Monday, December 31, 2012

என்ன பிரச்சினையாக இருந்தாலும் முத்தாரம்மன் முடித்து வைப்பாள்!


உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு நோய் இருந்து கொண்டே இருக்கும். எந்த டாக்டராலும் குணமாக்க முடியாத படி நோய் நீடித்தப்படி இருக்கும். சிலர் எந்த வியாபாரம் செய்தாலும் நஷ்டம் ஏற்பட்டு தவிப்பார்கள். சிலர் எல்லா வசதியும் பெற்றிருப்பார்கள்.

ஆனால் மனதில் நிம்மதி இருக்காது. வறுமை, கடன்தொல்லை, அண்ணன்-தம்பி தகராறு, சொத்து பிரச்சினை, வேலையில் நிம்மதியின்மை, உரிய வயதில் திருமணம் நடக்காதது, வீண்பழி, கொடுத்த பொருள் திரும்பி வராதது என்று எத்தனையோ பிரச்சினைகள் இருக்கலாம். இந்த பிரச்சினைகளை எதிர் கொள்ள தெரியாமல் சிலர் தற்கொலை செய்து விடலாமா என்று கூட கோழைத்தனமாக நினைப்பதுண்டு.

இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவை அனைத்தையும் குலசை முத்தாரம்மன் முடித்து வைப்பாள். அவள் சன்னதியில் நின்று ஒரு நிமிடம் மனம் உருக, உங்கள் பிரச்சினையை சொல்லி விட்டாலே போதும், மறு வினாடியே உங்கள் மனம் லேசாகி விடும். உங்கள் குறைகளை முத்தாரம்மன் தன்னகத்தே எடுத்துக் கொண்டு உங்களுக்கு நிம்மதி தருவாள்.

மனநலம் பாதிப்பிற்குள்ளானவர்கள் இங்கு வந்து அம்பாள் முன் நின்றாலே, குணமுண்டாகும். மனநலம் பாதித்தவர்களுக்கு இங்கு பிற இடங்களைப் போன்று கயிற்றால் கட்டிப் போடுதல் போன்ற சிகிச்சைகள் எதுவும் கிடையாது. ஆனால், பாதிப்படைந்தோரை இந்த ஆலயத்திற்கு அழைந்து வந்து, அம்பாளை மனமுருகி வேண்டினால், முத்தாரம்மன் அருள் உடனே கிடைக்கும். மனநலம் சரியாகி விடும்.

இது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால், மனநோய் கண்டவர்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர். அம்பாளின் அருள் கிடைக்கப்பெற்று நோய் தீர்ந்து திரும்புகின்றனர். அது போல தொழு நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் குலசேகரன்பட்டினம் சென்று முத்தாரம்மனை வழிபட்டால், நோய் குணமாகும்.

அம்பாளின் அருளினால்,மீண்டும் பழைய நிலையை அவர்கள் அடைய முடியும். இது போன்று அம்பாளைத் தொழுது, தொழு நோய் குணமாவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படி அனைத்து பிரச்சனைகளும் நோய்களும் தீர முத்தாரம்மனை நினைத்து, 41 நாட்கள் தொடர்ந்து விரதம் கடைபிடிக்க வேண்டும்.

அப்படி இருந்தால் நீங்கள் நினைத்தப்படி நடக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், குலசை முத்தாரம்மனிடம் உங்களையே ஒப்படைத்து விடுங்கள். தாயே நீயே கதி என்று சரண் அடையுங்கள். அவள் மீது முழுமையான பற்றும், பாசமும், பக்தியும் கொள்ளுங்கள். உங்கள் மனதில் இருக்கும் அத்தனை கவலைகளையும் இறக்கிவைக்க அவள் ஆலயத்தை நோக்கி புறப்படுங்கள்.

உங்களைப் போன்றவர்களின் துக்கங்களை, துயரங்களை, போக்குவதற்காக குலசை முத்தாரம்மன் காத்திருக்கின்றாள். முத்தாரம்மன் உங்கள் மனதை மிகவும் லேசாக்கி அனுப்பி வைக்கும் ஆற்றல் படைத்தவள். அவளின் கருணைப் பார்வையிலேயே உங்கள் கவலைகள் அனைத்தும் கண நேரத்தில் காணாமல் போய் விடும். இந்த யதார்த்த உண்மையை எண்ணற்ற பக்தர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர். 

No comments:

Post a Comment