Sunday, June 15, 2014

பரம(ன்) ரகசியம் – 82

றக்கம் தழுவ ஆரம்பித்த வேளையில் தான் பார்த்தசாரதியின் செல்போன் இசைத்தது. பேசியவர் தன்னை  யாரென்று கூட அறிமுகப்படுத்தாமல் சொன்ன செய்தி அவரை அதிரச் செய்தது. “ஈஸ்வரைக் கொலை செய்யப் போறாங்க. அவனைக் காப்பாத்துங்க. ப்ளீஸ்

குரல் தென்னரசு குரல் போலத் தெரிந்தது பிரமையா, உண்மையா என்று அவருக்குத் தெரியவில்லை. பார்த்தசாரதி மின்னல் வேகத்தில் இயங்கினார். உடனடியாகச் சிலருக்குப் போன் செய்து பேசிய அவர் தானும் வேகமாகத் தோட்ட வீட்டுக்குக் கிளம்பினார். 

பாபுஜி சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு குருஜி ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டார். பாபுஜி சொன்னார். “எனக்குப் புரியுது குருஜி. அந்த ஆளை நீங்கள் மட்டுமல்ல எல்லாருமே நம்பினோம். திடீர்னு இப்படி பல்டி அடிப்பான்னு யாருமே எதிர்பார்க்கலை......

சிறிது நேரம் மௌனம் சாதித்த குருஜி பின் வரண்ட குரலில் கேட்டார். “தென்னரசு பார்த்தசாரதியிடம் பேசினது இது தான் முதல் தடவையா? இல்லை, இதற்கு முன்னாடியும் செல்போன்ல பேசி இருக்கானா?

இது தான் முதல் தடவை மாதிரி தெரியுது குருஜி

குருஜி கண்களைத் திறந்தார். அவர் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை என்பது பாபுஜிக்குப் புரிந்தது. மெல்ல ஒரு புகைப்படத்தையும் ஒரு காகிதத்தையும் அவர் குருஜியிடம் நீட்டினார். எகிப்தின் மிலிட்டரி இந்த ஆளைத் தேர்தலில் நிறுத்தலாமான்னு நினைக்குது. இந்த ஆள் நம் ஆளுக்கும் நெருங்கிய நண்பராம். விசேஷ மானஸ லிங்கத்தோட சக்தி காத்து, புயல், வெள்ளம்னு இயற்கை சக்திகளை மட்டும் தான் கட்டுப்படுத்துமா இல்லை மக்களோட மனசையும் கட்டுப்படுத்துமான்னு இன்னும் அவங்களுக்கு சந்தேகம் இருக்கு. சொல்லப்போனா எனக்குக் கூட அந்த சந்தேகம் இருக்கு. அதைத் தெரிஞ்சுக்க நமக்கு இது நல்ல சந்தர்ப்பம் இல்லையா?

அந்தப் புகைப்படத்தையும், குறிப்புகள் எழுதிய தாளையும் குருஜி வாங்கிக் கொண்டார். ஆனால் அவர் மனம் மட்டும் இன்னும் தென்னரசு சமாச்சாரத்திலேயே இருந்தது. “மகேஷுக்கு...?

“மகேஷ் தூங்கப் போயிட்டான். நாங்களா எதுவும் சொல்லப் போகலை

“சொல்ல வேண்டாம்...

ஸ்வர் இரவு பதினோரு மணி வரை சின்னத் தூக்கம் போட்டு விட்டு பின்பு தான் குளித்து விட்டுப் பூஜை அறைக்குப் போனான். விசேஷ மானஸ லிங்கத்தின் புகைப்படத்தை வணங்கி விட்டு மூச்சில் ஆரம்பித்து அந்தப் புகைப்படத்தில் கவனத்தைக் குவிக்க ஆரம்பித்த போது தான் தன் அருகில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்தான். கூடவே திருநீறின் மணம் அந்த பூஜை அறையை நிறைத்தது. கண்களைத் திறந்து அவன் பார்த்தால் பசுபதி தான் நின்றிருந்தார்.  பெரிய தாத்தா இது வரை அவனுக்குத் தரிசனம் தந்தது இல்லை.... அவரை அவன் திகைப்புடனும் பிரமிப்புடனும் பார்த்தான். அவர் கருணை நிறைந்த விழிகளால் அவரைப் பார்த்தார்.   

மெய்சிலிர்த்தவனாய் அவன் அவரைக் குனிந்து வணங்கினான். ஒரு துப்பாக்கிக் குண்டு அவன் தலை இருந்த இடத்தைத் தாண்டிச் சென்று சுவரில் பதிந்தது.  அதிர்ச்சியுடன் நிமிர்ந்த ஈஸ்வருக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. அப்போது தான் வீட்டு வாசலில் முகமூடி அணிந்திருந்த ஒருவன் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நிற்பதை அவன் கவனித்தான். அருகே இருந்த பசுபதியைக் காணவில்லை.

அந்த முகமூடிக்காரனும் அவன் குனிவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மறுபடி சுட அவன் யத்தனித்த போது ஈஸ்வர் சிவனை மனதில் தியானித்து  விட்டு அந்த அறையில் இருந்த தேவாரப் புத்தகத்தை அவன் மீது விட்டெறிந்தான். தேவாரப்புத்தகம் அந்த முகமூடி மனிதன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிக் கொண்டு போய் விழுந்தது. அவன் மின்னலாய்ப் பாய்ந்து அந்தத் துப்பாக்கியை எடுத்த போது விசில் சத்தம் கேட்டது. அவனுடன் வந்த சகா வெளியில் இருந்து சிக்னல் தருகிறான். யாரோ வருகிறார்கள். திரும்பிப் பார்த்தான். ஈஸ்வர் காணவில்லை. ஒரு கணம் யோசித்தவன் பின் தலை தெறிக்க வெளியே ஓடினான். ஒரு போலீஸ்காரர் உள்ளே வந்து கொண்டிருந்தார். அவர் அவனைப் பிடிக்க யத்தனிப்பதற்குள் அவன் அவரைத் தாண்டி ஓடினான். அவனைப் பின் தொடர்வதா, இல்லை ஈஸ்வரைப் போய் பார்ப்பதா என்று குழம்பிய போலீஸ்காரர் ஈஸ்வருக்கு ஆபத்து உள்ளதா என்று பார்ப்பதே முக்கியம் என்று நினைத்தவராக வீட்டுக்குள் ஓடி வந்து பூஜையறையை எட்டிப் பார்த்த போது சுவரோடு ஓட்டி ஈஸ்வர் நின்றிருந்தான்.

அடுத்த கால் மணி நேரத்தில் வேறு இரண்டு போலீஸ்காரர்களும் பார்த்தசாரதியும் வந்து சேர்ந்தார்கள்.

ஸ்வரைக் கொல்ல முடியவில்லை என்ற செய்தி பாபுஜியை எரிச்சலூட்டியது. இத்தனைக்கும் அவர் அனுப்பிய ஆள் குறி தவறாமல் சுடுவதில் பேர் போனவன். “என்ன ஆச்சு?

“அவன் திடீர்னு குனிஞ்சு தரையக் கும்பிட்டான் சார். அப்ப மிஸ் ஆயிடுச்சு...என்று ஆரம்பித்து அந்த ஆள் நடந்ததை எல்லாம் சொன்னான்.

பாபுஜி குருஜியிடம் வந்து ஈஸ்வர் உயிர் தப்பியதைச் சொன்னான். “... அவன் திடீர்னு தரையைத் தொட்டுக் கும்பிட்டானாம். ஏன்னு தெரியலை

வேதபாடசாலையின் மண்ணை ஈஸ்வர் கும்பிட்டது நினைவுக்கு வர குருஜி சொன்னார். “அவனுக்கு அடிக்கடி தரையைத் தொட்டுக் கும்பிடற பழக்கம் உண்டு

பாபுஜி குழப்பத்துடனும், கோபத்துடனும் கேட்டார். “அவன் என்ன லூஸா குருஜி?

