Tuesday, February 26, 2013

நீராடுதலின் நியமங்கள்

நீராடுவதால் உடல் தூய்மை, ஆண்மை, நீண்ட ஆயுள் இவை
ஏற்படுகின்றன. களைப்பு, அழுக்கு, வியர்வை இவை நீங்குகின்றன உடல் வலிவு, ஓஜஸ் (ஒளி) இவை வளர்கின்றன.
- சரகசம்ஹிதை
தண்ணீரில் குளிப்பது என்பது மனிதனுடன் கூடப் பிறந்த ஒரு இயற்கை உணர்வு. காலம் செல்ல, செல்ல குளிப்பது ஒரு புனித சடங்காக மாறியது. கோவில்களுக்கு செல்லும் முன்பு, பூஜைக்கு முன்பு குளிப்பது தவிர உணவு உண்பதற்கு முன் குளிப்பது இவை வழக்கமாகிவிட்டது. வெறும் தண்ணீரில் முங்கி எழுவது போய், தோலை தேய்க்க சோப்பு போன்றவற்றை உபயோகிப்பது, எண்ணை தேய்த்து குளிப்பது இவையெல்லாம் நாகரிக மாற்றங்களாயின.
அழுக்கு வெளிப்புற தும்பு, தூசிகள், புழுதி இவற்றால் ஏற்படுகிறது. தவிர மனிதத்தோலும் உடல் கழிவுப்பொருட்களை வெளியேற்றும் ஒரு அவயம் தான். தோலின் அடியில் உள்ள மயிர்கால்களை சுற்றி, கொழுப்பு சுரப்பிகள் உள்ளன. இவை மயிர்கால் துவாரங்களின் மூலம் தோல் மேல் வருகிறது. இந்த சுரப்பினால் தான் தோல் வரண்டு போகாமல், மழுமழுப்பாக இருக்கிறது. அதிக சீபம் சுரந்தால், அது தோலின் மேல் படிந்து விடுகிறது. தவிர தோலின் ‘இறந்த’ செல்களும் வியர்வை கசண்டுகளும் மேல் சேர்ந்து விடும் – இவற்றை நீக்க குளிப்பது அவசியம். மனிதனால் பாம்பு சட்டையை உரித்து விட்டு போவது போல், தோலை கழற்றி விட முடியாது. எனவே இருக்கும் தோலை சுத்தமாகவும், சுகாதாரமாக வைக்க குளியல் அவசியம். அதுவும் வெய்யில் காலத்தில் ஒரு முறை குளியல் போதாது. இரு முறையாவது குளிக்க வேண்டும். சரிவர குளிக்காவிட்டால் உடலில் துர்நாற்றம் ஏற்படும். ரோமங்கள் அதிகம் உள்ள இடங்களில் துர்நாற்றம் அதிகமிருக்கும்.
குளியலுக்கு ஏற்ற நாட்கள்
சாஸ்திரங்கள் ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணை நீராடுவது உசிதம் என்கின்றன. காரணம் சனி அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி எண்ணெய் குளியல் முடிந்த பின் மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும். விரைந்த செயல்பாடுகள், சடங்குகள், மங்கல நிகழ்ச்சிகள் சனிக்கிழமைகளில் செய்வது வழக்கமில்லை. எனவே ஓய்வை உண்டாக்கும் எண்ணை குளியலை சனியன்று செய்வது நல்லது.
பெண்களுக்கு சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை. செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.
எண்ணை குளியல்
சர்ம பாதுகாப்பில் சிறந்த சிகிச்சை – தோலுக்கு எண்ணை பதமிடுவது. குளிப்பதாலும், எண்ணை குளியலாலும் ஏற்படும் நன்மைகள்
உடல் சூடு, காங்கை குறைகிறது.
முன்பு சொன்னது போல், சருமம் மிருதுவாகிறது. அதற்கு எழிலையும், போஷாக்கையும் கூட்டுகிறது.
இளநரையும், பொடுகும் தவிர்க்கப்படும்.
தலை முடி கருத்து நீளமாக வளரும்.
நல்ல தூக்கம் வரும்.
கண்ணெரிச்சல் குறையும்.
குளியலுக்கு ஏற்ற நீர்
பொதுவாக, வெதுவெதுப்பான, இதமான நீர் அனைவருக்கும் ஏற்றது. கோடையில் குளிர்ந்த நீரால் குளிப்பது. சுறுசுறுப்பை உண்டாக்கும். எனவே தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு தண்ணீரை விட வெந்நீர் உசிதமானது. சுடுநீர் மன இறுக்கத்தை குறைத்து தூக்கத்தை உண்டாக்கும். தலைக்கு மிதமான குறைவான சூடுடைய நீர் (அ) தண்ணீரும், கழுத்துக்கு கீழ் சுடுநீரையும் விட்டுக் கொள்வது நல்லது. இதற்காக தனித் தனி வாளி பாத்திரத்தை உபயோகிக்கலாம்.
ஆயுர்வேத ஆசான்களில் ஒருவரான வாகபட்டர் கூறுவது – “வெந்நீரால் கழுத்துக்கு கீழ் ஸ்நானம் செய்வது பலத்தைத் தரும். வெந்நீரை தலைக்கு ஊற்றிக் கொள்வது கண்களுக்கும் கேசத்திற்கும் இதமல்ல”.
மிகவும் குளிர்ந்த நீர், மிகவும் சூடான நீர் இரண்டும் கூடாது. பருவ காலத்திற்கேற்ப, உடலுக்கு ஏற்ற, சரியான சூடு குளிர்ச்சி உள்ள நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். குளிர்காலத்தில் அதிக சூடான நீர் சுகமாக இருக்கலாம். ஆனால் அது உடலின் தாதுப் பொருட்களை அகற்றி விடும். தலையில் நீர்க்கோவை, உடல் வலி உள்ளவர்கள், குளிர் தாங்க முடியாதவர்கள், வெந்நீரில் குளிப்பதே நல்லது. கடுமையான கோடைகாலத்தில் வெந்நீரில் குளித்தால் பித்தம் அதிகமாகும். சர்மத்தில் சினைப்பு, தடிப்பு ஏற்படும்.
தவிர வெந்நீரை பாத்திரத்தில் பிடித்து வைத்து அதை நமக்கு ஏற்ற சூட்டுக்கு ஆற வைத்து குளிப்பது நல்லது. சூடான நீரில், தண்ணீரை ஊற்றி விளாவுவதை தவிர்க்கவும்.
தினமும் இரு வேளை குளிப்பவர்கள் காலையில் தண்ணீரிலும் இரவில் வெந்நீரிலும் குளிப்பது நல்லது. தண்ணீர் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். இரவில் வெந்நீர் தூக்கத்தை தரும்.
தினமும் குளிக்கும் போது சிறிது எண்ணையை உச்சந்தலையில் வைத்து குளிப்பது நல்லது. சைனஸ், ஜலதோஷம், காதுவலி, தலைவலி, கண்வலி உள்ளவர்கள், இந்த உபாதைகளின் போது, தலைக்கு குளிக்க வேண்டாம்.
நீராடுதலின் நியமங்கள்
உணவுக்கு முன்பு தான் குளிக்க வேண்டும். உணவு உண்டவுடனே குளிப்பதால், தோலின் தட்ப வெப்ப நிலை மாறும். ஜீரணம் பாதிக்கப்படும். எனவே குளிக்கும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.
குளித்த பின் தூய்மையான ஆடைகளை அணியவும். குளிக்கு முன் போட்டிருந்த ஆடைகளை திரும்பி அணிய வேண்டாம்.
ஜலதோஷம், பீநசம், நெஞ்சில் கபம் கட்டியிருப்பது, பேதி, கண் மற்றும் காது நோய் இருக்கும் போதும், குளிப்பதை தவிர்க்கவும். தேவைப்பட்டால், கழுத்துக் கீழே ஸ்பான்ஜ் குளியல் எடுத்துக் கொள்ளலாம்.
குளித்த பின் ஈர ஆடைகளுடன் அதிக நேரம் இருக்க வேண்டாம்.
ஈரமான தலையில் எண்ணை தடவுவது, சீப்பால் வாருவது கூடாது. முடிகள் உடைந்து விடும்.
குளித்த பின் உடல், தலை ஈரம் போக நன்றாக துவாலையால் துடைத்துக் கொள்ளவும்.
அதிக நேரம் குளிக்க வேண்டாம்.
உடலை அளவுக்கு மீறி தேய்த்து குளிக்க வேண்டாம்.
வெதவெதப்பான நீர் சூடான நீரை விட, குளிப்பதற்கு நல்லது.
உங்கள் உடலில் வியர்வை அதிகம் வெளியானால், குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
எண்ணெய்க் குளியலின் போது, குளிக்கும் தண்ணீரில் வெட்டி வேர் அல்லது பன்னீர் சேர்த்து கொள்ளவும்.
எண்ணை குளியலின் பயன்கள் – சரகசம்ஹிதை சொல்வது
எண்ணெய் பூசிய (ஊறிய) குடம், எண்ணெயில் ஊறிய தோல், எண்ணெய் ஊற்றிய வண்டிச் சக்கரம் இவை பலம் உள்ளவைகளாகவும், சுமை சுமப்பதற்குத் தகுதியுள்ளவைகளாகவும் ஆவன போல் உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு உறுதியையும், தோலுக்கு மழமழப்பையும் அளிக்கிறது. வாத தோஷத்தினால் தோன்றுகின்ற வேதனைகளைத் தணியச் செய்து, துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையையும், உடற்பயிற்சிக்குத் தேவையான சக்தியையும் அளிக்கிறது.
தொடு உணர்ச்சியில் வாயு அதிகமாக இருக்கிறது. தொடு உணர்ச்சிக்குத் தோல் இருப்பிடமாகும். எண்ணெய் வாத தோஷத்தை நீக்குவதில் சிறந்தது. உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தோலுக்கு நன்மையை அளிக்கிறது. ஆகையால் நாள்தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
நாள்தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பவனுடைய உடலில் காயம் ஏற்பட்டாலும் கடுமையான உழைப்பிலும் அவனுடைய தோலில் மாறுபாடு ஏற்படுவதில்லை. நாள்தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பவனுடைய சருமம் மிருதுவாகவும், பார்ப்பதற்கு அழகுள்ளதாகவும் ஆகிறது. வலிவு உள்ளதாகவும், முதுமையிலும் அதன் இலக்கணம் முழுவதும் வெளிப்படாமல் சிறிதளவே தென்படுகிறது.
தோலில் தேய்த்த எண்ணெய் உள்ளே பரவும் வேகம்
ஆயுர்வேத ஆசானான சுச்ருதர் சொல்வது – மொத்தம் 25 நொடிகளில் எண்ணெய்யின் வழவழப்பும், நெகிழ்ச்சியும் உடலின் உள்ளே பரவி விடும் என்கிறார் இந்த வேகம் மனிதருக்கு மனிதர் மாறுபடலாம். உடலில் எண்ணெய் தேய்த்தவுடன் 11/2 நொடிகளில் மேல் தோலிலும், அடுத்த 2 நொடிகளில் உள் தோலிலும் ஊடுருவி விடும்.
அடுத்து வரும் நொடிகளில் தசை, எலும்பு, மஜ்ஜை இவற்றை சென்றடைந்துவிடும்.
எண்ணை குளியலின் சில நியமங்கள்
எண்ணைக் குளியலுக்கு உகந்தது நல்லெண்ணை.
எண்ணையை காய்ச்சி தேய்த்துக் கொள்ள வேண்டும்.
காய்ச்சும் போது மிளகு, ஒமம், வெந்தயம், இஞ்சி போட்டு காய்ச்சினால் உடலுக்கு வலிமை ஏற்படும். சளி பிடிக்காது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், கொம்பரக்கும் சேர்த்துக் கொள்ளலாம். இது உடற் காங்கையை குறைக்கும்.
எண்ணைக் குளியலை வெந்நீரில் தான் செய்ய வேண்டும்.
எண்ணை தேய்த்து குளித்த அன்று, உடலுறவு கூடாது.

No comments:

Post a Comment