Tuesday, February 26, 2013

ஜலதோஷம்

ஜலதோஷத்தை அனுபவிக்காதவர்கள் யார்? நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான நோய் ஜலதோஷம். மழைக்காலத்தில, குளிர்காலத்தில், ஏன் ஒவ்வொரு பருவ மாற்றலின் போதும் ஜலதோஷம் தாக்கும். அதுவும் மழைக்காலத்தில், கிருமிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இதனால் தொற்றுநோயான ஜலதோஷம் எளிதில் பரவும்.
ஜலதோஷத்தை குணப்படுத்த முடியாது. வருமுன் காப்பதும் கடினம். ஏனென்றால், ஒன்றா, இரண்டா – 200 க்கு மேற்பட்ட வைரஸ்கள் ஜலதோஷத்தை உண்டாக்குகின்றன. தானே தோன்றி தானே மறையும் நோயானதால், ஜலதோஷத்தைப் பற்றி நகைச்சுவையாக “மருந்து கொடுத்தால் ஒரு வாரத்தில் குணமாகும், கொடுக்காமல் விட்டால் 7 நாட்களில் குணமாகும்!” என்பார்கள்.
ஜலதோஷம் என்றால் என்ன?
மூக்கு, சைனஸ் (எலும்புக்குழிகள்), தொண்டை, சுவாசக்குழாய்கள், இவற்றின் உட்படை (Lining) வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்டு உண்டாகும் தொற்று ஜலதோஷம்.
பல வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்குகின்றன. அவற்றில் முக்கியமானது ரைனோ வைரஸ் (Rhino virus). இதிலேயே நூறு “டைப்” வைரஸ்கள் உள்ளன.
காரணங்கள்
மேற்சொன்ன ரைனோ வைரஸ் தான் பெரும்பாலான ஜலதோஷத்திற்கு காரணம். இதர வைரஸ்களின் பட்டியல் – கரோனோவைரஸ் (Corono virus), மனித பாராஃப்ளூ வைரஸ் (Human para Influenza virus) அடினோ வைரஸ் (Adeno virus), முதலியன
பரவும் விதம்
ஜலதோஷ நோயாளி தும்மினால், மேகப் புகை போல காற்றில், வைரஸ்கள் நீர்த்துகள்களாக மிதக்கும். பல மணி நேரம் நீடித்திருக்கும். பக்கத்திலிருப்பவர்கள் மற்றும் சுற்றிலும் உள்ள பொருட்களின் மீதும் வைரஸ் கிருமிகள் படியும். நோயாளியின் கைகளில் படிந்து, அவரின் கைகள் மூலமாக கூட அவருக்கும், மற்றவருக்கும் பரவும். மாசு படிந்த கைகளால் தற்செயலாக முகத்தை தொட்டால், மூக்குக்குள் கிருமிகள் நுழைந்து விடும். ஜலதோஷ கிருமிகள் படிந்து இருக்கும் பொருட்களை தொட்டாலும் போதும். கண்கள் மூலமாகவும் கிருமிகள் மூக்குக்குள் புகுந்து விடும்.
ஜலதோஷ கிருமிகள் நோயாளி இருமினாலும் சுற்றுப்புற காற்றில் பரவும். இருமலை விட தும்மினால் அதிக கிருமிகள் வெளிவருகின்றன. பொது இடங்களில் மூக்கை சிந்தினாலும் கிருமிகள் பரவும்.
தொற்று ஏற்பட்ட முதல் 3 நாட்களில் ஜலதோஷ கிருமிகள் மிக அதிகமாக பெருகும். இந்த 3 நாட்களில் தான் ஜலதோஷமுள்ளவர்கள் மற்றவர்க்கு பரப்புவது அதிகமாக ஏற்படும்.
இவ்வாறு மூக்கில் நுழைந்த வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்க 1 லிருந்து 30 எண்ணிக்கைகள் போதும். வைரஸ் பெருகி மூக்கின் பின் பக்கமாக, அடினாய்டுகளில் படியும். தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் தோன்ற 1 லிருந்து 3 நாட்களாகும்.
உடலுக்குள் ஜலதோஷ வைரஸ்கள் நுழையும் வாசல் மூக்கு தான். கண்கள் வழியாகவும் கிருமிகள் நுழைந்து, கண்ணீரின் வடிகால்கள் வழியே மூக்கின் பின்பாகத்தை அடையும்.

அறிகுறிகள்
மூக்கடைப்பு, சளி ஓழுகுதல். தொண்டை கர கரப்பு – இவை முதல் அறிகுறிகள்.
தும்மல், கண்களிலிருந்து நீர் வடிதல்,
இருமல்
சளி ஓழுகும் மூக்கு, காதுகளில் தொற்று.
தலைவலி, லேசான ஜுரம், உடல் வலி.
