Tuesday, February 26, 2013

சொல்லித் தெரிவது தான் மன்மதக் கலை

பல பாலியல் சிக்கல்களின் காரணங்களில் ஒன்று அறியாமை. இந்த அறியாமை நமது கலாசாரம், பண்பாடு என்ற போர்வைகளால் போர்த்தப்பட்டிருக்கிறது. ஆணும் பெண்ணும் இணைந்து சமமாக படிப்பதும், பணி செய்வதும் சர்வசாதாரணமாகிவிட்ட இந்த கால கட்டத்தில் பாலியல் அறிவு அவசியம் தேவை. ‘சொல்லித் தெரிவதில்லை மன்மத கலை’ என்று காலம் காலமாக சமுதாயம் கருதிக் கொண்டு இருக்கிறது. பலர் இதனை நம்பிக் கொண்டும் இருக்கிறார்கள். முதலில் இந்தக் கருத்து எதனால் எழுந்தது என்று பார்க்க வேண்டும். செக்ஸ் என்பதே தவறானது என்பதை வலியுறுத்துவதற்காக சொல்லப்பட்ட மூட நம்பிக்கை இது. செக்ஸ் பற்றிய அறிவு பற்றாக்குறையும், விழிப்புணர்ச்சி பஞ்சமும் தான் இப்படி மக்கள் கருதக் காரணமாகும்.
செக்ஸ் ஒரு தம்பதியின் தனிப்பட்ட ரகசிய வாழ்க்கை. இதில் ஆராய்ச்சி தேவையில்லை என்பது தான் இன்று வரைக்கும் பலரது எண்ணம். தனிப்பட்ட ஒரு தம்பதி நான்கு சுவருக்குள் எப்படி இருக்கிறார்கள், அவர்களது செக்ஸ் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதில் மூக்கை நுழைக்கக் கூடாது தான். ஆனால், எல்லா விஷயமும் எல்லாருக்கும் தெரியாதல்லவா? அதனை தெரிந்து கொள்ள, தெரியப்படுத்த செக்ஸ் பற்றிய பொதுவான செய்திகளை, நடவடிக்கைகளை அலசி ஆராய்வது ஒன்றும் தவறு கிடையாது. இது தான் பாலியல் கல்வியின் அடிப்படை நோக்கமாகும். தம்பதிகள் எப்படி உடலுறவில் ஈடுபட்டால் சந்தோஷம் பன்மடங்காகும்? என்பதைச் சொல்வதற்காகவாவது பாலியல் பற்றி பேசுவது நல்லதல்லவா? இந்திய அளவில் தான் நிலைமை இப்படி இருக்கிறது. முன்னேறிய சமுதாய மக்களை கொண்டிருக்கிற வெளிநாட்டினர் இதில் பெரிதும் விழிப்புணர்ச்சியுடன் திகழ்கிறார்கள். இந்திய அளவில் உற்று நோக்கினால்… நமது விஞ்ஞானப் பார்வைகள், பொருளாதார நிலைமை, உற்பத்தித் திறன், வாழ்க்கைத் தரம் போன்ற அனைத்தும் கீழ் நிலையில் இருப்பது தான் காரணம். இதனால் தான் நாம் செக்ஸ் அறிவில் பின் தங்கியுள்ளோம். செக்ஸ் அறிவில், செக்ஸ் செயல்பாடுகளில் எந்த பிரச்சனையும் இல்லையெனில்… செக்ஸை அடுத்தவர் தெரிந்து கொள்ளக் கூடாத ஒரு விசயமாக கருதுவது சரியானது தான். ஆனால் பிரச்சனை இருப்பவர்கள் அதனைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது மூட நம்பிக்கை அல்லவா? ஆகவே, செக்ஸ் மூட நம்பிக்கையிலிருந்து விடுபட்டு செக்ஸ் நிஜங்களில் தெளிவு அடைந்தால் இல்லறம் இனிதாகும். செக்ஸ் பற்றி எந்த விதமான அறிவும் இல்லாதவர்கள் நிரம்பிய சமுதாயத்தில் எப்படி செக்ஸ் தெளிவு ஏற்படும்? சரியாக தெரியாமல் ஒரு செயலில் ஈடுபடுகிற போது அந்த செயல் எவ்வளவு வெற்றி பெறும் என்பதை நீங்களே பட்டியலிட்டுப் பாருங்கள். செக்ஸ் என்பது ஆபாசமானதோ அருவருப்பானதோ அல்ல. அப்படியிருந்திருந்தால் நமது முன்னோர்கள் கோயில்களில் அதை பறை சாற்றியிருக்க மாட்டார்கள். உதாரணம் – கஜுராஹோ. திருமணம் ஆன தம்பதிகளுக்கு யாரும் எதுவும் ‘சொல்லித் தரத் தேவையில்லை. சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை’ போன்ற கருத்துகளை தூக்கி எறியுங்கள். உண்மையை தெரிந்து கொள்ள முடியாத நிலைமையை இந்த கருத்துக்கள் உருவாக்கி விடும். எனவே ‘சொல்லித் தெரிவது தான் மன்மதக்கலை’ என்று உங்கள் கருத்துக்களை இன்றிலிருந்து மாற்றிக் கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment