Tuesday, February 26, 2013

முடியின் அமைப்பு

தலைமுடி டெர்மிஸ் பகுதியின் அடித்தளத்தில் ஃபோலிக்குகளில் இருந்து வளர்கிறது. முடி உறைகள் உடலெங்கும் சருமத்தில் இருப்பவை. விதிவிலக்கு உதடு, உள்ளங்கை, உள்ளங்கால். இந்த இடங்களில் முடி வளராது. நீங்கள் ஒரு முடியை வேருடன் எடுத்துப் பாருங்கள். தலை அல்லது உடல் சருமத்தின் மேலே கண்ணுக்கு தெரியும் பாகத்தை தண்டு என்பார்கள். இறந்த புரதம் – கேராடின் மற்றும் திசுக்களால் ஆனது முடித்தண்டு, இறந்த செல்களால் ஆனதால், முடியை வெட்டும் போது நமக்கு வலிப்பதில்லை. முடி கீழ்க்கண்ட மூன்று அடுக்குகள் உள்ளது.

குயூடிகில் – இதை மைக்ரோஸ் கோப்பில் பார்த்தால். செதில் செதிலாக தெரியும். குயூடிகில் முடியின் வெளிப்புற அடுக்கு. அதாவது முடியை சுற்றிக் கொண்டிருக்கும் முதல் அடுக்கு. இது தான் முடிக்கு பளபளப்பை கொடுக்கிறது.
கார்டெக்ஸ் மத்திய அடுக்கு- நார்களை பின்னியது போல் இருக்கும். கார்டெக்ஸ் முடிக்கு பலத்தையும், மீள்திறன் சக்தியையும் மற்றும் நிறத்தையும் அளிக்கிறது.
மெடூலா – நடுப்பகுதி (மையப் பகுதி)- இது வெற்றிடமாக இருக்கும்.
மேற்சொன்ன மூன்று பகுதிகளும் நம் கண்ணில் தென்படும், இனி தோல் அடியுள்ள முடியின் பாகங்களை பார்ப்போம்.
முடிஉறை அல்லது பை
இங்கு தான் முடி பிறக்கிறது, வாழ்கிறது பிறகு இறக்கிறது. முடி உறையில் அடிப்பகுதியின் வேரில் பேபில்லாவில் ரத்த நாளங்கள் இருக்கின்றன. அதனால் இங்கிருந்து முடிக்கு, தேவையான ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள் கிடைக்கின்றன. முடியின் வேர் பாதிக்கப்பட்டால் முடிவளர்ச்சி நின்று விடும். மறுபடியும் வளராது. முடி உறையின் இயக்கம், அளவு இவை தான் ஒருவருக்கு முடி எப்படி இருக்க வேண்டும், எவ்வளவு நீளம் வளரும் என்பதையெல்லாம் முடிவு செய்கிறது.
ஃபோலிக்கில் செபாசியஸ் சுரப்பி எனப்படும் சுரப்பி, சேபம் என்ற எண்ணையை சுரக்கிறது. இவை முடிக்கு பளபளப்பையும் நெகிழ்வு தன்மையையும் கொடுக்கிறது. பருவ காலத்தில் இந்த சுரப்பியின் இயக்கம், உச்சகட்டமாக இருக்கும். வயதாகும் போது இதன் உற்பத்தி குறையும். சீபம் பாக்டீரியா, ஃபங்கஸ் இவைகளை எதிர்க்கும். இந்த சீபம், சுரப்பியிலிருந்து, ஒரு நாளம் வழியே முடிவேர்க்காலில், ஃபோலிக்கினை சென்று அடைகிறது. நாம் தலை வாரும் போது சீபம் எண்ணை உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. தலைமுடிக்கு எண்ணைப் பசையை கொடுத்து, தலை முழுவதும் பரவுகிறது.
பெரிய, ஆழமான முடி உறைகள், கரடு முரடான முடியை தோற்றுவிக்கின்றன. சிறிய உறைகள் மிருதுவான ரோமத்தையும், ‘வளைந்த’ ஃபோலிக்குகள், சுருட்டை முடியையும் உருவாக்குகின்றன.
உடலில் எண்ணைப்பசை
முன்பு சொன்னபடி, முடிக்கும், உடல் தோலுக்கும் எண்ணையை தக்க வைப்பது செபாசியஸ் எண்ணை சுரப்பிகள் தான். இது தரும் சீபம் எண்ணையால் தான் சருமம் எண்ணை பசையுடன், பளபளவென்று இருக்கிறது. சீபம் இல்லாவிட்டால் தோல் பாளம் பாளமாக வெடித்து விடும். செபாசியஸ் சுரப்பிகளுக்கு, சீபத்தை அனுப்ப நாளங்களோ, குழாய்களோ இல்லை. இந்த சுரப்பியின் நுண்ணிய செல்களே உடைந்து கெட்டியான கொழுப்பாக, முடிவேர்களின் வழியே தோலின் மேற்புறத்தை வந்தடைகின்றன. உடலின் சில பாகங்களில் அதிகமாகவும் சில பாகங்களில் குறைவாகவும் செபாசியஸ் சுரப்பிகள் காணப்படும்.
கூந்தலின் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும், இந்த எண்ணை சுரப்பி சரிவர இயங்குவது முக்கியமானது.
தலைமுடியின் உபயோகங்கள்
முடி, அதுவும் தலைமுடி நமது தோற்றத்திற்கு பொலிவு தருவது. கருகருவென மிளிரும் தலைமுடி ஆரோக்கியத்தின் அறிகுறி.
தலைமுடி, வெய்யில், வெப்பம், இவைகள் மூளையை தாக்காமல் காக்கிறது.
சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்தும் உடலை முடி காக்கிறது.
மூக்கிலுள்ள முடிகள் தூசி, கிருமிகளை தடுத்து நிறுத்துகின்றன.
உடலுள்ள முடிகள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
முடி பாலுணர்வையும் தூண்டக்கூடியது. மார்பில் முடி செறிந்த ஆணை, பல பெண்கள் விரும்புகிறார்கள். உடலின் மர்மப் பிரதேசங்களில் வளரும் முடி கூட மனோரீதியாக பாலுணர்வை தூண்டும் என்கின்றனர் தோல் வைத்திய நிபுணர்கள்.
முடியைப் பற்றி சில தகவல்கள்
ஒரு சராசரி மனிதரின் தலையில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் முடிகள் வரை இருக்கும்.
தலைமுடி ஒரு மாதத்திற்கு 11/4 செ.மீ. நீளம் வரை வளரும்.
மொத்தமாக மனிதனின் உடல் முழுவதும் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளன.
ஒரு நாளில் 50-150 முடிகள் உதிர்கின்றன.
ரோமத்தின் உயிரில்லா பாகம். தோலின் மேலும், உயிருள்ள பாகம் தோலின் கீழேயும் காணப்படும்.
கெராடின்
கெராடின் சுறுசுறுப்பு இல்லாத அதிக செயல்பாடுகளில்லாத ஒரு நார் புரதம்.
தலைமுடியில் 97% கெராடின் தான். இது நகத்திலும் காணப்படும்.
கெராடினில் இருப்பது கந்தகம்.
தலைமுடி பிறந்து, வளர்ந்து, மறையும் வரையில் ஏற்படும் மாற்றங்களின் முடிவுப்பொருள்.
முடி உற்பத்தியில் கெராடினின் செயல்பாடு – முடி செல்கள் தங்களின் மைய உட்கருவை இழந்து விடுகின்றன. இழந்த உட்கருவுக்கு பதிலாக, கெராடின் செல்களை ஆகிரமித்து விடும். செல்கள் மேலே வரும் போது இந்த செயல்பாடு நடக்கும். இதை கெராடிஸை சேஸன் என்பார்கள்.
முடியின் வண்ணங்கள்
நமது முடியில் உள்ள கெரோடினுக்கு கறுப்பு நிறத்தை கொடுப்பது மெலானின் என்ற வர்ணம் கொடுக்கும் பொருள். தோலின் டெர்மிஸ் பகுதியில் பிரத்யேக செல்களில் இருக்கும். வெய்யில் தோலில்பட்டால் மெலானின் உற்பத்தி அதிகமாகிறது. இதனால் சருமம் வெய்யிலில் கறுத்து விடும். மெலானின் உள்ள செல்கள் மெலானோசைட்ஸ் எனப்படும். வயதாகும் போது மெலானின் உற்பத்தி குறைந்து கொண்டே போகும். இதனால் முடியில் கறுப்பு நிறம் குறைந்து, முடி நரைத்து வெள்ளையாகிறது.

No comments:

Post a Comment