Tuesday, February 26, 2013

சரும பாதிப்புகள்

நமது சர்மத்தின் மேற்பரப்பில் பல நுண்ணுயிர்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இவை உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு சர்மம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சர்ம முடியும், நகங்களும் நுண்ணுயிர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுப்பதில் உதவுகின்றன. சர்மத்தின் செல்கள் 30 நாளுக்கு ஒரு முறை இறந்து போய் புது செல்கள் உண்டாவதும், நுண்ணுயிர்கள் அகற்ற உதவுகின்றது. செபேசியஸ் சுரப்பிகள் சுரக்கும் சர்ம எண்ணை சீபம், பேக்டீரியா போன்ற கிருமிகளை தடுக்கும் பொருட்களை உடையது. தவிர தோலின் பிஹெச் ரேட்டியோ எனப்படும் அமில, கார அலகு, அமிலத்தன்மை அதிகமுள்ளதாக இருப்பதால் பல கிருமிகள் தோலில் படிந்து வளர்ச்சியடைய முடியாது. ஆனால் அக்குள்களிலும், தொடையும், அடிவயிறும் சேரும் பாகங்களில் அமிலத்தன்மை குறைவாக இருப்பதால், இந்த இடங்களில் சுலபமாக நுண்ணுயுர்கள் தாக்கி, படை, சொறி, அரிப்பு இவற்றை உண்டாக்குகின்றன.
பிஎச்ரேட்டியோ என்றால் என்ன
ஒரு கலவையில் இருக்கும் ஒரு முனைப்படுத்தப்பட்ட ஹைட்ரஜன் மரபணுக்கள் தான் அந்த கலவையில் அமிலத்தன்மையையும், காரத் தன்மையையும் நிர்ணயிக்கின்றன. இந்த ஹைட்ரஜன் அயன்களின் அளவு பிஎச் 7 ஆக இருந்தால் கலவையின் அமிலமும் காரங்களும் நடுநிலையாக இருக்கிறது என்று அர்த்தம். பிஎச் 7 க்கு மேலிருந்தால் காரத்தன்மை அதிகம். பிஎச் 7 க்கு குறைந்தால் அமிலத்தன்மை அதிகம். தோலை பொருத்தவரை, பிஎச் 5.5 முதல் 6 வரை இருந்தால் நல்லது.
சர்மத்தை பாதிப்பவை என்னவென்று பார்ப்போம்
அரிப்பு, தொற்றில்லாத கரப்பான், சினைப்பு பொதுவான அரிப்பு, டெர்மடைடீஸ் சோரியாசிஸ் முதலியன.
முகப்பரு
அழுத்தத்தால் ஏற்படும் புண்கள்
வியர்வை பிரச்சனைகள்
நிறமூட்டி கோளாறுகள் – இதில் அல்பினிஸம், விடிலிகோ, மெலாஸ்மா இவை அடங்கும்.
பாக்டீரியாவால் வருபவை – இதில் சீழ் கொப்புளங்கள், ஃபர்னங்கிலஸ், ஃபாலிக்குலைடீஸ், தோல் கட்டிகள், கொப்பளங்கள், செல்லூலைட்டீஸ் முதலியன.
ஃபங்கஸால் வருபவை – படர் தாமரை, கான்டீடாஸிஸ் முதலியன.
புல்லுருவிகளால் – சொறி, சிரங்கு, பேன் தொல்லை முதலியன.
வைரஸால் வருபவை – மரு, பாலுண்ணிகள், ஹெர்பஸ் தொற்று போன்றவை.
சூரிய வெப்பத்தால் ஏற்படுபவை.
வயது இவற்றை விரிவாக பார்ப்போம்.
அரிப்பும் உலர்ந்த தோலும்
உலர்ந்த, செதில் செதில்களாக தோலுரியும் சர்மம், எல்லா வயதினர்களுக்கும் ஏற்படும். குறிப்பாக 60 வயதிற்கு மேலிருப்பவர்களுக்கு எண்ணைப்பசை குறைவால் தோல் அரிப்பு ஏற்படும். குளிர்காலத்தில் அதிகமாகும். உலர்ந்த சர்ம நிலையை செரோசிஸ் என்பார்கள். இந்த வறட்சி தோல் மீதும் ஏற்படும். சரீரத்தின் உட்புறத்திலும் உண்டாகும். சர்மத்தின் மேல் ஏற்படும் வறட்சியால், உடலெல்லாம் சாம்பல் தடவியது போலிருக்கும். தேமல்கள் தோன்றும் . சொறிந்தால் சாம்பல் நிற துகள்கள் உதிரும்.
காரணங்கள்
எக்சிமா போன்ற சர்ம நோய்கள், கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள்
சுற்றுப்புற காற்றில் ஈரப்பசை குறைவு.
அடிக்கடி குளிப்பது, கடினமான சோப்புகளை உபயோகிப்பது.
ஆயுர்வேத நிவாரணங்கள்
பிண்ட தைலத்தை சிறிது சூடாக்கி உடம்பெல்லாம் தடவி, 1/2 மணி ஊறி பயத்தம் மாவினால் தேய்த்து குளிக்க வேண்டும். சர்மத்தின் வறட்சி நீங்க, எண்ணை பசை தெரியும் வரை இந்த குளியலை தொடரவும்.
அருகம்புல் தைலத்தையும், பிண்டத் தைலத்திற்கு பதில் உபயோகிக்கலாம்.
ஆயுர்வேத தயாரிப்பான நீலி கரள காதி தைலமும் பயனளிக்கும்.
