Tuesday, February 26, 2013

சோரியாசிஸ்

சோரியாசிஸ் உடல் வேதனையையும், மன வேதனையையும் தரும் முக்கியமான சரும நோய், ஒரு காலத்தில் சோரியாஸிஸ் நோயாளிகள், தொழு நோயாளிகள் என்றே கருதி, வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டனர். 1841 ல், ஹெப்ரா என்ற மருத்துவர் தனது நீண்ட ஆய்வின் மூலம், இது தொழுநோயிலிருந்து மாறுபட்ட ஒரு சர்ம நோய் என்று நிரூபித்து காட்டினார். சோரியாசிஸ்ஸில் பல வகைகள் உண்டு.
சோரியாசிஸ்ஸின் அறிகுறிகள்
தோல் சிவந்து, தடித்துப் போய், பாதிக்கப்பட்ட இடங்களில் வெள்ளி நிறத்தில் செதில் செதில்களாக உதிரும். சிறிய வட்ட வடிவத்தில் தொடங்கும் சோரியாசிஸ், தலை, கால், பிடரி, கைகள் முதலிய இடங்களில் தோன்றும். இந்த வட்ட அமைப்பால் நமைச்சல் ஏற்பட்டு அரித்தால் சீழ் அல்லது ரத்தம் வரும். சோரியாசிஸ் புண்களில் அரிப்பும், நமைச்சலும் தோன்றலாம். வட்ட செதில் அமைப்பு இந்த நோயின் முக்கிய அறிகுறி. உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் (முகம் தவிர) வரும் என்று சொன்னாலும். சோரியாசிஸ் சாதாரணமாக முழங்கால், முழங்கைகளில் அதிகம் தோன்றுகிறது. தலையில் வந்தால் இதை பொடுகு என்று அலட்சியப்படுத்த தோன்றும்.
முதலில் பருக்கள் போல் தோன்றி, பிறகு 2-3 அங்குலம் வரை பெரிதாகி மற்ற இடங்களில் பரவும். இதன் தீவிரம் மனிதருக்கு மனிதர் வேறுபடும். தீவிர நிலையில் வட்ட வடிவ அமைப்புகள் ஒன்றொன்று சேர்ந்து பெரிதாக காணப்படும். இவை வலியை உண்டாக்காமல் இருந்தால் கூட அருவருப்பான தோற்றத்தால் சோரியாசிஸ், நோயாளிக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்குகிறது. நோயாளிகள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள்.
சோரியாசிஸ் 10 வயதிலிருந்து 40 வயது உள்ளவர்களுக்கு அதிகமாக காணப்படும். இருந்தாலும் எல்லா வயதினரையும் பாதிக்கலாம். சோரியாசிஸ் தொற்று நோயல்ல.
சொல்லாமலே வரும் சோரியாசிஸ் சொல்லாமலேயே மறைந்து விடும். மறுபடியும் ஏற்படும். இந்த மாதிரி அழையாத விருந்தாளி போல் வந்து, போய்க் கொண்டு, ஆயுள் வரை நீடிக்கும். இது தாக்கும் தீவிரத்தை பொருத்து சிலருக்கு அதிக தொந்தரவாகவும், சிலருக்கு குறைந்த மஞ்சள் – பழுப்பு நிறமாகி உடையலாம்.
காரணங்கள்
தோலின் செல்கள் அபரிமிதமாக உருவாவது சோரியாசிஸிஸ் ஏற்பட காரணம். அபரிமிதமாக உருவாகிய செல்கள் தோல் மேல் தேங்கி, புண்ணாக மாறுகின்றன. இந்த வேக வளர்ச்சிக்கான சரியான காரணங்கள் தான் தெரியவில்லை. பரம்பரையாக வரலாம். ஸ்ட்ரெஸ், மனஅழுத்தம், உடலின் நோய் தடுப்பு சக்தி குறைவானாலும் சோரியாசிஸ் வரலாம். ஒரு நார்மல் மனிதரில், தோலில் அடிபாகத்திலிருந்து செல்கள் புறத்தோலை வந்தடைய 30 நாட்கள் ஆகும். சோரியாசிஸ் உள்ளவர்களுக்கு இது 3 நாட்களிலேயே நிகழ்ந்து விடும். மன அழுத்தத்தாலும், அழற்சியினாலும், செல்கள் விபரீதமாக வளரும் செயல்பாடு ஊக்குவிக்கப்படும். மன அழுத்தத்தால் சோரியாசிஸ் வருகிறது என்பதை பலர் நம்புவதில்லை ஆனால் மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாகும்.
சோரியாசிஸ் வர சில மருந்துகள் குறிப்பாக உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், வைரஸ் பாக்டீரியா தொற்று, அதிக உடல் பருமன், முதலியவைகளும் காரணமாக சொல்லப்படுகிறது. சோரியாசிஸ் ஒரு ஆடோ – இம்யூன் நோய் என்று சொல்லப்படுகிறது. உடலில் நமது பாதுகாப்புக்காக உள்ள அணுக்கள், தவறுதலாக நல்ல திசுக்களை அழிப்பது ஆடோ – இம்யூன் நோய்.
சோரியாசிஸ் நோய்க்கு ஆங்கில மருத்துவ முறையில், தோலின் வறட்சியை குறைக்கவும், அதன் எண்ணை பசையை அதிகரிக்கவும் செய்யும் கிரீம்கள் தரப்படுகின்றன. விட்டமின் டி, சலிசிலிக் அமிலம் கலந்த மருந்துகளும் தரப்படும். முக்கியமாக, ரோடு போட பயன்படுத்தப்படும் தார் மூலப்பொருளாக கொண்ட மருந்துகள் நல்ல நிவாரணத்தை அளிக்கின்றன.
ஆயுர்வேதமும் சோரியாசிஸ் நோயும்
எல்லா வித தோல் நோய்களும் ஆயுர்வேதத்தில் குஷ்டம் என்று சொல்லப்படுகிறது. சோரியாசிஸ் ஏக குஷ்டம் என்று குறிப்பிடலாம்.
ஆயுர்வேதத்தின் படி, மாசுபடிந்த இரத்தம், மன அழுத்தம் இவை சோரியாசிஸ் தோன்ற காரணங்கள். மன அழுத்தத்தால் வாததோஷம் அதிகரிக்கிறது. அதிக வாதம் விபரீதமான தோல் அமைப்பை தோற்றுவிக்கின்றது.
இதர காரணங்கள்
இயற்கை வேகங்களை தடை செய்வது. வாந்தி முதலியவற்றை அடக்கிக் கொள்வது.
ஒன்றுக்கொன்று விரோதமான, ஒவ்வாத உணவுகளை உட்கொள்வது. (உதாரணம் – பாலும், மீனும், பாலும், நெய்யும் முதலியன)
கோளாறான உணவுப் பழக்கம் – உண்ட உணவு சீரணிக்காமல் மேலும் உணவுகளை உண்பது
கொழுப்பு, எண்ணை உள்ள உணவுகளை உட்கொள்வது
புதுத்தானியங்களை உண்பது
அதிகமாக மாவு பண்டங்களை உண்பது
ஆயுர்வேதம் மேலும் சொல்லும் காரணம் – பெரியவர்களை அவமதிப்பது, பாவங்களை செய்வது – இதனால் வாததோஷம் சீற்றமடைகிறது, என்பது. இந்த காரணம் நம்பமுடியாமல் போனாலும், இந்த குற்றங்களை செய்பவர்களின் குற்ற உணர்வால் மனநிலை பாதிக்கப்படலாம். பாதிக்கப்பட்ட மனநிலை, உடலை தாக்கி, தோல் நோயை உண்டாக்கலாம்
ஆயுர்வேத நிவாரணங்கள்
நீர்த்த எலுமிச்சை பழச்சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.
வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து கட்டலாம். அதே போல் மல்லிகை மலர்களை நசுக்கி அந்த களிம்பை தடவலாம்.
வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக்கி, நெய்யில் வறுத்து சாப்பிடலாம்.
முட்டைகோஸ் சாற்றை தினமும் 1 கப் குடிக்கலாம்.
உலர்ந்த வேப்ப இலைகளை நன்றாக பொடித்து சுத்தமான பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். இந்த பொடியில் 1 தேக்கரண்டி (5 கிராம்) எடுத்து, ஒரு கப் தண்ணீரில் கலந்து தினமும் இரு வேளை குடித்து வரவும். இத்துடன் 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடியையும் சேர்த்து குடிக்கலாம்.
வெளிப்பூச்சாக புங்க தைலம் (காஞ்சா – றிஷீஸீரீணீனீவீணீ றிவீஸீஸீணீtணீ) தடவ, நல்ல பயன் கிடைக்கும்.
இளம் வேப்ப இலைகளை அரைத்து, சிறிது மஞ்சள் பொடி சேர்த்து, புண்களின் மேல் தடவலாம்.
உணவில் கொழுப்பு, மாமிச புரதம், சர்க்கரை இவற்றை குறைக்கவும். கடல் உப்புக்கு பதில் பாறை உப்பை பயன்படுத்தலாம். மது அருந்துவது கூடாது.
சிறிது நேரம் காலை வெய்யில் உடலில் படுவதால் சோரியாசிஸ் குறையும்.
குளிக்கும் நீரில் எண்ணை விட்டு குளிக்கவும். வேப்பிலைகளையும் குளிக்கும் நீரில் போடலாம். மாய்ச்சுரைசர்கள் தடவுவது நல்லது.
தினமும் காலையில் ஒரு டம்ளர் தேன் (அ) சர்க்கரை கலந்த தக்காளி ஜுஸை குடித்து வர, ரத்தம் சுத்திகரீக்கப்படும் தோல் வியாதிகள் அணுகாது.
ஆயுர்வேத சிகிச்சை
ஆயுர்வேதம் முதலில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையுடன் தொடங்கும். குக்குலு திக்தக க்ருதம் உள்ளுக்கு கொடுக்கப்படும். இது ஆடாதோடை, கண்டங்காரி, குக்குலு முதலிய பல மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சப்பட்ட நெய். அட்டைகளை உபயோகித்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுப்பதும் தேவையானால் செய்யப்படும். பிறகு வாந்தி, பேதி இவற்றை உண்டாக்கி உடல் சுத்தம் செய்யப்படும். படோல முலாரி கஷாயம், மகா மஞ்சிஸ்டாதி க்வாத் போன்ற மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. வாயுவிடங்கம், கடுக்காய் போன்றவை கலந்த லேகியங்களும் மலச் சுத்திக்காக தரப்படும்.
வெளிப்பூச்சுக்கு குஷ்ட ரக்க்ஷஸ தைலம், மகா மரிச்சியாதி தைலம், சேராங்கொட்டை எண்ணை, அருகம்புல் எண்ணை போன்ற பலவகை தைலங்கள் உள்ளன. இவை அரிப்பைக் குறைத்து, சோரியாசிஸ் புண்ணுக்கு இதமளித்து சீக்கிரம் குணமாக உதவுகின்றன. உடம்பில் தேய்த்து குளிக்கவும். பல ஆயுர்வேத சூரணங்கள் பயன்படுகின்றன. தேவையானால் பஞ்சகர்மா சிகிச்சையும் செய்யப்படும்.
சோரியாசிஸ் உண்டாக்கும் ஆர்த்தரைடீஸ்
சோரியாசிஸ் நோய் இருப்பவர்களில் கிட்டத்தட்ட 7% நோயாளிகளுக்கு, ஆர்த்தரைடீஸீம் ஏற்படுகிறது. ருமாடாய்ட் ஆர்த்தரைடீஸ் போலவே இருக்கும் சோரியாசிஸ் ஆர்த்தரைடீஸ், சருமத்தில் நமைச்சலுடன் கூடிய சிகப்பு திட்டுகளாக தோன்றும். நகங்கள் சொத்தையினால் பாதிக்கப்படும்.
அழற்சி, வீக்கம் – இவை விரல் மூட்டுக்கள், கால் கட்டை விரல் மூட்டுக்கள் – இவற்றை பாதிக்கும். பாதிப்படைந்த விரல் நகங்களின் அருகாமையில் உள்ள மூட்டுக்கள் பாதிக்கப்படலாம். சர்ம பாதிப்புகளும், ஆர்த்தரைடீஸீம் சேர்ந்தே தோன்றலாம். சோரியாசிஸ் குறையும் மறையும் போது ஆர்த்தரைடீஸீம் மறைந்து விடும். ஆமவாதம் போல் அவ்வளவு சீரியஸ் வியாதியாக இல்லாவிட்டாலும், சோரியாசிஸ் ஆர்த்தரைடீஸீம் உடனே கவனிக்கப்பட வேண்டும். இதனாலும் நிரந்தரமாக மூட்டுக்கள் பாதிக்கப்படலாம்.

No comments:

Post a Comment