பார்த்தசாரதிக்கு ஈஸ்வர் நலமாய் இருப்பதைப் பார்த்த பிறகு தான் நிம்மதி ஏற்பட்டது. ஈஸ்வர் சொன்னதை எல்லாம் கேட்ட போது பசுபதி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளா விட்டாலும் கூடத் தன் குடும்பத்தாரைக் காப்பாற்றுவதில் இறந்த பின்னும் அக்கறை கொண்டவராகவே இருக்கிறார் என்று தோன்றியது. ஈஸ்வர் அந்த தேவாரப் புத்தகத்தை எறியாமல் இருந்திருந்தாலும் காப்பாற்றப்பட்டிருப்பானா என்று கேட்டுக் கொண்டார். விடை தெரியவில்லை.

ஈஸ்வர் மற்ற போலீஸ்காரர்களும், பார்த்தசாரதியும் அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தது எப்படி என்று கேட்டான். யாரோ ஒரு மர்மநபர் போன் செய்தார் என்று மட்டும் பார்த்தசாரதி தெரிவித்தார். கேட்ட குரல் தென்னரசுவின் குரல் போல் இருந்தது என்று அவனிடம் அவர் சொல்லவில்லை. தென்னரசு பற்றிய சந்தேகத்தை அவர் அவனிடம் சொல்லி இருக்காதது போலவே, குழம்ப வைத்த இந்தப் போன் கால் விஷயத்தையும் அவர் சொல்லவில்லை. தென்னரசு ஒரு புதிராகவே அவருக்கு இருந்தார்....

பரமேஸ்வரனின் பேரனுக்குப் பாதுகாப்பு அளிக்க மேலிடத்தில் சொல்வதில் அவருக்குப் பிரச்சினை இருக்கவில்லை.   ஒரு முறை கொலை முயற்சி நடந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் எத்தனை ஆட்கள் ஈஸ்வரின் பாதுகாப்புக்குத் தேவை என்று கேட்டு அனுமதி அளித்து விட்டார்கள். பார்த்தசாரதியும் ஈஸ்வர் அங்கிருக்கும் வரை தானும் அங்கிருப்பது என்ற முடிவுக்கு வந்தார்.  

ஈஸ்வர் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் முதல் வேலையாக கணபதியைத் தொடர்பு கொள்ள நினைத்தான். கொலை முயற்சி, பசுபதி தரிசனம் போன்ற எத்தனையோ விஷயங்களைப் பற்றி யோசிக்க மனம் முனைந்தாலும் அவன் அந்த விபரீத ஆராய்ச்சிகள் தொடர்ந்து விசேஷ மானஸ லிங்கம் தவறானவர்கள் வசம் போய் விடக் கூடாது என்பதற்கே முன்னுரிமை தந்தான். காலம் அவன் வசம் இல்லை.... அவன் நிதானித்தால் அவர்கள் முந்தி விடுவார்கள். பின் அவர்களை நிறுத்துவது கஷ்டம் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.

அதை பார்த்தசாரதியிடம் தெரிவித்து விட்டு பூஜையறைக்குப் போனவனுக்கு விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகளுடன் லயிக்க முன்பை விட அதிக நேரம் தேவைப்பட்டது. அது சாத்தியமான போது விசேஷ மானஸ லிங்கத்தின் தரிசனம் கிடைத்தது. ஓங்கார நாதம் கேட்டுக் கொண்டிருக்க விசேஷ மானஸ லிங்கம் தனியாக விளக்கொளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் யாரும் அருகில் தெரியவில்லை. ஈஸ்வர் மானசீகமாக கணபதியைத் தேடினான். மனக்கண்ணில் கணபதியைப் பார்த்து தன் கவனத்தைக் குவித்தான். சிறிது நேரத்தில் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த கணபதி அவன் மனக்கண்ணில் தெரிந்தான். ஈஸ்வர் அவனை அழைத்தான். கணபதி, கணபதி

