்றிய அந்த நள்ளிரவிலிருந்து ஆரம்பித்தான். அவனுக்குத் தெரிந்த அவன் வாழ்க்கையின் ஆரம்பம் அதுவே. அவன் அவர்களிடம் எதையும் மறைக்கவில்லை. அவனைத் தேடி வந்தவர்கள் அவனைத் தீவிரவாதிகள் என்று சொன்னதைக் கூட அப்படியே அவர்களிடம் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல அவர்கள் ஏதோ மர்மக் கதை கேட்பதைப் போல் கேட்டார்கள். வருணும் அந்த பெண்மணியும் அவன் மேல் வைத்த கண்ணை எடுக்காமல் கேட்டார்கள் என்றால் சஹானா சாலையையும், கண்ணாடி வழியாக அவனையும் மாறி மாறி பார்த்தபடியே காரை ஓட்டினாள்.

அந்த புத்த பிக்குகளின் அன்பைச் சொன்ன இடங்களில், முக்கியமாக அவன் கிளம்பும் போது அவர்கள் செய்த பிரார்த்தனை, கொடுத்த பணம், சால்வை பற்றிச் சொல்லும் போது அவனுக்கு நா தழுதழுத்தது. கடைசியில் அங்கிருந்து கிளம்பி லாரி ஒன்றில் பதுங்கி வந்ததையும், தேனீர் குடிக்க இறங்கியதையும் சொல்லி நிறுத்திய போது அங்கு ஒரு கனத்த மௌனம் நிலவியது. அவர்கள் திகைப்பின் எல்லைக்கே போய் விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சிறிது நேரம் கழித்து சஹானா கேட்டாள், "இனி நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?"

"எனக்கு நான் யார், என்னை ஏன் சிலர் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். அதைத் தெரிந்து கொள்கிற வரை உயிரோடு இருக்க வேண்டும்"

"சரி. டெல்லியில் எங்கே தங்குவீர்கள்?"

"இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் நான் ஒருவன் தங்குவதற்கு இடமில்லையா என்ன? என்னை டெல்லியில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு பொது இடத்தில் இறக்கி விடுங்கள். நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன்"

அவன் வாய் வார்த்தைக்காகச் சொல்லவில்லை என்பதும் எங்கே எப்படித் தங்குவோம் என்ற கவலை சிறிதும் அவனிடம் இல்லை என்பதும் அவன் முகத்தைப் பார்க்கும் போதே அவளுக்குப் புரிந்தது. அவன் சொல்வதைப் போன்றதொரு சூழ்நிலையில் அவனைப் போல் அமைதியாக வேறு ஒருவன் இருக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஆனால் அவன் நிலைமையைத் தெரிந்து கொண்ட பிறகு அவனை அப்படியே விட்டுப் போவது தர்மமல்ல என்று சஹானா நினைத்தாள். அவன் அவள் மகனின் உயிரைக் காப்பாற்றியவன்.. அவனுக்கு அவள் நிறையவே கடன்பட்டிருக்கிறாள்....

"நீங்கள் சில நாட்கள் எங்கள் வீட்டில் தங்குங்களேன்"

அவன் ஒரு கணம் திகைத்தான். பின் நெகிழ்ச்சியுடன் சொன்னான், "நீங்கள் சொன்னதற்கு மிகவும் நன்றி. ஆனால் என்னை டெல்லியில் இறக்கி விடுங்கள். அதுவே பெரிய உதவி"

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"என்னைக் கொல்ல ஒரு கூட்டமே அலைகிறது போலத் தோன்றுகிறது. ஒருவேளை நான் அவர்கள் சொல்வது போல தீவிரவாதியாகக் கூட இருக்கலாம். அதனால் எனக்கு அடைக்கலம் கொடுக்கிறவர்களுக்குக் கூட ஆபத்து வரலாம். ஒரு குடும்பத்திற்கு என்னால் ஆபத்து வருவதை என்னால் சகிக்க முடியாது. உங்கள் நல்ல மனதிற்கு நன்றி...." அவன் உறுதியாகச் சொன்னான்.

அவன் மறுத்தது அவள் மனதில் இருந்த தர்மசங்கடத்தைப் போக்கியது. ஒருவேளை அவன் சம்மதித்து வந்திருந்தால் அது பல பிரச்சினைகளை உண்டாக்கி இருக்கும் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை....

*********

CBI அலுவலகத்தில் டிவி உள்ள ஹாலில் முன்பே ராஜாராம் ரெட்டி, மகேந்திரன் உட்பட பலரும் மிக ஆர்வமாக டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு உயர் அதிகாரி நிருபர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார், ".... உண்மையில் ஆச்சார்யாவைக் கொலை செய்தவனை இவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை ஆரம்பத்தில் எங்களுக்கு இருக்கவில்லை. கைரேகையோ, வேறு தடயங்களோ கொலையாளி விட்டுப் போகவில்லை என்பதுதான் அதற்கு முக்கிய காரணம். அவருக்குத் தனிப்பட்ட பகைவர்கள் கிடையாது என்பது இன்னொரு காரணம். அதனால் கொலையாளி அவருடைய பழைய வழக்குகள் சம்பந்தப்பட்டவராய் இருக்கலாம் என்ற கோணத்தில் பார்க்க ஆரம்பித்தோம். எத்தனையோ வழக்குகளில் எத்தனையோ குற்றவாளிகளுக்கு அவர் தண்டனை வாங்கித் தந்தவர் என்பதால் அந்தக் குற்றவாளிகள், அல்லது அவர்களுக்கு வேண்டியவர்கள் பழி வாங்கும் நோக்கில் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டோம். சென்ற வருடம் போதை மருந்து கடத்தல் வழக்கில் அவர் பிடித்துக் கொடுத்தவர்கள் நிறைய நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருந்ததால் அவர்கள் அவரைப் பழி வாங்க துடித்துக் கொண்டிருந்தார்கள் என்ற தகவலும் எங்களுக்குக் கிடைத்தது. எனவே எங்கள் விசாரணை அந்தக் கும்பலைக் குறி வைத்தது. கடைசியில் நான்கு பேர்களை சந்தேகத்தின் பேரில் கண்காணிக்க ஆரம்பித்தோம்."

"அவர்களில் ஒருவன் மீது எங்கள் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. அவன் அந்த போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனின் தம்பி. நேற்று அவன் வீட்டை சோதனை போட்ட போது அவன் ஆச்சார்யாவைக் கொலை செய்ய உபயோகப்படுத்திய துப்பாக்கியைக் கைப்பற்றினோம். பிறகு அவனைக் கைது செய்தோம். ஆரம்பத்தில் அவன் மறுத்தாலும் கடைசியில் ஒப்புக் கொண்டான்...."

அவர் மனப்பாடம் செய்து சொன்னது போல் சொல்லி முடித்த பிறகு கொலையாளியின் புகைப்படத்தைக் காண்பித்தார்கள். அவன் சுமார் 35 வயதானவனாகத் தெரிந்தான்.....

ஆனந்த் ஜெயினைப் பார்க்க ஜெயினும் ஆனந்தைப் பார்த்தார். இருவரும் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனந்த் அங்கு இருந்தவர்களைப் பார்த்தான். மகேந்திரன் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததை ஆனந்த் அப்போதுதான் கவனித்தான். ஆனந்த் என்ன நினைக்கிறான் என்றறியும் ஆர்வத்திலேயே அவன் கவனித்ததாகத் தோன்றியது.

அங்கு இருந்தவர்கள் சிலர் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். மகேந்திரன் அந்தக் கைதட்டலில் கலந்து கொள்ளவில்லை. கைதட்டலில் கலந்து கொள்ளாத இன்னொரு நபர் ராஜாராம் ரெட்டி. அவர் முகத்தில் களைப்பு தெரிந்தது.

கடைசியில் ஜெயினும் கைதட்ட ஆரம்பித்தார். ஆனந்தும் கைதட்ட ஆரம்பித்தான். மகேந்திரனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். ராஜாராம் ரெட்டி அப்போதும் அந்தக் கைதட்டல் மகிழ்ச்சியில் இணைந்து கொள்ளவில்லை. மகேந்திரனின் பார்வை ஆனந்த் மேலிருந்து விலகி ரெட்டி மீது பதிந்தது. அவரையே கூர்மையாக ஊடுருவிப் பார்த்த மகேந்திரன் முகத்தில் மிக மெல்லிய புன்னகை வந்து போனதாக ஆனந்திற்குத் தோன்றியது.....

(தொடரும்)

அமானுஷ்யன் - 12.



குறுந்தாடி அவருக்காகப் பொறுமையிழந்து காத்துக் கொண்டிருந்தான். அவன் சீக்கியரைப் போலத் தலைப்பாகை இட்டு மாறுவேடத்தில் இருந்தான். அவரை எப்போதும் அவன் அலுவலகத்தில் வந்து சந்தித்ததில்லை. ஆனால் இப்போதைய செய்தி மிக முக்கியமென்பதால் இரவு வரை காத்திருக்க அவனுக்கு நேரமில்லை. ஒரு பொதுத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒரே ஒரு வார்த்தைதான் அவரிடம் சொல்லியிருந்தான். "அவசரம்"

அவன் குரலைக் கேட்ட அவர் அலுவலகத்துக்கு பதினோரு மணிக்கு வரச் சொன்னார்.

அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்றரை. அரசியல்வாதிகளுக்கும் நேரம் தவறாமை என்ற நல்ல பழக்கத்திற்கும் ஏனோ சம்பந்தமே இருப்பதில்லை. கிட்டத்தட்ட பன்னிரண்டு பேர் கைகளில் மனுக்களுடன் காத்திருந்தார்கள். அடியாட்கள், அன்னக்கைகள் என்று நாலைந்து பேரும் அங்கிருந்தனர்.

அவர் வந்த போது மணி பதினொன்று ஐம்பத்தைந்து. செயலர், இரண்டு அரசு அதிகாரிகளுடன் உள்ளே நுழைந்தவர் அவனைக் கண்டது போலவே காட்டிக் கொள்ளவில்லை. மற்றவர்கள் சல்யூட் அடிக்க அவர் கைகள் கூப்பி அவர்களுக்கு பணிவாக வணக்கம் தெரிவித்து விட்டு தனதறைக்குள் நுழைந்தார். ஆனால் முதலில் கூப்பிட்டனுப்பியது அவனைத்தான்.

அவன் உள்ளே நுழைந்த போது தன் செயலருக்கு ஏதோ சில ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருந்த அவர் அவனை உட்கார சைகை காட்டி விட்டு செயலரிடம் போகும் போது கதவை சாத்திக் கொண்டு போகச் சொன்னார்.

கதவை சாத்திக் கொண்டு செயலர் போன பிறகு கேட்டார், "அப்படி என்ன தலை போகிற அவசரம்?"

"அவன் உயிரோடு இருக்கிறான்"

அவர் முகத்தில் இருந்து இரத்தம் வடிந்தது. "என்னது?"

"அவன் உயிரோடு இருக்கிறான்" என்று மீண்டும் சொன்ன அவன் தொடர்ந்தான். "என் ஆள் ஒருவன் அவனை நேரில் பார்த்திருக்கிறான்."

அவருக்கு அதை நம்ப முடியவில்லை. அவன் அன்று காலை தனக்கு வந்த ஃபோன்காலை விவரித்தான். பேச்சில்லாமல் திகைத்துப் போய் அமர்ந்திருந்த அவர் பேச முடிந்த போது வார்த்தைகள் பலவீனமாய் வந்தன. "அவன் எப்படி பிழைத்திருக்க முடியும்?"

"தெரியவில்லை."

"அது சரி, பார்த்த இடத்திலேயே அவனை சுட்டுத் தள்ளாமல் இருந்தது எதனாலாம்...?" அவர் குரல் பலம் பெற ஆரம்பித்தது. கோபத்தில் பொரிந்து தள்ளினார். "ஃபோனில் தகவல் தெரிவிக்க டவர் கிடைக்கவில்லை, சரி. பஸ்ஸை அங்கேயே நிறுத்தி இறங்கி அவனை சுட்டுத் தள்ளியிருக்கலாமே அந்த ஆள்? நீங்கள் கேட்கவில்லையா? அவனைப் பார்த்தவுடனே பயந்து போய் விட்டானா? இந்த மாதிரி பேடிகளை எல்லாம் ஏன் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை"

"சார், அவன் பேடி அல்ல. பல பேரைக் கொன்றவன் அவன். போலீசில் ஒரு தடவை மாட்டி சித்திரவதை அனுபவித்த போது கூட வாய் திறந்து யாரையும் காட்டிக் கொடுக்காதவன். அவன் அந்த அமானுஷ்யன் விஷயத்தில்தான் பயப்படுகிறான். அந்த பயத்திற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அந்த மலையுச்சியில் ஆறு பேர் துப்பாக்கியால் சுட்டு கிட்டத்தட்ட 15 குண்டுகளில் ஒரே ஒரு குண்டுதான் அவன் மேல் பாய்ந்திருக்கிறது. இத்தனைக்கும் அவனுக்கு அந்த மலையுச்சியில் நகர முடிந்த இடம் குறைவு. அப்படிப்பட்டவனைத் தனியாக தாக்கப் போவது புத்திசாலித்தனம் இல்லை என்று கூட சொல்லலாம்.... "

அவர் அங்கலாய்த்தார். "இப்படிப்பட்டவன் நம் பக்கம் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!"

அதை அவன் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. அவன் கவலை வேறாக இருந்தது. "அவன் உயிரோடு இருந்தால் நமக்கும் நம் திட்டத்திற்கும் ஆபத்து. நான் எங்கள் ஆட்கள் ஏழெட்டு பேரை உடனடியாக அவனைப் பார்த்த இடத்திற்கு போகச் சொல்லியிருக்கிறேன்... அவன் அங்கே இருந்தால் அவனை உயிரோடு அவர்கள் விட மாட்டார்கள்"

"நான் இப்போதுதான் அந்த ஆச்சார்யா கொலைக் கேஸிற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு வந்தேன். அதற்குள் இந்தப் பிரச்சினை வந்து விட்டது.... இத்தனை பேர் அவனுக்காக வலை வீசி தேடிக் கொண்டிருக்கும் போது அவன் ஏதோ ஒரு டீக்கடையில் சாவகாசமாய் டீ குடித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அவன் மனிதனே இல்லை. அவன் உங்கள் ஆட்கள் போகிற வரை அங்கேயே இருப்பானா?" அவர் குரலில் அவன் இன்னமும் அங்கேயே இருப்பான் என்ற நம்பிக்கை இருக்கவில்லை.

*************

அந்தப் பெண் தன்னுடைய விசிட்டிங் கார்டை அவனுக்குத் தந்தாள். "எப்பவாவது டெல்லி பக்கம் வந்தால் கண்டிப்பாக என்னை வந்து பாருங்கள்."

அவன் அந்த விசிட்டிங் கார்டைப் பார்த்தான். சஹானா என்பது அவள் பெயர் என்றும் அவள் பிரபல டிவி ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கிறாள் என்பதும் தெரிந்தது. புன்னகையுடன் தலையசைத்தான். அந்த பஸ்ஸ¤ம், வேனும், லாரியும் கிளம்பிச் செல்ல ஆரம்பித்தன. அப்போதுதான் அவள் அங்கு வேறு எதுவும் வண்டிகள் இல்லாததைக் கவனித்தாள். "நீங்கள் அந்த பஸ்ஸில் வந்திருப்பவர் என்று நினைத்தேன். நீங்கள் இங்கேயே இருப்பவர்தானா?"

"இல்லை....." அதற்கு மேல் அவன் விவரிக்க முனையவில்லை.

அவள் குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். அவன் ஒன்றும் சொல்லாததைப் பார்த்து தானாகச் சொன்னாள். "நீங்கள் டெல்லி பக்கம் போகிறவராக இருந்தால் காரில் ஏறிக் கொள்ளுங்கள். நான் உங்களை டிராப் செய்கிறேன்..."

அங்கு இனியும் தங்குவது ஆபத்து என்பதை நன்குணர்ந்த அவன் "உங்களுக்கு ஒன்றும் சிரமமில்லையே" என்றான்.

"இதில் என்ன சிரமம் இருக்கிறது...உங்கள் லக்கேஜ் எங்கேயிருக்கிறது?"

"லக்கேஜ் எதுவும் இல்லை"

"அப்படியானால் ஏறிக் கொள்ளுங்கள்" என்று அவள் காரின் பின் பக்கக் கதவைத் திறக்க அவன் தயக்கத்துடன் ஏறிக் கொண்டான். கார் கிளம்பியது.

அவன் அருகில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி உணர்ச்சியே இல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிறுவனும் முன் சீட்டில் மண்டியிட்டபடி பின்னால் திரும்பி அவனையே பார்த்தான். அவன் பார்வையில் சினேகம் இருந்தது. அவன் தாய் சொன்னாள். "வருண், சரியாய் சீட்டில் உட்கார்"

"நான் பின்னால் அங்கிள் உடன் உட்காரப் போகிறேன்" என்றான் அந்த சிறுவன்.

"பாட்டியும் அங்கிளும் சௌகரியமாய் உட்காரட்டும்..."

"பரவாயில்லை. வருவதானால் வரட்டும்" என்று அவன் சொல்ல வருண் தாயைப் பார்த்தான். அவள் தலையசைக்க வருண் கைகளை நீட்ட அவன் சிறுவனைத் தூக்கி தன்னருகில் அமர வைத்துக் கொண்டான். வருண் அவனை ஓட்டினாற்போல் உட்கார்ந்து அவனைப் பார்த்து புன்னகைக்க அவனும் புன்னகைத்தான். அவனுக்கு அந்த சிறுவனை மிகவும் பிடித்து விட்டது.

அவன் பின்னால் திரும்பிப் பார்த்தான். எந்த வாகனமும் அவர்களைப் பின் தொடர்வதாகத் தெரியவில்லை.

வருண் அவன் கைகளில் இருந்த சிராய்ப்புகளைப் பார்த்து சொன்னான். "அங்கிள் உங்கள் கையில் ரத்தம்.."

அப்போதுதான் சஹானா பின்னால் திரும்பி அவனுடைய சிராய்ப்புக் காயங்களைக் கவனித்தாள். மகன் காப்பாற்றப்பட்டவுடன் அவனுக்கு ஏதாவது காயம் பட்டிருக்கிறதா என்று அவன் தலையில் இருந்து கால் வரை ஆராய்ந்து பார்த்தவளுக்கு அவனைக் காப்பாற்றிய மனிதனுக்கு ஏதாவது ஆகியிருக்கலாம் என்ற எண்ணம் கூடத் தோன்றாதது ஒரு மாதிரியாக இருந்தது. "சாரி, நான் கவனிக்கவில்லை. இங்கேயே முதலுதவிப் பெட்டி இருக்கிறது...." என்றவள் காரை ஓரமாக நிறுத்தினாள்.

அவனுக்கு அந்த இடத்திலிருந்து எவ்வளவு வேகமாகப் போக முடியுமோ அவ்வளவு வேகமாகப் போய் விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. "இதெல்லாம் பெரிய காயமில்லை. நீங்கள் காரை நிறுத்த வேண்டாம்" என்று சொல்லிப் பார்த்தான். அவள் கேட்பதாக இல்லை. அவள் நிதானமாக முதலுதவிப் பெட்டியின் சாவியைத் தேட ஆரம்பித்தாள்.

அவன் என்னேரமும் எதிரிகளை எதிர்பார்த்திருப்பதை அவளிடம் சொல்ல முடியாமல் தவித்தான். அவன் பார்வை பின் பக்கமாகவே இருந்தது......

********
மஹாவீர் ஜெயினும் ஆனந்தும் பேசிக் கொண்டிருந்த போது ஜெயினின் ஃபோன் அடித்தது. அழைத்தவர் சிட்டி போலீஸ் கமிஷனர். "சார், உங்கள் அடிஷனல் டைரக்டர் ஆச்சார்யாவைக் கொன்றவனைக் கைது செய்து விட்டோம்...."

அதிர்ந்து போன ஜெயின் கேட்டார். "யார் கொலையாளி? நீங்கள் அவனை எப்படிப் பிடித்தீர்கள்?"

"அந்தக் கொலையாளியைக் கைது செய்த விஷயம் பிரஸ்ஸ¤க்கும், டிவிக்கும் யாரோ தெரியப்படுத்தி விட்டதால் இதே கேள்வியை போலீஸ் அதிகாரிகளிடம் கேட்க நிருபர்கள் கூட்டம் அங்கே மொய்த்துக் கொண்டிருக்கிறது....நீங்கள் டிவியை ஆன் செய்தால் முழு விவரமும் தெரியும். ·ப்ளாஷ் நியூசாக காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்....."

நன்றி தெரிவித்து விட்டு ஃபோனை வைத்த ஜெயின் ஆனந்தை அழைத்துக் கொண்டு அலுவலகத்தில் டிவி வைத்திருக்கும் ஹாலுக்கு விரைந்தார்.

(தொடரும்)

அமானுஷ்யன் - 11



ஹலோ"

"ஊம்... சொல்லுங்கள்... அவன் பிணம் கிடைத்ததா?"

"இல்லை, சார். அவன் பிழைத்திருந்தால் அந்த புத்த விஹாரத்தில்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்து அங்கே பத்து பேரை அனுப்பினேன். அங்கே இரண்டாவது தடவை போனதால் அவங்களுக்கே பயம் வந்து அவர்களின் பாதாள அறையைக் கூடத் திறந்து காட்டியிருக்கிறார்கள்...அங்கேயும் உள்ளே போய் ஆட்கள் பார்த்திருக்கிறார்கள். அவன் இல்லை.... ஏதாவது விலங்கு அவன் உடம்பை எடுத்துக் கொண்டு போய் இருக்கும் என்று என் ஆட்கள் சந்தேகப்படுகிறார்கள்...."

மறுபுறத்தில் இருந்து ஏளனமாக குரல் வந்தது. "உங்கள் ஃபோன் கால் என்று தெரிந்தவுடன் நல்ல சேதிதான் வந்திருக்கும் என்று நினைத்தேன்....."

CBI மனிதன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னான். "நல்ல செய்தியை நிதானமாகச் சொன்னாலும் பரவாயில்லை. கெட்ட செய்தியைத்தான் உடனடியாகத் தெரிந்து கொள்வது புத்திசாலித்தனம். ஆச்சார்யா வீட்டில் ஆனந்துக்கு ஏதோ ஒரு தடயம் கிடைத்தது போல் இருக்கிறது.."

"அப்படி இருக்க வாய்ப்பில்லையே... என்ன என்று தெரிந்ததா?"

"ஜெயினும் அவனும் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்கள். ஆனால் ஏதோ கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாய்த் தெரிகிறது. நாம் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும்... இல்லை என்றால் சிக்கலாக வாய்ப்பிருக்கிறது"

இந்த விஷயம் மறுபக்கத்தை யோசிக்க வைத்தது போல் தெரிந்தது. சில வினாடிகள் கழித்து "அதற்கு சீக்கிரம் ஒரு ஏற்பாடு செய்கிறேன்...."

"ஆனந்த் நாளைக்கு பெங்களூர் போகிறான்"

"ஏன்?"

"ஆச்சார்யா மனைவியைப் பார்த்துப் பேசப் போகிறான்"

"ஆச்சார்யா மனைவியிடம் எதாவது சொல்லி இருக்க வாய்ப்பிருக்கிறதா?"

"அவர் ஆஃபிஸ் விஷயத்தை மனைவியிடம் சொல்வதில்லை.... ஆனால் அந்த ஆனந்த் கையில் என்ன தடயம் கிடைத்திருக்கிறது என்றும் அது பற்றி ஆச்சார்யாவின் மனைவிக்கு என்ன தகவல் தெரியும் என்றும் தெரியவில்லை"

"ஆச்சார்யா கேஸை நான் சீக்கிரமே முடித்து வைக்கிறேன். நீங்கள் அந்த ஆள் பிணத்தை சீக்கிரம் கண்டுபிடியுங்கள். ஏதோ விலங்கு சாப்பிட்டிருக்கலாம் என்கிற அனுமானம் எல்லாம் வேண்டாம். விலங்கு கூட மனிதனை முழுவதும் சாப்பிடாது. மிச்சம் ஏதாவது வைக்கும். அந்த மிச்சத்தைக் கண்டுபிடியுங்கள்....."

********

அவன் மனதில் அந்த பஸ் பயணியின் முகத்தில் தெரிந்த உணர்ச்சியும் பீதியும் சிறிது நேரம் அப்படியே நின்றன. யாரவன்? அவனைத் தேடும் கூட்டத்தில் ஒரு நபரா? இல்லை வேறேதாவது விதத்தில் நன்றாகப் பரிச்சயமானவனா? நன்றாகப் பரிச்சயமானவனாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் முக்காட்டில் முகம் மட்டும் தெரியும்படியாக இருக்கும் மனிதனை அடையாளம் கண்டு கொள்வது மிக நன்றாகத் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் முடியும்... ஏனப்படி அவன் பயப்பட்டான்? உயிருடன் இருக்கிறானே என்ற அதிர்ச்சியை விட பயம் அதிகமாக இருப்பதாக அல்லவா தோன்றுகிறது? ஏதோ பேயைப் பார்த்தது போல் அவன் முகம் மாறியதே....

அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கார் வந்து நின்றது. டிரைவர் சீட்டில் ஒரு அழகான இளம் பெண் இருந்தாள். அவளும் ஒரு ஆறு வயதுச் சிறுவனும் இறங்கினார்கள். பையன் துறுதுறுவென்று இருந்தான். அப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்திருக்கிறான் என்பது பார்க்கையிலேயே தெரிந்தது. ஆனால் கையில் ஒரு பந்துடன் இறங்கியவன் தாயுடன் வீர நடை போட்டு டீக்கடைக்கு வந்தான். பையனுடன் டீக்கடைக்கு வந்த அந்த இளம் பெண் மிகவும் களைத்துப் போனது போல் தெரிந்தாள். காரின் பின் சீட்டில் இருந்து ஒரு வயதான பெண்மணி எட்டிப் பார்த்தாள்.

"உனக்கு டீ வேணுமாடா?" அந்தப் பெண் அவனிடம் தமிழில் கேட்டாள். அவனுக்கு நினைவு வந்த பின் கேட்கும் முதல் தமிழ் பேச்சு அதுதான். அப்போதுதான் அவனுக்கு இன்னொரு உண்மை உறைத்தது. அவன் சிந்திப்பதும் தமிழில்தான். அவன் தமிழ்நாட்டவனோ?

டீக்கு பதிலாக சாக்லேட் கேட்ட மகனை அவள் முறைத்து விட்டு இரண்டு டீ ஆர்டர் செய்தாள். அந்தச் சிறுவன் அந்தக் கடையில் தான் கேட்ட சாக்லேட் இருக்கிறதா என்று எட்டி எட்டி பார்த்து சலித்துப் போனான். அவள் இரண்டு டீ வாங்கிக் கொண்டு ஒன்றை அந்தக் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த வயதான பெண்மணிக்குக் கொடுக்கப் போக அதே வீர நடையுடன் தாயுடன் அந்தச் சிறுவன் விரைந்தான்.

அந்த நேரத்தில் அந்தச் சிறுவனின் கையிலிருந்த பந்து தவறி விழுந்து தெருவுக்குச் செல்ல, அவன் பந்தை எடுக்க ஓடினான். மேலிருந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு லாரியின் டிரைவர் திடீரென்று பையனை சாலை நடுவில் எதிர்பார்க்காததால் தடுமாறுவது தெரிந்தது. அந்த ஒரு கணத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த அவனுக்கு அந்த டிரைவர் அவசரமாக ப்ரேக் போட்டாலும் வண்டி சிறுவனின் மீது ஏறிப் போய்த்தான் நிற்கும் என்பது புலனாக டீ டம்ளரை வீசி விட்டு வேகமாக இயங்கினான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் குறுக்கே பாய்ந்து அந்தச் சிறுவனுடன் எதிர்பக்கம் உருள அந்த லாரி சிறிது தூரம் போய் பெருத்த சத்தத்துடன் நின்றது.

நடந்தது என்ன என்று அங்குள்ளவர்களுக்குப் புலனாக சிறிது நேரம் தேவைப்பட்டது. அந்தப் பையனின் தாயும், பின் சீட்டு மூதாட்டியும் அதிர்ச்சியில் உறைந்து போய் பார்த்துக் கொண்டிருக்க, அந்தச் சிறுவன் என்ன நடந்தது என்று உடனடியாக அறிய முடியாமல் திருதிருவென விழித்தான். சிறுவனைத் தூக்கிக் கொண்டு எழுந்த போது அவனுக்கு லேசாக சிராய்ப்புகள் இருந்தன. சிறுவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. அதிகாலை அரைத் தூக்கத்தில் இருந்தவர்கள் அனவரும் முழுவதுமாக விழித்துக் கொண்டு அது பற்றிப் பரபரப்புடன் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அங்கிருந்தவர்களுக்கு அவன் உடனே ஹீரோ ஆகி விட்டான். பலரும் அந்தச் சிறுவனைக் காப்பாற்றிய அவனுக்குக் கை கொடுத்துப் பாராட்டினார்கள். ஒரு சர்தார்ஜி ஓடி வந்து அவனைத் தழுவிக் கொண்டார். "என்ன டைமிங்...என்ன ஸ்பீட்....அசாத்தியம்". சிறுவன் அவனைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தான்.

அந்தச் சிறுவனின் தாயிற்கு அதிர்ச்சி விலக சில வினாடிகள் தேவைப்பட்டன. கண்ணீர் வழிய ஓடிச் சென்று மகனைக் கட்டிக் கொண்டாள். மகனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்பு அவன் பக்கம் திரும்பிய அந்தப் பெண் கண்களில் இன்னும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. தன் கைகள் இரண்டையும் கூப்பி வணங்கினாள். "நீங்கள் கடவுள் மாதிரி...." என்று ஹிந்தியில் குரல் தழுதழுக்கச் சொன்னாள். அவளுக்கு அவன் தமிழன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தக் கைகூப்பலும், வார்த்தைகளும், மற்றவர்களின் பாராட்டுகளும் அவனை தர்மசங்கடப்படுத்தின. அவனுக்கு உண்மையில் தான் பெரிதாக சாதித்தது போல் தெரியவில்லை. மேலும் அவன் பலர் கவனத்தையும் ஈர்த்து விட்டதும் ஒரு அபாய நிலையை அங்கு உருவாக்கியதாக அவனுக்குத் தோன்றியது. பஸ்ஸில் அவனைப் பார்த்த பயணி யாரிடம் கூப்பிட்டு சொல்வான், இனி யார் எப்போது அவனைத் தேடி வரப் போகிறார்கள் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை.

அவன் வந்த லாரியின் டிரைவரும் க்ளீனரும் கிளம்பினார்கள். அங்கிருந்த அத்தனை பேர் கவனமும் அவன் மீது இருந்ததால் மறைவாகச் சென்று அந்த லாரியில் ஏறிக் கொள்வது சாத்தியமில்லை. டூரிஸ்ட் பஸ்ஸ¤ம், வேனும் கூடக் கிளம்பத் தயாராயின. அந்தப் பெண்ணும் அவனிடம் நூறாவது தடவையாக நன்றி சொல்லி விட்டுக் கிளம்பத் தயாரானாள். அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மறைவாக இருக்கவும், மறைவாகப் பயணம் செய்யவும் இரவு நேரம் உகந்தது. ஆனால் நன்றாக விடிந்து விட்ட இந்த நாள் இனி என்ன செய்யப் போகிறான்?

********

குறுந்தாடி மனிதன் அன்று காலை சற்று தாமதமாகத்தான் எழுந்தான். முந்தைய தினம் இரவு ரகசிய சந்திப்பு ஒன்றில் அவன் உட்பட ஏழு பேர் கலந்து பேசி முடிய நள்ளிரவைத் தாண்டி இருந்தது. அவர்கள் திட்டம் எல்லாம் கச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அந்த அமானுஷ்யன் பிணமும் பார்க்கக் கிடைத்து விட்டால் கவலையில்லாமல் முன்னேறலாம். அவன் தன் காலைக் கடன்களை எல்லாம் முடித்து விட்டுத்தான் காலை எட்டரைக்கு செல் ஃபோனைப் பார்த்தான். யாரோ 17 முறைகள் அழைத்திருந்தார்கள். ஸ்விட்ச் ஆ·ப் செய்து விட்டு உறங்கி இருந்தான். யாரெல்லாம் அழைத்திருக்கிறார்கள் என்று பார்த்தான். எல்லாம் ஒரே எண். அவர்கள் இயக்கத்தின் ஒரு உறுப்பினர்தான் அத்தனை முறை அழைத்திருந்தான். காலை ஆறு பத்திலிருந்து விடாமல் தொடர்ந்து அழைத்திருக்கிறான்.

குறுந்தாடி மனிதன் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டான்.

"அந்த சைத்தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான்." எந்த முன்னுரையும் இல்லாமல் படபடப்பாக தகவல் வந்தது.

தலையில் இடி விழுந்தது போல குறுந்தாடி உணர்ந்தான். "உனக்கு ஆள் மாறாட்டம் ஆகவில்லையே"

"அவன் போல இன்னொரு சைத்தான் இருக்க முடியுமா? காலையில் ஐந்தரை மணிக்கு அவனைப் பார்த்தேன். பார்த்தவுடனே ஃபோன் செய்யலாம் என்றால் டவர் கிடைக்கவில்லை. டவர் கிடைத்த போது நீங்கள் எடுக்கவில்லை. ....."

எதிர்முனையில் தெரிந்த படபடப்பு அவனை நம்பச் சொன்னது. அவன் சொன்னது போல் அவன் போல் இன்னொரு சைத்தான் கண்டிப்பாக இருக்க முடியாது. "எங்கே அவனைப் பார்த்தாய்? எப்போது பார்த்தாய்? ஒரு சின்ன தகவல் கூட விடாமல் எனக்கு விவரமாய் சொல்"

(தொடரும்)

Wednesday, July 2, 2014

அமானுஷ்யன் - 10



"எதாவது தடயம் அல்லது தகவல் கிடைத்ததா?" மஹாவீர் ஜெயின் கேட்டார்.

ஆனந்த் ஒன்றும் சொல்லாமல் அந்தக் காகிதத்தை அவரிடம் நீட்டினான்.

அவர் அதனை ஆராய நிறைய நேரம் எடுத்துக் கொண்டார். அதில் இருந்தது தில்லியின் வரைபடம். அதில் ஏழு இடங்கள் சிவப்பு மையால் குறியிடப்பட்டிருந்தன. சாந்த்னி சௌக், இந்தியா கேட், ரயில்வே ஸ்டேஷன், கனாட் ப்ளேஸ், சன்சாத் மார்க், லோட்டஸ் டெம்பிள், பாரக்கம்பா ரோடு என்று குறிகளுக்கு அருகே எழுதப்பட்டிருந்தது. அந்தக் கையெழுத்து ஆச்சார்யாவினுடையது என்பதில் ஜெயினுக்கு சந்தேகம் இல்லை.

பின் நிமிர்ந்தவர் ஆனந்தைக் கேட்டார், "இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதையேதான் நினைக்கிறேன் சார்"

அவன் பதில் ஜெயின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. நாட்டின் தற்போதைய நிலவரத்தில் நல்லதை நினைக்க முடிவதில்லை....

"இந்த மேப் பழையதாகக் கூட இருக்கலாம். எத்தனையோ வருடங்களுக்கு முன் கூட அவர் இந்தக் குறிகளை செய்திருக்க வாய்ப்பிருக்கல்லவா?"

"இல்லை சார். சாவதற்கு ஐந்து நாட்கள் முன்னால் அவர் வாங்கிய புத்தகத்திற்குள்தான் இந்த மேப் இருந்தது. அவர் கடைசி நாட்களில் படித்துக் கொண்டிருந்த புத்தகம் அது. ஜென் புத்தமதத்தின் முதல் குரு போதிதர்மா பற்றிய அந்தப் புத்தகத்தில் 32 பக்கங்கள் தான் படித்திருக்கிறார்....... புதிதாக வாங்கிப் படித்துக் கொண்டிருந்த புத்தகத்திற்குள் இருக்க வேண்டுமென்றால் இந்த மேப் கடைசி நாட்களில் குறியிட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..."

மஹாவீர் ஜெயின் யோசித்தபடி சொன்னார். "..... நமக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன என்றாலும்
இந்த மேப் எதையும் தீர்மானமாய் சொல்லவில்லை...."

ஆனந்த் ஒன்றும் சொல்லவில்லை. அவரை யோசிக்க விட்டான்.

"....இந்தக் குறியீடுகளை வேறு காரணங்களுக்காகக் கூடச் செய்திருக்கலாம்...."

ஆனந்த் அமைதியாகப் பார்த்தான்.

மஹாவீர் ஜெயின் கேட்டார். "நீங்கள் ஏன் ஒன்றும் சொல்ல மாட்டேன்கிறீர்கள்?"

"எனக்கென்னவோ இது சீரியஸான விஷயமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆச்சார்யா கொலையானதற்கும் இதற்கும் கண்டிப்பாக சம்பந்தமிருக்கும் என்று நினைக்கிறேன். அதைய தான் நீங்களும் நினைக்கிறீர்கள் என்பதும் புரிகிறது... அப்படி இல்லாமல் இருக்கலாம் என்று நம்ப நீங்கள் இப்போது ஏதாவது ஆறுதலான காரணங்களைத் தேடுகிறீர்கள்.... அப்படி ஏதாவது இருந்து விட்டால் சந்தோஷம்தான்"

ஜெயின் பெருமூச்சு விட்டார். "இதெல்லாம் முக்கியமான இடங்கள் ஆனந்த்.... நாம் சந்தேகப்படுவது போல் இந்த இடங்களில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்றால் அது எப்போது, யாரால் என்ற கேள்வி வருகிறது...."

"அதுதான் தெரியவில்லை சார். ஆச்சார்யா வீட்டில் ஆன அளவு தேடிப் பார்த்து விட்டேன். கிடைக்கவில்லை. ஆச்சார்யாவுக்குத்தான் அந்தத் தகவல்கள் தெரிந்திருக்கலாம். எங்கெல்லாம் அந்தத் தகவல்கள் இருக்கும் என்று சந்தேகம் இருந்திருக்கிறதோ அதை எல்லாம் அவரைக் கொன்றவர்கள் அழித்து விட்டார்கள். இந்த மேப் கூட அவருடைய ஜென் புத்தகத்தில் வைத்திருந்ததால்தான் தப்பித்து நம் கையில் கிடைத்திருக்கிறது..."

"அப்படியானால் அந்த விடை அவரைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்தால் ஒழியக் கிடைக்காது. இல்லையா?"

"இல்லை. ஆச்சார்யாவிற்கு அந்தத் தகவலைக் கொடுத்த நபர், அல்லது நபர்களைக் கண்டுபிடித்தால் கூட அந்தத் தகவல் நமக்கு கிடைக்கலாம் சார்..."

"ஒருவேளை அந்த நபர் அல்லது நபர்களையும் அவர்கள் கண்டுபிடித்துக் கொன்றிருந்தால்....?"

"அப்படிக் கொன்றிருந்தால் நீங்கள் சொன்னபடி கொலையாளிகளைக் கண்டுபிடித்தால்தான் பதில் கிடைக்கும். ஆனால் அந்தத் தகவல் தரும் நபர் அல்லது நபர்கள் இறந்து விட்டார்கள் என்பது உறுதியாகும் வரை நாம் அவர்களையும் கண்டுபிடிக்க முயல்வோம். ஆனால் அது வரை நம் இருவரைத் தவிர வேறு யாருக்கும் இந்த மேப் விஷயம் தெரியாமல் இருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன், சார்..."

"ஆனால் வெளியே சொல்லாமல் இருந்து, நாம் கண்டுபிடிப்பதற்கு முன்பே ஏதாவது அசம்பாவிதம் இந்த இடங்களில் நடந்து விட்டால் தவறாகிப் போய் விடுமே, ஆனந்த்"

"ஆச்சார்யா வீட்டில் இருந்து கிடைத்தது என்று தெரிந்தால் கொலையாளிகள் உஷாராகி விடுவார்களே, சார்..."

இந்த இக்கட்டான நிலையில் என்ன செய்வது என்று ஜெயின் யோசித்த போது ஆனந்த் சொன்னான். "வேண்டுமானால் புதுதில்லியில் முக்கியமான இடங்களுக்கு ஆபத்து என்பது போல் மொட்டையாக ஃபோன் காலோ, கடிதமோ அனுப்பி வைக்கலாம். பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்ப்படுத்தப்பட அது உதவும்... நாம் உடனடியாக நம் துப்பு துலக்கும் வேலையை முடுக்கி விடலாம்..."

சிந்தித்த போது அவன் சொல்வதே சரியென்று அவருக்குத் தோன்றியது. கூடுதல் தகவல்கள் இல்லாத இந்த வெறும் வரைபடம் வெளியிடப்படுவதில் பெரிய நன்மை விளைந்து விடும் என்று தோன்றவில்லை. ஆனந்த் சொல்வது போல் கொலையாளிகளை உஷார்ப்படுத்தத்தான் உதவும் என்று தோன்றியது. "உங்களுக்கு உதவிக்கு யாராவது வேண்டுமா?..."

"வேண்டாம், சார். எனக்குத் தேவைப்படும் விவரங்களை நம்பிக்கையான ஆட்களிடமிருந்து நானே பெற்றுக் கொள்கிறேன்....சார். ஒரு கேள்வி. உங்கள் ஆபிசில் இருக்கும் மகேந்திரன் எப்படி?"

"கம்ப்யூட்டரில் புலி. புத்திசாலி. ஏன் கேட்கிறீர்கள்?"

"ஆச்சார்யா அவனிடம் நிறையப் பேசுவார். கம்ப்யூட்டரில் சந்தேகம் கேட்பார் என்றெல்லாம் சொன்னார்கள். அவனுக்கு மற்றவர்கள் கம்ப்யூட்டர்களில் புகுந்து வேவு பார்க்கும் பழக்கமும் இருக்கிறது என்றார்கள். அதனால்தான் கேட்டேன்...."

ஜெயின் சற்று யோசித்து விட்டுச் சொன்னார், "உண்மைதான். அவனுக்கு அரசியல் செல்வாக்கும் இருக்கிறது. அவனை வேலைக்குச் சேர்த்ததே அந்த செல்வாக்குதான். ஆனாலும் வேலையில் அவனிடம் குறை சொல்வதற்கில்லை....."

ஆனந்த் மேற்கொண்டு அவரிடம் மகேந்திரனைப் பற்றி எதுவும் கேட்கப் போகவில்லை. சற்று நேரத்திற்கு முன் ஜெயினின் அறைக்குள் நுழையும் போது கூட அவன் கழுகுப் பார்வை பார்த்தது மனதில் நெருடியது....

*************

வெளியே பனிக்காற்றின் தீவிரம் அதிகமாயிருந்தது. அவன் புத்த விஹாரத்தை விட்டு வந்து இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. அவன் உறைபனி லேசாகப் போர்த்தியிருந்த பாறைகளில் ஏறிப் பயணம் செய்தான். முடிந்த வரை மனிதர்கள் செல்லக் கூடிய பாதைகளை அவன் தவிர்த்தான். இந்த நள்ளிரவில் வெளியே யாரும் அந்தப் பகுதியில் பயணிப்பது அபூர்வம் என்றாலும் அவன் அனாவசியமாக ஆபத்துகளை எதிர்கொள்வதைத் தவிர்க்க எண்ணினான். ஆங்காங்கே பனிக்கரடிகளைக் கண்டான். அவை அவனை வெறித்துப் பார்க்க அவன் புன்னகையுடன் அவற்றைப் பார்த்து கையசைத்து விட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஒரு பனிக்கரடி அவனை சிறிது தூரம் பின் தொடர்ந்து வந்தது. ஆனால் அவனுக்கு சிறிதும் பயம் இருக்கவில்லை. மனிதர்களை விட இந்த விலங்குகள் எத்தனையோ மேல். அவசியமில்லாமல் அடுத்தவர்களை இம்சிப்பதில்லை.

நீண்ட பயணத்திற்குப் பின் ஒரு நெடுஞ்சாலையை அடைந்தான். மறைவாக நின்று ஒரு மணி நேரம் அமைதியாக அந்த நெடுஞ்சாலையைக் கவனித்தான். ஆள் நடமாட்டம் இல்லையென்றாலும் அந்த ஒரு மணி நேரத்தில் ஒரு லாரியும், ஒரு மிலிட்டரி ட்ரக்கும் அந்த சாலையில் சென்றன. பனியினூடே அந்த வண்டிகளின் விளக்குகள் மங்கலாகத் தெரிந்து மறைந்தன. அங்கு நின்ற அந்த வேளையில் அவன் மனம் அந்த புத்த பிக்குகளை நன்றியுடன் எண்ணிப் பார்த்தது. பேண்ட் பையில் இருந்த பணமும் அவன் உடலை சுற்றியிருந்த சால்வையும் அவர்களுடைய அன்பின் அடையாளமாய் அவனை நெருங்கி இருப்பதை உணர்ந்தான். 'எப்படி இவர்களுக்கு கைம்மாறு செய்யப் போகிறேன்?' என்று கேட்டுக் கொண்டான். அப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்கும் வரையாவது உயிருடன் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

நெடுஞ்சாலை ஓரமாக இருந்த பனி படர்ந்த மரங்களை ஆராய்ந்து ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்தான். பதுங்கியபடியே சென்று அந்த மரத்தில் ஏறிக் கொண்டு அமைதியாகக் காத்திருந்தான். அந்தக் காத்திருத்தலில் பதட்டம் இருக்கவில்லை. அவசரமோ, அலுப்போ இருக்கவில்லை. சுமார் அரை மணி நேரம் கழித்து ஒரு சரக்கு லாரி வருவது பனியை லேசாக ஊடுருவி வந்த விளக்குகள் மூலம் தெரிந்தது. அந்த லாரி அந்த மரத்தைக் கடந்த போது சத்தமில்லாமல் அந்த லாரியில் குதித்தான். அந்த லாரி தார்ப்பாயில் இருந்த பனியை கைகளால் அப்புறப்படுத்தி மல்லாந்து படுத்துக் கொண்டான்.

பனிக்கால இரவின் ஆகாயம் மங்கலாகத் தெரியும் நட்சத்திரங்களுடன் பேரழகாய்த் தெரிந்தது. சிறிது நேரம் ரசித்தவன் களைப்பில் அப்படியே உறங்கிப் போனான். அந்த உறக்கத்தில் கூட அவன் உடல் அந்த லாரியின் வேகத்தை மிகச்சரியாக உணர்ந்திருந்தது. வேகம் குறைய ஆரம்பித்த போது தானாக விழித்துக் கொண்டான். தலையை லேசாக உயர்த்திப் பார்த்தான். அதிகாலை ஆகியிருந்தது. தூரத்தில் ஒரு டீக்கடை தெரிந்தது.

அந்த டீக்கடை முன் ஒரு டூரிஸ்ட் பஸ்ஸூம், ஒரு வேனும் நின்றிருந்தன. லாரியை அங்கு நிறுத்தி டீ குடிக்க டிரைவரும் க்ளீனரும் போக சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து மறைவாய் லாரியில் இருந்து இறங்கிய அவன் அந்த டூரிஸ்ட் பஸ்ஸை சுற்றிக் கடந்து சென்று டீக்கடையை அணுகினான். லாரி டிரைவரும், க்ளீனரும் அவன் அந்தப் பஸ் பயணி என்று நினைத்தார்கள். அங்கு டீ வாங்கிக் குடித்தபடியே அங்குள்ளவர்களை ஆராய்ந்தான். அங்கிருந்தவர்களில் யாரும் முக்காடு போட்டிருந்த அவன் மீது ஆர்வம் காட்டவில்லை. அவனும் ஆர்வத்தைத் தூண்டும்படியாக வித்தியாசமாக நடந்து கொள்ளவில்லை.

அப்போது இன்னொரு பஸ் எதிர்ப்புறத்தில் இருந்து வந்தது. அந்த நெடுஞ்சாலையில் ஒரு மைல் தூரத்தில் இருந்த வேறொரு டீக்கடையில் முன்பே பயணிகளுக்காக நிறுத்தி இருந்ததால் அந்த பஸ் அந்த டீக்கடை முன் நிற்காமல் விரைந்தது. அந்தப் பஸ்ஸில் இருந்த ஒரு பயணி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து வந்தவன் டீக்கடையில் இருந்த முக்காட்டு மனிதனை உற்றுப் பார்த்தான். அவனும் தன்னை உற்றுப் பார்க்கும் மனிதனைக் கூர்ந்து பார்க்க அந்த மனிதன் அவனை அடையாளம் கண்டு கொண்டது போல் தெரிந்தது. பார்த்தது சில வினாடிகள் என்றாலும் அந்தப் பயணியின் முகத்தில் தெரிந்த பீதி அவனுக்கு அபாயச் சங்கு ஊதியது.

(தொடரும்)

அமானுஷ்யன் - 9



ஆச்சார்யா பணிபுரிந்த CBI தலைமை அலுவலகத்தில் எல்லோரிடமும் ஆச்சார்யா பற்றி விசாரித்தான் ஆனந்த். மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை பேசிப் பார்த்தான். எல்லோரும் அவரைப் பற்றி உயர்வாகவே சொன்னார்கள். அவருடைய சகாக்களும் அவர் டிபார்ட்மென்டில் அவருக்குக் கீழே வேலை செய்தவர்களும் அவர் நாணயத்தைப் பற்றி உயர்வாகப் பேசினார்கள். அதோடு அவர் ரகசியமானவர், நினைப்பதை வெளியில் சொல்லாதவர் என்பதையும் சொன்னார்கள். அவர் கொலை அவர்களைப் பாதித்துள்ளது பேசும் போது தெரிந்தது. அவர்களில் பெரும்பாலானோர் கொலைக்குப் பழைய பகை காரணமாயிருக்கலாம் என்றுதான் நினைத்தார்கள்.

ராஜாராம் ரெட்டியிடம் பேசும் போது அவனிடம் ஒரு விஷயத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கியது போல் தெரிய ஆனந்த் அவர் நினைப்பதை வெளிப்படையாகச் சொல்லச் சொன்னான்.

ராஜாராம் ரெட்டி தயக்கத்துடன் சொன்னார், "இங்கே சைபர் க்ரைம்ஸைக் கண்டுபிடிக்கும் டிபார்ட்மென்டில் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் மகேந்திரன். கம்ப்யூட்டரில் அவனுக்குத் தெரியாததே எதுவும் கிடையாது என்று சொல்லலாம். ஆனால் கேரக்டர் அவ்வளவாக சரியில்லை. மூளை அதிகம், அதனால் தலைக்கனமும் அதிகம். அடுத்தவர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் ரகசியமாய் வைத்திருக்கிற டேட்டாவை ஆராய்வது அவனுடைய ஹாபி. எல்லாருமே கம்ப்யூட்டரில் ஏதாவது ப்ரச்னை என்றால் அவனைத்தான் கூப்பிடுவோம். அதை அவன் சீக்கிரம் சரி செய்தும் விடுவான். ஆச்சார்யா அடிக்கடி அவனைக் கூப்பிட்டு சந்தேகம் கேட்பார். அவனும் மணிக்கணக்கில் அவர் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து அவருக்குச் சொல்லிக் கொடுப்பான். அவன் திறமைசாலி என்பதால் ஆச்சார்யாவிற்கு அவனைப் பிடித்திருந்தது. அவனிடம் நிறைய பேசுவார். அவர் அப்படிப் பேசும் போது ஏதாவது வாய் விட்டுச் சொல்லி இருக்கலாம்...."

அவர் நிறுத்தினார். ஆனந்த் மேலே சொல்லுங்கள் என்பது போல் அவரைப் பார்த்தான்.

"ஆச்சார்யாவின் ரகசியங்கள் ஏதாவது அந்தக் கம்ப்யூட்டரில் இருந்திருந்தால் அவர் அவனிடம் சொல்லா விட்டாலும் கூட அவன் அதைக் கண்டுபிடிக்க வாய்ப்பு இருந்திருக்கிறது...." அதற்கு மேல் சொல்வது சரியல்ல என்று அவர் நிறுத்தியது ஆனந்திற்குப் புரிந்தது.

"கேரக்டர் சரியில்லை என்றால் எந்த விதத்தில்?"

".....பல பெண்கள் கிட்ட சகவாசம் இருக்கிறது. இந்தக் காலத்துல அது பெரிய விஷயம் இல்லைதான். நான் அந்தக் கால மனுஷன். அதனாலேயே அதை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது"

"வேலையில் எப்படி?"

"குறை சொல்ல முடியாது...."

மகேந்திரன் ஆனந்தை விட இளமையானவனாக இருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். ஆனந்தை அவன் தூரத்திலிருந்தே எடை போடுவது ஆனந்திற்குத் தெரிந்தது. ஆனந்த் அவனிடம் பேசிய போது அவனும் மற்றவர்கள் சொன்னதையே சொன்னான். நல்லவர், நேர்மையானவர், ரகசியமானவர்....

"எத்தனை ரகசியமானவராய் ஒருவர் இருந்தால் கூட அவர் ஒரு சிலரிடமாவது மனம் விட்டுப் பேசுபவராக இருப்பார்..." ஆனந்த் சொல்லி நிறுத்தினான். மகேந்திரன் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தான்.

ஆனந்த் சொன்னான், "அவர் உங்களிடம் அதிகம் பேசுவார் என்று சொன்னார்கள்?"

"யார் சொன்னார்கள்?" அவன் உடனடியாகக் கேட்டான்.

ஆனந்த் யோசனை செய்து விட்டுச் சொன்னான். "யாரோ சொன்னார்கள். நினைவில்லை"

அவன் நினைவில்லை என்றதை மகேந்திரன் நம்பியது போல் தெரியவில்லை. ஆனால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் ஆச்சார்யா பற்றி சொன்னான். "புதிதாக எதையும் தெரிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகம். கம்ப்யூட்டர் சம்பந்தமாக அடிக்கடி கேட்பார். அதைப் பற்றித்தான் பேசுவோம்"

"அவர் இங்கு கம்ப்யூட்டரில் ஏதாவது ரகசிய டேட்டா வைத்திருந்தாரா?"

"அவர் ஜாக்கிரதையானவர். ஆஃபிஸ் கம்ப்யூட்டரில் எதையும் வைத்துக் கொண்டது போல் தெரியவில்லை."

"உங்களிடம் கம்ப்யூட்டர் தவிர வேறெதைப் பற்றியும் அவர் பேசியதில்லையா?"

அவன் ஒரு கணம் மௌனம் சாதித்து விட்டு கவனமாகச் சொன்னான், "சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவும் பேசியதில்லை."

"அவரை யார் கொலை செய்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"

"யாராயிருந்தாலும் அரசியல் பக்கபலம் இருக்கிற ஆள்தான் கொலை செய்திருக்கணும் என்பதில் சந்தேகம் இல்லை. இல்லை என்றால் CBI அடிஷனல் டைரக்டரையே கொலை செய்யத் துணிச்சல் வந்திருக்காது. எதற்கும் நீங்கள் ஜாக்கிரதையாய் இருப்பது நல்லதென்று நான் நினைக்கிறேன்....."

அவன் எச்சரிக்கை எந்த எண்ணத்தில் சொல்லப்பட்டது என்பதை ஆனந்தால் தீர்மானிக்க முடியவில்லை. அவனிடம் மேலும் பேசிக் கொண்டிருந்த போது உபயோகமான தகவல் எதுவும் கிடைக்கா விட்டாலும் அவன் வெளியே சொல்லாத எதையோ அறிந்திருக்கிறான் என்பதை மட்டும் ஆனந்த் ஊகித்தான்.

அடுத்ததாக ஆச்சார்யா கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் உயர் அதிகாரிகளை ஆனந்த் சந்தித்தான். அவர்களுடைய உபசாரம் பலமாக இருந்தது. என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்றெல்லாம் சொல்லி அன்பு மழையில் நனைய வைத்தார்கள். ஆனந்த் உடனடியாக விஷயத்திற்கு வந்து வழக்கைப் பற்றி விசாரிக்க, அவர்கள் ஆச்சார்யா கண்டுபிடித்த பழைய கேஸ்களில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து வருவதாகவும் கூடிய சீக்கிரம் கொலையாளியைப் பிடித்து விடுவோம் என்றும் தெரிவித்தார்கள். தங்கள் ·பைலை அவனிடம் காட்டினார்கள்.

அவர்கள் வைத்திருந்த ·பைலில் பழைய கேஸ் விவரங்கள் நிறைய இருந்தன. அதை மேலோட்டமாகக் கூடப் பார்க்காமல் ஆனந்த் அவர்களிடமிருந்த ஆச்சார்யா கொலை செய்யப்பட்ட இடத்தின் புகைப்படங்களை ஆராய்ந்தான். பெரும்பாலான புகைப்படங்கள் மஹாவீர் ஜெயின் வைத்திருந்த ·பைலில் இருந்தவைதான் என்றாலும் அவன் பார்க்காதஒருசிலவும் இருந்தன. அதில் அவன் கவனத்தை ஈர்த்தது எரிந்த நிலையில் இருந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் புகைப்படம்.

அவன் அதை அதிகமாக ஆராய்வதைப் பார்த்த ஒரு அதிகாரி சொன்னார். "கொலையாளி தனியாக வந்தது போலத் தெரியவில்லை. ஒரு சில பேரோட வந்திருக்கலாம். அவர்களுக்கு ஆச்சார்யா மேல் இருந்த பகை அங்கே இருக்கிறதை எல்லாம் துவம்சம் செய்ய வைத்திருக்கிறது. கம்ப்யூட்டரையும் சில புத்தகங்களையும் எரித்திருக்கிறார்கள். மற்ற புத்தகங்களை எல்லாம் விசிறி எறிந்திருக்கிறார்கள். அவர் வீட்டு விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் உடைத்திருக்கிறார்கள். எதிலுமே கைரேகைகள் கிடைக்கவில்லை...."

"ஹார்ட் டிஸ்கை எரித்ததற்குக் காரணம் அதில் தங்கள் பற்றிய தகவல் ஏதாவது இருக்கலாம் என்பதாகக் கூட இருக்கலாம் இல்லையா?"

அந்தக் கேள்வி அவர்களை தர்மசங்கடப் படுத்தியது ஆனந்திற்கு நன்றாகவே தெரிந்தது.

"அந்தக் கோணமும் நாங்கள் யோசிக்காமல் இல்லை. புதுக் கேஸ் ஏதாவது சம்பந்தப்பட்டிருந்தால்தான் அந்தக் கோணம் அர்த்தமுள்ளதாகிறது. ஆனால் உங்கள் அலுவலகத்தை நாங்கள் விசாரித்த வரையில் அவர் எந்தப் புது கேஸையும் துப்பறிந்து கொண்டிருக்கவில்லை என்றார்கள்".

ஆனந்த் அதற்கு மேல் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. "நான் கொலை நடந்த இடத்தைப் பார்க்க வேண்டும்"

"ஜெயின் சார் பிரத்தியேகமாகச் சொன்னதால் அந்த இடத்தை நாங்கள் சுத்தம் செய்யப் போகாமல் அப்படியே வைத்திருக்கிறோம். எங்கள் ஆட்கள் யாராவது உதவிக்கு உடன் வர வேண்டுமா?"

"வேண்டாம். நன்றி"

ஆச்சார்யாவின் வீடு ஒரு நடுத்தர வர்க்கத்தினரின் இரண்டு பெட் ரூம் வீடாக இருந்தது. வீட்டினுள் எல்லாமே சின்னாபின்னமாகக் கிடந்தன. கொலைகாரர்கள் எந்தப் பொருளையும் விட்டு வைக்கவில்லை. ஆச்சார்யாவின் குடும்பப் புகைப்படங்கள் கண்ணாடி விரிசல்களுடன் ஆங்காங்கே விழுந்திருந்தன. ஆச்சார்யா, மனைவி, மகளுடன் சந்தோஷமாகச் சிரித்தபடி இருந்த புகைப்படத்தை ஆனந்த் எடுத்துப் பார்த்தான். எல்லோர் முகத்திலும் உண்மையான சந்தோஷம் தெரிந்தது. இன்னொரு உடைந்த புகைப்படத்தில் ஆச்சார்யாவின் மகளும், மருமகனும் இருந்தார்கள்.

ஆனந்த் கருகியிருந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கைப் பார்த்தான். அதனுடன் சில புத்தகங்களும் கருகி இருந்தன. முக்கால் வாசி கருகியிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்த்தான். அது புத்தகமல்ல, ஆச்சார்யாவின் இந்த வருடத்தைய டைரி. பாதி எரிந்திருந்த இன்னொரு புத்தகத்தை எடுத்துப் பார்த்தான். ஏதோ ஆங்கில நாவல். கொலயாளிகளின் முக்கிய குறி கம்ப்யூட்டரும் டைரிகளும்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது தெரிந்து விடாதிருக்க வேறுசில புத்தகங்களையும் சேர்த்து எரித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

நிதானமாக அந்த இடத்தை ஆனந்த் ஆராய்ந்தான். எல்லாம் உடைந்தும், நொறுங்கியும், கலைந்தும் எரிந்தும் இருந்தன. அத்தனை அலங்கோலங்களுக்கு மத்தியில் ஒரு அழகான புத்தர் சிலை கீழே தரையில் அமர்ந்த நிலையிலேயே இருந்தது. இந்த அலங்கோலங்களால் பாதிக்கப்படாமல் புத்தர் சாந்த மயமாக தியானத்திலிருந்தார். அந்தப் புத்தர் சிலையைப் பார்த்தவுடன் அம்மா நினைவும், காணாமல் போன தம்பி நினைவும் வந்தன....

மனதை மீண்டும் அந்த இடத்தை ஆராயத் திருப்பினான். எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இது எதிர்பார்த்தது தான். கொன்றவர்கள் கச்சிதமாகத்தான் இயங்கியிருக்கிறார்கள்.

கிளம்பத் தயாரான போது ஒரு ரசீது மூலையில் கிடந்ததைப் பார்த்து அதை எடுத்தான். ஆச்சார்யா கொலை செய்யப்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்பு புத்தகம் வாங்கியதன் ரசீது. "Bodhidharma-Osho" என்று ரசீதில் எழுதியிருந்தது. அதுதான் ஆச்சார்யா கடைசியாக வாங்கிய புத்தகமாக இருக்கலாம் என்று தோன்ற ஆனந்தின் உள்ளுணர்வு அந்தப் புத்தகத்தை அந்த அலங்கோலங்களுக்கு மத்தியில் தேடச் சொன்னது.

ஆச்சார்யா பல புத்தகங்கள் வைத்திருந்ததால் அந்தப் புத்தகத்தை அங்கு கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. சுமார் இருபது நிமிடம் தேடி அந்தப் புத்தகத்தை ஆனந்த் கண்டுபிடித்தான். "Bodhidharma-The Greatest Zen Master" என்ற அந்தப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தான். அதில் ஆச்சார்யா 32 பக்கங்கள் படித்திருந்தார் என்பதற்கு அடையாளமாக அங்கு முனையை மடித்திருந்தார். ஆனந்த் அந்தப் புத்தகத்தை வெறுமனே புரட்ட உள்ளே இருந்து ஒரு தாள் கீழே விழுந்தது.

எடுத்துப் பார்த்த ஆனந்த் மெல்ல விசிலடித்தான்.....

(தொடரும்)

அமானுஷ்யன் - 8



ஒரு வேளை அவன் இந்த புத்த விஹாரத்திற்குள் உயிருடன் இருக்கிறான் என்றால் அவன் மறைந்திருக்க கண்ணுக்குத் தெரியாத இந்த சுரங்கப் பாதை உள்ள பாதாள அறைதான் பொருத்தமான ரகசிய இருப்பிடம் என்பதில் வந்தவர்களுக்கு சந்தேகமிருக்கவில்லை.

மூத்த பிக்கு அமைதியாகச் சொன்னார், "அது ஒரு காலத்தில் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட அறை. அதில் சில புத்தகங்களும், சிலைகளும் மட்டுமே இருக்கின்றன. அதுவும் எங்களுக்கு மட்டுமே தெரிந்த இருப்பிடம். நீங்கள் தேடும் ஆள் அங்கு வந்து ஒளிய வாய்ப்பேயில்லை"

இளைய பிக்கு இப்போதும் தலையைக் குனிந்து கொண்டு நின்றாரே தவிர வாயைத் திறக்கவில்லை.

அங்கு இரண்டாவது முறையாகத் தேடிக் கொண்டு வந்தவன் அலட்சியமாகச் சொன்னான், "பயப்படாதீர்கள். உங்கள் புத்தகங்களும் சிலைகளும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் அதையெல்லாம் ஒன்றும் செய்ய மாட்டோம். அவன் அங்கு இல்லையென்றால் எங்கள் பாட்டுக்குப் போய் விடுவோம். இனி வந்து தொந்தரவு செய்ய மாட்டோம். நீங்கள் எல்லோரும் ஒதுங்கி எங்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நில்லுங்கள். அல்லது இந்த இடத்தை விட்டுப் போய் ஏதாவது ஒரு அறைக்குள் பத்திரமாக இருங்கள்"

ஒரு வேளை அவன் அங்கு இருந்தால் என்ன செய்வார்கள் என்பதற்கு பெரிய ஆராய்ச்சி தேவைப்படவில்லை. அவர்கள் கையில் இருந்த நவீனத் துப்பாக்கிகள் அதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிவித்தன. மூத்த பிக்கு சில அடிகள் பின் வாங்கி சுவற்றை ஒட்டினற் போல் நிற்க, இளைய பிக்கு உட்பட மற்ற பிக்குகளும் அப்படியே செய்தனர்.

அவரிடம் பேசியவன் தன் சகாக்களிடம் சொன்னான், "ரெண்டு பேர் புத்த விஹார வாசற்கதவு பக்கம் நில்லுங்கள். ரெண்டு பேர் இந்த சுரங்கப் பாதைக்கு வெளியே நில்லுங்கள். மற்றவர்களில் மூன்று பேர் முதலில் உள்ளே போகலாம். மீதியுள்ள மூன்று பேர் இரண்டு நிமிட இடைவெளி விட்டு உள்ளே தொடர்ந்து வரட்டும். எல்லாரும் தயாராய் இருங்கள்...."

டார்ச் லைட்டைப் பிடித்தபடி முதலில் ஒருவன் மெல்லச் செல்ல துப்பாக்கியை நீட்டியபடி இருவர் பின் தொடர்ந்தனர். அவர்கள் சென்று சரியாக இரண்டு நிமிடம் கழித்து அடுத்த மூன்று பேரிலும் ஒருவன் டார்ச் ச்லைட்டுடன் முன்னே செல்ல துப்பாக்கியுடன் இருவர் பின் தொடர்ந்தனர். இருவர் பாதாள அறையின் நுழைவு துவாரத்தை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடி தயாராக நிற்க மற்ற இருவர் புத்த விஹார கதவுப் பக்கம் துப்பாக்கியை நீட்டியபடி தயாராக நின்றனர்.

சுமார் இருபது நிமிடங்கள் கழித்து பாதாள அறையிலிருந்து உடல் உடையெல்லாம் தூசியும், ஒட்டடையுமாக பரிதாபமாக தும்மிக் கொண்டே வெளியே வந்தனர். சிலர் அங்குமிங்கும் சொறிந்து கொண்டு வந்தார்கள். அவன் அங்கு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. உள்ளே போகாத நான்கு பேரும் தங்கள் சகாக்களைப் பார்த்து லேசாகச் சிரித்தார்கள்.

மூத்த பிக்குகளிடம் முன்பு பேசியவன் இளைய பிக்குவை சந்தேகத்தோடு பார்த்தான். இளைய பிக்குவிற்கு முதலில் அவனை சரியாக அடையாளம் தெரியவில்லை. பின் கேட்டார், "அவன் அங்கேயும் இல்லை அல்லவா? நாங்கள் இனி அவனுக்குப் பயப்படாமல் இருக்கலாம் அல்லவா?"

சந்தேகம் தீராமல் அவன் தலையை மட்டும் அசைத்தான். தன் சகாக்களைப் பார்த்து தலையசைத்து விட்டு அவன் முன்னால் செல்ல அவர்கள் அனைவரும் அவனைத் தொடர்ந்து வெளியேறினார்கள்.

அவர்கள் போன பிறகு இளைய பிக்குவைப் பார்த்து மூத்த பிக்கு கேட்டார், "என்ன இதெல்லாம்?"

இளைய பிக்கு சொன்னார். "நாம் வருடக் கணக்கில் உபயோகிக்காத பாதாள அறையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று நீங்கள் பல நாட்களாக சொல்லிக் கொண்டிருந்தீர்கள். நான் ஒரு நாள் எட்டிப்பார்த்த போது உள்ளே முழுவதும் சிலந்தி வலைகளும் தூசியுமாய் இருந்தது...... இவர்கள் இப்போது அதை எல்லாம் நிறையவே எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். இனி நமக்கு சுத்தம் செய்வது சுலபம்"

மற்ற பிக்குகள் புன்னகைக்க மூத்த பிக்கு இளைய பிக்குவை ஊடுருவிப் பார்த்தார். இளைய பிக்கு தன் தலையைத் தாழ்த்திக் கொண்டார். இளைய பிக்குவிற்கு அந்தப் பெயர் அறியாத இளைஞன் மேல் இருந்த பாசமும் அதனால் அவனைக் கொல்லத் துடிக்கிற மனிதர்கள் மீதிருந்த கோபமும் முற்றும் துறந்தவர்களுக்கு சிறிதும் பொருத்தமானதல்ல என்பதை மூத்த பிக்குவின் பார்வை சொல்லியது. புத்த பிக்குவாக மாறி அந்த புத்த விஹாரத்திற்கு அவர் வந்து ஒரு வருட காலமே ஆகி இருந்தது. புத்த மத நூல்களைப் படிப்பதிலும், அனுஷ்டானங்களைப் பின் பற்றுவதிலும் அவர் குறுகிய காலத்திலேயே நல்ல தேர்ச்சி பெற்று விட்டிருந்தாலும் மனம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவர் இன்னும் உண்மையான பிக்குவின் தன்மைகளைப் பெற்று விட்டிருக்கவில்லை என்பது மூத்த பிக்குவின் கணிப்பாக இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் இளைய பிக்கு நடந்து கொள்ளும் போதெல்லாம் வார்த்தைகளின்றி பார்வையாலேயே மூத்த பிக்கு சுட்டிக் காட்டுவது வழக்கம்.

அவன் மீது அவர் வைத்திருந்த அன்புதான் வந்தவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது என்பதை அவர் பார்வையால் சுட்டிக் காட்டியதற்கு இளைய பிக்கு வாய் திறந்து எதிர்க் கேள்வி கேட்டார். "நிராதரவாய் நிற்கும் மனிதர்கள் மீது அன்பு காட்டுவது தவறா குருவே?"

மூத்த பிக்கு சொன்னார், "அன்பு உயிர்கள் அனைத்தின் மீதும் பொதுவாக இருப்பது தெய்வீகத் தன்மை. ஆனால் அது தனிப்பட்ட மனிதர்களிடம் தேங்கும் போது துக்கத்தையே தரும்"

இளைய பிக்கு மௌனம் சாதித்தார். மூத்த பிக்கு சொன்னார், "இன்னொரு விஷயம்..."

என்ன என்பது போல் இளைய பிக்கு பார்க்க, மூத்த பிக்கு சொன்னார், "பேச்சில் சாமர்த்தியம் பல சந்தர்ப்பங்களில் நம்மை உண்மையை நழுவ விடச் செய்வதுண்டு...."

குனிந்த தலை நிமிராமல் இளைய பிக்கு நகர்ந்தார். ஆனால் சிறிது நேரத்தில் அவருடைய சிந்தனை அவனை நோக்கிச் சென்றது. அவன் வருவதை முன் கூட்டியே அறியும் சக்தி படைத்தவனாக இருந்ததாகத் தோன்றியது. அவன் நேற்று இரவு அங்கிருந்து கிளம்புவதாகச் சொன்ன போது மூத்த பிக்கு உட்பட அனைவருமே அது தேவையுமில்லை, உசிதமுமில்லை என்று சொன்னார்கள். மூத்த பிக்கு அவனிடம் கேட்டார், "நீ ஏன் போக வேண்டும் என்று நினைக்கிறாய்?"

"அவர்கள் என்னை மறுபடி தேடி வரலாம் என்று தோன்றுகிறது"

இளைய பிக்கு சொன்னார். "அவர்கள்தான் ஒரு முறை பார்த்து விட்டுப் போய் விட்டார்களே. இனி உனக்கு இதுதான் பாதுகாப்பான இடம். இனி இங்கே தேடி வர மாட்டார்கள்"

அவன் அமைதியாக விளக்கினான், "நீங்கள் உங்களுக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருளைத் தொலைத்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை வைத்திருக்கக் கூடிய எல்லா இடத்திலும் தேடுகிறீர்கள். அது கிடைக்கவில்லை. நீங்கள் முயற்சியைக் கைவிட்டு விடுவீர்களா? மாட்டீர்கள் அல்லவா? முதலில் மேற்போக்காகத் தேடிய இடத்தில் எல்லாம் மறுபடி நிதானமாகவும் மேலும் கவனத்துடனும் தேடுவீர்கள் அல்லவா? அதே போலத்தான் அவர்களும் என் உடல் எங்கும் கிடைக்கவில்லை என்றான பிறகு மறுபடி தேடிய இடத்திலேயே தேட வருவார்கள்...."

"நீ இன்னும் முழுதும் குணமடையவில்லை. இந்த நிலையில் நீ எங்கே போவாய்? என்ன செய்வாய்? உனக்கு என்ன பாதுகாப்பிருக்கிறது?"

அவன் புன்னகைத்தான். "இது வரை காப்பாற்றிய கடவுள் இனியும் காப்பாற்றுவார். ஏதாவது வழி காட்டுவார்"

இளைய பிக்கு மூத்த பிக்குவைப் பார்த்தார். மூத்த பிக்கு ஏதாவது அவனிடம் சொல்லி அவன் மனதை மாற்றுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால் மூத்த பிக்கு அவன் முகத்தைப் பார்த்தே அவன் எடுத்த முடிவில் இருந்த உறுதியை அறிந்ததால் பேசாமல் இருந்தார்.

துப்பாக்கிக் குண்டால் துளைக்கப்பட்ட சட்டையின் துளையை மறைக்க ஊசி நூலால் மிகக் கச்சிதமாக அவன் தைத்துக் கொண்டான். அவனுக்கு எடுத்துச் செல்ல எதுவும் இருக்கவில்லை. அந்த இரவு வேளையில் அவன் கிளம்பிய போது மூத்த பிக்கு அவனிடம் சிறிது பணத்தைத் தர முன் வந்தார். அவன் தயங்கினான். "இங்கு எங்களைப் போன்றவர்கள் பணம் தந்து உங்களை ஆதரிக்க வேண்டுமேயல்லாமல் உங்களிடம் இருந்து பணம் பெறுவது முறையல்ல, குருவே. நீங்கள் எனக்கு நிறையவே உதவி செய்து விட்டீர்கள். இனி நீங்கள் எனக்குத் தர வேண்டியதெல்லாம் ஆசிகள் மட்டுமே" என்றவன் அவர் காலில் விழுந்து வணங்கினான்.

அதைப் பார்த்த இளைய பிக்கு கண் கலங்கினார். மூத்த பிக்கு கண்களை மூடி அவனை ஆசீர்வதித்தார். பின் அவனிடம் அந்தப் பணத்தைத் திணித்தார். "இதில் அதிகமில்லை. சில நாட்கள் உணவுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். வைத்துக் கொள்". அவன் நன்றியுடனும் தயக்கத்துடனும் அதை வாங்கிக் கொண்டான்.

மற்ற பிக்குகளைக் கை கூப்பி வணங்கினான். அவர்களும் கண்களை மூடி ஒரு கணம் அவனுக்காகப் பிரார்த்தித்தனர்.

அவன் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சொல்லிக் கொண்டு விடை பெற்றான். கடைசியில் இளைய பிக்குவின் அருகில் வந்த போது அவருடைய கலங்கிய கண்களைக் கண்டு அவன் நெகிழ்ந்து போனான். அவன் கண்களும் ஈரமாயின. அவர் ஒரு சால்வையை அவனுக்குத் தந்தார். இந்தக் கடுங்குளிரிலிருந்து காத்துக் கொள்ளவும் அவன் தலை, தோள் காயங்கள் வெளியே தெரியாமல் இருக்கவும் அது பயன்படும் என்று நினைத்தார். அவன் நெகிழ்ந்த மனதுடன் சொன்னான், "ஒருவேளை நான் பிழைத்து, எனக்கு நினைவு திரும்பி என் குடும்பத்தோடு இணைந்தால் அவர்களைக் கூட்டிக் கொண்டு நிச்சயம் ஒரு நாள் இங்கு வருவேன், பிக்குவே. என்னையே நான் அறியாமல் நிராதரவாய் இருந்த போது என்னைக் காப்பாற்றி என்னிடம் அன்பு காட்டியவர்கள் என்று உங்கள் அனைவரையும் நான் அறிமுகப்படுத்தி வைப்பேன்...." அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.

பனி பெய்யும் கடுங்குளிரான இரவு வேளையில் அவர் தந்த சால்வையைப் போர்த்திக் கொண்டு அந்தப் புத்த விஹாரத்திலிருந்து அவன் வெளியேறினான்.

நேற்றைய நிகழ்வில் இருந்து மீண்ட இளைய பிக்குவிற்கு இங்கிருந்து நேற்று இரவு போன அவன் எங்கு சென்றானோ, தற்போது என்ன செய்கிறானோ என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

(தொடரும்)

அமானுஷ்யன் - 7



ஆனந்த் ஆச்சார்யாவின் கொலை வழக்கு சம்பந்தமாக சேகரித்திருந்த எல்லா பத்திரிகைக் குறிப்புகளையும் படித்து முடித்தான். படித்த எதிலும் பெரிய உபயோகமான தகவல்கள் இருக்கவில்லை. அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பதரை. அம்மாவுக்கு ஃபோன் செய்ய வேண்டிய நேரம்.... செல்லை அழுத்தினான்.

"ஹலோ" சாரதாவின் குரல் களைப்புடன் இருந்தது.

"நான் ஆனந்த் பேசறேன்ம்மா. ஏன் உன் குரல் களைப்பாய் கேட்கிறது?"

"அப்படியொண்ணும் இல்லைப்பா. உனக்கு ஓட்டல் ரூம் எல்லாம் சௌகரியமாய் இருக்கா?"

"இது ஸ்டார் ஓட்டல்ம்மா. நல்லாவே சௌகரியமாய் இருக்கும்மா"

"சாப்பிட்டாயா?"

"எட்டு மணிக்கே சாப்பிட்டாச்சு. நீ?"

சாரதா சில வினாடிகள் எடுத்துக் கொண்டு தாமதமாகப் பதிலளித்தாள். "ஆச்சு"

அம்மா பொய் சொல்கிறாள் என்பது ஆனந்திற்கு புரிந்தது. மனதில் ஏற ஆரம்பித்த சுமையை ஒரு கணம் பொருட்படுத்தாமல் கேட்டான். "நீ என்ன செய்துகிட்டிருந்தாய்?"

"லலிதா சஹஸ்ரநாமம் சொல்லிகிட்டு இருந்தேன். பாதியில் நிறுத்தியிருக்கேன். நான் வைக்கட்டா. நாளைக்கும் மறக்காம போன் பண்ணு...."

அவன் சரி என்று சொல்வதற்கு முன் ஃபோன் வைக்கப்பட்டது. இது ஒன்றும் புதிதில்லை என்ற போதும் இன்னமும் ஏனோ புதிதாக வலிக்கிறது. இது நாள் வரை அம்மாவிடம் அவன் ஐந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பேசியதாக அவனுக்கு நினைவில்லை. அவன் சௌக்கியமாய் இருக்கிறான் என்ற ஒரு செய்திக்கு மேல் அவளுக்கு வேறு எதையும் தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பதில்லை. அந்த ஒரு செய்தி தெரிந்து கொள்ள அதிக நேரம் ஆவதில்லை....

இன்று அவனும் இல்லை என்பதால் அம்மா சமைத்தே இருக்க மாட்டாள் என்று நினைத்தான். எதாவது ஒரு கடவுளை வேண்டி உபவாசம் இருந்திருப்பாள். வெறும் பாலோ, பழமோ தான் இன்றைய ஆகாரமாய் இருந்திருக்கும். இந்த லலிதா சஹஸ்ரநாமம் முடிந்த பின் இன்னும் எத்தனையோ ஸ்தோத்திரங்கள் படித்து அவள் என்னேரம் உறங்குவாளோ அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். சுமார் இருபத்தி நான்கு வருடங்களாகக் கும்பிட்டும், உபவாசங்கள் இருந்தும் அந்தக் கடவுள்கள் அவளிடம் கருணை காட்டியதாகத் தெரியவில்லை.

சாரதாவை இந்த நிலைக்குக் கொண்டு வந்த சம்பவம் ஒரு பிள்ளையார் சதுர்த்தி சமயத்தில் நடந்தது. வித விதமான பிள்ளையார்கள் ஊர்வலமாகப் போக வெளியே நின்று தன் இரண்டு பிள்ளைகளுடன் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த அவள் ஊர்வலம் முடிந்து பார்க்கையில் அவளுடைய இளைய மகன் மூன்று வயது அக்ஷய் காணாமல் போயிருந்தான். ஆரம்பத்தில் அவன் ஊர்வலத்தோடு போயிருக்கலாம் என்று எல்லோரும் நினைத்தார்கள். எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நண்பர்களும், உறவினர்களும் எல்லா இடங்களிலும் தேடினார்கள். அவன் கிடைக்கவில்லை. காணாமல் போன அக்ஷயின் புகைப்படத்தைப் பிரசுரித்து அவன் முதுகின் மேற்பகுதியில் நாகம் படமெடுப்பது போல் இருக்கும் மச்சத்தைப் பற்றியும் குறிப்பிட்டு விளம்பரப்படுத்திப் பார்த்தார்கள். ஆனால் பயனில்லை. அவன் மாயமாய் மறைந்திருந்தான். கணவனை முன்பே இழந்திருந்த சாரதாவை இளைய மகனின் இழப்பு நடைப்பிணமாகவே ஆக்கி விட்டது. அப்போது ஆனந்திற்கு ஐந்து வயது.

அன்றிலிருந்து சாரதாவின் கவனத்தை அவளுடைய காணாமல் போன இளைய மகனே ஆக்கிரமிக்க ஆரம்பித்தான். சாப்பிட அமர்கையில் காணாமல் போன மகனுக்கு சாப்பிட உணவு கிடைக்கிறதோ இல்லையோ என்ற கவலை அவளுக்கு வர ஆரம்பித்தது. நல்ல உடை ஏதாவது உடுக்கையில் மகனுக்கு நல்ல உடை கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற கவலை தோன்ற ஆரம்பித்தது. யாராவது அவனை எடுத்துக் கொண்டு போய் பிச்சை எடுக்கக் கூடப் பயன்படுத்தலாம் என்று ஒரு நபர் சொல்லப் போய் அவள் பயம் பலமடங்காய் அதிகரித்தது. மழலை மாறாத தன் மகனைக் காப்பாற்ற அவளுக்கு கடவுளைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்போது ஆரம்பித்த வழிபாடுகள் இன்று வரை குறையவில்லை.

ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருந்த அவள் நடைப்பிணமாக வேலைக்கு சென்று வந்தாள். ஆனந்தை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டாள். அவன் பத்திரமாக வீடு வந்து சேரும் வரை நிம்மதியிழந்து தவிப்பாள். அவன் வந்து சேர்ந்த பின் அவனுக்கு சாப்பிடக் கொடுத்த பின் அவள் மனதில் மறுபடி இளைய மகனின் நினைவுகளே வந்து அலைக்கழிக்கும்.

ஆனந்த் தாயின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப பல காலம் முயன்றிருக்கிறான். முதல் ரேங்க் வாங்கிக் கொண்டு வந்து தாயிடம் காண்பிக்கையில் அவளைக் கூர்ந்து கவனிப்பான். அவள் முகத்தில் மகிழ்ச்சி ஒரு கணம் வந்து போகும். அடுத்த கணம் தன் இளைய மகன் படிக்காமல் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறானோ என்ற கவலையில் அவள் மூழ்குவது தெரியும். பத்தாம் வகுப்பில் அவன் தங்க மெடல் வாங்கி பத்திரிகைகளிலெல்லாம் பெயர் வந்தது. அதை வாங்கிப் பார்த்தும் அவள் அழத்தான் செய்தாள். 'அந்தக் குழந்தை என்ன செய்கிறதோ!'. பள்ளியில் ஒரு நாள் அவளையும் அழைத்து பாராட்டு விழா நடத்தினார்கள். அன்று எடுத்த புகைப்படம் இன்றும் அவனிடம் இருக்கிறது. அவன் தாயின் பார்வையில் மகிழ்ச்சிக்குப் பதிலாக வேதனைதான் தெரிந்தது.

இல்லாத தன் தம்பியிடம் தாயைப் பறிகொடுத்து விட்டோம் என்பதை பின்னாட்களில் ஆனந்த் முழுவதுமாக உணர்ந்தான். அவன் தாயின் கவனத்தைக் கவர முயல்வதைப் பின் விட்டு விட்டான். தன்னால் முடிந்த வரை தாயிற்குக் கவலை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொண்டான். வீட்டுக்கு வர வேண்டிய நேரத்தில் அவன் வரா விட்டால் சாரதா பைத்தியம் பிடித்தது போல் ஆகி விடுவாள். ஆகவே ஐந்து நிமிடம் தாமதமாவது போல் இருந்தாலும் அவளுக்கு ஃபோன் செய்து சொல்லி விடுவான். அவன் பத்திரமாக இருக்கிறான் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு அவள் அவனைப் பற்றி நினைப்பது போல் தெரியவில்லை.

மூன்று வருடங்களுக்கு முன் ஞான திருஷ்டியில் பார்த்து எதையும் சொல்லக் கூடிய ஒரு சாதுவைப் பற்றி சாரதா தன் அலுவலக தோழி ஒருத்தி மூலம் கேள்விப்பட்டு ஆனந்திடம் சொன்னாள், "நீ போய் அவரைப் பார்த்து அக்ஷயைப் பத்திக் கேளேன்"

CBI ல் சேர்ந்த பின் பல போலி சாமியார்களைப் பற்றி நிறையவே அறிந்திருந்த ஆனந்திற்கு அந்த சாதுவை சந்திப்பதில் உடன்பாடு இருக்கவில்லை. ஆனால் அந்த நபர் மீது எந்தப் புகாரும் இல்லை, ஏதோ சக்தி வாயந்த மனிதராகத்தான் தென்படுகிறார் என்றும் டிபார்ட்மென்டிலேயே சிலர் சொன்னார்கள். மேலும் சாரதா தனக்கென எதையும் அவனிடம் இது வரை கேட்டதில்லை. அதனால் சென்று அந்த சாதுவைச் சந்தித்தான். பார்க்க அந்த மனிதர் மிகச் சாதாரணமாகத்தான் தெரிந்தார்.

அவன் தன் தம்பியைப் பற்றி சொன்னவுடன் அவர் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின் சொன்னார். "அவன் உடம்பில் பின் புறம் ஏதோ நாகம் மாதிரி மச்சம் தெரிகிறது...."

ஒரு கணம் அவனுக்கு மெய் சிலிர்த்தது. பின் அவன் தொழிலுக்கே உரிய சந்தேகம் வந்தது. 'அம்மா தன் மகனின் அங்க அடையாளத்தைச் சொல்லும் போது பிரத்தியேகமான அந்த நாக மச்சத்தைப் பற்றி எல்லோரிடமும் சொல்வது வழக்கம். இதைப் பற்றி அவள் அலுவலக தோழியிடம் கூட சொல்லி இருக்கலாம். அவள் மூலம் இவருக்கு தெரிந்திருக்கலாம்'.

அவர் கண்களை மூடியபடியே தொடர்ந்தார். "அவன் இந்த தேசத்தில் இல்லை. வேறேதோ தேசத்தில் இருக்கிறான். நிறைய புத்த துறவிகள் தெரிகிறார்கள்... அவன் ஏதோ அங்கு கற்றுக் கொண்டிருக்கிறான்...." பின் நிறைய நேரம் அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் தூங்கி விட்டாரோ என்று ஆனந்த் நினைக்கையில் கண்களைத் திறந்தார்.

"ஆனால் அவனை நிறைய அபாயம் சூழ்ந்திருக்கிறது. எதிர்காலத்தில் அவன் நிறைய அபாயங்களை சந்திக்க வேண்டியிருக்கும்...."

ஆனந்திற்கு அவர் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை. "என்ன ஆகும்?"

அவர் மேலே கைகாட்டினார். "அவன் தீர்மானிக்கிறபடி ஆகும். அவன் தீர்மானம் விளங்கவில்லை. ஆனால் ஒன்று....."

ஆனந்த் அவரைப் பார்த்தான். அவர் சொன்னார். "உன் தம்பி சாதாரணமானவனில்லை"

வீட்டுக்கு வந்து ஆனந்த் அவர் கண்களை மூடிக்கொண்டு சொன்னதை மட்டும் சொன்னான். அவனுடைய நாக மச்சத்தைப் பற்றி அவர் சொன்னார் என்றதுமே சாரதா அவரை பரிபூரணமாக நம்பி விட்டாள்.

புத்த துறவிகளிடம் ஏதோ கற்றுக் கொண்டிருக்கிறான் என்று முடித்த ஆனந்த் "அவர் ஞான திருஷ்டிக்கு வேறெதுவும் தெரியவில்லை" என்றான்.

மறுநாள் சாரதாவின் பூஜையறைக்கு ஒரு புத்தர் சிலையும் வந்து சேர்ந்தது. புத்த பூர்ணிமா அன்று அவள் ஒரு பிரத்தியேக விரதமும் இருக்க ஆரம்பித்தாள்...

**********

சூரியோதயத்திற்கு முன்பு பத்து நபர்கள் நவீன துப்பாக்கியுடன் அந்த புத்த விஹாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அந்த விஹாரத்தின் கதவைப் பலமாகத் தட்டி புத்த பிக்குகளை எழுப்பினார்கள். கதவைத் திறந்த இளைய பிக்கு திடகாத்திரமான அந்த நபர்களைப் பார்த்து திகைத்துப் போனார். மூன்று பேர் கைகளில் பெரிய டார்ச் லைட்டுகளும் இருந்தன. அவர்களில் ஒருவன் முன்பே 'அவனை'த் தேடி வந்தவன். மற்றவர்கள் அவர் இது வரை பார்த்திராதவர்கள். அவர் பின்னால் வந்து நின்ற மற்ற பிக்குகளும் துப்பாக்கிகளுடன் நின்ற அந்த தடியர்களைப் பார்த்து பேச்சிழந்து நிற்க பேச முடிந்தவர் மூத்த பிக்குவே.

"என்ன வேண்டும்?"

"நாங்கள் அந்தத் தீவிரவாதியைத் தேடி வந்திருக்கிறோம்" முன்பு வந்தவனே இப்போதும் பேசினான்.

"அதுதான் அன்றே வந்து பார்த்து விட்டுப் போனீர்களே"

"நாங்கள் பார்த்தது சரியில்லை என்று மேலிடத்தில் சொல்கிறார்கள். அதுதான் மீண்டும் சரியாகத் தேட வந்தோம்"

"இது ஒரு புத்த விஹாரம். இங்கு இது போல் துப்பாக்கிகளுடன் நுழைவது சரியல்ல"

"என்ன செய்வது? அரசாங்க உத்தரவு" சொல்லி விட்டு அவன் தலையசைக்க அந்தக் கும்பல் அவரைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்தது. வேறு வழியில்லாமல் புத்த பிக்குகள் விலகி வழி விட்டார்கள். முதலில் அவர்கள் ஒவ்வொருவர் மீதும் டார்ச் லைட் அடித்து அவர்களை நன்றாக ஆராய்ந்து அவர்களில் 'அவன்' இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மிகக் கவனமாக புத்த விஹாரத்தில் தேடினார்கள். புத்த விஹாரத்தை தங்கள் டார்ச் லைட்களால் ஒளிமயமாக்கிப் பார்த்தார்கள். சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்த சோதனையில் அவன் கிடைக்கவில்லை.

வேறு வழியில்லாமல் அவர்கள் திரும்பிச் செல்ல யத்தனித்த போது இளைய பிக்கு அவர்களை நிறுத்தினார்.

"நீங்கள் சொல்வது போல் அவன் உண்மையிலேயே தீவிரவாதிதானா?"

"ஆமாம்"

"அப்படியானால் நீங்கள் பாதாள அறையையும் பார்த்து விட்டால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும்" என்ற இளைய பிக்கு ஒரு மூலையில் இருந்த ஒரு சிறிய புத்தர் சிலையை நகர்த்திக் காட்டினார். அங்கு சென்று அவர்கள் டார்ச் லைட் அடித்துப் பார்க்க கீழே மரப்படிகள் தெரிந்தன.

மூத்த பிக்கு இளைய பிக்குவை முறைக்க, மற்ற பிக்குகள் இளைய பிக்குவை திகைப்புடன் பார்க்க, அவரோ யாரையும் பார்க்காமல் தலை குனிந்து நின்றார்.

(தொடரும்)

அமானுஷ்யன் - 6



அவன் நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டான். நிறைய நேரம் தூங்கினான். ஆனால் அவன் விழித்திருக்கும் பொழுதுகளில் புத்தபிக்குகளுக்குப் பெரும் உதவியாக இருந்தான். புத்த விஹாரத்தை சுத்தம் செய்ய, உணவு சமைக்க, துவைக்க என்று இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான். அவன் வேலை செய்வதில் கச்சிதத் தன்மை இருந்தது. அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் எதையும் லாவகமாக, வேகமாக செய்து முடித்தான்.

மூத்த பிக்கு மற்ற பிக்குகளிடம் சொன்னார். "பாருங்கள். அவன் வேலை செய்யும் போது கூட சக்தியை அனாவசியமாய் விரயம் செய்வதில்லை. செய்ய வேண்டியதை முழுக்கவனத்துடன் சிறப்பான முறையில் சோர்வு ஏற்படுத்திக் கொள்ளாமல் செய்வது எல்லோருக்கும் முடிந்ததல்ல"

அவனை அந்த புத்த விஹாரத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்து விட்டது. ஒவ்வொருவரைப் பார்க்கும் போதும் அவன் முகத்தில் படரும் ஆத்மார்த்தமான புன்னகைதான் அவனுடைய மிகப்பெரிய மனம் கவரும் அம்சமாக இருந்தது. மற்ற சமயங்களில் சாதாரணமாகத் தெரியும் அவன் முகம் புன்னகைக்கும் சமயங்களில் ஒரு வசீகரனாக அவனை ஆக்கியது. எல்லோரும் அவனால் வசீகரிக்கப்பட்டார்கள். என்றாலும் இளைய பிக்கு அவனுடைய பரம ரசிகராகி விட்டார்.

ஒரு முறை அவன் தூங்கி எழுகையில் அருகில் அமர்ந்திருந்த இளைய பிக்கு சொன்னார்.

"நீ தூங்குவது ஒரு குழந்தை தூங்குவது போல இருக்கிறது. அவ்வளவு அமைதியாகத் தூங்குகிறாய். உன்னால் எப்படி முடிகிறது?"

அதில் என்ன இருக்கிறது என்பது போல அவன் இளைய பிக்குவைப் பார்த்தான்.

இளைய பிக்கு தயக்கத்துடன் விளக்கினார். "உன்னை யாரோ கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். உன் பிணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உனக்கோ நீ யார் என்று நினைவேயில்லை. அப்படி இருக்கையில் ஒரு மனிதனுக்குத் தூக்கம் இப்படி வருமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது...."

அவன் ஒன்றும் சொல்லாமல் இளைய பிக்குவையே பார்த்தான். அவன் முகத்தில் லேசாக வாட்டம் வந்து வேகமாக மறைந்தது. பிறகு புன்னகையுடன் இளைய பிக்குவிடம் சொன்னான். "கடந்த காலம் எல்லாவற்றையும் என்னை மாதிரி மறக்க முடிவது ஒரு விதத்தில் பெரிய வரப்பிரசாதம் இல்லையா? எத்தனை பேர் எல்லாவற்றையும் மறந்து ஒரு புதிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் பழையதை மறக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். எனக்கு கடவுள் கேட்காமலேயே அந்த வரப்பிரச்சாதத்தைக் கொடுத்திருக்கிறார்..."

இளைய பிக்கு அவனையே கூர்ந்து பார்த்தார். அவன் தன் கவலையை மறைத்து இப்படிப் பேசுகிறானா இல்லை நிஜமாகவே சொல்கிறானா? "சரி உன்னைக் கொல்ல ஆட்கள் முயற்சி செய்தது?"

"ஒருவன் எப்போது சாக வேண்டும் என்று தீர்மானிப்பது கடவுள்தான். இவர்கள் எல்லாம் முயற்சி செய்து என்ன ஆகப் போகிறது? அவர்கள் முயற்சி செய்து நான் பிழைத்துக் கொள்ளவில்லையா? அப்படி நான் நாளைக்கே சாக வேண்டும் என்று கடவுள் முடிவு செய்திருந்தால் நான் கவலைப்பட்டு மாற்றவா முடியும்? இல்லா விட்டாலும் மனிதன் என்றாவது ஒரு நாள் செத்துத்தானே ஆக வேண்டும். அது நாளையானால் என்ன இன்னும் நாற்பது வருஷம் கழித்து ஆனாலென்ன?"

இளைய பிக்கு அவனைத் திகைப்புடன் பார்த்தார். அவர் முகத்தில் இன்னும் அவனைப் பற்றிய கவலை இருப்பதைப் பார்த்த அவன் மனம் நெகிழ்ந்து சொன்னான். "ஒரு மனிதனுக்கு ஒரு விதிதான் இருக்க முடியும், பிக்குவே. கவலைப் படுவதால் அந்த விதியை யாரும் மாற்றி விட முடியாது"

இளைய பிக்குவிற்கு அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையை விட அந்த உண்மையை அவன் வாழும் விதம் மிகவும் பிடித்திருந்தது. அது போல் பேசும் பலரை அவர் பார்த்திருக்கிறார். ஆனால் நிஜவாழ்க்கை என்று வரும் போது அப்படிப் பேசுபவர்கள் படும் கவலை சாதாரணமானதல்ல. ஆனால் இவன் முகவாட்டமும் கவலையும் ஒருசில நிமிடங்களுக்கு மேல் இவனிடம் தங்குவதில்லை. வந்தவுடன் அதை விரட்டும் வித்தை அவன் கற்றிருக்கிறான்..

அவன் சாதாரணமானவன் அல்ல என்று மூத்த பிக்கு சொன்னது நினைவுக்கு வந்தது. நேற்றைய தினம் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது அவன் முதுகில் கழுத்துக்கும் சற்று கீழே முதுகுத்தண்டின் மேற்பகுதியில் இருந்த ஒரு பெரிய மச்சத்தை மூத்த பிக்கு நீண்ட நேரம் ஆராய்ந்தார். ஒரு பாம்பு படமெடுப்பது போல் அந்த மச்சம் இருந்தது. மூத்த பிக்கு மனிதர்களின் சாமுத்திரிகா லட்சணத்தை நன்றாக அறிந்தவர். அவர் அந்த மச்சத்தின் அறிகுறி என்ன என்று ஆர்வமாகக் கேட்ட இளைய பிக்குவிடம் அவன் சாதாரணமானவன் அல்ல என்று மட்டும் சொன்னார் ....

இளைய பிக்கு அவனிடம் ஆர்வத்துடன் கேட்டார். "இந்த மச்சம் உனக்கு சிறு வயதிலிருந்தே இருக்கிறதா?"

"எந்த மச்சம்?"

"உன் முதுகின் மேல் புறத்தில் இருக்கும் மச்சம்"

அவன் விழித்தான். இளைய பிக்குவிற்குத் தன் தவறு புரிந்தது. பழையவை எதுவும் நினைவில்லாத அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அவன் அவரிடம் அந்த நாக மச்சத்தைப் பற்றி விளக்கமாகக் கேட்டுக் கொண்டான். என்ன நிறம், என்ன நீள அகலம், பார்க்க எப்படி இருக்கிறது என்றெல்லாம் அவன் கேட்டுத் தெரிந்து கொண்ட போது பாவமாக இருந்தது. தன் உடல் பற்றியே அடுத்தவரிடம் கேட்டறிய வேண்டியது எப்படிப்பட்ட துர்ப்பாக்கியம்?

இளைய பிக்கு விரைவில் பேச்சை மாற்றினார். "உன் காயங்கள் சீக்கிரம் ஆறி வருகின்றன என்று குரு சொன்னார்"

அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. "வலி நிறையவே குறைந்து விட்டது.... மருந்து பாதி ஓய்வு பாதி"

"அப்படியென்றால்?"

"நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளும் உடலில்தான் மருந்து நன்றாக வேலை செய்யும்."

'இப்படிப் பெரிய பெரிய உண்மைகள் எல்லாம் தெரிகிற இவனுக்கு தன்னைப் பற்றிய உண்மை நினைவில்லையே' என்று நினைத்து இளைய பிக்கு பெருமூச்சு விட்டார்.

*******

CBI மனிதன் மனதில் அமானுஷ்யனே நிறைந்திருந்தான். படித்த அந்தப் பக்கங்களில் இருப்பதெல்லாம் உண்மையானால் அவர்கள் பயப்படுவது நியாயமே என்பது அவனுக்குப் புரிந்தது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு அவன் தன்னுடைய ஆளிற்கு ஃபோன் செய்தான்.

"அவனைச் சுட்ட அந்த ராத்திரியில் என்ன நடந்ததுன்னு எனக்கு சின்ன விஷயம் கூட விடாம சொல்லு"

மறுபக்கத்தில் அந்த இரவின் நிகழ்ச்சிகள் மறுபடியும் விளக்கப்பட்டன. எல்லாவற்றையும் பொறுமையாகவும் கவனமாகவும் கேட்டு விட்டு ஒரு கேள்வியை மிக நிதானமாக CBI மனிதன் கேட்டான். "நீங்க அவனைச் சுட்ட பிறகு அவன் தவறி அந்த மலையுச்சியில் இருந்து விழுந்தானா? இல்லை மலையுச்சியிலிருந்து அவனாகவே குதித்தானா?"

மறுபக்கம் சிறிது நேரம் பதிலளிக்க எடுத்துக் கொண்டது. "சார்...அவனாகவே குதித்த மாதிரிதான் தோணுது"

சிறிது நேரம் மௌனம் சாதித்த CBI மனிதன் சொன்னான். "எனக்கு அந்த புத்த விஹாரத்தை சோதனை செய்த ரெண்டு பேர்ல எவனுக்கு அதிக மூளை இருக்கோ அவன் கிட்ட பேசணும். எவ்வளவு சீக்கிரம் பேச முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேசணும். என்னோட நம்பருக்குப் ஃபோன் செய்யச் சொல்லு"

"சார். அவங்க அந்தப் பிணத்தைத் தேடிட்டு இருக்கிற இடங்கள்ல பெரும்பாலும் டவர் கிடைக்கிறதில்லை. அவனைப் பிடிக்கிறது கஷ்டம். ஆனா முடிஞ்ச அளவு சீக்கிரம் உங்க கிட்ட பேசச் சொல்றேன்......"

CBI மனிதன் தூங்கவில்லை. அவன் அந்த ஃபோன் காலுக்காகக் காத்திருந்தான். காத்திருந்த போது நிமிடங்கள் யுகங்களாக நகர்ந்தன. அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தவன் எழுந்து சென்று தானே காபி தயார் செய்து குடித்தான். காபியின் லேசான கசப்பை கண்களை மூடிக் கொண்டு அனுபவித்தவன் ஆச்சார்யாவை சபித்தான். "எங்கிருந்து பிடித்தான் இந்த ஆள் அந்த அமானுஷ்யனை?"

மலையுச்சியில் இருந்து அவனாகவே விழுந்தது CBI மனிதனுக்கு நெருடலாக இருந்தது. ஒரு வேளை அவன் அந்தப் புத்தவிஹாரத்தின் அருகில் விழுந்து அவர்கள் அவனை எடுத்துக் காப்பாற்றி இருந்தால்....? என்ற கேள்வி பூதாகரமாக மனதில் எழுந்தது. சிந்திக்க ஆரம்பித்தான்.

சரியாக இரண்டு மணி முப்பத்திரண்டு நிமிடங்கள் கழிந்த பின் அவன் எதிர்பார்த்த ஃபோன் வந்தது.

CBI மனிதன் நேரடியாக விஷயத்திற்கு வந்தான். "பிணத்தைத் தேடிகிட்டு போன உங்களுக்கு புத்த விஹாரத்தின் உள்ளே போய்ப் பார்க்கணும்னு எப்படி தோணிச்சு?"

"கதவுல இரத்தக்கறை இருந்தது சார்"

"அப்புறம்"

"அங்கே கையில் கட்டு போட்டுகிட்டு ஒரு வயசான பிக்கு வந்தார். அவர் கையில் அடிபட்ட காயம்னு புரிஞ்சது. ஆனாலும் எதுக்கும் உள்ளே போய் பார்த்துடலாம்னு உள்ளே போய் ஒரு இடம் விடாமல் பார்த்தோம்....."

"அங்கே கரண்ட் இருக்கா?"

"இல்லை சார். உள்ளே இருட்டுதான். அங்கங்க விளக்கு வச்சிருந்தாங்க. மீதி இருட்டான இடத்தையும் நாங்க டார்ச் அடிச்சுப் பார்த்துட்டோம். ஒரு இடத்தையும் மிச்சம் வைக்கலை...அவன் பிணம் இல்லை"

"நீங்க ரெண்டு பேரும் உள்ளே நுழைஞ்சதுல இருந்து பார்த்த ஒவ்வொன்னையும் சொல்லு பார்க்கலாம்"

அவன் விவரித்தான். முழுவதையும் கேட்டுக் கொண்ட CBI மனிதன் கடைசியில் கேட்டான். "அந்த தியான மண்டபத்தில் நிறைய பிக்குகள் தியானம் செய்துட்டு இருந்தாங்களே அவங்கள்ல ஒருத்தனாய் அவன் இருந்திருந்தால்....? நீங்க ஒவ்வொருத்தர் முகத்தையும் சரியா கவனிச்சீங்களா?"

"அங்கே பிக்குகள் மட்டும்தான் இருந்தாங்க சார்"

"நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு. அவங்க ஒவ்வொருத்தரையும் டார்ச் அடிச்சுப் பார்த்தீங்களா?"

தயக்கத்துடன் பதில் வந்தது. "..... இல்லை சார்."

CBI மனிதனுக்குப் புரிந்தது. அமானுஷ்யன் பற்றியறிந்த விவரங்கள் படித்திரா விட்டால் அப்படிப் பார்க்க வேண்டிய அவசியம் தனக்கே புரிந்திருக்காது என்கிற போது அவனைக் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. அவன் அந்த பிக்குவின் கைக்காயத்தைப் பார்த்த பின் கூட உள்ளே போய் பார்த்ததே பெரிய விஷயம்!

"சரி உடனடியா பத்து பேராவது அந்த புத்த விஹாரத்துக்குப் போங்க. வலுவான ஆள்களா பெரிய டார்ச் லைட்களோட போங்க. அங்கே இன்னொரு தடவை செக் பண்ணுங்க. ஒவ்வொரு ஆளையும் ஒவ்வொரு இடத்தையும் செக் பண்ணுங்க. ஒரு வேளை அவன் மாறு வேஷத்துல கூட இருக்கலாம். அவன் அங்கே இருந்தா துப்பாக்கி ரவையில மூளையைக் குறி பார்த்து சுடுங்க. இதயத்தைக் குறி பார்த்து சுடுங்க. அவன் செத்தாலும் அவனை எரிச்சு அவன் சாம்பலானவுடன் எனக்கு சொல்லுங்க....நான் உங்க பாஸ் கிட்டயும் இப்பவே ஃபோன் செய்து சொல்றேன். உடனே கிளம்புங்க."

(தொடரும்)

Monday, June 30, 2014

அமானுஷ்யன் - 5




மஹாவீர் ஜெயின் தன் எதிரே அமர்ந்து ·பைலில் மூழ்கியிருந்த ஆனந்தையே பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனையோ சினிமா கதாநாயகர்களை விட ஆனந்த் அழகாயிருந்தான். வயது 29 என்று ரிகார்டில் இருந்தாலும் இன்னும் இளமையாகத் தெரிந்தான். ஆனால் முகத்தில் ஒரு வித சோகம் கூட இருந்ததாகத் தோன்றியது. ஆச்சார்யாவின் கொலை பற்றிய பைலைப் படித்துக் கொண்டிருப்பதால் ஆச்சார்யாவை நினைத்து சோகமா, இல்லை வேறு ஏதோ வருத்தத்தில் அவன் இருக்கிறானா என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவன் படிப்பதை முடித்த பிறகு கொலை நடந்த இடத்தின் புகைப்படங்களை ஆராய்ந்தான். ஆச்சார்யாவின் பிணத்தின் புகைப்படத்தை விட அதிகமாக அவர் வீட்டுக்கு காவலில் இருந்த போலீஸ்காரர் பிணத்தின் புகைப்படத்தை ஆராய்ந்தான். பிறகு போலீஸ் ரிப்போர்ட்டைப் படித்து விட்டுச் சொன்னான். "போலீஸ் இது ஏதோ பழைய பகை என்று காண்பிக்கவே முயற்சி செய்திருக்கிறார்களே ஒழிய பல விஷயங்களை கண்டுகிட்ட மாதிரியே தெரியலை"

"உதாரணமா..."

"இந்த போலீஸ்காரர் முன்னந்தலையில் பெரிய தடியால் அடித்து அவரைக் கொன்றிருக்கிறார்கள்...."

"ஆமாம். அதற்கென்ன?"

"அப்படியானால் அவர் எதிரே வந்துதான் அடித்திருக்க முடியும்"

"ஆமாம்"

"துப்பாக்கியுடன் காவலுக்கு நிற்கிற ஒரு போலீஸ்காரர் எதிரே யாராவது தடியுடன் வந்தால் சும்மாவா இருப்பார். எவ்வளவு வேகமாக எதிராளி வந்தாலும் குறைந்த பட்சம் துப்பாக்கியையாவது எடுக்காமல் இருப்பாரா. இதில் துப்பாக்கியை எடுத்த மாதிரியே தெரியவில்லையே"

ஜெயினுக்கு அவன் அறிவுக் கூர்மை பிடித்திருந்தது. "அந்தப் போலீஸ்காரருடன் யாராவது பேசிக் கொண்டிருந்தே இருந்து விட்டு திடீர் என்று அவர் எதிர்பார்க்காத போது அடித்திருக்கலாம்...."

"அப்படியானால் அது அந்த போலீஸ்காரருக்கு நன்றாகத் தெரிந்த மனிதராக இருந்திருக்க வேண்டும். பிறகு ஆச்சார்யாவும் வந்தவருக்கு அந்த இரவு நேரத்தில் கதவைத் திறந்திருக்கிறார் என்றால் அவருக்கும் கொலையாளியை நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும். அப்படியானால் கொலையாளி இரண்டு பேருக்கும் நன்றாகவே தெரிந்த, அவர்கள் சந்தேகப்படாத ஆள். அதனால் கொலையாளி கண்டிப்பா போலீஸ் சந்தேகப்படற மாதிரி முந்தைய பகையாளியாய் இருக்க முடியாது..."

ஜெயின் தலையாட்டினார். அவன் சில நிமிடங்களிலேயே அந்த உண்மையை அடைந்தது அவரை மனதினுள் சபாஷ் போட வைத்தது. தன் தேர்வு சரிதான் என்ற பூரண நம்பிக்கை அவருக்கு வர "ஆனந்த் அந்த ·பைலில் இல்லாத சில விஷயங்களையும் நீ தெரிந்து கொள்ள வேண்டும்...." என்று அவனிடம் மறைக்காமல் ஆச்சார்யா சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் சொன்னார்.

ஆச்சார்யாவின் பழைய வில்லங்கமான கண்டுபிடிப்புகளை வெளியே யாரையோ வைத்து அவர் செய்த விதம், அந்த நபர்கள் யாரென "பாதுகாப்பு" காரணங்களுக்காக வெளியே சொல்ல மறுத்தது, அந்த ஆபிசிலேயே புல்லுருவிகள் இருப்பதாக அவர் சொன்னது, கடைசி நாளில் சாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அவர் ஃபோன் செய்தது என எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னார்.

கவனமாக எல்லாவற்றையும் கேட்ட ஆனந்த், "அவர் கண்டுபிடிக்கப் பயன்படுத்திய வெளியாள் யாராக இருக்கும் என்று ஏதாவது யூகம் இருக்கிறதா?" எனக் கேட்டான்

"இல்லை"

"ஆபிசில் வேறு யாருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கா?"

"இல்லை"

"அவர் கடைசியா போனில் சொன்னதை அப்படியே சொல்லுங்க சார்"

"சார், நாட்டையே அதிர வைக்கிற மாதிரியான சில தகவல்களை ஆதாரத்தோட வைத்திருக்கிறேன். நாளைக்குக் காலையில் உங்க டேபிள்ல வைக்கிறேன்னார்"

"அவர் இறந்தது இரவு ஒன்றரை மணிக்கு. உங்களுக்குப் ஃபோன் செய்தது எத்தனை மணிக்கு?"

"சுமார் பத்து இருக்கும்"

"அப்படின்னா அவர் வைத்திருக்கிறதா சொன்ன ஆதாரங்கள் அவர் கையிலேயோ வீட்டிலேயோதான் இருந்திருக்க வாய்ப்பு அதிகம்"

"ஆமாம். அந்த ஆதாரங்கள் அவர் வீட்டிலேயே இன்னமும் இருக்க வாய்ப்பு இருக்கா?"

"பெரும்பாலும் அந்த ஆதாரங்கள் அந்தக் கொலையாளிகள் கையில் கிடைத்து அவர்கள் எடுத்துக் கொண்டு போயிருப்பாங்கன்னு தோணுது."

*********

இரவு மணி பதினொன்று. டில்லி நகரின் புறப்பகுதியில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் ஒரு கார் தனியாக நின்றிருந்தது. CBI மனிதன் தன் காரை அரை கிலோ மீட்டர் தள்ளியே நிறுத்தி நடந்து வந்து அந்தக் காரை அடைந்தான். யாரும் அவனைப் பின் தொடரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு அந்தக் கார் ஜன்னலைத் தட்டினான். முன் கதவு திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்து அமர்ந்தான். உள்ளே விளக்கு இல்ல. தூரத்து தெரு விளக்கின் அரைகுறை வெளிச்சத்தில் சரியாகப் பார்க்க அவனுக்கு சில வினாடிகள் தேவைப்பட்டன.

டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த நபரை நேரில் சந்திப்பது அதுவே முதல் முறை. வயது அதிகபட்சம் இருபத்தொன்று இருக்கலாம். குறுந்தாடியுடன் சிவப்பாக இருந்தான். அந்த மனிதன் CBI மனிதனை உணர்ச்சியே இல்லாமல் கூர்ந்து பார்த்தான். அவன் முகம் இறுகி இருந்தது. CBI மனிதன் அவனைப் பார்த்து "ஹலோ" என்றான். அந்த நபர் அவனுடைய ஹலோவை அங்கீகரிக்கவில்லை. பார்வையைத் திருப்பிக் கொள்ளவுமில்லை.

பின் சீட்டில் இருந்து குரல் கேட்டது. "உங்க ஆள்கள் அங்கே இருந்து ஃபோன் செய்தாங்களா?"

CBI மனிதன் பின்னால் திரும்பி வணக்கம் சொன்னான். பின்னால் இருந்த மனிதர் வெறுமனே தலையசைத்தார்.

"செய்தாங்க. ஆனா அவன் பிணம் இன்னும் கிடைக்கலை..."

குறுந்தாடியும், பின்னால் இருந்த மனிதரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதைக் கவனிக்கத் தவறாத CBI மனிதன் பொறுமையாகச் சொன்னான். "பாருங்க... அவனைப் பற்றி நான் அவங்க கிட்ட தெளிவாய் சொல்லியிருக்கேன். நீங்க சொன்ன மாதிரி அவன் பயங்கரமானவன், அவனுக்குப் பல பேர் இருக்கு, பல வேஷம் போடுவான். அதனால சின்ன அலட்சியம் கூட இருக்கக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன். அவங்களும் அதை மனசுல வச்சுதான் தேடிகிட்டிருக்காங்க. ஆனா பர்சனலா எனக்குத் தோணறதை மறுபடியும் சொல்றேன். என்னதான் அசகாய சூரனே ஆனாலும் உயிர் இருந்தாத்தானே நாம் கவலைப்படணும். குண்டடி பட்ட அவன் கீழே தண்ணியிலேயோ, மணல்லயோ விழுந்தா பிழைக்க வாய்ப்பு இருக்கு. மலையில இருந்து விழுந்திருக்கான்கிறப்ப......"

பின்னால் இருந்த நபர் அவனுடைய சைகையாலேயே நிறுத்தினார். தன் கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னார். "எங்களைப் பொறுத்த வரை அவன் உடம்பு கிடைக்கிற வரை நிம்மதியாய் இருக்க முடியாது. அவனைப் பத்தி முழுவதும் தெரிஞ்சாதான் உங்களுக்கு எங்க கவலை புரியும்.... முதல்ல இந்த பேப்பர்ஸைப் படிங்க"

சொன்னது அவரென்றாலும் அந்தக் காகிதங்களை குறுந்தாடிதான் நீட்டினான். வாங்கிக் கொண்ட காகிதங்கள் பல இருப்பதைப் பார்த்த CBI மனிதன் "நான் வீட்டுக்குப் போய்ப் படிக்கிறேனே" என்றான். இந்த அரையிருட்டில் படிப்பதுதான் எப்படி. மேலும் இவர்களையே இந்த அளவு பயமுறுத்துபவன் வித்தியாசமானவனாக இருப்பான் போல் இருக்கிறது. புரிந்து கொள்ள நிதானமாய்த்தான் படிக்க வேண்டும்.

பின்னால் இருந்தவர் சொன்னார். "இங்கேயே படிங்க"

தன் கையில் இருந்த டார்ச் லைட்டை அந்தக் காகிதங்களில் அடித்து அவன் படிக்க குறுந்தாடி வசதி செய்தான். அந்தக் காகிதங்களைத் தன்னிடம் தந்தனுப்ப விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட CBI மனிதன் அந்த டார்ச் லைட் வெளிச்சத்தில் படிக்க ஆரம்பித்தான்.

படிக்க ஆரம்பித்தவன் சிறிது நேரத்தில் மற்ற எல்லாவற்றையும் மறந்தான். சரியாக நாற்பது நிமிடங்கள் படித்து அவன் முடித்த போது அந்தக் குளிரிலும் அவனுக்கு முத்து முத்தாக வியர்த்தது. "என்னால நம்ப முடியலை....."

"காரணம் நீங்க அவனைப் பார்த்ததில்லை. நாங்க பார்த்திருக்கோம்...."

குறுந்தாடி கண்களில் ஏதோ ஒரு அழுத்தமான உணர்ச்சி வந்து போனது. பயமா? கோபமா?

CBI மனிதன் அதைக் கவனித்தபடியே கேட்டான். "இதுல இருக்கறதுல எல்லாமே உண்மையா?" அவன் அதில் பாதியாவது பொய்யாயிருக்கலாம் என்று எண்ணினான்.

"இதுல உண்மையை வடிகட்டி எழுதியிருக்கிறாங்க. வடிகட்டிப் பார்க்காத விஷயங்க நிறைய இருக்கு. அதையும் எழுதறதுன்னா ஒரு புஸ்தகம் பத்தாது..." பின் சீட்டிலிருந்தவர் சொன்னார்.

அமானுஷ்யன் என்ற பெயர் அந்த செத்துப் போன மனிதனுக்கு மிகவும் பொருத்தம்தான் என்று தோன்றியது. ஒரு வேளை தப்பித் தவறி அந்த அமானுஷ்யன் இறந்து போகாமல் இருந்தால்.... CBI மனிதன் கைக்குட்டையால் வியர்வையைத் துடைத்துக் கொண்டான். இவர்கள் பயத்தின் காரணம் மெள்ள புரிய ஆரம்பித்தது.

அவனையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குறுந்தாடி முதல் முறையாக வாயைத் திறந்தான். "அவன் பிணத்தைக் கண்ணால் பார்த்து எரிச்சு சாம்பலாகிறதையும் கண்ணால் பார்த்தால் ஒழிய அவன் செத்துட்டான்னு பல பேர் நம்ப மாட்டாங்க. அதனால அவன் செத்துட்டான்கிறதை எப்படியாவது உறுதிப்படுத்துங்க"

(தொடரும்)

அமானுஷ்யன் - 4



மூத்த பிக்குவும் இளைய பிக்குவும் வந்தவர்கள் இருவரும் கண்ணை விட்டு மறையும் வரை நின்று பார்த்து விட்டு பரபரப்புடன் புத்த விஹாரத்தினுள் நுழைந்தார்கள். அவன் எப்படி மாயமாயிருப்பான் என்று வியப்புடன் தியான மண்டபத்திற்குள் இருந்த பிக்குகளிடம் போய் மூத்த பிக்கு "அவன் எங்கே போனான் பார்த்தீர்களா?" என்று கேட்டார்.

"நான் எங்கேயும் போகவில்லை. இங்கேயே தான் இருக்கிறேன்" என்ற குரல் புத்த பிக்குகளின் மத்தியில் இருந்து கேட்டது. மூத்த பிக்குவும், இளைய பிக்குவும் குழப்பத்துடன் புத்த பிக்குகளின் மத்தியில் அவனைத் தேடினார்கள்.

புன்னகையுடன் ஒரு புத்த பிக்குவாக அவன் எழுந்தான். அவன் பேண்ட் ஷர்ட்டிற்குப் பதிலாக புத்த பிக்குகளின் சந்தன நிற உடையில் இருந்தான். ஒரு சந்தன நிறத் துணியைத் தலையில் கச்சிதமாகக் கட்டியிருந்தது பிக்குவைப் போல மொட்டைத் தலையுடன் இருப்பது போன்ற தோற்றத்தை அந்த மங்கலான விளக்கொளியில் ஏற்படுத்தியது. அவன் தலையில் இருந்த கட்டையும் மறைத்தது. மார்பில் குறுக்கு வாட்டாக புத்தபிக்குகளைப் போல அணிந்திருந்த ஆடை அவன் தோளில் இருந்த கட்டை மறைத்தது.

மூத்த பிக்கு அவனை பிரமிப்புடன் பார்த்தார். "அவர்கள் உன்னை இங்கே கண்டுபிடித்திருந்தால்...."

"அவர்கள் தேடி வந்த ஆள் பேண்ட், ஷர்ட் போட்டிருப்பான். குண்டடி பட்டிருப்பான். பிணமாக இருக்கலாம். படுத்தபடி இருக்கலாம். ஒளிந்தும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக புத்தபிக்குவாக தியான நிலையில் இருக்க மாட்டான். மனிதன் எதிர்பார்ப்பதைத் தவிர வேறு எதையும் காண்பதில்லை குருவே.... இங்கு தியான மண்டபத்தில் வந்த போது அவர்கள் புத்த பகவானின் பின் புறத்தில் இருட்டைப் பார்த்தார்கள். இருந்தால் அங்கேதான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதற்குப் பின் அவர்களுக்கு அரைகுறை வெளிச்சத்தில் இருப்பவர்களைப் பார்க்கும் அளவுக்குப் பொறுமையில்லை. வெளிச்சத்தில் இருந்தவர்களைக் கூட உன்னிப்பாகப் பார்க்க வேண்டும் என்பதை யாரும் அவர்களுக்குக் கற்றுத் தரவில்லை போலிருக்கிறது...."

இளைய பிக்கு மனதில் அவன் ஹீரோவாகி விட்டான். சந்தோஷமாக இளைய பிக்கு கைகளைத் தட்ட மூத்த பிக்கு புன்னகையை மறைத்துக் கொண்டு கடுமையாகப் பார்க்க முயற்சித்தார். ஆனால் அவர் கவனம் பிக்குவின் உடையில் இருக்கும் மற்றவனின் மீதே இருந்தது. தலைக் காயமும், தோள் காயமும் எந்த அளவு வலியை அவனுக்குத் தந்து கொண்டிருக்கும் என்பதை உடலியல் சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற அவர் அறிவார். உடல் ரீதியான இந்தப் பிரச்சினையை விடத் தன் பெயர் உட்படப் பழைய நினைவுகள் மறந்து போன அவனுடைய மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் அவரால் அனுமானிக்க முடிந்தது. ஆனால் எல்லாவற்றையும் மறந்த அவன் எப்படி உயிருடன் இருப்பது என்ற கலையை மிகச் சிறப்பாக நினைவில் வைத்திருக்கிறான். ஒரு வேளை அது அவனுடய உயிரில் கலந்திருக்கிறதோ என்னவோ.

"உன்னுடைய பேண்ட் ஷர்ட் எங்கே?" என்று மூத்த பிக்கு அவனிடம் கேட்டார். வந்தவர்கள் அவற்றை எங்காவது ஒரு மூலையில் பார்த்திருந்தால் கூட நிலைமை விபரீதமாகப் போயிருக்கும்.

"அதையெல்லாம் மடித்து அதன் மேல் உட்கார்ந்து தான் தியானம் செய்தேன்...." அவன் குறும்பாகச் சொல்லிப் புன்னகைத்தான். புன்னகைக்கும் வரை சாதாரணமாகத் தெரிந்த அவன் புன்னகைத்த போது மிக அழகாகத் தெரிந்ததை அவர் மறுபடியும் கவனித்தார்.

அவன் குற்றவுணர்ச்சியோடு சொன்னான். "அவர்கள் உள்ளே வந்து தேடக் கூடும் என்ற சந்தேகம் வந்த போது அந்த அறையில் மடித்து வைத்திருந்த இந்த உடையை உங்கள் அனுமதியில்லாமல் எடுத்துப் போட்டுக் கொண்டேன். மன்னிக்கணும். நான் இதைத் துவைத்து உங்களுக்குத் தந்து விடுகிறேன்...."

இளம் பிக்கு உற்சாகமாகச் சொன்னார். "அது பரவாயில்லை. அது என்னுடைய உடைதான்...."

மூத்த பிக்கு அவனைக் கூர்மையாகக் கவனித்தார். அவன் அந்த உடைகளை அணிந்திருந்த விதம் கச்சிதமாக இருந்தது. முதல் முதலில் ஒரு பிக்குவின் ஆடையை அணிபவர்கள் போல் சிறு சிறு குறைபாடுகள் கூட இல்லை. அவன் நிமிடத்திற்கு நிமிடம் அவரை ஆச்சரியப்படுத்தினான். வந்தவர்கள் அவனைத் தீவிரவாதி என்றார்கள். ஆனால் அவனைப் பார்த்தால் அவருக்கு துளியும் அப்படித் தோன்றவில்லை. மாறாக வந்தவர்களைப் பார்த்தால்தான் அவருக்குத் தீவிரவாதிகளாகத் தோன்றுகிறது.

அவனைத் தேடி வந்தவன் சொன்னது நினைவுக்கு வந்தது. "அவனைப் பொறுத்த வரை எதுவும் நடக்கலாம் என்கிறார்கள்" . மூத்த பிக்கு புன்னகைத்தார். 'அவர்கள் சொன்னபடிதான் இவன் நடந்து கொள்கிறான்.'

அவர் புன்னகையைப் பார்த்த அவன் கேட்டான். "ஏன் சிரிக்கிறீர்கள்?"

"வந்தவர்கள் சொன்னார்கள். 'உன்னைப் பொறுத்த வரை எதுவும் நடக்கலாமாம்'"

அவன் முகம் ஒரு கணம் களையிழந்தது. "அவர்கள் என்னைப் பற்றி வேறு எதாவது சொன்னார்களா?"

"உன் பெயர் என்ன என்று கேட்டேன். 'உனக்குப் பல பெயர் இருப்பதாகச் சொன்னார்கள்"

அவன் ஆழ்ந்த யோசனையுடன் சொன்னான். "அதில் எனக்கு ஒரு பெயர் கூட ஞாபகம் வரவில்லை"

மூத்த பிக்கு அவன் அருகில் வந்து சொன்னார். "உன் பெயர் எதுவாக இருந்தாலும் நீ சாதாரணமானவன் அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. மலை உச்சியில் இருந்து விழுந்திருக்கிறாய். இங்கு கூரையிலிருந்து கீழே விழுந்த இடத்தில் இருந்த கல்லால் உன் தலையில் அடிபட்டிருக்கிறதே தவிர உன் எலும்புகள் எதுவும் முறியவில்லை. சில நுணுக்கமான மூச்சு வித்தைகள் தெரிந்தால் நம் உடலை மிகவும் லேசாக்கிக் கொள்ளலாம். அப்படி செய்து லகுவாக விழுந்திருந்தால் மட்டுமே எலும்புகள் உடையாது தப்பிக்க முடியும். அதுவும் தோளில் துப்பாக்கிக் குண்டு பட்ட காயம் இருக்கையில் அது போன்ற மூச்சுப் பயிற்சியை செய்ய முடிவது சாதாரணமானதல்ல. மேலும் உன் குண்டை எடுக்கையில் கூட நீ பொறுத்துக் கொண்ட விதம் ஒரு ஹத யோகியின் கட்டுப்பாடாக இருந்தது...."

".... நீ விழித்தவுடன் 'நான் யார்' என்று கேட்டாய். அது ஏதோ ஒரு தென்னிந்திய மொழி. அது உன் தாய் மொழியாக இருக்கலாம். நான் ஹிந்தியில் பேசியவுடன் சுலபமாக நீ ஹிந்திக்கு மாறினாய். நீ அரை மயக்கத்தில் இருந்த போது காஷ்மீரியிலும், உருதுவிலும் பேசினாய். உனக்குப் பல மொழிகள் தெரியும் என்று தோன்றுகிறது. உன்னைத் தேடி ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் மின்னல் வேகத்தில் இந்த உடைகளுக்கு மாறியது, உன் பேண்ட் ஷர்ட்டை அப்படியே விட்டு விடாமல் அதைக் கொண்டு வந்து சமயோசிதமாய் தியானம் செய்து கொண்டிருந்த கூட்டத்தில் சேர்ந்து கொண்டது இதெல்லாம் நீ ஒரு அதிபுத்திசாலி என்பதை உணர்த்துகிறது...."

அவன் அவர் சொன்னதற்குப் பெருமைப்பட்ட மாதிரி தெரியவில்லை. அவன் குறுக்கிட்டுக் கேட்டான். "நான் அரை மயக்கத்தில் காஷ்மீரியிலும் உருதுவிலும் ஏதோ பேசினேன் என்றீர்களே. என்ன சொன்னேன்?"

அவர் சொன்னார். "எனக்கு சரியாகப் புரியவில்லை". ஆனால் உண்மையில் அவன் பேசியது அவருக்கு நன்றாகப் புரிந்தது. அவன் அரை மயக்கத்தில் சொன்னது இது தான். "என் வழியில் வராதீர்கள். வருவது எமன் வழியில் வருவது போலத்தான்"

*****

"ஹலோ"

"CBIயில் ஆச்சார்யா கொலைக் கேஸ் பற்றி துப்பு துலக்க சென்னையிலிருந்து 'ஆனந்த்'ங்கிற ஆபிசரை வரவழைக்கப் போகிறார்கள்" CBIயைச் சேர்ந்த அந்த மனிதன் தெரிவித்தான்.

"ஆள் எப்படி?"

"அவனோட ·பைலை இப்போதுதான் படிச்சு முடிச்சேன். இந்தக் கொலையில் நாம் ஏதாவது தடயம் விட்டு வைத்திருந்தால் கண்டிப்பாய் அவன் கண்டுபிடிக்காமல் விடமாட்டான். ரொம்பவே ஸ்மார்ட்...."

"நாம் ஏதாவது தடயம் விட்டு வைத்திருக்கிறோமா?"

"இல்லை... ஆனால் அப்படித்தான் ஒவ்வொரு கொலைகாரனும் நினைக்கிறான். ஆனந்தை CBI தேர்ந்தெடுத்தது நல்ல சகுனமாக எனக்குப் படலை, சார். அந்த ஆள் கடமைக்கு வேலை செய்யற டைப் அல்ல. ஒவ்வொரு கேஸையும் தனக்கு பர்சனல் சேலஞ்சாய் நினைக்கிற ஆள் அவன். எதற்கும் நாம் ஜாக்கிரதையாக இருக்கிறது நல்லது..."

"அவன் CBIக்கும் அரசாங்கத்துக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவன். அவனை எப்ப வேணும்னாலும் நாம் விலக்கிக்கலாம். அப்படி வர்றப்ப நான் பார்த்துக்கறேன். ஆனந்தை விடுங்கள். யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் உலாவும் ஒரு மனிதனை நினைத்து நான் கவலைப்படுகிறேன். எனக்கு அந்த அமானுஷ்யனைப் பற்றி சொல்லுங்கள். அவன் பிணம் கிடைத்ததா?"

"துரதிஷ்டவசமாக கிடைக்கலை, சார். ஆனால் அவன் அந்த உயரத்திலிருந்து குண்டடியும் பட்டு கீழே விழுந்ததால் பிழைக்க வாய்ப்பே இல்லை சார். என்னோட ஆட்கள் அங்கே வலை வீசித் தேடிகிட்டுருக்காங்க..."

மறுபக்கத்திலிருந்து சில வினாடிகள் பேச்சில்லை. யாரோ தாழ்ந்த குரலில் ஃபோன் பேசிக் கொண்டிருந்த நபரிடம் ஏதோ சொன்னது போல் இருந்தது. பின் அந்த மனிதர் கேட்டார். "மலையுச்சியில் இருந்து அவன் கீழே விழுந்தால் உத்தேசமாக எங்கே விழுவான் என்று உங்கள் ஆட்களால் கணக்குப் போட முடியவில்லையா?"

"அவனைச் சுட்டு அவன் விழுந்தது நள்ளிரவு நேரத்தில் சார். அவன் விழுந்தது எங்கே என்று அவர்களுக்குத் தெரியவில்லை. விடிந்தவுடன் அவர்கள் கணக்குப் போட்டுப் பார்த்ததில் ரெண்டு இடங்களில் அவன் விழுந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கு... அவன் நேராக விழுந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே இருக்கிற பாறைகளில் விழுந்து சிதறியிருக்கணும் சார். அப்படி ஆகியிருந்தால் அவன் உடலை அங்கிருக்கும் மிருகங்கள் சாப்பிட்டிருக்கும்.அவன் கொஞ்சம் டைவர்ட் ஆகி விழுந்திருந்தால் அதில் கால் வாசி தூரத்தில் இருக்கிற புத்தவிஹாரம் ஒன்றின் முன் விழுந்திருக்கலாம்."

"அந்த புத்த விஹாரத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? உங்கள் ஆட்கள் அங்கே சோதனை செய்தார்களா?"

"அந்த புத்த பிக்குகள் அப்படி ஒரு உடல் விழுந்ததாகத் தெரியவில்லை என்கிறார்கள். அந்த வட்டாரத்தில் அவன் உடலும் கிடைக்கவில்லை. என் ஆட்கள் அந்த புத்த விஹாரத்தின் உள்ளே கூடப் போய் நன்றாகப் பார்த்து விட்டார்கள். அவன் உடல் கிடைக்கவில்லை."

"அந்த அடிமட்டப் பாறைகளைப் போய்ப் பார்த்தார்களா?"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் போன் செய்தார்கள். உடல் எதுவும் கிடைக்கலை. பாறைகளை ஐஸ் கவர் செய்திருப்பதால் ரத்தக்கறை இருக்கான்னு பார்க்க முடியலை...."

மறுபக்கத்தில் மறுபடி தாழ்ந்த குரலில் ரகசிய ஆலோசனை. அவன் உடல் கிடைக்கவில்லை என்பது அவர்களை நிறையவே கலவரப்படுத்தி உள்ளது என்பதை உணர்ந்த CBI மனிதன் சொன்னான். "சார்! நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவன் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லைங்கறதுதான் அந்த இடத்துல இருந்த ஆள்கள் எல்லாருடைய கருத்தும்...."

ஒரு நிமிட அசாதாரண மௌனத்திற்குப் பின் மறுபக்கத்திலிருந்து குரல் வந்தது.

"உங்களுக்கு நிலைமை புரியலை. அவனைப் பற்றியும் தெரியலை. நாம் நேரில் சந்திக்கறது அவசியம்னு தோணுது....."

(தொடரும்)