Monday, December 31, 2012

பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம்


இலங்கை சென்று ராவணனை வதம் செய்து சீதையுடன் திரும்பிய ராமன் இங்குள்ள கடற்கரை ஓரம் அமர்ந்து சிவனை வழிபட நினைத்தார். லிங்கம் எடுத்துவரச் சென்ற ஹனுமான் வர தாமதம் ஆனதால், சீதை கடற்கரை மண்ணிலே பிடித்த லிங்கத்தை ராமர் வழிபட்டார். அந்த லிங்கமே தற்போது ராமநாத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. இதில் மூன்றாம் பிரகாரம் உலகிலேயே நீளமானது என்ற பெயரை பெற்றது.

கோயிலின் எதிரே கிழக்கு பகுதியில் அக்னி தீர்த்தக் கடல் அமைந்துள்ளது. காசிக்கு சென்றவர்கள் தங்கள் புண்ணிய யாத்திரை பூர்த்தியாக ராமேஸ்வரம் வருகின்றனர். சிவனை வழிபட்டு தங்கள் பாவங்கள் போக அக்னி தீர்த்த கடலில் நீராடி பின்னர் இங்குள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வழிபடுவதை தங்கள் பிறவி பயனாக கருதுகின்றனர். கோயிலுக்கு ள்ளே அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்கள் வெவ்வேறு சுவையிலும், வெப்பநிலையிலும் இருக்கும். அமாவாசை தினங்கள், திதி நாட்களில் இந்தக் கடற்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கடலில் புனித நீராடுவர். இறந்தவர்களின் அஸ்தியையும் இக்கடலில் கரைத்து புனித நீராடுவர்.

தோஷங்கள் போக்கும் நவபாஷான கடற்கரை:

ராமன் இலங்கை சென்று ராவணனை வதம் செய்துவிட்டு திரும்புகையில் தேவிபட்டினம் கடற்கரையில் அமர்ந்து, அந்த தோஷம் நீங்க மண்ணில் நவக்கிரகங்கள் பிடித்து பூஜித்த இடமே நவபாஷான கடற்கரை என அழைக்கப்படுகிறது. தற்போது ராம பிரானால் பூஜிக்கப்பட்ட நவக்கிரகங்கள் கடலுக்குள் அமைந்துள்ளன. இது நவபாஷான கோயில் என அழைக்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து வடக்கே 12 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தல், திருமண தடை, சர்ப தோஷம் உட்பட பல்வேறு தோஷம் நீங்க சாந்தி செய்து கடலில் நீராடி தரிசனம் செய்வர். கடற்கரைக்கு மேற்கே கடலடைத்த பெருமாள் கோயில் உள்ளது. 

No comments:

Post a Comment