கணபதியை எழுப்புவது சுலபமாக இருக்கவில்லை. ஈஸ்வர் பல முறை முயற்சி செய்ய வேண்டி வந்தது. கணபதிக்கு கனவில் ஈஸ்வர் தெரிந்தான். ஈஸ்வரைக் கனவில் பார்த்த சந்தோஷம் கணபதி முகத்தில் தெரிந்தது. ‘அண்ணன்என்று மனதில் சொல்லிக் கொண்டு கணபதி புரண்டு படுத்தான்.

“கணபதி... கணபதி... எழுந்திரு கணபதி.. உன் கிட்ட பேசணும்

இயல்பாகவே தூக்கம் அதிகமாக இருந்த கணபதி என்ன இந்த அண்ணன் என்னைத் தூங்கவே விட மாட்டேன்கிறார்என்று சொல்லிக் கொண்டே  மீண்டும் உறங்கப் பார்த்தான். ஆனால் ஈஸ்வர் கூப்பிட்டுக் கொண்டே இருப்பது போல் தோன்றவே கஷ்டப்பட்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். “என்ன இன்னைக்கு அண்ணன் கனவாவே வருது....

எழுந்து உட்கார்ந்த கணபதியிடம் என்ன சொல்வது, எப்படி சொல்வது என்பது ஈஸ்வருக்குத் தெளிவில்லாமல் இருந்தது. நேரில் சொல்வதே கஷ்டம் தான். அப்படி இருக்கையில் இப்படி டெலிபதியாக அனுப்பும் செய்திகள் அவனுக்கு எந்த அளவு புரியும் என்பதும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இவனோடு சேர்ந்து ஞானம் படைத்தவனைத் தேடுவது என்பது இமாலய சாதனையாகவே இருக்கும் போலத் தெரிந்தது.

ஈஸ்வர் சொன்னான். “கணபதி நீ தப்பான இடத்தில் இருக்கே. நீ நினைக்கிற மாதிரி அந்த குருஜி நல்லவர் இல்லை.... அந்த சிவலிங்கத்தை அவர்கள் கண்டிப்பாகத் தப்பான வழியில் தான் பயன்படுத்தப் போகிறாங்க

கணபதிக்கு ஆச்சரியமாய் இருந்தது. “என்ன இது கண்ணு முழிச்சா கனவு போயிடும்பாங்க. எனக்கு இன்னும் கனவு அப்படியே இருக்கு. அண்ணன் வேற ஏதோ சொல்றாரு

செய்தி அவனைப் போய் சேரவில்லை என்பது புரியவே ஈஸ்வர் சொன்னதில் சில வார்த்தைகளை மட்டும் அழுத்தமாய் சொன்னான். தப்பான இடம்... தப்பான இடம்.... குருஜி... குருஜி... நல்லவரில்லை..... தப்பு நடக்குது.... தப்பு நடக்குது...

கணபதிக்குத் தப்பு என்கிற சொல் மட்டும் தெளிவாக மனதில் பதிந்தது. அவனுக்குத் தெரிந்து அவன் சமீபத்தில் செய்த தப்பு சிவன் முன்னாலேயே உட்கார்ந்து கொண்டு சீடை சாப்பிட்டது தான். “ஆமா நான் சீடை சாப்பிட்டது தப்பு தான்.. அதை இவர் வேற சொல்லணுமா?... இது அண்ணனுக்கு எப்படித் தெரிஞ்சுது.... சிவன் வேலையா இது? ஏன் சிவனே, நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேனே, பின்ன ஏன் ஊர் பூரா அதைச் சொல்லி இருக்கே?

ஈஸ்வருக்கு அவன் ஏதோ சாப்பிடுவது பற்றி சொல்கிற மாதிரி இருந்தது. திடீர் என்று விசேஷ மானஸ லிங்கம் கணபதி அருகே தெரிந்தது. கணபதி அந்த சிவலிங்கத்தை நினைத்திருக்கிறான் போல இருக்கிறது! அவன் சொல்லி முடித்த வார்த்தைகளில் மறுபடி கவனம் வைப்பது சுலபமாக இருந்தது. கவனத்தைக் கூராக்கிய போது கணபதி சொன்னதைத் திரும்பக் கேட்க முடிந்தது.  ஈஸ்வருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

ஈஸ்வர் கணபதி அருகே தெரிந்த விசேஷ மானஸ லிங்கத்தை மானசீகமாக வணங்கினான். “கடவுளே, இப்படி ஒரு வெகுளியைப் படைச்சுட்டு அவனை இப்போது அவர்கள் பக்கம் நிறுத்தி இருக்கிறியே. இது நியாயமா? இவனுக்கு நான் என்ன சொல்லி எப்படி புரிய வைப்பேன்?

கணபதிக்கு ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்தை வணங்குவது தெரிந்தது. சந்தோஷமாய் சொன்னான். “அண்ணா. இது தான் நான் சொன்ன சிவன்... இவருக்கு ரொம்பவே சக்தி இருக்கு. என்ன நினைச்சாலும் செய்து கொடுப்பார்.... ரொம்பவே நல்லவரு

ஈஸ்வர் பாதி சிரிப்புடனும் பாதி மனத்தாங்கலுடன் பரமனிடம் கேட்டான். “இவன் கிட்ட நல்லவருன்னு சர்டிபிகேட் வாங்கிற அளவு நீ நிஜமாகவே நல்லவன் தானா. அப்படியானால் அவனை ஏன் மோசமான ஆட்கள் பயன்படுத்த நீ அனுமதிக்கிறாய்?

விசேஷ மானஸ லிங்கம் மௌனம் சாதித்தது. பக்தர்களின் தர்மசங்கடமான கேள்விகளுக்கு இறைவன் பதில் அளிப்பதில்லை போலும்! ஈஸ்வர் மறுபடியும் கணபதிக்குப் புரிய வைக்க முயற்சித்தான். “கணபதி குருஜி கெட்டவர்நம்பாதே. சிவலிஙகத்தை வச்சு தப்பு பண்ணப் போறாங்க.என்று திரும்பத் திரும்ப அழுத்திச் சொன்னான்.
 
கணபதிக்கு அவன் சொல்வது புரிகிற மாதிரி இருந்தது. ஆனால் அதன் கூடவே ‘என்ன அண்ணன் குருஜியைப் போய் கெட்டவர்ன்னு சொல்றார்?என்று மனம் பதறியது. “அண்ணா உங்களுக்குக் குருஜியைத் தெரியாது. அதனால தான் அப்படிச் சொல்றீங்க. அவர் ரொம்ப நல்லவருஎன்றான்.

ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்திடம் சொன்னான். “இவன் உன்னையும் நல்லவர்னு சொல்றான். குருஜியையும் நல்லவர்னு சொல்றான். இவன் அகராதியில கெட்டவங்கன்னு யாராவது இருக்காங்களா?

கணபதிக்கு ஈஸ்வர் சிவலிங்கத்தைப் பார்த்து ஏதோ கேட்பது போலத் தெரிந்தது. ‘ஓ குருஜி நல்லவரான்னு அண்ணன் சிவன் கிட்ட கேட்கறார் போலத் தெரியுது. சிவனே... நீயே அண்ணன் கிட்ட சொல்லு. குருஜி நல்லவர்ன்னு... அண்ணன் அமெரிக்காவுலயே இருந்தவருங்கறதால அண்ணனுக்கு குருஜி பத்தி தெரியாதுல்ல....

ஈஸ்வர் பேச்சும் செயலும் இழந்து போய் கணபதியைப் பார்த்தான். இவன் மனதில் இந்த அளவு உயர்ந்த இடம் பிடித்துள்ள குருஜியை அவன் எப்படி இறக்குவான்?

ஈஸ்வர் ஒன்றுமே சொல்லாமல் தன்னையே பார்ப்பது கணபதிக்கு மனதில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அண்ணனும் நல்லவர் தான். அவர் ஏன் குருஜியை தப்பாய் சொல்றார்

அவனையும் கூட கணபதி நல்லவர் என்று சொன்னதற்கு விசேஷ மானஸ லிங்கம் சிரிப்பது போல் ஈஸ்வருக்கு பிரமை ஏற்பட்டது.  ஈஸ்வர் குருஜியைப் பற்றி இனி இவனிடம் எதுவும் சொல்லிப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டான். அடுத்ததாகச் சொன்னான். “கணபதி அங்கே தப்பு நடக்குது... தப்பு நடக்குது

ஈஸ்வர் சீடை விவகாரம் இல்லாத தப்பு ஒன்றைச் சொல்கிறான் என்று கணபதிக்குப் புரிந்தது. அநியாயமாய் சிவன் சீடை சமாச்சாரத்தை அண்ணனிடம் சொல்லிட்டார்னு நினைச்சுட்டமே. என்னை மன்னிச்சுடு சிவனே. எனக்கு அறிவு அவ்வளவு தான்.... கனவுல வந்து அண்ணன் நிஜமாவே பேசற மாதிரி இருக்கே. என்ன இது? அண்ணன் எதைத் தப்புன்னு சொல்றார்?”.  கணபதி எழுந்து விட்டான்.

ஈஸ்வர் திகைத்தான். ‘இவன் எங்கே கிளம்பிட்டான்?

கணபதி அறையை விட்டு வெளியே வந்தான். ஹரிராம் அறைக் கதவு திறந்திருந்தது. எட்டிப் பார்த்தான். ஹரிராம் பகவத் கீதை படித்துக் கொண்டிருந்தார். நீங்க இன்னும். தூங்கலையா. எனக்கு ஒரு உபகாரம் செய்யறீங்களா? என் கனவுல எங்க அண்ணன் வந்து தப்பு நடக்குது’ ’தப்பு நடக்குதுன்னு சொல்ற மாதிரி இருக்கு. இது தூக்கத்துல வர்ற கனவு இல்லை. முழிச்சுகிட்டே இருக்கறப்ப வர்ற கனவு. என்ன செய்யலாம். நீங்களே சொல்லுங்களேன்

ஹரிராமிற்கு கணபதி சொன்னது புரிய சிறிது நேரம் ஆனது. பகவத் கீதையை மூடி வைத்து விட்டு அவனைப் பார்த்துப் புன்னகை செய்தார். இவனுக்கு முழிச்சுகிட்டே இருக்கறப்ப வர்ற கனவுஎன்ன என்று பார்த்தார். அவன் மூலமாக அவருக்கு ஈஸ்வர் தெரிந்தான்.

ஈஸ்வருக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடைசியில் குருஜியின் கூட்டத்து ஆள் ஒருவரிடம் போய் இதைச் சொல்கிறானே இவன்?

ஹரிராம் கேட்டார். “இது தான் உங்கண்ணனா?

கணபதிக்கு ஆச்சரியமாய் இருந்தது. “ஓ... கனவுல வர்ற ஆளைக் கூட உங்களால பார்க்க முடியுமா? ஆமா அது தான் எங்கண்ணன். அண்ணன்னா சொந்த அண்ணன் இல்லை. அப்படி இருந்திருந்தா அவர் அழகுல பாதியாவது எனக்கு வந்திருக்காதா? அவர் எனக்கு அண்ணன் மாதிரி... இப்ப சிவலிங்கத்துக்கு ஒரு பட்டு வேஷ்டி கட்டியிருக்கேனே, அது அவர் வாங்கித் தந்தது தான்.....

