Tuesday, January 15, 2013

கணவனுடன் தகராறில் தாய் வீசினாரா? கூவம் ஆற்றில் குழந்தை சடலம் மீட்பு


ஆவடி, : ஆவடி காமராஜர் நகர் கூவம் ஆற்றில் நேற்று மதியம் ஒரு குழந்தை கிடந்தது.
பொது மக்கள் உதவியுடன் கூவத்தில் மிதந்த குழந்தையை போலீசார் மீட்டனர். ஒன்றரை வயது மதிக்கத்தக்க அந்த பெண் குழந்தை இறந்து கிடந்தது. ரோஸ் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தது. போலீசார் குழந்தையின் சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆவடி தீயணைப்பு படையினர் கூவத்தில் வேறு ஏதேனும் சடலம் உள்ளதா என தேடினர். ஆனால் வேறு எந்த சடலமும் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக, ஆவடிபோலீசார் விசாரித்தனர். அப்போது கிடைத்த பரபரப்பு தகவல்கள்:
ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (37). பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி சரிதா (30). இருவரும் காதல் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆஷா, ஒன்றரை வயதில் நிஷா என 2 பெண் குழந்தைகள்.
நேற்று முன்தினம் குடிப்பதற்காக பணம் கேட்டபோது சரிதா கொடுக்க மறுத்துவிட்டார். ஆத்திரமடைந்த செல்வம் சரிதாவை அடித்துள்ளார். தலையில் காயம் அடைந்த சரிதா, தனது குழந்தைகளுடன் ஆயிலச்சேரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். சரிதாவை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
நேற்று காலை சரிதாவின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். அதன்பிறகு 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சரிதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது அக்கம்பக்கத்தினரிடம், தனக்கு வாழ பிடிக்கவில்லை என கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில், காமராஜர் நகர் கூவத்தில் மிதந்த பெண் குழந்தை தனது பேத்தி நிஷா என விஜயா அடையாளம் காட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது. காமராஜர் நகரில் சரிதா, குழந்தை ஆஷாவுடன் அழுது கொண்டிருந்தார். போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment