Saturday, February 9, 2013

மாசு, மருவில்லாத வதனத்திற்கு


இளம் பெண்களின் பெரும் பயம், பருவத்தில் வரும் பருக்கள். பருக்கள் முகத்தை
பாதிப்பதால், அவை ஏற்பட்டால் இளம் பெண்கள் மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர். முகத்தில் ஒரு சிறு பரு ஏற்பட்டாலும் இளம் பெண்கள் பதற்றமடைகின்றனர்.
முகப்பருவின் மருத்துவ பெயர் ஏக்னே இதின் ஒரு வகை ஏக்னே வல்கரிஸ் பரவலாக காணப்படும் பருக்கள்.
நமது தோலில் நுண்ணிய துவாரங்கள் உள்ளன. இவை முடிக்கால்கள் எனப்படும். இந்த முடிக்கால்களில் எண்ணை சுரப்பிகள் உள்ளன. இவை சேபேசியஸ் சுரப்பிகள் எனப்படும். இவை தோல், ரோமம் முதலியவற்றுக்கு எண்ணைப்பசையை சுரக்கும் நிண நாளங்கள். இந்த எண்ணை பசை சீபம் எனப்படுகிறது. சீபம் தான் முடிக்கு போஷாக்கையும், பளபளப்பையும் தருகிறது இந்த சீபம் முடிக்கால்களின் துவாரங்கள் வழியே தான் தோலில் மேல் வழக்கமாக வந்து சேரும். சில காரணங்களால் தேவைக்கு மேல் அதிகமாக சீபம் சுரந்து விடுகிறது. ஹார்மோன், பாக்டீரியா, உலர்ந்து போன சீபம் இவற்றால் முடிக்கால்கள் அடைபட்டு போனால் அதிகம் சுரந்திருக்கும் சீபம் வெளியே வழி இல்லாமல் போகிறது. முழுமையாக சீபம் தடைபட்டு விட்டால் வெண்புள்ளிகளும், முழுதாக தடைபடாமல் இருந்தால் கரும்புள்ளிகளும் ஏற்படுகின்றன.
நார்மலாக, முடிக்கால்களில் பாக்டீரியா குடியிருக்கும். இது விபரீதமாக பெருகி, தேங்கி நிற்கும் சீபத்தை தாக்கி, அவற்றை தோலுக்கு எரிச்சலை உண்டாக்கும் பொருட்களாக மாற்றுகிறது. இந்த சுழற்சி, தொற்றால் தோலில் வீக்கங்கள் ஏற்பட்டு பருக்களாகின்றன. தோலில், குறிப்பாக முகம், கழுத்து, மார்பு, முதுகு இவற்றில், சீழ் போன்ற திரவம் நிறைந்த பருக்களாக கரும்புள்ளி, வெண்புள்ளிகளாக தோன்றுகின்றன. பருக்களின் பல வடிவங்களில், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் ஆகும். ஏன் இளம் வயதினருக்கு அதிகமாக முகப்பருக்கள் ஏற்படுகின்றன காரணம் பெண்கள் பூப்படையும் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தான். ஆன்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவுகள் அதிகரிக்கும். டெஸ்டோஸ்டிரோன் ஆண் ஹார்மோன் ஆயிற்றே என்று நீங்கள் கேட்கலாம். பெண்களிடமும் சிறிதளவு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் இருக்கும். இந்த உபரி ஹார்மோன் சுரப்பினால் செபாசியஸ் சுரப்பி ஊக்குவிக்கப்பட்டு அதிக சீபத்தை சுரந்து பருக்களை உண்டாக்கும்.
பருக்கள் தோன்ற காரணங்கள்
முக அழகை கெடுக்கும் பருக்கள் தோன்ற முதல் காரணம் சீபம். பருவமடையும் காலத்தில் ஆண், பெண்களிடம் ஸ்டிராய்ட் ஹார்மோனான ‘ஆன்ட்ரோஜன்’ சுரக்கும். இது டெஸ்டோஸ்டிரோனும், ஆன்ட்ரோஸ்டிரோனும் கலந்த கலவை ஹார்மோன். இதை அதிகம் சுரப்பது ஆண்களின் விதைப்பை தான். சிறிதளவு அட்ரீனல் கார்டெக்ஸிலும், ஓவரிகளிலும் பெண்களின் கருப்பை சுரக்கும். ஆன்ட்ரோஜன் அதிக சீபத்தை உண்டாக்கும் படி செபேஸியஸ் சுரப்பிகளை தூண்டி விடும். அதிக சீபம் முடிக்கால்களில் தேங்கி, பேக்டீரியா பாதிப்பினால் பருக்களை சிறு வீக்கங்களாக உண்டாக்கும். இந்த பேக்டீரியா சீபத்தின் உள்ள டிரைகிளைசிரைட்டை. கொழுப்பு அமிலங்களாக மாற்றி, அழற்சி வீக்கங்களை உண்டாக்கும்.
சிலருக்கு சீபம் சுரப்பிகள் எளிதில் உணர்ச்சி வசப்படும். இதனால் இதர ஹார்மோன்கள் சரியாக இருந்தாலும், சீபம் அதிகமாக சுரக்கும்.
கெராடின் தோல் செல்களில் உள்ள முக்கிய நார் புரதம். கெராட்டினைசேஷன் என்ற செயல்பாட்டினால் கெராடின் தோல் செல்களில் ஊடுருவி தங்கி விடும். ஒரு அடைப்பான் போல் முடிக்கால்களை அடைத்து விடும். சீபத்தின் போக்குவரத்து தடைபட்டு போகும்.
பெண்களின் மாதவிடாய் காலங்களில் பருக்கள் அதிகமாகும். இந்த சமயத்தில் ஹார்மோன்களின் சுரப்பு அதிகமாவது காரணமாகும். தவிர மாதவிடாய் கோளாறுகள் உள்ள பெண்களுக்கு, பருக்கள் அதிகமாக ஏற்படுகின்றன.
கார்டிகோ ஸ்டிராய்ட் மற்றும் அனபாலிக் ஸ்டிராய்ட் மருந்துகளால் சீபம் அதிகம் சுரக்கலாம்.
சில அழகு சாதன பொருட்களும் முடிக்கால்களை அடைத்து பருக்கள் தோன்ற காரணமாகும்.
பரம்பரையும் ஒரு காரணம். தாய்க்கும், தந்தைக்கும் பருவகாலத்தில் பருக்கள் தோன்றியிருந்தால் உங்களுக்கு வரலாம்.
விட்டமின் ஏ குறைபாடுகள் முகப்பருக்களை உண்டாக்கலாம்.
ஆயுர்வேதம் கூறும் காரணங்கள்
தவறான உணவுகள், வாழ்க்கை முறைகள் இவற்றால் வாத தோஷம் பாதிக்கப்பட்டு கப, பித்த தோஷங்களையும் தாக்கும். ஊக்குவிக்கப்பட்ட பித்தம் ரத்ததாது கொடுக்கும். மாசுபடிந்த ரத்தம் அதிக சீபச் சுரப்பை உண்டாக்குகிறது. கபம் ஏற்கனவே அதிக எண்ணை பசை உடைய தோஷம். சீபத்தை இன்னும் அதிக கெட்டியாக செய்யும். ஆயுர்வேதத்தின் படி, அஜீரணமும், மலச்சிக்கலும் பருக்களை தோற்றுவிக்கும்.
உணவு உண்பதில் மூன்று குறைபாடுகளை பருக்கள் வரும் காரணமாக ஆயுர்வேதம் கூறுகிறது.
அதியாசனா – முன்பு உண்ட உணவு ஜீரணிக்கும் முன் மேலும் மேலும் உணவு உண்பது
விருத்தாசனா – ஒன்று கொண்டு ஒவ்வாத உணவுகளை ஜோடி சேர்த்து உண்பது. – உதாரணமாக மீனும்- பாலும், தயிரும்- பாலும்
விஷமாசனா – பசியில்லாத போது உண்பது, பசிக்கும் போது பட்டினி இருப்பது.
அதீத பாலுறவு வேட்கையும் பருக்களை உண்டாக்கும் என்கிறது
ஆயுர்வேதம். அதிக ஆசை ஹார்மோன்களின் உற்பத்தியை தூண்டி, அவை சீபம் சுரப்பை தூண்டி விடலாம்.
அறிகுறிகள்
ஆரம்ப நிலையில் சிறு கட்டிகள் போல், முகத்தில் தோன்றும். மார்பு, தோள்கள், முதுகில் மேல்புறம் இவற்றிலும் தோன்றலாம். முகத்தில், நெற்றி, கன்னங்கள், மூக்கில் தோன்றலாம்.
அனபாலிக் ஸ்டிராய்ட் மருந்துகளால் ஏற்படும் பருக்கள் சாதாரணமாக முதுகிலும், தோலிலும் மட்டும் தோன்றும்.
குண்டூசியின் தலை போல் தோன்றும் பருக்கள் நாளடைவில் பெரிதாகும். கட்டிகளின் உள்ளே சீழ் உண்டாகும். வெளியில் மஞ்சள் நிறமாக பருக்கள் மாறும்.
இரண்டு மூன்று நாட்களில் பரு பழுத்து உடையும் பிறகு காய்ந்து விடும். பருக்கள் மறைந்தாலும் அவற்றால் ஏற்பட்ட வடு, தழும்புகள் முகத்தை விகாரப்படுத்தி விடும்.
முகப்பருக்கள் ஏற்படும் போது, முகத்தில் எண்ணை பசை அதிகமாகும். முகம் பளிச்சென்று இல்லாமல் எப்போதும் எண்ணை வழிந்து மங்கி காணப்படும்.
சிகிச்சைகள்
அலோபதி மருத்துவத்தில், தீவிரமில்லாத அக்னிக்கு, பாக்டீரியாக்களை எதிர்க்கும் ஆன்டி – பயாடிக் மருந்துகளான க்ளின்டாமைசின், எரித்ரோமைசின். பென்சாயில் பெராக்ஸைட் கொடுக்கப்படுகின்றன.
தீவிரமான நிலையில் டெட்ராசைகிளின், டாக்சிசைக்களின், எரித்ரோமைசின், போன்றவை கொடுக்கப்படுகின்றன. முகப்பருக்கள் முற்றிலும் மறைய பல வாரங்கள், பல மாதங்கள் தேவைப்படும்.
இந்த மருந்துகளால் பல பக்க விளைவுகள் உண்டாகலாம். பருக்கள் விட்டுச் சென்ற பருக்களை போக்க சப்சீசியன் என்ற அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. லேசர் சிகிச்சையாலும் வடு, தழும்புகளை போக்கலாம்.
கரும்புள்ளிகளும், வெளி புள்ளிகளும் நீங்க, சல்ஃபர், ரிசோர்சினால் அடங்கிய மருந்துகள் தரப்படுகின்றன.

No comments:

Post a Comment