கணபதி நிறுத்தாமல் அன்று நடந்ததை எல்லாம் சொன்னான்.  ஹரிராமிற்கு அவன் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை, அவனைப் பார்க்கையிலேயே அவன் வாழ்க்கையில் இருந்து எந்த விஷயத்தையும் அவரால் தெரிந்து கொள்ள முடியும் என்றாலும் கூட அவன் சொன்னதை சுவாரசியத்துடன் கேட்டார்.

“...இன்னொரு வேஷ்டி என் பிள்ளையாருக்கு வாங்கித் தந்திருக்கார். அதையும் உங்களுக்குக் காட்டவா?...கேட்டு விட்டு பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் கணபதி உற்சாகமாகத் தனதறைக்கு ஓடினான்.

ஈஸ்வருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கணபதி அந்தப் பட்டுத் துணியுடன் வந்து ஆவலுடன் ஹரிராமைக் கேட்டான். “நல்லா இருக்கில்ல?

ஹரிராம் தலையசைத்தார். “இன்னும் இதை என் பிள்ளையார் பார்க்கல.என்று அவன் சொல்ல ஹரிராம் புன்னகைத்தார். அவ ர் இது வரை இப்படி ஒரு அன்பான நல்ல மனதைப் பார்க்கவில்லை. சொல்லப் போனால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத ஒரு நல்ல உள்ளத்தை முதல் முறையாகத் தன் வாழ்க்கையில் அவர் பார்க்கிறார்.

அவனிடம் கேட்டார். “சரி உங்க அண்ணன் தப்பு நடக்குதுன்னு எதைச் சொல்றார்?

அது தான் புரியலைஎன்று சொன்ன கணபதி விரித்த பட்டு வேஷ்டியைக் கவனமாக மடிக்க ஆரம்பித்தான். ஹரிராம் பார்வை அவனை ஊடுருவி ஈஸ்வரைப் பார்த்தது. ஈஸ்வருக்கு அவரை நம்பலாமா கூடாதா என்று தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு அவரை விட்டால் அவனுக்கு வேறு வழியில்லை. அவர் கணபதியைப் பார்த்த பார்வையில் இருந்த கனிவு அவரை நம்பச் சொன்னது.

“தயவு செய்து அவனுக்குப் புரிய வையுங்கள்...என்று ஆரம்பித்த ஈஸ்வர் கணபதிக்குத் தெரிவிக்க நினைத்த விஷயத்தைச் சொன்னான். ஈஸ்வர் மன அலைகளில் அனுப்பியதை ஹரிராம் அப்படியே அவனுக்கு பேச்சு வடிவில் தெரிவித்தார்.

கணபதி தலையைப் பலமாக ஆட்டிச் சொன்னான். “அண்ணன் தப்பா புரிஞ்சுகிட்டிருக்கார். குருஜி தப்பு செய்ய மாட்டார்..... அவரை எனக்கு எத்தனையோ வருஷமாத் தெரியும்.... இந்த ஆராய்ச்சி தப்பானதுன்னா அவர் அதுக்கு அனுமதிக்கவே மாட்டார்

ஈஸ்வருக்கு இனி எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. பரிதாபமாக அவனைப் பார்க்க கணபதிக்கு அதைப் பார்க்கவும் கஷ்டமாய் இருந்தது. இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்த கணபதி ஒரு முடிவுக்கு வந்தான். “குருஜியை நேராவே கேட்டுடறேன்.

அவன் உறுதியாகத் தீர்மானித்து விட்டு குருஜியின் அறையை நோக்கி நடந்தான். வேண்டாம்.. வேண்டாம்என்று ஈஸ்வர் பதற்றத்துடன் அனுப்பிய செய்தியை கணபதி பொருட்படுத்தவில்லை.

(தொடரும்)

No comments:

Post a Comment