சோப்பை உபயோகிக்க வேண்டாம்.
சர்ம வறட்சியுள்ளவர்கள், நீர் நிறைந்த தக்காளி, புடலங்காய், பூசணி, வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாமிச சூப்பும் நல்லது. எள்ளுச் சோறு, தேங்காய் சாதம், நெய்யில் வறுத்த முந்திரிபருப்பு, திராஷை நிறைந்த பால் பாயசம் உடலில் எண்ணைபசையை உண்டாக்கும்.
வேலமரப்பட்டை, மாமரப்பட்டை இவற்றை தலா 25 கிராம் எடுத்துக் ஒரு லிட்டர் நீரில் காய்ச்சவும். எழும் ஆவியில் துணியை காட்டி (அ) நீரில் நனைத்து, அரிப்புள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்கவும்.
தேங்காய் பாலுடன் தக்காளி சாறு சேர்த்து அரிப்புள்ள இடங்களில் மசாஜ் செய்யவும்.
பாகற்காய் சாற்றை அரிப்புகளின் மேல் தடவலாம்.
அரிப்பும் தொற்றில்லா சினப்புகள் – உடலின் அரிப்பு ஏற்படுவது சகஜம். உடலின் நோய் தடுக்கும் எதிர்க்கும் சக்தியின் பிரதிபலிப்பாக கூட அரிப்புகள் ஏற்படும். அரிப்பைத் தவிர சினைப்பு எனப்படும் சினப்புகளில் சில சிறுவர்களுக்கும் சில வயது வந்தவர்களுக்கும் கூட இரத்த பரிசோதனையால் காரணம் தெரியாமல் போகலாம். சில காரணங்களை பார்ப்போம்.
அறிகுறிகள்
சிவந்த, செதில்கள் உதிரும் சர்ம அரிப்பு
புடைத்த, சிவந்த தழும்புகள் விளார்கள், சீழ் பிடித்த வீக்கங்கள்
புதுத்துணி, நகைகள், விஷச்செடிகள், புதிய உணவு, புதிய மருந்து இவற்றால் ஏற்படும் சினைப்புகள்
சிவந்த புடைப்புகள் உடல் முழுவதும் தோன்றும். தவிர தோலடியில் அழற்ச்சி ஏற்பட்டு கெண்டை சதையிலும் முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையே சினைப்புகள் தோன்றும். சில சமயங்களில் கை, புஜங்களில் தோன்றும்.
காரணங்கள்
வறண்ட சர்மம்
அடோபிக் டெர்மடைடிஸ்
பூஞ்சன தொற்றால்
சோரியாசிஸ்
அலர்ஜி
அர்டிகேரியா ஹைவ்ஸ்
பூச்சிக்கடி
அலர்ஜி
எரித்துமா பாதிப்புகள்
அழுத்தப் புண்கள் படுக்கை புண்கள் – படுத்த படுக்கையாக இருப்பவர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்படும் படுக்கை புண்கள் இதில் அடங்கும். இவைகளை அலட்சியபடுத்த வேண்டாம். வலியும், வேதனைகளும் ஏற்படுவது மட்டுமின்றி, தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தோலின் அடுக்குகளுக்கு ஆக்சிஜன் தேவை. அதை சப்ளை செய்வது ரத்தம். தோலுக்கு அதிக ரத்தம் பாயும் படியாகவே தோலடுக்குகள் அமைந்துள்ளன. இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ரத்தம் பாயவில்லை என்றால், சர்மம் இறந்து விடும் முதலில் புறத்தோல் இறந்து விடும். இறந்து ஒடிந்து விடுவதால் புண்கள், ரணங்கள் ஏற்படும். இந்த திறந்த புண்களின் வழியே பாக்டீரியா, உடலுள்ளே நுழையும்! ஒரே இடத்தில் மணிக்கணக்காக படுத்திருப்பது, உட்கார்ந்திருப்பது போன்ற நடவடிக்கைகள் சர்ம அழுத்தத்தை உண்டாக்கும். நார்மல் மனிதர்கள் தூங்கும் போது கூட படுக்கும் நிலையை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் பக்கவாதம் வந்தவர்கள், கோமா போன்ற மயக்க நிலையில் இருப்பவர்கள் இவர்களால் உதவியின்றி, படுக்கும் உட்காரும் நிலையை மாற்ற முடியாதவர்கள். இவர்களுக்கு படுக்கை புண்கள் ஏற்படும்.
அதிகப்படியான ஈரப்பசையும் சர்ம அழுத்த புண்களை உண்டாக்கும். படுக்கையில் சிறுநீர் கழிந்து அது தெரியாமல் பல மணி நேரம் இருந்தாலும் படுக்கை புண்கள் ஏற்படும். இதர காரணங்கள். உராய்வுகள், ஊட்டச்சத்து இன்றி உடல் பலவீனமாதல் போன்றவை.
படுக்கைப் புண்களை வருமுன் தடுப்பது நல்லது. படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளை சரியாக கவனித்து, தோலில் சிவப்பாக திட்டுக்கள் தோன்றினால், படுக்கை நிலையை மாற்ற வேண்டும். சர்மத்தை ஈரப்பசையின்றி வைப்பது அவசியம்.
அழுத்தப் புண்களுக்கான சிகிச்சை ஆன்டி – பையாடிக் மருந்துகள். புரதம் செறிந்த உணவு, விட்டமின்கள், தாதுப்பொருட்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment