Monday, December 31, 2012

சுவாமிமலை சுவாமிநாதர்





மூலவர்
சுவாமிநாதர், சுப்பையா

உற்சவர்


அம்மன்
வள்ளி, தெய்வானை

நடைதிறப்பு
காலை 5 மணி முதல்11 மணி வரை, மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

இடம்
சுவாமிமலை

முகவரி
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் சுவாமிமலை - 612302 தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்

தகவல்

திருப்படி பூஜை : தஞ்சை மாவட்டத்தில் மலைகளே கிடையாது.மலைகளே இல்லாத இப்பகுதியில் இந்த சுவாமி மலை உள்ளது.குன்று தோறும் இருப்பான் முருகக்கடவுள் என்பதற்கிணங்க இம்மலை மீது முருகப்பெருமான் அருள்புரிவது சிறப்பான ஒன்றாகும்.இக்கோயிலின் மேல் தளத்தை அடைய 60 படிக்கட்டுகள் உள்ளன. இவை சபரிமலையில் பதினெட்டு படிகள் எப்படி புனிதமானதாக கருதப்படுகிறதோ அதுபோல் புனிதமாக கருதப்படுகிறது.தமிழ் வருடங்கள் 60 ஆகும். அந்த தமிழ் வருடங்களின் தேவதைகள் சுவாமியை பிரார்த்தனை செய்துபடி படிகளாக உள்ளதாக இங்கு ஐதீகம்.தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது இந்த படிகளுக்கு வஸ்திரம் சாத்தி தேங்காய், பழம் வைத்து பாடல் பாடி பூஜை செய்வார்கள் . இதற்கு திருப்படி பூஜை என்று பெயர். இது இத்தலத்தில் விசேசம். பிரார்த்தனை திருமண வரம் குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். சுவாமி நாதனை வழிபட்டால் நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள், பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகுகிறது. நேர்த்திக்கடன்: மொட்டை போடுதல், சுவாமிக்கு சந்தனகாப்பு , பஞ்சாமிர்த அபிசேகம், பால் அபிசேகம் , அன்னதானம் வழங்குவது , நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடிஎடுத்தல் , அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சத்ரு தொல்லை இருப்பவர்கள் திருசதை அர்ச்சனை செய்கிறார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதும் நேர்த்திகடனாக இருக்கிறது. வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது. தலபெருமை: முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 4வது படைவீடு. அப்பனுக்கே பாடம் சொல்லித் தந்த சுப்பையா அருள்பாலிக்கும் அற்புத தலம் இது. மூலவர் 6 அடி உயரமாக கையில் தண்டத்துடன் தலையில் உச்சிகுடுமியுடனும்,மார்பில் பூணுலுடனும் காணப்படுகிறார். முருகப்பெருமான் சுவாமிநாதனாக வலக்கரத்தில் தண்டாயுதத்துடனும், இடக்கையை தொடையில் வைத்தபடியும் யோகநிலையிலுள்ள குருவாக நின்ற கோலத்தில் ஆறடி உயரமாக இருக்கிறார். பீடம் சிவ பீடம் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்ற சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற வஜ்ர வேலுடன் காணப்படுகிறார். கையில் தாங்கிய வேல்தான் ஆலயத்தின் கீழ் வீதியில் உள்ள நேத்திர தீர்த்தத்தை உண்டாக்கியது. பூமாதேவி பார்வதியின் சாபத்திற்கு ஆட்பட்டு இத்தலத்திற்கு வந்து தங்கிச் சுவாமிநாதப் பெருமாளை வழிபட்டுச் சாபம் தீர்ந்தாள்.அதன்பின்னும் இத்தலம் விட்டுப்போக விருப்பமின்றி நெல்லி(தலமரம்)மரமாக இத்தலத்தில் இருக்கிறாள். இத்தலம் குறித்து அருணகிரி நாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் நிறைய பாடியுள்ளனர் நான்முகன், பூமகள், இந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம். குருவாக இருந்து அருள் தந்தமையால் குருமலை , குருகிரி என்றும் சுவாமி மலைக்கு வேறுபெயர்கள் உள்ளன

திருவிழா

திருக்கார்த்திகை திருவிழா - 10 நாட்கள் - இத்திருவிழாவே இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழா ஆகும். இத்திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். சித்திரை - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் வைகாசி - வைகாசி விசாகப்பெருவிழா ஆவணி - பவித்ரோற்சவம் - 10 நாட்கள் புரட்டாசி - நவராத்திரிபெருவிழா - 10 நாட்கள் ஐப்பசி - கந்தசஷ்டிபெருவிழா - 10 நாட்கள் மார்கழி - திருவாதிரைத் திருநாள் - 10 நாட்கள் தை - பூசப்பெருவிழா பங்குனி - வள்ளி திருக்கல்யாண விழா இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை மாதங்களில் நடைபெறும் விழாக்கள் கொடிஏற்றத்துடன் நடைபெறும் பெருவிழாக்கள் ஆகும். ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில வருடப்பிறப்பு நாளில் திருப்படிதிருவிழா சிறப்பாக நடைபெறுகிறது

போக்குவரத்து

கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்கு அடிக்கடி பேருந்து போக்குவரத்து வசதி உள்ளதால் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்றடையலாம். 

படங்கள் மூலவர் தம்பதியருடன் முருகன் உற்சவர் அம்மன் நடைதிறப்பு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இடம் சோலைமலை (அழகர்கோயில்) முகவரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை, அழகர்கோவில்- 625301. மதுரை மாவட்டம் மதுரை மாவட்டம் தகவல் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். முருகன் அவ்வையாரிடம் 'சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்ற திருவிளையாடலை நிகழ்த்தியது இங்கு தான். பிரார்த்தனை திருமணத் தடை உள்ளவர்களும், புத்திரபாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர். நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியதும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர். தலபெருமை: ஆரம்ப காலத்தில் இங்கு வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது.முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார். ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டும் தான் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இங்குள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராடி காவல் தெய்வமான ராக்காயி அம்மனை தரிசிக்கலாம். இத்தீர்த்தம் சுவையானது. சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம். மலையடிவாரத்தில் கள்ளழகர் திருக்கோயிலும், மலைமீது சோலைமலை முருகன் கோயிலும் அமைந்துள்ளன. தல வரலாறு: தமிழ்பாட்டி அவ்வையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் அவ்வைக்கு அருள் புரிந்து, இந்தஉலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார்.ஒரு முறை அவ்வை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, அவ்வை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, ''என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?'' என்றான். சந்ததோஷப்பட்ட பாட்டி ''வேண்டும்''என்றார்.உடனே முருகன்,''பாட்டி! தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?''என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல்,''சுட்ட பழத்தையே கொடேன்''என்றார்.சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. அவ்வை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,''பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள்''என்று கூறி சிரித்தான். சிறுவனின் மதிநுட்பத்தை அறிந்த பாட்டி, மரத்தில் இருப்பவன் மானிடச் சிறுவனல்ல என்பதைப் புரிந்து கொண்டார். பின்னர் முருகன் தன் சுயவடிவில் அவருக்கு அருள்பாலித்து முக்தி தந்தார். முருகன் இந்த திருவிளையாடலால் உலகிற்கு ஒரு தத்துவத்தை உணர்த்தினார். அதாவது, 'உயிர்களின் மீது 'உலகப்பற்று' என்னும் மணல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்க வெறும் கல்வியறிவு மட்டும் போதாது. இறைவனை அறியும் மெய்யறிவும் தேவை. பற்றை அகற்றினால் இறைவனை உணரலாம்' என்பதே அது. திருவிழா தமிழ்வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி கார்த்திகை, ஆவணி பூரத்தில் வருஷாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம். போக்குவரத்து மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 21 கி.மீ. தூரத்தில் அழகர்கோவில் உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள சோலைமலை முருகன் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் பஸ் வசதி செய்துள்ளது  

No comments:

Post a Comment