Wednesday, January 2, 2013

தெற்கு திசையில் ஏன் பாரம் மிக வேண்டும்?



இதுவரை அவரவர் வீடு எந்த திசையில் இருக்கிறது, அதனால் சாதகம் என்ன, பாதகம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் பார்த்தோம். குறிப்பிட்ட திசை அல்லாமல் இரு திசைகளின் கூட்டாக பல மனைகள் அமைந்துள்ளன. அவை முறையே வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்காகும். இவை உரிய திசையை நோக்காமல் அருகிலுள்ள திசையுடன் சேர்ந்து, திசையிலிருந்து நழுவி அமையும். இப்படியிருக்கும்போது சூரிய திசைக்கு ஏற்ப கட்டிடம் கட்ட இயலாது. எனவே, பலன்கள் சற்று மாறுபடும். எனினும் மனைக்கு ஏற்றவாறே மூல மட்டத்திற்கு சரியாக (90 டிகிரியில்) அமைத்தோமேயானால் பலன்கள் சிறப்பாகவே இருக்கும். இவற்றை சிறந்த வாஸ்து நிபுணர்களால் மட்டுமே அறிந்து, தன்மையை கூறமுடியும். வீணாக குழம்ப வேண்டாம்.

எனவே, கூட்டு திசைகளை ஆராய்வதை இத்துடன் விடுத்து, இனி கட்டிட அமைப்புகள் எந்தெந்த திசைக்கு எப்படி அமைய வேண்டும் என்பதை பார்ப்போம்.
வாஸ்துவை மிக ரத்தின சுருக்கமாக கூறிவிட முடியும். ‘வடக்கு/கிழக்கு திசைகள் பாரத்தை தாங்க முடியாது’ ‘தெற்கு/மேற்கு திசைகள் பாரத்தை தாங்கக் கூடியவை’ சுவர், கதவு, ஜன்னல், சமையலறை, லாப்ட், கிணறு, குழி, மேல்நிலைத் தொட்டி இப்படி எதுவாகினும் மேற்கண்ட இரண்டு வரிகளை ஞாபகத்தில் இருத்திக் கொண்டால், எளிமையாக வீட்டமைப்பை உருவாக்க முடியும். மரம், செடி, ஆண்டனா ஆகியவை எந்த திசையில் அமைய வேண்டும்? துணியை எங்கே உலர வைப்பது? மோட்டாரை எங்கே நிறுவுவது?

மின்சாதனங்களை எங்கே பொருத்துவது, வாகனத்தை எப்படி நிறுத்துவது, உணவை எப்படி பரிமாறுவது? போன்ற சின்ன சின்ன விவரங்களைகூட கவனத்தில் கொண்டு செயலாற்றும்போது கூடுதல் பலன்கள் பெற்று வெற்றிக்கொடி நாட்டிட முடியும். சில அடிப்படை வாஸ்து விவரங்களை தெரிந்து கொண்டுவிட்டால் அதற்குப் பிறகு, கட்டிட அமைப்பை உருவாக்கும்போது மிகவும் விறுவிறுப்பாகவும், ஆவல் மிகுத்தும் இருக்கும். பெரும்பாலான வீடுகளில்/ கட்டிடங்களில் கீழ்நிலை/மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி இரண்டாக பிரிக்கப்படுவதில்லை. பிரிக்கப்படாமல் இருப்பது தவறு. கண்டிப்பாக 2 அல்லது 3 அறையாக தொட்டிகள் பிரிக்கப்பட வேண்டும். காரண காரியத்துடன் விளக்குவோம்.

நம் ஜீனில் ‘மைட்டோ காண்டியா’ என்பது, பல சுழல் தடுப்புகளால் (Spiral) ஆக்கப்பட்டுள்ளதால்தான் நிறைய குண, வேறுபாடு, ஒற்றுமைகளை ஜீன்கள் உள்ளடக்கி வைக்க முடிகிறது. எரிபொருள் ஏற்றிச் செல்லும் லாரிகளை பார்த்தால் இது புரியும். எரிபொருள் கொள்கலன் 2 அல்லது 3 தடுப்புகளால் தடுக்கப்பட்டிருக்கும். இல்லையெனில் விபரீதம் ஏற்படும். வாஸ்து தத்துவத்தை நீங்கள் நேரிடையாக பார்க்க வேண்டுமெனில் உங்கள் ஊரில் மற்றும் பகுதியில் தெற்கு-மேற்கு சாலைகள் இணையும் இடத்திலுள்ள தென்மேற்கு மனையை பார்த்தாலேயே இது புரியும். இம்மனைகள் உரிய பொலிவுடன் இல்லாமல் பாழடைந்தும், உபயோகமின்றியும், செயல்படாமலும் காட்சியளிக்கும். ஏன் இப்படி? தெற்கு-மேற்கில் காலியாக பாரமின்றி சாலைகளாக இருப்பதும் மனைக்கு கிழக்கு, வடக்கு அழுத்தப்பட்டு பாரமாக இருப்பதுவே காரணமாகும்.

வடகிழக்கு நீர்நிலை எதற்கு? இங்கே குழி தோண்டும் போது வடகிழக்கு பாரம் குறைகிறது. எனவே சிறப்பு பலன்கள் உண்டு என்பதால் அப்படி செய்கிறோம்.
புராதான கோயில்கள் சிறப்பாக இன்னும் அருள் வழங்கி வர காரணம் மேற்கண்டவாறு குளங்கள் இடம் பெற்றும், தெற்கு - மேற்கு போக்குவரத்து குறைந்து வடக்கு - கிழக்கு முழு போக்குவரத்துடன் இருப்பதே காரணமாகும். உதாரணங்களாக கயிலாயம், திருமலை, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்று கூறிக்கொண்டே செல்லலாம். நீண்ட பாரம்பர்யம் உடைய இவை மக்களை ஈர்ப்பதுபோல, நாமும் பல்லோராலும் மதிக்கப் பெற்று புகழ் செல்வாக்குடன் விளங்க முடியும்.

சுற்றுச் சுவரின் முக்கியத்துவம் என்ன? ஏன் கோயில்களில் 1 முதல் 7 பிராகாரங்கள் வரை உள்ளன? அதன் பலன்கள்தான் என்ன? சற்றே சிந்திப்போம்.
ஈராக்கிற்கு தென்மேற்கே உள்ள பகுதியை சேர்த்து சொந்தம் கொண்டாடியதால் அதிபர் சதாம் ஹுசேன் பதவியிழந்து, வாழ்க்கையும் முடிந்து போனதை யோசித்தால் இந்த விவரம் இன்னும் தெளிவாகப் புரியும். தெற்கு - மேற்கில் கடல், வடக்கு - கிழக்கே மலை சார்ந்த பகுதிகள் கொண்ட ரஷ்யா உடைந்து சின்னாபின்னமாகி விட்டதே, இதுவும் இன்னொரு உதாரணம். இங்கே டார்வினிஸத்தை பயன்படுத்தலாமே! Survival of the fittest - வாழ தகுதி படைத்தவை மட்டுமே எஞ்சி வாழ முடியும். ஆக நாமும் வாழ வேண்டுமெனில் தகவமைப்புடன் இருக்கத்தான் வேண்டும்.

புவி என்ற ஸ்தானத்தையும் இதை ஒட்டியுள்ள கிரகங்கள், புவி மையம் ஏனையவற்றுடன் இணைந்து வாழ்ந்தால் நாம் ஜீவித்திருப்போம். இல்லையெனில் நாம் டைனோசர்கள் வழியை பின்பற்றி மறைந்து விடுவோம். எப்படி புவியை தகவமைப்பு செய்வது என்பதே வாஸ்து விஞ்ஞானம். அதன் உட்பொருளை இனி அங்குலம் அங்குலமாக ஆராய்வோம்.

இதிலுள்ள விஞ்ஞான உண்மைகள்:

1. சூரியனை ஆதாரமாக கொண்டு ஆகாயத்துடன், ஒளிப்பிழம்பான நெருப்பு, நீரால் சூழப்பட்டு, மண்ணால் ஆக்கப்பட்ட காற்று மண்டலத்தால் சூழப்பட்ட பூமியை தன் வயப்படுத்துவதுடன்,
2. மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுவது,
3. 23.5 வடகிழக்காய் சாய்ந்திருப்பது,
4. புவியீர்ப்பு/ காந்த சக்தியை
உள்ளடக்கியிருப்பது,
5. உயிர்களை தோற்றுவிக்கும் அளவிற்கு தன்னை பக்குவப்படுத்திக் கொள்வது என்ற அமைப்புகளைக் கொண்டதுதான் பூமி என்ற கோளம். இவ்வாறு பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய உலக உருண்டையில் வாஸ்து விஞ்ஞானம் தனிச் சிறப்பு கொண்டு விளங்குகிறது. அதை இன்னும் விரிவாக, நம் வாழ்க்கையை ஒட்டிப் பார்ப்போம். 

No comments:

Post a Comment