Monday, December 31, 2012

ஒட்டக்கூத்தரை வரகவியாக்கிய கூத்தனூர் மகாசரஸ்வதி அம்மன்


 

திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் பூந்தோட்டம் பேருந்து நிலையத்தின் அருகே அரை கி.மீ தொலைவில் கூத்தனூர் உள்ளது. வேறெங்கிலும் இல்லாது தமிழகத்தில் மட்டுமே சரஸ்வதிக்கென தனிக்கோயில் அமைந்திருப்பது இவ்வூரில்தான். மேலும், இங்கு சிவன் கோயிலில் துர்க்கையும், பெருமாள் கோயிலில் மகாலட்சுமியும், தனக்கென தனிக்கோயில் கொண்டு மகாசரஸ்வதியும் விளங்குவதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. அம்பிகையின் கோயிலில் ராஜகோபுரம் தனியாக இல்லை. கருவறையின் மேலே ஐந்து கலசங்களுடன் ஞானத்தின் இருப்பிடத்தை உலகுவோர்க்கு உணர்த்துவதாய் அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்திற்குள் அம்பிகை ஞானதவம் இயற்ற அர்த்த மண்டபத்துள் உற்சவ விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த கோயிலுக்கென சிறப்பு வரலாறு உண்டு. அந்த வரலாறு வருமாறு: கவிச்சக்கரவர்த்தி எனப்பெயர் பெற்றவரான ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் வேண்டி கலைமகளை பூசித்தார். கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் ஒன்று அமைத்தும் தக்சின வாகினியாய் ஓடும் ஹரிசொல் மாநதியின் நீரினால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிப்பட்டு வரலானார். கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவியாக்கினாள் என்பர். மூன்று சோழ அரசர்களின் புலவராக விளங்கி கவிச்சக்கரவர்த்தி என்ற பெரும் புகழையும் அடைவதற்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய என்று தக்கையாக பரணி பாடியுள்ளார் கூத்தர்.

சங்கமர்கள் ஒட்டக்கூத்தரை கொலை செய்ய முயன்றபோது கூத்தனூர் காளி கோயிலினுள் நுழைந்தார். பரணி நூல் ஒன்று பாடினால் அவரை விட்டு விடுவதாக கூறினார் சங்கமர்கள். அதை கேட்டு கூத்தர் பரணி நூல் ஒன்று பாடியதாகவும் அவதூறு பாடுவதற்கு நாவிலிருந்து துணை புரிந்த நாமகளை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய என்று பாடினார் எனவும் வரலாறு உண்டு. கூத்தர் மறைந்துகொண்ட ஊர் வீரர்வாடி என பெயர் பெறும் எனவும் ஆய்வாளர் கூறுகின்றனர்.

வீரர்வாடி கூத்தனூரிலிருந்து அரை கி.மீ தொலைவில் ஆற்றின் அக்கரையில் உள்ளது. ஒட்டக்கூத்தர் என பெயர் பெறுவதற்கு காரணமான நிகழ்ச்சியும் இவ்வூரில் நடந்திருக்கலாம் என கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் என்ற நூல் கூறுகிறது. செங்குந்தர்களின் தலைகள் ஆயிரத்தை வெட்டி அவற்றை கலைவாணியின் அருளால் ஒட்ட வைத்தார் கூத்தர். அதனாலேயே அவர் ஒட்டக்கூத்தர் என அழைக்கப்பட்டார். இவ்வாறு ஒட்டும் பொருட்டு அவர் பாடிய பாடல்கள் எழுப்பெழுவது எனப்படும்.

No comments:

Post a Comment