Tuesday, January 15, 2013

மூட்டுவலிக்கு முடக்கற்றான்


மூட்டு வாதமா முடக்கற்றான் கீரையை சாப்பிடுங்கள். இது பலருக்கு தெரிந்த மூட்டு வாத அறிவுரை. பெயருக்கேற்ற செயல்பாடு உடையது முடக்கற்றான் (முடக்கு + அறுத்தான்) பழங்காலத்திலிருந்து மூட்டுவலி, மூட்டு பாதிப்புகளுக்கு கைமருந்தாக பயன்பட்டு வருகிறது. சித்த வைத்தியத்திலும் உபயோகிக்கப்படுகிறது. இந்த முடக்கற்றான் மூலிகை வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு அருமருந்தாகும்.
முடக்கற்றானின்
தாவரவியல் பெயர்
சமஸ்கிருதம்: இந்திரவல்லி, கர்ணஸ்ஃபோடா, ஹிந்தி – கான்புடி, தமிழில் இதர பெயர்கள் – முடக்கத்தான், முடக்கறுத்தான்.
முடக்கற்றான் கொடி இன தாவரம். மற்ற செடிகளை பின்னி அல்லது, வேலியோரங்களில் வேலி மேல் படர்ந்து, தன்னிச்சையாக வளரக் கூடிய மூலிகை. பச்சை நிற இலைகள், வேப்ப இலைகள் போல ஓரங்கள் வெட்டுப்பட்டது போல் இருக்கும். மூன்று இலைகள் சேர்ந்த கொத்தாக, ஒவ்வொரு இலையும் 2 லிருந்து 5 அங்குல நீளமும் அகலமும் இருக்கும். சிறிய பூக்கள், வெள்ளை நிறக் கொத்துகளாக, சிறிது வாசனையுடன், வருடம் முழுவதும் காணப்படும். ஒரு ஜோடி மஞ்சரி தண்டு பற்றுக்கம்பி – கொடிச்சுருளாக மாறி வேலி அல்லது செடிகளை பற்றிக் கொண்டு வளரும். பழங்கள் கவர்ச்சியானவை. அரை அல்லது ஒரு அங்குல கோளவடிவில், ஒரு சிறிய ‘பலூன்’ போல, மேலே இளஞ்சிவப்பு வண்ணமும், அடிப்பாகம் பச்சை வண்ணமாகவும், பழங்கள் உப்பி இருக்கும். விதைகள் ஜபமணி போல், உலர்ந்த போது கருப்பாக இருக்கும். முடக்கற்றான் செடிக்கு ஈரப்பசை நிறைந்த சூழ்நிலை பிடித்தமானது. விதைகள் மூலம் பயிரிடப்படும்.
இந்தியா முழுவதும் பயிரிடப்பட்டாலும், தமிழ்நாடு, வங்காளம், இலங்கை முதலிய இடங்களில் மிகுதியாக வளர்கிறது.
பொதுக்குணங்கள் – சிறுநீர் பெருக்கி, வாதமடக்கி, பாதிக்கப்பட்ட இடத்திற்கு அதிக ரத்தம் பாய உதவும், பசி தூண்டும், மலமிளக்கும்.
செடியின் வேர், இலை செடி முழுவதும் மருத்துவ பயன்களுடையவை.
பயன்கள்
மூட்டுவாதம், மூட்டுவலி (ஆர்த்தரைடீஸ், ருமாடிஸம்) இவற்றுக்கு முடக்கற்றான் மூலிகையின் முக்கிய பயன் – நோயால் முடங்கிப்போன முட்டிகளை மீண்டும் இயங்க வைக்கும். கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாமல் போதல், நடக்க முடியாமல் போதல், இவற்றுக்கெல்லாம் முடக்கற்றான் கீரையை சமைத்து சாப்பிட்டுவர நல்ல குணம் தெரியும். இதன் இலைகளை அரைத்து, பூண்டு, சீரகம், கருமிளகு, உப்பு, வெங்காயம் இவற்றை சேர்த்து, ரசம் போல் தயாரித்து, ஒரு நாளைக்கு 2 வேளை குடிக்க, ருமாடிஸம், சுளுக்கு, மலச்சிக்கல் இவை மறையும். இலைகளை நெய்யில் வதக்கி, கூட இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி போல அல்லது துவையல் போல தினமும் சாப்பிட்டு வர மூட்டு நோய்கள் தீரும். இதர கீரைகளை சமைப்பது போலவே முடக்கற்றான் கீரையை சாப்பிட்டு வரலாம். இலை, வேர் இவற்றை சம பாகமாக எடுத்து, இஞ்சி, மிளகு, சீரகம், தண்ணீர் சேர்த்து, கஷாயமாக, காய்ச்சி, அந்த எண்ணையை வலியுள்ள இடங்களில் பூசலாம். இதற்கு நல்லெண்ணையை பயன்படுத்தலாம். இந்த மூலிகை செறிந்த எண்ணைப்பூச்சு, கீல்வாத வலிகளை போக்கும். வாத வீக்கங்களுக்கு, முடக்கற்றான் தண்டு, இலைகளை, பாலுடன் அரைத்து தடவ, வீக்கங்கள் குறையும். முடக்கற்றானை உபயோகிப்பதால் கால்களின் ஏறி வரும் விறைப்புத் தன்மை (அதுவும் காலை நேரங்களில் ஏற்படும்) போகும். உடல் வலிகளுக்கு, இலைகளை கடலை எண்ணையில் அரைத்து, வெளிப்பூச்சாக வலிக்கும் இடங்களில் தடவலாம்.

No comments:

Post a Comment