Tuesday, February 26, 2013

சர்மத்தை பதப்படுத்துபவை

டோனர்கள் ஏற்கனவே போட்ட முகப்பூச்சுகளை களைந்து எடுத்து, தோலை தொய்வில்லாமல் வைக்கும். டோனர்களால் முகத் துவாரங்கள் மூடி, முகத்தோல் மெருகடையும். நார்மல் சருமத்திற்கு ரோஜா பன்னீர், உலர்ந்த, முதிர்ந்த சருமத்திற்கு ரோஜா பன்னீர் எண்ணைப்பசை சருமத்திற்கு துளசி + ரோஜா பன்னீர், எல்லா வகை சர்மத்திற்கும் வெள்ளரிச்சாறு, புதினாசாறு தலா ஒரு மேஜைக்கரண்டி எடுத்து 1/2 தேக்கரண்டி எலுமிச்சம் சாற்றுடன் கலக்கவும். இதை பஞ்சில் தோய்த்து முகத்தில் ஒற்றிக் கொள்ளவும்.
உலர்ந்த சருமத்திற்கு விட்டமின் ‘இ’ எண்ணை சாலச்சிறந்தது. பஞ்சினால் தடவிக் கொள்ளவும். கோதுமை தவிட்டு எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். உலர்ந்த நார்மல் டைப் சருமத்திற்கு பன்னீரை அடிப்படையாக கொண்ட டோனர்கள் நல்லது. உருளைக்கிழங்கை வெட்டி, ஒரு துண்டை முகத்திலும், கழுத்திலும் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து கழுவிவிடவும். எண்ணெய்ப்பசை சருமத்திற்கு மிகவும் நல்லது.
ஈரப்பதத்தை உண்டாக்கும்
மாய்ஸ் சுரைசர்கள்
பலருக்கு மாய்ஸ்ச்சுரைசர்களின் தேவை புரிவதில்லை. எண்ணை செறிந்த சர்மத்திற்கு இவற்றை உபயோகிக்க கூடாது என்றும் குளிர்காலத்தில் இவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் நினைக்கின்றனர். இது தவறு. குளிர்காலத்தில் குளிர் காற்று சருமத்தின் எண்ணையை உறிஞ்சி உலர வைத்து விடும். எல்லாவித சர்மத்திற்கும் மாய்ச்சுரைசர்கள் அவசியம் தேவை.
சருமம் வெய்யிலினாலும், உலர்ந்த காற்றினாலும், ஏ.சி. ரூம்களில் இருப்பதாலும், ஈரப்பசையை இழக்கிறது. மாய்ஸ்சுரைசர்களில் நீர் இருப்பதால் இழந்த ஈரப்பசையை ஈடுகட்ட உதவுகின்றன.
சாதாரண சர்மத்திற்கு – சிறந்த மாய்ஸ்சுரைசர் – பாதாம் (அ) ஜோஜோபா எண்ணை உலர்ந்த சருமத்திற்கு – நல்லெண்ணை. எண்ணை சருமத்திற்கு – ஹோஹோபா ஆயில் முதிர்ந்த சருமத்திற்கு – நெய் (அ) அரிசித் தவிட்டு எண்ணை மாய்ச்சுரைசர்களை தினமும் 2 தடவை உபயோகிக்கலாம்.
எல்லா டைப் சருமத்திற்கும் ஏற்ற மாய்ஸ்ச்சுரைசர்
தர்பூசணி ஒரு துண்டு, லெமன் ஜுஸ் 1 தேக்கரண்டி, படுக்கையில் படுத்துக் கொண்டு தர்பூசணி துண்டுகளை கழுத்திலும், முகத்திலும் 30 நிமிடம் வைத்துக் கொள்ளவும். இந்த துண்டுகளின் மீது எலுமிச்சம் பழச்சாறை தெளிக்கவும். பிறகு முகத்தைக் கழுவவும்.
ஜெலட்டின் 100 கிராம், சுத்தீகரிக்கப்பட்ட நீர் ஒரு கப், எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன், ஒரு கிண்ணத்தில் ஜெலட்டினுடன் தண்ணீர் சேர்த்து களிம்பாக்கி கொள்ளவும். எலுமிச்சை பழச்சாறை சேர்க்கவும். ஃப்ரிட்ஜில் 20 நிமிடம் வைக்கவும். பிறகு எடுத்து நெற்றியிலும், முகத்திலும் தடவிக் கொள்ளவும். பிறகு முகத்தை கழுவிக் கொள்ளவும்.
சர்மத்திற்கு ஈரப்பசை உண்டாக்க – ஆரஞ்சுசாறு, எலுமிச்சம் சாறு – தலா ஒரு மேஜைக்கரண்டி எடுத்து, ஒரு கப் தயிரில் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் இருக்கட்டும். பிறகு கழுவி விடவும்.
மாய்ஸ்ச்சுரைசர்களை முக சுத்தீகரிப்பு, புதுப்பித்தல் செய்து கொண்ட பிறகு தான் உபயோகிக்க வேண்டும்.
அம்மை, பருவினால் ஏற்பட்ட தழும்புகளை போக்க
மஞ்சள் பொடி, தேன், சிவப்பு சந்தன பொடி கலந்த களிம்பை உபயோகப்படுத்தலாம். ஆயுர்வேதத்தின் தயாரிக்கப்பட்ட மருந்துகளான மஞ்சிஸ்டாதி தைலம் போன்றவற்றை உபயோகிக்கலாம். இவற்றுக்கு பிறகு ஒரு கைப்பிடி உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் இவற்றை அரைத்து முகத்தில் களிம்பாக தடவி கொள்ளவும். இதை தவிர பால், மஞ்சள் பொடி, தேன் கலந்த கலவையை தடவி கொள்ளலாம்.
கற்றாழை சாறு தீயினால் ஏற்படும் தழும்புகளை நீக்கும். பால், கோதுமை, தவிடு இவற்றை குழைத்து கரும்புள்ளிகள் மேல் தடவ, நாளடைவில் அவை மறையும். பாதாம் கூழ் 250 கிராம், பால் / நீர் 100 மி.லி. இவற்றை கலந்து முகத்திலும், கழுத்திலும் தடவி 30 நிமிடம் விடவும். பிறகு கழுவி, லேசாக பாதாம் எண்ணெய்யை தடவவும்.
சரும சுருக்கங்கள் மறைய
இரண்டு வைட்டமின் இ காப்சூல்களிலிருந்து எடுத்த எண்ணெய்யை தடவி 15 நிமிடத்திற்கு பின் கழுவி விடவும்.
கற்றாழைப் பொடி, ஆரஞ்சுப்பழத்தோல் பொடி, ரோஜாப் பூ பொடி, சந்தனப் பொடி இவற்றை தலா 1/2 தேக்கரண்டி எடுத்து, உலர்ந்த சருமமுடையவர்கள் பாலிலும், எண்ணைப்பசை சர்மம் உள்ளவர்கள் முல்தானி மட்டி கலந்த தண்ணீரிலும் குழைத்து முகத்தில் பூசவும்.
சோளமாவு ஒரு மேஜைக்கரண்டி, தேன் 1/2 தேக்கரண்டி சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவிக் கொள்ளவும். அரை மணி கழித்து கழுவி விடவும்.
கேரட் 250 கிராம், பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி. கேரட்டை பொடியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் சேர்த்து ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைக்கவும். பிறகு முகத்தில் கன்னங்களில் மற்றும் கண்களைச் சுற்றியும் தடவவும். 30 நிமிடம் விடவும். பிறகு கழுவவும். இதை எல்லா டைப் சருமத்திற்கும் உகந்தது.
எளிய யோசனைகள்
நிறைய தண்ணீர் குடிக்கவும்.
இது வரை உங்களுக்காக பல குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் உங்களுக்கு ஏற்ற வழியை தேர்ந்தெடுத்து, அதை ஒரு மாதம் செய்து பார்க்கவும்.
தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்துகள் அனைத்தும் சுத்தமானவை என்று சொல்ல முடியாது. சிலவற்றில் சோடியம் லெவல் சல்பேட் கலந்திருக்கலாம். இது சருமத்திற்கு கெடுதி செய்யும். எனவே பிரபலமான நம்பகமான தயாரிப்புகளை வாங்கவும்.
கையும் காலும்
கைகளின் பராமரிப்பு
பெண்மணிகளின் கைகள், அவர்களின் வயதை எடுத்துக் காட்டி விடும்! அடுப்படி வேலையில், வீட்டு வேலைகளில் சதா சர்வகாலமும் மூழ்கி விடும் பெண்களின் கைகள் சீக்கிரம் சுருங்கி, முதுமை அடைகின்றன. பாத்திரங்களை கழுவ, சமையலறை மேடையை துடைக்க பெண்கள் கையுறைகள் அணிவது நல்லது.
கைகளை காப்பாற்ற – தேன் ஒரு தேக்கரண்டி, பாதாம் எண்ணை – இரு தேக்கரண்டி எடுத்து கலந்து கைகளில் மசாஜ் செய்து கொள்ளவும். இரவு முழுவதும் (பருத்தி கையுறை அணிந்து) விடவும். காலையில் கழுவி விடவும்.
இதற்கு டைம் இல்லாத இல்லத்தரசிகள் தேங்காய் எண்ணையை கைகளில் தடவிக் கொள்ளலாம். கிளைசரின் + பன்னீர் தடவிக் கொள்ளலாம். நல்லெண்ணையையும் உபயோகிக்கலாம்.
கைகள் பளிச்சென்று தெரிய, எலுமிச்சை தோலை கைகளின் மேல் 5 (அ) 10 நிமிடம் தேய்க்கவும். ஒரு வாரம் செய்தால் முன்னேற்றம் தெரியும்.
முழங்கைகளில் கருப்பு திட்டுக்கள் தோன்றினால் பாலாடை + ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி + ஒரு தேக்கரண்டி துளசி சாறு – இவற்றை கலந்து இரவில் தடவிக் கொள்ளவும். ஏழு இரவுகள் இதை செய்யவும்.
ஏதாவது ஒரு அரோமா எண்ணை (2 சொட்டு) + ஒரு தேக்கரண்டி கிளிசரின் + ஒரு டீஸ்பூன் ரோஜா பன்னீர் இவற்றை கலந்து கைகளில் நீவி விடவும்.
நகங்கள்
ஆயுர்வேதத்தின் படி நகங்கள் ‘அஸ்தி தாது’ (எலும்புகள்) களின் கழிவுகள். அவற்றின் நிலையை வைத்து உடலில் ஆரோக்கியத்தை ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.
நகத்தை பார்த்தால் தெரியும் நோய்
நகத்தில் செங்குத்தாக தெரியும் கோடுகள் வாத தோஷ பாதிப்பை காட்டுகின்றது. ஜீரண குறைவும் விட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகள் இருக்கும்.
படுத்திருக்கும் கோடுகள் ஜீரண அக்னி குறைபாடை காட்டுகிறது.
வெள்ளை புள்ளிகள் நகத்தில் தெரிந்தால் கால்சியம் அல்லது ஜிங்க் குறைபாடுகள் இருக்கும்.
நகங்கள் கடிக்கப்பட்டு இருந்தால் நரம்புத் தளர்ச்சி, தாதுப் பொருள் குறைபாடு அல்லது வயிற்றுப் பூச்சி இவற்றை காட்டுகின்றன.
மஞ்சள் நிற நகங்கள் கல்லீரல் பாதிப்பை காட்டுகின்றன.
பொலிவிழந்த நகங்கள் ரத்த சோகை, கல்லீரல், சிறுநீரக பாதிப்புகளை காட்டுகிறது.
நகங்களை பாதுகாக்க
தினமும், மிருதுவான நக ப்ரஷினால் நகத்தை சுத்தீகரித்து மசாஜ் செய்யவும்.
வாரம் ஒரு முறை நகங்களை விரல் நுனிகளை 10 நிமிடம் எலுமிச்சை சாறு சேர்ந்த வெது வெதுப்பான நீரில் அமிழ்த்தி வைக்கவும்.
இதற்காக துளசி (அ) புதினா இலைகளை இளஞ்சூடான நீரில் சேர்க்கலாம். நகங்களில் வலி இருந்தால் டெட்டால் கலந்த நீரில் ஊறவைக்கவும்.
நீரில் அமிழ்த்தி எடுத்த பிறகு விரல்களை துடைத்து, நல்லெண்ணை (அ) எலுமிச்சை எண்ணை (அ) வேப்ப எண்ணையால் நகங்களை மசாஜ் செய்யவும். ஆலிவ் எண்ணையையும் சூடாக்கி, நகங்களில் மசாஜ் செய்யவும்.
கால்கள்
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது கால்களை பிரத்யேகமாக பராமரிக்க வேண்டும். ஒரு தொட்டியில் வெது வெதுப்பான நீருடன் ஷாம்பூ (அ) தாவிர எண்ணை கலந்து அதில் கால்களை 15 நிமிடம் அமிழ்த்தி வைக்கவும். மூலிகைகள், மூலிகை எண்ணைகளையும் கால்களை அமிழ்த்தும் நீருடன் சேர்க்கலாம். இல்லை 10 மி.லி. டெட்டால், 20 மி.லி. ஷாம்பூவையும் சேர்க்கலாம்.
கால்களில் ரத்த ஒட்டம் சரியாக வந்தடைய, கால்களை மாறி மாறி குளிர்ந்த நீரிலும், வெந்நீரிலும் அமிழ்த்தி வைக்கலாம். இதற்கு இரண்டு “டப்” கள் தேவை. ஒன்றில் வெந்நீர் + 20 மி.லி. நல்லெண்ணையை கலந்து வைக்கவும். மற்றொன்றில் குளிர்ந்த நீர் இருக்கட்டும். கால்களை வெந்நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என்று மாற்றி மாற்றி, அமிழ்த்தி வைக்கவும். இதை 5 (அ) 6 தடவை செய்யலாம்.
கால்கள் இறந்த செல்களை நீக்க பூமைஸ் கல்லால் தேய்க்கவும். பாதங்களில் ஈரப்பசை தரும் லோஷன்களை தேய்க்கலாம். குளிப்பதற்கு முன் உள்ளங்கால், கால் விரலிடுக்குகள், நகங்கள், கணுக்கால், குதிகால் சதை இவற்றில் எண்ணை தேய்த்துக் கொள்வது அவசியம்.
உதடுகள்
உதடுகள், ஜனன உறுப்புகளைப் போல, பிரத்யேக சர்மத்தை உடையவை. இவற்றின்
தோல்களில், நரம்புகள் அதிகம். எனவே தான் உதடுகளில் முத்தமிட்டால் உணர்ச்சிகள் பெருகுகின்றன
உதடுகளை மிருதுவாக, வெடிப்புகள் இல்லாமல் வைக்க, அவற்றில் கீழ்க்கண்டவைகளை தினமும் பூசலாம்.
வெண்ணெய்
பாலாடை
பால் விட்டு அரைத்த ரோஜா இதழ்கள் களிம்பு
பன்னீரில் குழைத்த சந்தனம்
பீட்ரூட்சாறு
கொத்தமல்லி சாறு
5 மி.லி. கிளிசரின் + 5 மி.லி. எலுமிச்சை சாறு + 5 மி.லி. ரோஜா பன்னீர். இவற்றை கலந்து தினம் இருமுறை உதடுகளில் தடவி வரவும். இந்த கலவையை ஒரு தரம் செய்து கொண்டு, ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் உபயோகிக்கலாம்.
சம அளவு வெண்ணை + மஞ்சள் பொடி + ஜாதிக்காய் பொடி.
சேற்றுப்புண் பித்த வெடிப்பு
கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் சேற்றுப்புண் பித்த வெடிகள் ஏற்படும். பித்த வெடி அநேகமாக பாதங்களில் அடிப்பாகத்தில் சர்மம் வெடித்து போவது. முக்கியமாக குதிகாலில் உண்டாகும். இருந்தாலும் பாதம் முழுவதும் பரவும். அபூர்வமாக சிலருக்கு உள்ளங்கையில் கூட வெடிப்புகள் ஏற்படும். பாதங்களின் தோல் தடிமனாக இருப்பதால் அதிகம் வியர்ப்பதில்லை. இதனால் அழுக்கு சேர்ந்து பித்த வெடிப்புகள் உண்டாகும். எப்போதும் குழாயடி, கிணற்றடியில் தண்ணீரில் புழங்கிக் கொண்டு இருப்பவர்களுக்கு சேற்றுப்புண் குழாய்ப்புண் ஏற்படும். கால் விரல்களிடையே புண்கள் தோன்றி வேதனை தரும். பூஞ்சன தொற்றாலும் கால், விரல் இடுக்குகளில் புண்கள் உண்டாகும்.
இவற்றை தவிர்க்க வழிகள்
பாதங்களை வாரம் இருமுறை ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் டெட்டால் கலந்து அதில் 10 நிமிடம் அமிழ்த்தி வைக்க வேண்டும். அமிழ்த்தும் முன்பு பாதங்களில், கால்களில் நல்லெண்ணை தடவலாம். சுடுதண்ணீரில், அரைலிட்டர் தண்ணீருக்கு ஒரு டீஸ்பூன் என்ற அளவில், கடுகுப் பொடியை சேர்க்கலாம். சுடுநீரில் உப்பு கூட சேர்க்கலாம்.
கால் வெடிப்புகளுக்கு முந்திரி கொட்டை தோலிலிருந்து எடுக்கப்படும் எண்ணை, வெளிப்பூச்சாக குணமளிக்கும்.
மாங்காய் (அ) மாவிலைகளின் ஜுஸை வெடிப்புகளால் தடவலாம்.
தூங்குவதற்கு முன் பாதங்களின் வாசலின் (அ) பெட்ரோலியம் ஜெல்லியை தடவலாம்.
இரண்டு ஸ்பூன் எலுமிச்சையின் தோல் பொடியை 10 மி.லி. தேங்காய் எண்ணையில் கலந்து புண்களின் மீது பூசலாம்.
சிலருக்கு, இரவில் கடுக்காயை அரைத்து கால் பாத புண்களின் மேல் பூசிக் கொண்டு படுத்துக் கொள்வது, காலையில் கழுவி விடுவது என்று செய்து வந்தால் குணம் ஏற்படலாம்.
கடுக்காயுடன் மஞ்சளை அரைத்து பூசுவதுண்டு.
கத்தைக் காம்பை காசிக்கட்டி ஜலத்திலிட்டு கரைந்தவுடன், களிம்பை பூசிக் கொள்ளலாம்.
மருதாணி இலையையும் அரைத்து பூசலாம்.
உலர வைத்த எலுமிச்சை தோல் பொடியை 2 ஸ்பூன் எடுத்து 10 மி.லி. தேங்காய் எண்ணையில் கலந்து வெடிப்புகளின் மேல் பூசலாம்.
வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் வரும் போது பாதங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஈரம் போக பாதங்களை நன்கு துடைக்க வேண்டும். பலர் குளிக்கும் போது கால்களில் சோப்பு போடுவதில்லை. சோப்பு போட்டு கழுவி துடைத்து லேசாக தேங்காய் எண்ணை (அ) மாய்ச்சுரைசர்களை தடவ வேண்டும்.
படுக்கப் போகும் முன் கால்களில் பாதங்களில் – எலுமிச்சை சாறு, கிளைசரின், பன்னீர் இவற்றில் தலா 2 ஸ்பூன்கள் எடுத்து கலந்த கலவையை தடவிக் கொள்ளலாம்.
பாதங்களில் ஏதேனும் புண் ஏற்பட்டால் உடனே கவனிக்கவும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் கால்களை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்.
கழுத்து, முதுகு
முகத்தை பராமரிக்கும் போது, கழுத்தை மறந்து விடக் கூடாது. முகத்திற்கு பயன்படுத்தும் களிம்புகளையே கழுத்துக்கும் பயன்படுத்தலாம். மஞ்சள்பொடி, பாலாடை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து களிம்பை கழுத்தில் தடவலாம்.
முதுகு
இயற்கையாகவே முதுகு எண்ணை சுரப்பிகள் அபரிமிதமாக உள்ள இடம். இதனால் முதுகில் சுருக்கங்கள் விழுவது அபூர்வம். வெயில்காலங்களில் முதுகில் சூரிய வெப்பம் அதிகம் விழாமலிருக்க வேண்டுமானால் லோஷன்களை தடவலாம்.
முழு உடலின் சர்ம பாதுகாப்பிற்கு
முக அழகுக்காக மேற்சொல்லிய குறிப்புகளில் சில முழு சர்ம பாதுகாப்பிற்கும் உதவும்.

எண்ணை குளியல் வாரம் ஒரு முறையாவது எண்ணை தடவிக் கொண்டு உடற்பயிற்சி செய்தல்.
மூலிகை பொடி கலந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்துக் கொள்வது.
அஸ்வகந்தா, அதிமதுரம், தசமூலம் இவற்றின் பொடிகளை சமஅளவில் கலந்து, தண்ணீரில் குழைத்து தடவிக் கொள்ளலாம். கடலைமாவு + கடுகெண்ணை (அ) நல்லெண்ணை + மஞ்சள் 1/2 டீஸ்பூன் இவற்றை கலந்து, தண்ணீரில் குழைத்து தடவிக் கொள்ளலாம். இதை வாரம் ஒரு முறை (அ) மாதம் இரு முறை செய்யும். எண்ணை சிறிது சூடாக இருக்க வேண்டும்.
உடம்புக்கு சிறந்த லோஷன் பாதாம் ஆயில், ரோஜா ஆயில், சந்தனத் தைலம் ஒவ்வொன்றிலும் தலா 100 மி.லி. எடுத்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் பொழுது உபயோகிக்கவும்.

No comments:

Post a Comment