Saturday, January 12, 2013

புத்தாண்டு பலன்கள் விருச்சிக இராசி 2013


 விருச்சிகம்

விசாகம் 4–ம் பாதம், அனுஷம், கேட்டை வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, , நி, நே, நோ, , யி, யு உள்ளவர்களுக்கும்)
செல்வ  வளம் பெருகும்!  செல்வாக்கு உயரும்!
புகழ் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு பொன்னான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் விருச்சிக ராசி நேயர்களே!
புத்தாண்டு உங்களுக்கு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப்போகிறது. அத்தனை பேரும் பாராட்டும் விதத்தில் வாழ்க்கைத்தரம் உயரப்போகிறது. அதிகார வர்க்கங்கள் கூட உங்களுக்கு அடிபணிந்து நடக்கும் விதத்தில் குருவின் பார்வை பலம் கொடுக்கிறது. சந்திரபலத்தோடும், சந்திரமங்கள யோகத்தோடும் பிறக்கும் இந்த 2013–ம் ஆண்டு சந்தோஷங்களையும், சகல பாக்கியங்களையும் வரவழைத்துக்கொடுக்கும் விதத்தில் சாதகமாக இருக்கிறது.
இயற்கையிலேயே கலைவாணியின் அருள்பெற்றவர்கள் நீங்கள். எதை சொன்னாலும் பலிக்கும். நீங்கள் காணும் கனவுகளும் பலிக்கும். உங்கள் ஆலோசனைகளை கேட்டு நடந்தவர்கள் வெற்றிக்கனியை விரைவில் எட்டிப்பிடிப்பர் என்பதால் உங்களை சுற்றி ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே இருக்கும்.
சனி, செவ்வாயின் பார்வை காலத்தில் மட்டும் சகஜ நிலையிலிருந்து நீங்கள் மாறுபடாமல் இருக்க, பணிபுரிவதோடு பரிகாரங்களையும், வழிபாடுகளையும் நீங்கள் செய்து வந்தால் இனிக்கும் வாழ்க்கை எந்நாளும் அமையும். அந்த நேரத்தில் ஆதியந்த பிரபு வழிபாடும், சனீஸ்வரர் வழிபாடும், ஆறுமுகப்பெருமான் வழிபாடும் செய்வது நல்லது.
உங்கள் ஜாதகத்தில் உள்ள கட்டங்களையும், புத்தாண்டில் உள்ள கட்டங்களையும் ஒப்பிட்டுப்பார்த்து அப்போதைக்கப்போது நடைபெறும் திசா புத்திக்கேற்ற தெய்வங்களை தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் வழிபாடுகளை மேற்கொள்வதாடு 12–ல் சஞ்சரிக்கும் ராகுவால் பண வரவு கூடவும், 6–ம் இடத்து கேதுவால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறவும், அன்றாட வாழ்க்கை நன்றாக அமையவும், புத்தாண்டில் உங்களுக்கு அனுகூலம் தரும் ஆலயத்தில் சர்ப்ப சாந்திகளை முறையாக செய்து கொள்வது நல்லது.
எண் கணித அடிப்படையில் இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 7, 12–க்கு அதிபதியாக விளங்கும் சுக்ரனுக்குரிய ஆண்டாக அமைகிறது. உங்கள் பிறந்த தேதிக்கேற்ப பெருமை சேர்க்கும் விதத்தில் உங்கள் பெயரை அமைத்துக்கொள்வதோடு, உங்கள் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக்கொண்டால் வருங்காலம் வசந்தகாலமாக இருக்கும்.
உங்கள் ராசி அடிப்படையில் ஏழரை சனி உருவாகிறது. இது முதல் சுற்றா? இரண்டாவது சுற்றா? மூன்றாவது சுற்றா? என்பது சுயஜாதகத்தின் அடிப்படையில் பார்த்துக்கொள்ளுங்கள். முதல் சுற்றாகவோ, மூன்றாவது சுற்றாகவோ இருந்தால் சனி பகவானை பணிந்து வணங்கி பலவிதங்களிலும் நன்மைகளை பெறலாம். இரண்டாவது சுற்றாக இருந்தால் நீங்கள் துணிந்து செய்யும் காரியங்களுக்கு சனி பகவான் துணையாக இருப்பார்.
வருட தொடக்கத்தில் சனி பகவானும், ராசிநாதன் செவ்வாயும் உச்சம் பெற்றிருக்கிறார்கள். சந்திரன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார். சூரியனும், புதனும் இணைந்து புதஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார்கள். குருவும் சுக்ரனும் ஒன்றையொன்று பார்த்து வெற்றி வாய்ப்புகளை வீடுதேடி வரவழைத்துக் கொடுக்கும் விதத்தில் சஞ்சரிக்கிறார்கள். எனவே, உண்மையிலேயே இந்த புத்தாண்டு உங்களுக்கு புதிய திருப்பத்தை தரும் ஆண்டாக அமையப்போகிறது.
1.1.2013 முதல் 27.5.2013 வரை:
இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 7–ம் இடத்தில் குரு சஞ்சரிக்கிறார். அதன்பார்வை உங்கள் ராசியிலேயே பதிகிறது. அதுமட்டுமல்ல. 3, 11 ஆகிய இடங்களிலும் பதிவாகிறது. எனவே உங்கள் உடல் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிய தொடங்குவீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். பாராட்டும் புகழும் கூடும். விருதுகளும் வெற்றி செய்திகளும் வீடு வந்து சேரும்.
குரு வக்ரமாக இருந்தாலும் கூட தன பஞ்சமாதிபதியாக இருப்பதால், தொழிலில் லாபம் இருமடங்காக வந்து சேரும். இடம், பூமி வாங்கி மகிழ்வீர்கள். வீடு கட்டும் முயற்சியிலும் வெற்றி கிட்டும். பழைய வீட்டை புதுப்பித்து, பலரும் பார்த்து ரசிக்கும் விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். அயல்நாட்டு தொடர்பு அனுகூலம் தரும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து கேட்ட உதவிகளை செய்து கொடுப்பர்.
வருட தொடக்கத்தில் சனியும், ராகுவும் 12–ம் இடத்தில் சஞ்சரிப்பதால் விரய ஸ்தானம் பலப்படுகிறது. எனவே சுப விரயங்கள் அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றிகிட்டும்.   அவற்றில் கல்யாண கனவுகளை முன்னிட்டு தங்கம், வெள்ளி போன்றவைகளை தாராளமாக வாங்கி சேர்க்க முன்வருவீர்கள். வீட்டிற்கு தேவையான மின்சாதன பொருட்களையும் வாங்கி மகிழக் கூடிய நேரமிது.
நம்பிக்கைக்குரியவர்கள் உங்களுக்கு நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர். அன்பு மனத்தோடும் ஆதரிக்கும் குணத்தோடும் இருக்கும் உங்களுக்கு இன்பங்களை மட்டுமே வரவழைத்துக்கொள்ள எளியவழி, இறை வழிபாடு ஒன்றுதான். தெய்வ அனுகூலம் இருந்தால் தேசத்தையும் ஆளலாம், செல்வாக்கையும் உயர்த்திக்கொள்ளலாம். அதற்கு உதவுவது எந்த தெய்வம் என்பதை அறிந்துகொண்டு செயல்படுவது தான் புத்திசாலித்தனம். இந்த காலத்தில் வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவேஎன்ற குரு கவசத்தை பாடி குருவை வழிபாடு செய்வது சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும்.
28.5.2013 முதல் 31.12.2013 வரை
இக்காலத்தில் குரு மிதுன ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களை பார்க்கிறார். இதன் விளைவாக குடும்பத்தில் ஒற்றுமைகூடும், மகிழ்ச்சி அதிகரிக்கும். காது குத்து முதல் கல்யாணம் வரை மணி விழா, மண விழா, முத்துவிழா, வெள்ளிவிழா என்று முத்தான விழாக் களை கொண்டாடி மகிழ்வீர்கள். குரு தன்வீட்டை தானே பார்க்கிறார் என்பதால், அற்புதமான பலன்கள் இக்காலத்தில் நடைபெறும்.
தாய்வழி ஆதரவு பெருகும். தங்கு, தடைகள் அகலும். ஆரோக்கியத்திற்கு என்று இதுவரை அதிகம் செலவிட்டிருக்கலாம். இனி ஜோரான வாழ்க்கையும் சொகுசான பயணங்களும் அதிகரிக்கும். வராத கடன்கள் வசூலாகும். வள்ளல்களின் ஒத்துழைப்போடு வருங்காலத்தை நலமாக்கிக்கொள்வீர்கள்.
பனிரெண்டாம் இடத்தை பார்க்கும் குருவால் பயணங்கள் அதிகரிக்கும். இந்தியாவில் ஒருநாள், இத்தாலியில் மறுநாள், லண்டனில் மூன்றாம் நாள் என்று தொழில் ரீதியாக பயணங்களை மேற்கொள்ளும் சூழ்நிலை ஒரு சிலருக்கு உருவாகும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் சிறப்பாக முடிவடையும். என்றைக்கோ வாங்கிப்போட்ட இடங்கள் இப்போது லாபத்தை தரும்.
குருவின் வக்ர காலம்
கிரகங்கள் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது எதையும் யோசித்து செய்வதே நல்லது. பொதுவாக உங்கள் ராசியை பொறுத்தவரை 2, 5 ஆகிய இடங்களில் அதிபதியானவர் குரு. அதன் பார்வை பலம் தான் முக்கியம். வக்ர இயக்கத்தில் பலக்குறைவோடு பார்க்கும் பொழுது ஒரு காரியத்தை இருமுறை செய்யும் சூழ்நிலை உருவாகலாம். அலைச்சல் அதிகரிக்கும். பணியாளர்களை மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.  
சனி, செவ்வாய் பார்க்கும் காலம்
ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தை பார்க்கும் பொழுது நல்ல மாற்றங்களும் வந்து சேரும். திடீர் திருப்பங்களும் ஏற்படலாம். அந்த அடிப்படையில் உங்கள் ராசியை பொறுத்தவரை ராசிநாதன் செவ்வாய் 3, 4–க்கு அதிபதியான சனியை பார்க்கிறார். எனவே, வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.  உடன்பிறப்புகளை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சினைகள் தலைதூக்கலாம்.  
நாடுவிட்டு நாடு செல்ல நினைப்பவர்களுக்கு நல்ல நேரம் இது. இடமாற்றம், ஊர்மாற்றம், உத்தியோக மாற்றங்கள், இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே ஒரு சிலருக்கு வந்து சேரும். கேட்ட இடத்திற்கு கிடைக்கா விட்டாலும், கிடைத்த இடத்தில் போய் சேர்வதே நல்லது.
கணவன்மனைவிக்குள் கனிவுகூட அனுசரிப்பு தேவை. விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீட்டில் ஒற்றுமை பலப்படும். கோபம், படபடப்பு ஆகியவற்றை தவிர்த்து குணநலனில் அன்பை பெருக்கிக்கொண்டால் இக்காலம் கூட இனியகாலமாக மாறும்.
பெண்களுக்கான சிறப்பு பலன்கள்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும். வருடத்தொடக்கத்தில் வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். கணவன்மனைவிக்குள் கனிவு தரும் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்கவும், தொழில் தொடங்கவும் முடிவெடுப்பர். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு. ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்ளுங்கள்.
ஏழரை சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வதே நல்லது. சனிக்கிழமைதோறும் சனிபகவான் வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்கள். இனிக்கும் செயல்கள் ஏராளமாக நடக்க ராகுகேதுக்களுக்கு பிரீதி செய்து சர்ப்ப சாந்திகளையும் மேற்கொள்வது நல்லது. வருடக்கடைசியில் தாய் வழி தன லாபம் உண்டு. உடன்பிறப்புகள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வர். இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமையும்.

No comments:

Post a Comment