Tuesday, January 15, 2013

கவுட்

கவுட் ஒரு பழைய கால ஆர்த்தரைடீஸ் வியாதி. கி.மு. 30ம் ஆண்டில் ஆலஸ் கார்னெலியஸ் செல்சஸ் என்பவர் கவுட்டைப் பற்றிய பல விவரங்களை சிறுநீரில் உள்ள ஒரு பொருளின் கோளாறு, மது அருந்துவதால் உண்டாகலாம், கவுட்டை பால் சார்ந்த உணவால் தடுக்க முடியுமா போன்ற அறிந்திருந்தார். பழங்கால ரோமர்களின் முக்கிய பொழுதுபோக்கு -அரங்கில் மனிதனை சிங்கத்துடன் மோதவிடுவது, மனிதனை மனிதனுடன் சண்டை போட விடுவது – இவைகளாகும். இந்த மாதிரி கேளிக்கைக்காக சண்டை போடுபவர்களை க்ளாடியேடர் என்பார்கள். இவர்களின் வைத்தியத்திற்காக இருந்த மருத்துவர்களின் ஒருவரான கேலன், உடலின் நான்கு திரவங்கள், ஏறுமாறாக மூட்டுக்களில் சேர்வதை கவுட் என்று வர்ணித்தார். லத்தீன் மொழியில் துளித்துளியாக திரவம் சொட்டுவதை கட்டா எனப்படும். இதிலிருந்து கவுட் என்னும் வார்த்தை தோன்றியது.
கவுட் ரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் தேங்கிவிடுவதால் ஏற்படும் மூட்டு நோய். ஆயுர்வேதத்தில் வாத ரத்தம் எனப்படும்.
ஆயுர்வேத காரணங்கள்
கசப்பான, கடுமையான உணவுகள். அதிகமாக மாட்டு மாமிசம், கடல் உணவுகள், மீன் போன்றவை, தக்காளி, அன்னாசி, ஊறுகாய் முதலியவற்றை உண்பது.
அதிகமாக ஆல்கஹால் உண்பது.
இடைவெளி இல்லாமல் சாப்பிடுவது
வெய்யிலில் சுற்றுவது.
அறிகுறிகள்
அதிகமாக வியர்வை தோன்றுவது, குறிப்பாக பாதங்களில்
சர்மம் உடலெங்கும் கருமையாக்குவது
சிறு கட்டிகள், முடிச்சுகள் உடலில் தோன்றுவது
கறுப்பு புள்ளிகள் சர்மத்தில் தோன்றுவது.
ரத்தத்தில் அதிக அளவு சேரும் யூரிக் அமிலம், யூரியா படிகங்களை மூட்டில் உள்ள சினோவியத்தில் சேர்த்து, வீக்கம், அழற்சி, வலியை உண்டாக்கும். கவுட்டை உண்டாக்கும் யூரியா உப்புகள்.
மானோ சோடியம் யுரேட் மானோஹைட்ரேட் இது உண்டாக்கும் கவுட், யூரேட் கவுட் எனப்படும்.
கால்சியம் பைரோபாஸ்பேட் டைஹட்ரேட் இதனால் வரும் கவுட் “போலி கவுட்” எனப்படும்.
ஹைட்ராக்ஸி அபடைட் இது உண்டாக்கும் கவுட் “அபடைட் கவுட்” எனப்படும்.
கவுட்டால் பாதிக்கப்படும் மூட்டுகள் முக்கியமாக, விரல்கள், பாதத்தின்
விரல்கள்.
ஆமவாதமும், ஆஸ்டியோ வாதமும் பெரியமூட்டுகளை, அதுவும் சுமைதாங்கி மூட்டுகளை தாக்கும். கவுட் விரல்கள் போன்ற சிறிய மூட்டுகளை பாதிக்கும். 100,000 ஜனங்களில் 275 பேர் கவுட்டால் பாதிக்கப்படுகின்றனர். 30 லிருந்து 60 வயது உள்ளவர்களை, அதுவும் அதிகமாக ஆண்களை, இந்த வியாதி தாக்குகிறது. இளம் வயதினரை கவுட் தாக்குவது அபூர்வம்.
பாத விரல்களில், கால் பெரு விரலை தாக்குவதை ‘போடக்ரா’ என்பார்கள். பாத மூட்டுக்கள் ஏனைய மூட்டுகளை விட குளிர்ச்சியாக இருப்பதால், யூரியா உப்புப் படிகங்கள் பாத மூட்டுகளிடம் ஏற்படுகின்றன. யூரியா உப்பு படிகமாக குளிர்ச்சி தேவை. எனவே கவுட் தோள், இடுப்பு, முதுகெலும்பு இவற்றை தாக்குவது அரிது.
காரணங்கள்
வளர்சிதை மாற்ற கோளாறுகள். இதனால் அதிக யூரிக் அமிலம் சுரக்கும். அதிக யூரிக் அமிலம் தான் முக்கிய காரணம். ரத்தத்தில் சிறிய அளவில் எப்போதும் யூரிக் அமிலம் இருக்கும். ரத்தத்தில், யூரிக் அமிலத்தின் நார்மல் அளவு 0.5 மி.கி / 100 மி.லி. இதற்கு நம் உடல், ப்யூரைன்ஸ் எனப்படும் நைட்ரஜன் கலவையை யூரிக் அமிலத்தில் செலுத்தும். ப்யூரைன்ஸ் அதிகம் உள்ள உணவுகள் – சில மீன் வகைகள், இறைச்சி சூப்புகள், காளான், இனிப்பு ரொட்டிகள், சில கடல் உணவுகள், அங்க மாமிசங்கள், சில பருப்புகள். இந்த ப்யூரைன்ஸ் தனியாகவே யூரிக் அமிலத்தை ஏற்றும். கூட குடிப்பழக்கமும் சேர்ந்து விட்டால் வேறு வினையே வேண்டாம். ப்யூரைன் உணவுகள் யூரியா அமிலத்தை அதிகமாக்கும். ஆல்கஹால் அதற்கு உதவி செய்வது மட்டுமின்றி, சிறுநீரகத்தை பாதிக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள அபரீமித யூரிக் அமிலத்தை சிறுநீரகம் பிரித்தெடுக்க இயலாமல் போய்விடும். அபரிமித யூரியா அமிலம் படிமங்களாக மூட்டுகளில் குவிந்து விடும். சினோவியம் திரவத்திலும் சேர்ந்து விடும்.
காரீயத்தின் விஷத்தன்மையால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, யூரிக் அமிலம் ரத்தத்தில் தங்கிவிடும்.
வழக்கமாக அனைத்து வியாதிகளுக்கும் காரணமாகும் அதிக உடல்பருமன்.
பொருந்தாத காலணிகள், கை உறைகள் இவற்றால் கூட கவுட் வரலாம்.
அறிகுறிகள்
முன் எச்சரிக்கை ஏதுமின்றி, கவுட் ஏற்படும். அடிபடுதல், அதிகமாக குடிப்பது, ப்யூரைன் செறிந்த உணவை அதிகம் உட்கொள்வது இவைகளால் தீடிரென்று கவுட் தலை தூக்கும்.
கால் கட்டை (பெரும்) விரலில் வீக்கம், அழற்சி, வலி. விரல் சிவந்து விடும்.
சிறு மூட்டுக்களில் வலி (அநேகமாய் இரவில் தோன்றும்) பலமணி நேரம் நீடிக்கலாம். வலி தாங்கமுடியாமல் போகலாம்.
மூட்டுக்களில் கை வைத்தால் சுடும். மூட்டுக்களின் மேல் சர்மம் சிவந்து காணப்படும்.
காய்ச்சல் அடிக்கும். காய்ச்சல் 102 டிகிரி தி வரை கூட போகும். தூக்கிப் போடுதல், குளிர்ந்து கூசுதல். இது சில நாட்களில் மறையும் (அடுத்த தாக்குதல் உண்டாகும் வரை). நாட்பட்ட கவுட், மற்ற வாத நோய்கள் போலவே, மூட்டுக்களை சீரழிக்கும்.கவுட் நோயாளிகளில் ஐந்தில் ஒருவருக்கு, சிறுநீரக கற்கள்
உண்டாகின்றன. இந்த கற்கள் யூரிக் கற்களாகும். இவை சிறுநீர் பாதையை அடைத்து, சிறுநீர் போவதை சிரமமாக்கும். கவனிக்காமல் விட்டால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகும்.
இரத்த பரிசோதனை மூலம் யூரிக் அமிலம் அளவை தெரிந்து கொள்ளலாம்
பொதுவான சமாளிக்கும் முறைகள்
முதலில் அழற்சி, வீக்கத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, வலி நிறுத்தப்பட வேண்டும். இதற்கான மருந்துகள் தரப்படும்.
தாக்குதல் இருக்கும் போது ஓய்வெடுக்கவும்.
உணவில் ப்யூரைன் உள்ளவற்றை தவிர்க்கவும். இவை மேலே கொடுக்கப்பட்டிருக்கின்றன. தவிர கொழுப்பை குறைக்கவும். பட்டினி, உணவில் கார்போஹைடிரேட் குறைந்து போதல் – இவற்றால் கவுட் தாக்குதல் வரும். புரத சத்து சரியான அளவில் இருக்க வேண்டும். பழச்சாறு அல்லது தண்ணீர் (ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை) குடித்தால், யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும். ஒரு நாளில் சாதாரணமாக 2000 மி.லி. சிறுநீர் வெளியேற வேண்டும். மதுபானங்கள் வேண்டாம்.
வீக்கம் இல்லாவிட்டால், சூட்டு ஒத்தடமும், வீக்கமிருந்தால் குளிர் ஒத்தடமும் கொடுக்கவும். பொதுவாக ‘ஐஸ்’ ஒத்தடம் நல்லது. 20-30 நிமிடம் ‘ஐஸ்’ ஒத்தடம் கொடுக்க வேண்டும். வலி குறையும்.
டாக்டரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும்.
ரத்த அழுத்தம், சிறுநீரக வியாதிகள் இவற்றுக்காக அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியின் படி காஃபி குடித்தல் (அளவாக), கவுட்டை தவிர்க்கும்.
எலுமிச்சை ஜுஸ் உதவும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் குடிக்கவும்.
கோதுமை, பழைய அரிசி சாதம், உளுத்தம் பருப்பு, பூண்டு, வெங்காயம், மாமிச சூப், வாழைக்காய் இவைகளை எடுத்துக் கொள்ளலாம்.
அரச மர வேர்பட்டை கஷாயத்தை தினம் 2 அவுன்ஸ் குடித்து வர, கவுட் குறையும்.
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பச்சை காய்கறி ஜுஸ் பயனளிக்கும். கேரட் ஜுஸ் 300 மி.லி., பீட்ரூட் ஜுஸ் 100 மி.லி. , வெள்ளரி ஜுஸ் 100 மி.லி. மூன்றையும் கலந்து தினமும் குடிக்கவும்.
கவுட்டிக்கேற்ற உணவுமுறைகள் “மூட்டுவலிக்கான உணவு முறைகள்” அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆயுர்வேத மருத்துவம்
யோகராஜ குக்குலு, மகாமஞ்சிஸ்ட் க்வாத், பஞ்சாதிக்கா க்ரீடா, வாதரஸ்கம் போன்ற பல மருந்துகள் உள்ளுக்கும், பிண்டதைலம் அல்லது குடூச்யாதி தைலம் வெளிப்பூச்சுக்கும் தரப்படுகின்றன.
ஆயுர்வேத சிகிச்சை முறைகள் – மருந்து, அப்யங்கம் (மசாஜ்), ஸ்வேதனா (ஒத்தடம்) போன்ற ஆயுர்வேத சிகிச்சைகள் பிரசித்தமானவை.
கவுட் கவனிக்கபடாமல் விட்டால் சிறுநீரகம் பாதிப்படையும்.

No comments:

Post a Comment