Tuesday, January 15, 2013

ஆயுர்வேத மருந்துகள்


ஆயுர்வேதம் மிக பழமையானது. வேதங்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு வரும் ஆயுர்வேதம், நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் நீண்ட கால வாழ வழிகாட்டும் ஒரு அருமையான சிகிச்சை முறை.
ஒவ்வொரு மருத்துவ முறைகளிலும் உள்ள தனித்துவம், அந்தந்த முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும். அலோபதி முறையில் உள்ள மாத்திரைகள், கேப்ஸ§ல்கள், இன்ஜெக்ஷன், சிரப் போலவே ஆயுர்வேதத்திலும் பல வகைகளாக மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்
அர்க்கங்கள் – திரவப் பொருட்களுடன் மருந்து சரக்குகள் கொதிக்கும் போது எழும் நீராவி பல மருத்துவ குணங்கள் உடையது. மூலப்பொருட்களில் உள்ள சில குறைகள் (துர்வாசனை போன்ற) இந்த முறையில் நீக்கப்படுகிறது. நீராவியை குளிர வைத்து நீராக்குவதால் மருந்துகள் உட்கொள்வது சுலபமாகிறது. சாதாரணமாக கொதிக்க வைக்கும் போது நஷ்டமாகும் சில சத்துக்களை, அர்க்க முறையால் நஷ்டமாகாமல் தடுக்கலாம். தவிர பல மருந்து சரக்குகளை திரவ ரூபத்தில் வடித்து பல நாட்கள் சேமித்து வைக்கவும் இந்த முறை உதவுகிறது.
ஆஸவங்கள் – இந்த முறையில் சீதோஷ்ணத்தாலும், காலபோக்கினாலும் கெட்டு விடும் மருந்து சரக்குகளின் சக்தியை, எப்பொழுதும் கிடைக்குமாறு பாதுகாக்கப்படுகிறது. மருந்து சரக்குகளுடன் வெல்லம், சர்க்கரை, தேன் போன்ற இனிப்புப் பொருட்களையும் சேர்த்து, மண் பாண்டங்களில் வைத்து “சீல்” செய்யப்படுகின்றன. இந்த மண் பாண்டங்களை குறிப்பிட்ட காலம் வரை அப்படியே வைக்கப்படும். வெளிநாடுகளில் ‘ஒயின்’ (Wine) தயாரிப்பது போல், இந்த மண்பாண்டங்களை சுரங்கங்களில், பூமியின் அடியிலோ வைக்கப்படும். இதனால் மருந்துப்பொருட்கள் புளித்து, நுரைத்து பொங்கும் காடியாகும். ஆங்கிலத்தில் ‘Fermentation’ என்று சொல்லப்படும் முறை தான் இது. முடிந்தவுடன் மண் கலங்கள் திறக்கப்பட்டு, அவற்றில் மேலே நிற்கும் திரவம் எடுக்கப்பட்டு வடிகட்டி வைக்கப்படும். அடியில் தேங்கிய வண்டல் தவிர்க்கப்படுகிறது. வடிகட்டி வைக்கப்பட்ட திரவம் தெளிந்தவுடன், அதை பாட்டில்களில் அடைத்து வைக்கப்படுகின்றன. பெரிய அளவில் தயாரிக்கும் போது பீப்பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேக்கு மர பீப்பாய்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
அரிஷ்டம் – அரிஷ்டங்கள் பெரும்பாலும் கஷாயங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மருந்து சரக்குகளை அப்படியே அல்லது ஒன்றிரண்டாக பொடித்து கஷாயமாக காய்ச்சி உபயோகிப்பது தான் இம் முறைக்கும் ஆஸ்வ முறைக்குமுள்ள வித்தியாசம். அரிஷ்டங்கள் தயாரிக்கு முன், அதற்கு தேவையான பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவைகள் தயாரிக்கப்படும் இடங்கள் பூச்சி, கொசு, ஈரம், குப்பை கூளங்கள் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
கஷாயச் சரக்குகளை, பொடித்து அவற்றை இரண்டு பங்கு, கொதிக்க வைத்த நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், கலவையை கசக்கி, வடிகட்டிய தண்ணீரை எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். வடிகட்டப்பட்ட மருந்து சரக்குகளுடன் மீண்டும் தண்ணீரை, இரண்டு பங்காக, சேர்த்து கொதிக்க வைத்து, ஒரு பங்காக வற்றியவுடன் வடிகட்டி, இந்த நீரை எடுத்து முன்பு சேகரித்த, பத்திரப்படுத்திய நீருடன் கலக்கவும். கஷாயத்தில் சேர்க்கப்படும் மருந்துப் பொருட்களின் தன்மைக்கேற்ப, தண்ணீரை குறைத்தோ அதிகரித்தோ, வேண்டிய அளவு வற்றச் செய்தும் தயாரிக்கலாம். தெளிந்த பின், மேல் நிற்கும் தெளிவை எடுத்து, சர்க்கரை முதலியவற்றை கலக்க வேண்டும். இவ்வாறு வண்டலை நீக்கி கஷாயத்தை சேகரித்து அதில் தேவையான அளவு சர்க்கரை அல்லது சுத்தீகரிக்கப்பட்ட வெல்லம் சேர்த்து கரைத்து வைக்கவும். பிறகு, அதே மருந்தின் வண்டலை சேர்த்து கலங்களில் இட்டு துணியில் கட்டி வைக்கவும். அதே மருந்தின் வண்டல் கிடைக்காவிட்டால் திராக்ஷ£ரிஷ்டத்தில் அடி வண்டலை எல்லா மருந்துகளுக்கும் பயன்படுத்தலாம்.
சூரணங்கள் – மருந்து சரக்குகளை நன்றாக இடித்து, பொடியாக்கி, சலித்த நிலையில் தயார் செய்யும் மருந்து சூரணம் எனப்படுகிறது. சூரணங்கள் இரு வகைப்படும் – நன்றாக பொடித்து பெரும்பாலும் அப்படியே பயன்படுத்தப்படும் சூரணம் முதல் வகை. இதை பொதுவாக சூரணம் என்றே குறிப்பிடப்படுகிறது. இரண்டாவது வகை சூரணம் “க்வாத சூரணம்” என்று அழைக்கப்படுகிறது.
சூரணங்கள் தயாரிப்பில் முதலில் தேவையான மருந்து சரக்குகள் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு வெய்யிலில் உலர்த்தப்படுகின்றன. நன்கு உலர்ந்ததும் இயந்திரங்கள் மூலம் பொடிக்கப்படுகின்றன. பழங்காலத்தில் உரல்களில் பொடி செய்யப்பட்டது. பிறகு சலிக்கப்படுகிறது. சில பொருட்களை தனியாக பொடித்துக் கொள்வது அவசியம். உதாரணமாக சர்க்கரை, கல்கண்டு, கற்பூரம், திராட்சை, பெருங்காயம், படிகாரம் போன்றவை தனியாக பொடிக்கப்பட்டு பிறகு சேர்க்கப்படுகின்றது. சிலவற்றை வறுத்து பொடிக்க வேண்டும்.
க்வாத சூரண வகையில் சில வற்றை கஷாயமாக செய்து உட்கொள்ள வேண்டியிருக்கும். வாய்கொப்பளித்தல், புண்களை கழுவுதல், குளித்தல் போன்ற வெளி உபயோகங்களுக்கு க்வாத சூரணம் பயன்படும். கஷாயமாக செய்யப்படும் போது, பெரும்பாலும் ஒரு பங்கு க்வாத சூரணத்திற்கு 16 பங்கு தண்ணீர் சேர்த்து காய்ச்சி, எட்டில் ஒன்றாக குறுக்கி வடிகட்டி கஷாயம் தயாரிக்கப்படுகிறது. நீராவிக் கலங்களை உபயோகித்தும் கஷாயம் தயாரிக்கப்படுகிறது.
மாத்திரைகள் – மருந்துகளை மாத்திரைகளாக எடுத்துக் கொள்வது சுலபமானது. இதற்கு மருந்துப் பொருட்களை ஒன்றிரண்டாக (ரவை போல்) உடைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் “நைசாக” பொடித்தால் மாத்திரைகள் சரியாக உருவாகாது. துகள்கள் ஒட்டிக் கொள்ள பெரும்பாலும் வேலம் பிசின் உபயோகிக்கப்படுகிறது. இயந்திரங்கள் மூலம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
பானகம் - இது கலவையின் நீர்ப்பகுதியை குறுக்கி “பாகு” போல் தடிக்கச் செய்து தயாரிப்பது என்ற செய்முறை. லேஹியங்கள், வடகங்கள், இவற்றுக்கு பொதுவானது. கற்கண்டு, சர்க்கரை, வெல்லம், பனைவெல்லம் போன்றவற்றுடன் தண்ணீர் அல்லது கஷாயம் கலந்து, நன்கு கரைத்து, வடிகட்டி, கொதிக்க வைத்து, குறிப்பிட்ட அளவு கலவை கெட்டியானவுடன் அதில் நெய், பொடித்து சலித்த பொடிகளை சேர்த்து கலந்து, ஆறியவுடன் தேன் சேர்த்து லேஹியங்கள் தயாரிக்கப்படுகின்றன.
லேஹியங்கள் – ஆயுர்வேத மருந்துகளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மருந்து “லேஹியம்”. லேஹியங்கள் நோய்களை குணப்படுத்துவது மட்டுமின்றி, நோயாளியின் உடல் தேறவும், பழைய பலத்தை அடையவும் உதவுகின்றன. லேஹிய தயாரிப்புக்கு ஆதாரமாக இருப்பது மேலே சொன்ன பானக பாகுபதமாகும். பாகுடன் நெய், பால், தேன், மருந்து சரக்குகள், இவற்றை சேர்த்து சேர்த்து பக்குவப்படுத்தி லேஹியமாக்குவார்கள். மருந்து, இதர பொருட்களை கலப்பதற்கு, பாகு சரியான பதத்தில் இருக்க வேண்டும். சரியான பக்குவ நிலைக்கு பாகு வந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி நெய், மருந்து சூரணங்களை கலந்து, ஆற விட வேண்டும். ஆறிய பின் கஸ்தூரி, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், தேன் போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும். தயாரிக்கப்பட்ட லேஹியங்களை கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடிகளில் பத்திரப்படுத்தி வைக்கவும்.
க்ருதம் (நெய்) மற்றும் தைலம் (எண்ணை) – நெய்யும் தைலமும் இதர மருந்துப் பொருட்களுடன் சேர்ந்து வியாதிகளை கண்டிக்க பக்குவப்டுத்தப்படுகின்றன. இந்த விதமாக இவற்றை பக்குவப்படுத்த கல்கம், திரவம், ஸ்நேஹம் என்ற மூன்றும் அத்தியாவசியமாகின்றன.
கல்கம் – தேவையான மருந்துகள் நன்கு விழுதாக அரைக்கப்பட்டு
எண்ணையுடன் கலக்கப்படுகின்றன. இந்த பசை போன்ற பொருளே, ‘கல்கம்’ எனப்படும்.
திரவம் - கல்கத்துடன் கஷாயம், சாறு, தண்ணீர், பால் தயிர், மாமிச ரஸம்,
முதலியன கலக்கப்படுகின்றன. இந்த கலவைக்கு திரவம் என்று பெயர்.
ஸ்நேஹம் – நெய், எண்ணை, கொழுப்பு, எலும்பில் உள்ள ஜவ்வு போன்ற மஜ்ஜை ஆகியவை ஸ்நேஹம் என்று கூறப்படுகின்றன.
கல்கம், திரவம், ஸ்நேஹம் ஒன்று சேர்த்து காய்ச்சி, நீர்வற்றியவுடன்
இறக்கி, வடிகட்டி “க்ருதம்” “தைலம்” முதலியன தயாரிக்கப்படுகின்றன.
மேற்சொன்னவை தவிர இன்னும் பல முறைகளில் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment