Wednesday, February 20, 2013

மேகப்படை


தோல் வியாதிகள் பலவிதம். அவை எல்லாவற்றையும் பூரணமாக குணப்படுத்த நவீன முறை வைத்தியத்தில் முடிவதில்லை. எக்ஸிமா அத்தகைய தோல் நோய்களில் ஒன்று. எக்ஸிமா, டெர்மடைடீஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது. பல சர்ம நோய்களின் கூட்டுப் பிரிவு தான் எக்சிமா. பிறந்த குழந்தைகளிலிருந்து, முதியோர்கள் வரை எல்லா வயதினரையும் தாக்கும் நோய். சிலருக்கு வயதாக எக்சிமா குறையும். சிலருக்கு அதிகமாகும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தோன்றி, மறைந்து தொல்லை தரும்.
எக்சிமா என்றால் என்ன?
மேல் தோலில் உண்டாகும் அழற்சி. இதனால் அதிகமான அரிப்பு, நமைச்சல், கொப்புளங்கள், தோல் சிவப்படைவது, வீக்கம், சிரங்கும் சொரியும் ஏற்படுதல், செதில்கள் தோன்றுதல் மற்றும் சீழ்போல் புண்களிலிருந்து கசிவு ஏற்படுதல் – இவையெல்லாம் உண்டாகும். சினைப்பு உண்டாகும்.
சிலருக்கு இந்த வியாதி உடலின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் பாதிக்கும். சிலருக்கு எங்கு வேண்டுமானாலும் உண்டாகலாம். எக்சிமாவை, ஏதோ ஒரு ஒவ்வாத பொருள் ஏற்படுத்தும் விளைவுக்களுக்கு எதிரான எச்சரிக்கை என்று சொல்லாம்.
எக்சிமாவில் பலவகைகள் உண்டு. முக்கியமானவை
அடோபிக் எக்சிமா
இது தான் பரவலாக காணப்படும் எக்சிமா. அடோபிக் என்றால், ஒவ்வாமையை உண்டாக்கும் பொருள் உடலில் ஊடுருவது ஒரு இடத்தில் அதன் விளைவுகள் உடலின் வேறு இடத்தில் தோன்றும். உதாரணமாக ஒரு சில பொருட்களை உட்கொண்டால், தோலில் எக்சிமா உண்டாகும். இந்த வகை எக்சிமா, தொட்டாற்சுருங்கி போல அதிக உணர்ச்சி உள்ளவர்களுக்கு அதிகமாக வரும். ஆஸ்த்மா, உள்ளவர்களையும் அதிகம் தாக்கும்.
அறிகுறிகள்
முக்கிய அறிகுறி – அரிப்பு, அதுவும் தாங்கமுடியாத அரிப்பு.
தோலில் கட்டிகள், சிரங்குகள் தோன்றும்.
சினைப்பு ஏற்படும். சொரிவதை தடுக்க முடியாததால், சினைப்பு புண்கள் சொரிவதால் இரணமாகும்.
சிரங்குகளில் நீர் கோர்த்து கொண்டு கசியலாம். இதை அழும் எக்சிமா என்பார்கள்.
தோல் சிவந்து தடிமனாகும்.
சினைப்புகள் கைகள், முழங்கைகள், முழங்கால்களுக்கு பின் பகுதிகள் – பொதுவாக இவற்றில் தோன்றும். சினைப்புகளின் நிறம், தோன்றுமிடம், தீவிரம் இவை மாறினாலும் ஒன்று மாறாது. அது அரிப்பு. அரித்து அரித்து தோல் உடைந்து பாக்டீரியா உள்ளே புகும்.
காரணங்கள்
ஒவ்வாமை, ஸ்டிரெஸ் இவைகள் காரணமாகலாம். பரம்பரையும் ஒரு காரணம்.
ஸ்பரிச ஒவ்வாமை எக்சிமா
இது ஒவ்வாமை உண்டாக்கும் பொருளுடன் நேர் தொடர்பு கொள்வதால், தோலில் ஏற்படும் அழற்சி. இதனால் ஏற்படும் சொறி, சிரங்கு மற்றும் சினைப்பு பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தோன்றும், நன்றாக தனித்திட்டாக, வட்டமாக தோன்றும். சினைப்பில் அரிப்பு மிக அதிகமாக இருக்கும்.
ஒவ்வாமையை உண்டாக்கும் பொருள்கள் எரிச்சலையும், ஒவ்வாமையும்
உண்டாக்குகின்றன. அலர்ஜி வருவதற்கு ஆயிரக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன.
வாசனை பொருட்கள் – பவுடர், கிரீம்கள், நகபாலிஷ், பாலீஷை எடுப்பவை, சென்ட்டுகள், முதலியன.
மருந்துகள் – பெனிசிலின், பல ஆன்டி பையாடிக்குகள், போன்றவை.
அணிகலன்கள் உலோகங்கள் – நிக்கல் பெரும்பாலும் அலர்ஜியை உண்டாக்கும். தங்கம் கூட சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம்.
சுத்திகரிக்கும் பொருட்கள் – வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பினாயில், அமிலம், அல்கைலைன் இவை மற்றும் சோப், துணி வெளுக்கும் டிடர்ஜெண்டுகள்,
தாவரங்கள் – பல தாவரங்கள் பார்தேனியம், நெரிஞ்சில் போன்றவை ஒவ்வாமையை உண்டாக்கும் பொருள் எதுவானாலும், பாதிக்கப்பட்டவருக்கு உண்டாவது அரிப்பு, சினைப்புகள்.
சீபம் எக்சிமா
இந்த வகை காரணம் தெரியாத ஒன்று. தலையில், முகத்தில், சில சமயங்களில் வேறு இடங்களில், செதில்களை தோற்றுவிக்கும். மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளை வெகுவாக பாதிக்கும் இந்த எக்சிமா, பெரியவர்களை, 30-70 வயதுக்குள் தாக்கும்.
இது முதலில் தலையில் பொடுகு போல் தொடங்கும். முடி இழப்பு
இல்லாவிட்டாலும், அரிப்பு சில சமயங்களில் இருக்கும். தீவிர நிலையில் பருக்கள் போன்ற சிறிய கட்டிகள், தலை, காதுக்கு பின்னால், கண்புருவங்களில், மார்பில், மேல் முதுகில் தோன்றலாம். ஒரு மாத சிறு குழந்தைகளுக்கும் ஏற்படும் இந்த எக்சிமா, பொதுவாக அரிப்பு, நமைச்சலை உண்டாக்குவதில்லை. குழந்தைகளுக்கு முகத்தில் சிவப்பு நிற பருக்கள் தோன்றும்.
ஆயுர்வேதம்
எக்சிமாவை ஆயுர்வேதம் விசர்சிகா என்கிறது. மூன்று தோஷங்கள் பாதிப்பினால் உண்டாகும். இருந்தாலும் முக்கியமாக கபதோஷ கோளாறுகளாலும் சிறிதளவு வாத, பித்த தோஷ மாறுபாடுகளாலும் உண்டாகிறது. ஆயுர்வேதம், எக்சிமாவை, குஷ்டரோகத்தின் தீவிரமில்லாத ஒரு நோயாகத்தான் கருதுகிறது. ஆயுர்வேதம், சொல்லும் காரணங்கள்.
உணவு முறை தவறுகள் – பழைய, கெட்டுப்போன உணவுகளை உட்கொள்ளுதல், ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாத உணவுகளை உண்பது, அதிக இனிப்புகளை உண்பது, கார சாரமான, அதிக மசாலா சேர்த்த உணவுகள் உண்பது, அதிகமாக மாமிச உணவுகளை உண்பது.
உடலுறவில் அளவுக்கு அதிகமாக ஈடுபடுவது
அதீத உடற்பயிற்சி
வீட்டு வைத்தியம்
வேப்ப மரப் பட்டையை போட்டு காய்ச்சி நீரால் தினமும் பாதிக்கப்பட்ட இடங்களை கழுவவும். வேப்ப மரப்பட்டையிலிருந்து செய்யப்பட்ட களிம்பை தடவி, உலர்ந்த பின் கழுவி விடவும். வேப்ப எண்ணை (2-4 துளிகள்) யை பாலில் கலந்து, சர்க்கரை சேர்த்து தினமும் குடிக்கவும். இதை 40 நாட்களுக்கு செய்யவும்.
முடிந்தால் தினமும் சாதாரண குளியலுக்கு பதில், எண்ணை ஸ்நானம் செய்யவும்.
உடல் கழிவுகளை போக்க மாதம் ஒரு முறை, 2 தேக்கரண்டி விளக்கெண்ணையை சூடான பாலுடன் பருகவும்.
ஆயுர்வேத சிகிச்சை
இரத்தம் நச்சுப்பொருட்களால் மாசு படிந்து போவதால் சர்ம வியாதிகள் தோன்றுகின்றன என்பது ஆயுர்வேத கருத்து. எனவே ‘விரேசனா’ முறையால் முதலில் உடலின் கழிவுப்பொருட்கள் நீக்கப்படுகின்றன. இதற்காக சென்னா, சணல் விதைகள், இசப்கோல், த்ரிபாலா போன்றவை பசும்பால், விளக்கெண்ணை, திராட்சை, மாழ்பழச்சாறு இவற்றுடன் கொடுக்கப்படுகின்றன. பிறகு சர்ம வியாதிக்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது
நாட்டு வாதுமை இலைகளின் சாற்றை எக்சிமா பாதித்த இடங்களில் தடவலாம்.
புங்கமர விதைகளிலிருந்து எடுக்கப்பட்ட தைலத்தையும், எலுமிச்சை பழச்சாற்றையும் கலந்து தடவலாம்.
கதீரா- பல சர்ம நோய்களுக்கு ஏற்ற மூலிகை – பரவலாக ஆயுர்வேத வைத்தியர்களால் பயன்படுத்தப்படும் மூலிகை. எக்சிமாவை போக்க வல்ல அருமருந்து.
மஞ்சள் – தொன்று தொட்டு தெரிந்த கிருமி நாசினி. தோலை தொற்று நோய்கள் அணுகா வண்ணம் காக்கும்.
சேராங்கொட்டை- உடலின் இரத்த ஒட்டத்தை மேம்படுத்தி ரத்தத்தை சுத்தீக்கரிக்கிறது.
தகரை – இதன் மற்றொரு பெயர் படர்தாமரை செடி சர்ம வியாதிகளுக்கு சிறந்த மருந்து – எக்சிமாவை குணமாக்கும் திறன் உடையது.
ஆயுர்வேத மருந்துகள்
பஞ்சதிக்க க்ரித குக்குலு – இந்த மருந்து பாலுடன் 2 தேக்கரண்டி அளவில் கலந்து வெறும் வயிற்றில் கொடுக்கப்படும் சிறந்த மருந்து.
கந்தக் ரசாயனம் – பிரத்யேக ஆயுர்வேத தயாரிப்பு. மூன்று வகைகளில் செயல்படுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சர்ம நோய்களை குணப்படுத்துகிறது. அவை திரும்பி வராமல் காக்கிறது.
மகாமஞ்சிஷ்டாதி க்வாதம், கதிராரிஷ்டா, போன்ற மருந்துகளும் நல்ல நிவாரணமளிக்கின்றன.
வெளிப்பூச்சாக குடூச்யாதி தைலம், மகா மறிச்சயாதி தைலம் முதலியன பயன்படுகின்றன.
இதர அறிவுரைகள்
எக்சிமா போன்ற சர்ம நோயுள்ளவர்கள் சோப்பை பயன்படுத்தக் கூடாது. கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்தலாம். தற்போது தரமான ஆயுர்வேத சோப்புகள் கிடைக்கின்றன. அவற்றை உபயோகிக்கலாம். குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு உடலில் எண்ணை தேய்த்துக் கொண்டு ஊறவும். மிதமான சூடுள்ள அல்லது குளிர்ந்த நீரில் குளிக்கவும். குளித்தவுடன் துவாலையால் உடலை அழுத்தி துடைக்காமல், மெதுவாக நீரை, ஒற்றி எடுக்கவும்.
கம்பளி ஆடைகள், போர்வைகள் இவற்றை கூடிய மட்டும் தவிர்க்கவும்.
துணிகளுக்கு டிடர்ஜென்ட் சோப்புகளை பயன்படுத்தும் போது கையுறைகளை அணிந்து கொண்டால், டிடர்ஜென்ட்டை தொடாமல் வேலை செய்யலாம்.
உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளை கண்டறிந்து கொள்ள வேண்டும்.
மசாலா, காரம், மாமிசம், முட்டை, பதனிடப்பட்ட உணவுகள் இவற்றை தவிர்க்கவும். வெந்த காய்கறிகள், பரங்கிக்காய், பழங்கள் இவற்றை சேர்த்துக் கொள்ளவும். சில ஆயுர்வேத வைத்தியர்கள் புளித்த தயிரை தவிர்ப்பது நல்லது என்கின்றனர். தர்பூசனி பழம் நல்லது. இதை அடிக்கடி உட்கொள்ளவும்.

No comments:

Post a Comment