ஜலதோஷ வைரஸ்கள் பல்கிப் பெருக, சுவாச மண்டலத்தில் உள்ள, சளி, கோழை நிறைந்த ஜவ்வுகள் உப்ப ஆரம்பிக்கின்றன. சளி சுரப்பு அதிகமாகிறது. உப்புவதால் காற்றுப்பாதை குறுகி விடும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். ‘சைனஸ்’ பிரச்சனைகள் உண்டாகும். மூக்கில் சளி ஒழுக ஆரம்பிக்கிறது.
சாதாரணமாக, ஜலதோஷம் தலைவலி, ஜுரம், இவற்றை உண்டாக்குவதில்லை. ஜுரம் 102 டிகிரி போனால் அது “ஃப்ளூ” வாக இருக்கலாம். அறிகுறிகள் குழந்தை, சிறுவர்களிடம் தீவிரமாக தெரியும்.
ஜலதோஷம் வழக்கமாக வாட்டுவது 7 நாட்கள். சில சமயங்களில் 14 நாள்கள் வரை நீடிக்கும்.
சளி கெட்டியாக பச்சை நிறத்தில் ஒழுகினால், அதில் “இறந்த” வைரஸ், திசுக்கள், பாக்டீரியாக்கள் இருப்பதால், ஜலதோஷம் முடியப் போவதின் அறிகுறி. முடிந்து விடாமல் தொடர்ந்தால் “சைனஸ்” தொற்றாக இருக்கலாம்.
ஜலதோஷம் மறைந்தாலும் சிலருக்கு இருமல் தொடரலாம்.
சிக்கல்கள்
ரைனோ வைரஸால் ஏற்படும் ஜலதோஷம், ஆஸ்த்துமா நோயாளிகளில் ஆஸ்த்துமா தாக்குதலை தூண்டி விடும்.
காது, சைனஸ்களில் பாக்டீரியா தொற்று ஏற்படலாம். இதனால் காது வலி, தலை வலி ஏற்படும்.
ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட நாட்களில், நோயாளியின் நோய் தடுப்பாற்றல் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் வேறு நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
நிமோனியா ஏற்படலாம்.
ஜலதோஷத்தை தவிர்க்க
முதலில் சொன்னது போல் ஜலதோஷத்தை வராமல் தடுப்பது கடினம். ஒரு தடவை ஜலதோஷத்தால் தாக்கப்பட்டால் நோயாளி எந்த வைரஸ் தாக்கியதோ அதற்கு “இம்யூன்” ஆகிவிடுவார். அதாவது அந்த வைரஸ் மறுபடியும் அவரை தாக்க முடியாது. ஆனால் 200 வகை வைரஸ்கள் ஜலதோஷத்தை உண்டாக்கும். எனவே புதுப்புது வைரஸ்கள் மறுபடியும் தாக்கலாம்.
உடலின் நோய் தடுக்கும் ஆற்றலை சீராக வைத்துக் கொண்டால், ஜலதோஷம் மட்டுமல்ல, வேறு நோய்களும் அண்டாது.
சுத்தமான சுகாதார வாழ்க்கை முறையை கடைபிடிக்கவும். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
விட்டமின் ‘சி’ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும் – குறிப்பாக குளிர்காலங்களில் காலையிலும், மாலையிலும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வரவும்.
ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்காமல் இருப்பது.
சிகிச்சை
ஜலதோஷத்திற்கு என்று தனிப்பட்ட மருந்து என்று ஏதும் கிடையாது அறிகுறிகளின் உபாதையை குறைப்பதற்கும், சிக்கல்கள் வராமல் தடுக்க மட்டுமே மருந்துகள் தரப்படுகின்றன.
ஆன்டி – பையாடிக் மற்றும் ஆன்டி – வைரஸ் மருந்துகள் பலன் தராது தவிர இவற்றின் பக்க விளைவுகளும் அதிகம்.

ஆயுர்வேத அணுகு முறை
ஜலதோஷத்தை ஆயுர்வேதம் ‘பிரதிச்யாயம்’ என்கிறது. இதில் ஐந்து வகைகளை சொல்கிறது.
வாத தோஷத்தால் உண்டாவது.
பித்த சீர்குலைவால் வருவது.
கபதோஷத்தால் உண்டாவது.
இரத்த கோளாறுகளால் உண்டாவது.
மூன்று தோஷங்களாலும் ஏற்படும் நாட்பட்ட ஜலதோஷம்.
ஜலதோஷத்தை தவிர்க்க ஆயுர்வேதம் பிரசித்தி பெற்ற “ச்யவன பிராச
லேகியத்தை” பரிந்துரைக்கிறது. விட்டமின் ‘சி’ செறிந்த இந்த லேகியத்தை தினமும் 1 டீஸ்பூன் பால் அல்லது நீருடன் எடுத்துக் கொண்டு வந்தால் உடலின் நோய் தடுக்கும் திறன் அதிகரிக்கும். இதனால் உடலின் ஆரோக்கியம் சீராக இருக்கும். பல சிறப்பான மூலிகைகள், மருந்துகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. ஜலதோஷத்திற்கான வீட்டு வைத்திய முறைகளைப் பார்ப்போம்.
வீட்டு வைத்தியம் ஆயுர்வேதம்
நீராவி நுகர்தல் – அடைபட்ட மூக்கை திறப்பதற்கு சிறந்த வழி ‘ஆவி பிடிப்பது’. ஒரு கிண்ணத்தில் கொதிக்கும் நீரை விட்டு, அதிலிருந்து எழும் நீராவியை நுகரவும். துவாலையால் முழு நீராவியும் முகத்தில் / மூக்கில் படுமாறு, தலையை மூடிக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் மூலிகைகள் அல்லது ‘விக்ஸ்’ போன்ற களிம்புகளில் சிறிதளவு போட்டும், நுகரலாம். வெங்காயம் அல்லது பூண்டை நசுக்கி போடலாம். யூகலிப்டஸ், லாவண்டர், எலுமிச்சை எண்ணை, ரோஸ்வுட் ஆயில் போன்றவற்றையும் கொதிக்கும் நீரிலிட்டு நுகரலாம்.
சுக்கு, மிளகு, துளசி போன்றவற்றை சமஅளவு எடுத்து டீ ‘டிகாக்ஷன்’ போல் டிகாக்ஷன் எடுத்து பருகி வர ஜலதோஷம் விலகும். இதை தினம் (ஜலதோஷம் இருக்கும் போது) 2 (அ) 3 முறை எடுத்துக் கொள்ளலாம்.
காலையிலும், இரவும் சூடான பாலில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி, சிறிதளவு சுக்கு, மிளகு, திப்பிலி தூள்கள் சேர்த்து பருகி வர ஜலதோஷம் குறையும். வெறும் பால் + மஞ்சள்பொடி அல்லது நீர் + மஞ்சள் பொடி கூட போதுமானது. பாலில் குங்குமப் பூ சேர்த்து பருகினாலும் நல்லது.
மூக்கில் சளி கொட்டினால் வெற்றிலைச் சாற்றில் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து எடுத்துக் கொள்ளலாம். தும்மலும் குறையும்.
இஞ்சிப்பொடி, பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை – இவை ஒவ்வொன்றும் 1/2 தேக்கரண்டி எடுத்து, ஒரு சிட்டிகை கிராம்புப் பொடியுடன் சேர்த்து ஒரு கப் கொதி நீரில் இடவும். 10 நிமிடம் ஊறிய பின், வடிகட்டி நீரை குடிக்கவும். இதை தினம் 3 (அ) 4 தடவை குடிக்கலாம்.
நாம் வழக்கமாக பருகும் தேநீரில் 3 (அ) 4 துளிகள் இஞ்சிச் சாறு விட்டு குடிக்கலாம். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.
வெங்காயத்தின் ஒரு பெரிய துண்டை ஒரு கிண்ணத்தில் போட்டு, மிளகுப் பொடியை (ஒரு தேக்கரண்டி) தூவி இவற்றின் மேல் கொதிக்கும் நீரை விடவும். 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு இந்த நீரை இளம் சூட்டில் குடிக்கவும்.
சூடான அல்லது வெது வெதுப்பான நீரை அடிக்கடி குடிக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
இஞ்சி சாற்றுடன் சம அளவு தேன் கலந்து தினமும் 1/2 தேக்கரண்டி தினமும் இரு முறை எடுத்துக் கொள்ளலாம்.
துளசிச்சாறு + ஒரு கைப்பிடி ஆடாதொடை (Adhatoda Vasica) இலைகளின் சாறு தினமும் 1 தேக்கரண்டி வீதம் 3 நாட்களுக்கு சாப்பிடவும்.
ஆடாதொடை வேர் – 30 கிராம், துளசி இலைகள் 20 கிராம், சுக்கு 5 கிராமும் எடுத்து இவற்றை 1 லிட்டர் தண்ணீரில் காய்ச்சவும். கால் பாகமாக (250 மி.லி.) தண்ணீர் சுருங்கும் வரை காய்ச்சவும். இதில் 60 மி.லி. எடுத்து, தினம் 4 வேளை குடிக்கவும். இதை 3 நாட்கள் செய்யவும்.
அகஸ்திய ரசாயனம் – இதை இரண்டு வாரத்திற்கு உணவுக்கு பிறகு 1 தேக்கரண்டி அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
ஜலதோஷம் ஏற்பட்ட உடனேயே, விட்டமின் சி அதிக அளவு எடுத்துக் கொண்டால், ஜலதோஷத்தின் தீவிரம் குறையும். மறுபடியும் வருவதை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment