Wednesday, January 9, 2013

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய இடங்கள்








பண்ணாரி அம்மன் கோயில்

தமிழகத்தில் மிகப் புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் இதுவும் ஒன்று. இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயில் இது. இக்கோயிலில் குடிகொண்டுள்ள மாரியம்மன் மிகச் சக்தி வாய்ந்த தேவதையாக இப்பகுதி மக்கள் கருதி வழிபடுகிறார்கள். பவானி சாகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயில் ஆயிரக்கணக்கில் பக்தர்களைப் பெற்றுள்ளது.

அந்தியூர் குருநாத சுவாமி கோயில்

பன்முகக் கடவுள்கள் குடிகொண்டுள்ள திருக்கோயில். காமாட்சி அம்மன் பெருமாள் குருநாதசுவாமி என்ற பெயரில் முருகனும் ஒருங்கே எழுந்தருளியுள்ளனர். அந்தியூருக்கு அடுத்துள்ள புதுப்பாளையத்தில் உள்ள முழுமையான கற்கோயில். காமாட்சி அம்மன் தவநிலையில் இருக்கிறாள். அருகில் சித்தேஸ்வரன், மாதேஸ்வரன், நவநாயகிகள், ஏழு கன்னிமார்கள் உள்ளனர். பாட்டன், பாட்டி, நாகதேவதை, தண்டகாருண்யர், தர்ப்பை அம்மன், அண்ணன்மார் என்னும் முன்னு டையார், 18 சித்தர்கள் உள்ளனர். அகோர வீரபத்திரர் எதிரில் உத்தண்ட முனிராய துரையும், அன்னப்பாறையும் உள்ளது.

சங்கமேஸ்வரர் கோயில்

பவானி ஆறும், காவிரி ஆறும், அமுத நதியும் சங்கமிக்கும் ஊர் பவானி. இங்குதான் சங்கமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியத் திரிவேணி என்றழைக்கப்படுகிறது. சங்கமேஸ்வரர் உடனுறை வேதநாயகியோடு பக்தர்களுக்குத் தரிசனம் தரும் ஆலயம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது அப்போதைய கோவை, சேலம் மாவட்டங்களின் ஆட்சியராகப் பணியாற்றிய வில்லியம் கேரோ, வேதநாயகி அம்மனை வழிபட்டதாகக் கருதப்படுகிறது. ஒருநாள் அவரது கனவில் வந்து உயிரைக் காப்பாற்றிய தெய்வத்திற்கு நன்றிக்கடனாக அவர் வழங்கிய தந்தத் தொட்டில் இக்கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் கேரோவின் கையெழுத்தும் இருக்கிறது. ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது விழுகிறது. வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறத்தில் பசு ஒன்று உள்ளது. இந்த பசுவின் முன்பகுதியில் தலை இருப்பதோடு, பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது. இவ்வாறு பசு ஒரே உடல், இரண்டு தலைகளுடன் காட்சியளிப்பது வித்தியாசமாக உள்ளது.

பவானி சாகர் அணைக்கட்டு

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மணலால் கட்டப்பட்டது. சத்திய மங்கலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் பவானி ஆற்றின் குறுக்கே இந்த அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டது. கடல்போல நீர் தேங்கித் ததும்பும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். இதன் உயரம் 105 அடி இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். அணை உள்ள இடத்தில் உள்ள நகர் அணையின் பெயராலயே பவானிசாகர் என அழைக்கப்படுகிறது, இது பேரூராட்சி ஆகும். இவ்வணையிலிருந்து செல்லும் கீழ் பவானி திட்ட கால்வாய் ஈரோடு மாவட்டத்தை வளப்படுத்துகிறது.

சென்னி மலை

நெசவுக்குப் புகழ்பெற்ற நகரம் சென்னிமலை. திருப்புகழ் பாடிப் பரவிய அருணகிரிநாதர் இறைவனிடம் ஆசிகளாகப் படிக்காசு பெற்ற இடம் என்ற பெருமைக்குரியது. சென்னிமலை உச்சியில் குடிகொண்டுள்ள முருகன் கோயிலுக்குச் செல்ல சிறப்புப் பேருந்து வசதிகள் உண்டு. சென்னிமலைக்குச் செல்ல கோவைக்குச் செல்லும் வழியில் இங்கூர் ரயில நிலையத்திலிருந்து தெற்கே 7 கி.மீ. செல்ல வேண்டும். ஈரோட்டிலிருந்து 26 கி.மீ. தொலைவிலும் பெருந்துறையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

கொடுமுடி

கொடுமுடி சிவன் கோயிலில் விஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கும் தனித்தனி சந்நதிகள் உள்ளன. இத்திருக்கோயிலில் உள்ள சிவனை மச்ச கண்டீஸ்வரர் எனவும் விஷ்ணுவை வீர நாராயணப் பெருமான் எனவும் பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த கோயில்.

ஸ்ரீ கொண்டாத்து காளியம்மன் கோயில்

முழுவதும் சலவைக் கற்களால் உருவான கோயில் இது. கோபிச் செட்டிப்பாளையம் அருகே பாரியூரில் அமைந்துள்ளது. பாரியூரைச் சேர்ந்த கோபிச்செட்டி என்னும் முதியவர் வியாபாரம் செய்ததால் கோபிச் செட்டிப்பாளையம் என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்றும்கூட இங்கே அம்மன் முன்னிலையில் பூப்போட்டு பார்க்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இக்கோயிலின் பரப்பு 5 ஏக்கர். கோபியிலிருந்து அந்தியூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. சென்றால் பாரியூரை அடையலாம்.

பவானி கூடுதுறை

பவானி ஆறு, காவிரி ஆறு, அமுத நதி இணையும் இடம் கூடுதுறை என அழைக்கப்படுகிறது. நதிகளின் சங்கமத்தை பார்க்கத்தான் வேண்டும். இயற்கையின் பேரெழில் அங்கே கூத்தாடும்.

கொடிவேரி அணைக்கட்டு

அலை அலையாய் தண்ணீர், திசையெங்கும் பரந்த நீர்க்காடு, கோபியிலிருந்து 10 கி.மீ. தொலைவு பயணித்தால் இந்த அணைக்கட்டு நம் பார்வைக்கு வந்துவிடும்.

தந்தை பெரியார் நினைவிடம்

சமூகப் புரட்சிக்காரர், பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியார் சிறு குழந்தையாய், துறுதுறு இளைஞனாய், கடமையுணர்வுமிக்க காங்கிரஸ் தொண்டராய் வாழ்ந்த இடம். இந்தப் பெரியாரின் இல்லம் இப்போது நினைவிடமாக உள்ளது. இங்கு பெரியாரது சிலை, வாழ்க்கை வரலாறு நிழற்படங்கள், முதலியன பார்வைக்கு உள்ளன. தமிழர்களின் இனமானம் காத்த தலைவரின் தொட்டில் பூமி. இந்த நினைவிடம் பெரியார் சாலை, ஈரோடு - 1 என்னும் முகவரியில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment